Sivaji Ganesan - Definition of Style - 3
கடலில் படகு அல்லது கப்பல் கவிழ்ந்து அதிலிருந்து உயிர் பிழைத்து தனியே கரையில் அலைகளால் ஒதுக்கித் தள்ளப்படும் மனிதன் Castaway எனப்படுவான் என அகராதி சொல்கிறது. அவ்வாறு வாழ்க்கை அலைகளால் ஒதுக்கித்தள்ளப்படும் மனிதனின் மனநிலையில் ஒரு Castaway யாக உணர்கிறான். குறிப்பாக இலக்கின்றி சுற்றித் திரிந்தவன் வாழ்க்கையில் திடீரென தென்றலாய் மலர்ந்த ஒரு காதல் உணர்வு அவனுள் ஒரு வாழ்க்கையில் ஒரு பிடிப்பை ஏற்படுத்த அதைப் பற்றிக் கொண்டு கரையேற முயலும் போது அந்தக் காதல் எனும் படகு கவிழ்ந்து அவனை மூழ்கடித்து கரையில் தனியே தள்ளி விடுவதாக உணரும் போது அதைப் பாடல் மூலம் வெளிப்படுத்துகிறான். ஆனால் அந்தப் படகு கவிழவில்லை, அவன் காதலும் தோல்வியடையவில்லை, ஆனால் அவன் ஒதுக்கித் தள்ளப்படுவதற்கு அவனையும் அறியாமல் அவனே காரணமாயிருக்கிறான் என்பதாக அவன் காதலி உணர்ந்து அவனை சற்றே ஒதுக்கி வைக்கிறாள்.
இந்த மாதிரியான சூழலில் வரும் இப்பாடலில் புதுமையான காட்சியமைப்பில் நடிகர் திலகம் மிகவும் அனாயாசமாக நடித்திருப்பது அவருடைய ஆளுமையைக் காட்டுகிறது. பாடலின் துவக்கத்தில் அவர் கைககளைக் கட்டும் போதே அந்தப் பாத்திரத்தின் மனோநிலையை பிரதிபலிக்கும் ஸ்டைல் துவங்குகிறது. தன்மேல் தவறில்லை என ஆணித்தரமாக நம்பும் அந்தக் கதாபாத்திரம் இதனை உறுதிப்படுத்தும் விதமாகத் தன் கருத்துக்களை வெளிப்படுத்தியிருக்கிறது. இந்த வரிகளில் கவியரசரின் புலமையும் பாடகர் திலகத்தின் குரல் வளமையும் இளையராஜாவின் படைப்பில் மிளிர்கின்றன. இவர்கள் கூட்டணியில் மேலும் பல பாடல்கள் வந்திருக்கக் கூடாதா என்கிற ஏக்கத்தையும் ஏற்படுத்துகின்றன.
இவர்கள் அனைவரது கூட்டணியில் உருவான அந்த அற்புதமான படைப்பைத் தூக்கி நிறுத்துவது நடிகர் திலகத்தின் ஸ்டைல், வழக்கம் போல.
இரண்டு கைகளையும் பாக்கெட்டில் வைத்து நடப்பதை முன்பொரு பாட்டில் பார்த்தோம். அதே ஸ்டைல் இப்பாடலில் வேறு விதமாக வெளிப்படுவதைப் பாருங்கள். கைகள் முழுதும் பாக்கெட்டில் நுழையாமல் விளிம்பைப் பிடித்துக் கொண்டு மிக இயல்பாக தன் மனநிலையை வெளிப்படுத்தும் விதமாக நிற்பதைப் பாருங்கள்.
நிற்பதில் கூட ஆயிரம் அர்த்தங்களைத் தரும் உலகப் பெரும் நடிகர், நடிகர் திலகம் மட்டுமே என்பதை நிரூபிக்கும் தோற்றம்
பாடல் முழுதும் நின்று கொண்டே அந்தப் பாத்திரத்தின் உணர்வுகளைப் பிரதிபலித்திருக்கும் விதம் இன்னும் எத்தனை நூற்றாண்டுகளானாலும் இவரை மிஞ்ச யாராலும் முடியாது என்பதற்கு அத்தாட்சி.
இப்பாத்திரத்தின் உடல் மொழியில் குறிப்பிடத்தக்க விஷயம் தோள்களைச் சிலுப்பும் முறையை நடிகர் திலகம் பிரயோகிக்கவில்லை என்பதே. பாத்திரத்தின் தன்மையறியாமல் பணக்காரன் ஏழை என யாராக இருந்தாலும் தோளை சிலுப்பிக் கொள்ளும் நடிகர்கள் இதைப் பார்க்க வேண்டும். இப்பாடலில் பல இடங்களில் இந்த உடல் மொழிக்கு வாய்ப்புள்ளது. வேறு யாராவது நடித்திருந்தால் பாடலில் பல முறை இரு தோள்களையும் சிலுப்பியிருப்பார்கள். ஆனால் ஒரு கடற்கரையோர கிராமத்து இளைஞனின் illiterate தன்மையைக் கருத்தில் கொண்டு இப்பாடலில் நடிகர் திலகம் மிகவும் எச்சரிக்கையாக அவ்வுணர்வைத் தவிர்த்திருப்பார்.
இவையெல்லாம் அவர் ஒருவர் மட்டுமே கொண்டுவரக் கூடிய ஸ்டைல்..
ஸ்டைல் என்கிற வார்த்தைக்கு அர்த்தம் நடிகர் திலகம்..
https://www.youtube.com/watch?v=3euUGyKp7_4