PADITHTHA PENN - KAAPPI ONNNU EDDANAA
1956 ம் ஆண்டில் குலதெய்வம் படத்திற்கு நான்கு பாடல்களை எழுதிய நமது கவிஞர் PADDUKKODDAI KALYAANASUNTHARAM அடுத்து படித்த பெண் என்ற படத்துக்கு இரண்டு பாடல்களை எழுதினர் .
அதில் ஒரு பாடலை இங்கு தருகிறேன்
பாடல் :
காப்பி ஒண்ணு எட்டணா, கார்டு சைசு பத்தணா
காண வெகு ஜோராயிருக்கும், காமிராவைத் தட்டினா !
பிள்ளை குட்டி கூட நிண்ணு பெரிதாகவும் எடுக்கலாம்
பிரியம் போல காசு பணம் சலிசாகவும் கொடுக்கலாம் .
மல்லுக் கட்டி அழைக்கவில்லை மனமிருந்தா வந்திடலாம்
வயிறெரிந்த பேர்வழிங்க வந்த வழி சென்றிடலாம்
தண்டவாளம் விட்டிறங்கி தத்தளிக்கும் எனஜினைப் போல்
கொண்டவன் தனை மறந்து திண்டாடும் மங்கையரின்
குட்டு வெளியாகிடும் ஸ்டில்லுங்க - கையில்
துட்டு இருந்தா ஸ்டெடியா நில்லுங்க
எந்தப் போஸில் வேணுமென்னாலும் எடுத்துத் தரேனுங்க - ஆனா
எல்லோருக்கும் ஸ்டில்லை மட்டும் காட்டிடாதீங்க
தனியே வந்தாலும் கூட்டமா வந்தாலும்
சார்ஜ் ஒண்ணு தான் , வாங்க ஒரு சான்ஸ் அடிச்சுப் பாக்க
வாருங்க !
புகைப் படம் எடுக்கும் ஒரு தொழிலாளி பாடும் பாடல் இது !
இந்தப் பாடலைப் பற்றி ஒரு சுவையான வரலாறு ஒன்று இருக்கிறது .
இந்த சுவையான சம்பவத்தை எனக்கு தொலை பேசியில் சொன்னவர்
பெண்ணாடம் நீல மேகம் அவர்கள் !
அவருக்கும் பட்டுக்கோட்டையாரிடம் ஒரு அளவற்ற பக்தி உண்டாம் !
அவர் சொன்ன இந்தப் பாடலைப் பற்றிய தகவல் :
இந்த படித்த பெண் படத்தை சியாமளா பிக்சர்ஸ் , நளினி பிக்சர்ஸ் என்ற இரு நிறுவனங்கள் கூட்டாகத் தயாரித்தன .தயாரிப்பாளர் வைத்தியநாத அய்யர் என்பவர் .
இவரிடம் நடிகர் நம்பி ராஜன் கவிஞரை அறிமுகப் படுத்தினார் . இந்த இரண்டு பாடல்களுக்கு அய்யர் அவர்கள் 150 ரூபாய் தருவதாகப் பேசி பாடல்களை எழுதச் சொன்னாராம் .
அடுத்த நாளே கவிஞர் பாடல்களை எழுதிக் கொடுத்து விட்டாராம் .
ஆனால் பல நாட்கள் பணம் கைக்கு வந்து சேர வில்லையாம் .
அய்யர் வீட்டுக்கு பல நாட்கள் நடையாக நடந்தாராம் .
ஒரு நாள் ஐயரது வீட்டுக்கு கவிஞர் சென்ற போது '' உட்கார் '' என்று சொல்லி விட்டு உள்ளே போன அய்யர் நீண்ட நேரம் வெளியே வரவிலையாம் .
அதனால் கவிஞரும் உள்ளே சென்று பார்க்கலாம் என்று உள்ளே நுழைந்த போது அய்யர்
'' வெளியே நில்லு ''
என்று அதட்டிப் பேசினாராம் !
தீண்டாமைக் கொடுமை உச்சத்தில் இருந்த காலம் அது !
இதைக் கேட்டு சினம் கொண்ட கவிஞர்
'' தாயால் வளர்ந்தேன், தமிழால் அறிவு பெற்றேன்
நாயே ! நேற்று நான் உன்னை நடுத் தெருவில் சந்தித்தேன்,
நீ யார் என்னை நில் என்று சொல்ல ? ''
என்று அறம் பாடி விட்டு இந்தக் கவிதையை ஒரு துண்டுத் தாளில் எழுதி அதை அவர் வீட்டுக் கதவிடுக்கில் செருகி விட்டு வந்து விட்டாராம் .
அதைப் படித்துப் பார்த்த அய்யர்,
இவன் ஒரு பிறவிக் கவிஞன், இவன் அறம் பாடி விட்டால் நாம் நன்றாக வாழ முடியாது
என்று நினைத்து ஒரு நண்பர் மூலம் பணத்தைக் கொடுத்தனுப்பினாராம் .
இந்தப் படித்த பெண் படம் வெளி வந்ததா எனத் தெரியவில்லை .
இந்த இரண்டு பாடல்களும் நமக்குக் கிடைக்கவில்லை !
நண்பர்கள் யாரிடமாவது இருந்தால் நல்கும் படி கேட்டுக் கொள்கிறேன் .
அன்புடன்
PROF.S.S.KANDASAMY
'' யான் பெற்ற இன்பம் பெறுக இவ் வையகம் ''