http://oi65.tinypic.com/104oi8z.jpg
நன்றி V C G Thiruppthy
Printable View
http://oi65.tinypic.com/104oi8z.jpg
நன்றி V C G Thiruppthy
http://oi68.tinypic.com/xpycz9.jpg
நன்றி H O S
http://oi65.tinypic.com/14vpwnt.jpg
திண்டுக்கல்
புதிய ரீலிஸ் படங்கள் 5 நாட்கள் கூட ஓடாத இந்தக் காலத்தில், 47 வருடங்களுக்கு முன் வெளியாகி பெரிய சாதனைகளை படைத்து வரலாறு கண்டது. இப்பொழுது புதிய சாதனை படைத்து, வசூலிலும் புதிய சாதனை படைத்து வருகிறது.
http://oi67.tinypic.com/fkzbk0.jpg
நன்றி Meenakshi Sundaram
https://scontent.fmaa3-1.fna.fbcdn.n...ab&oe=5DB9B22C
வசந்த மாளிகை ஏன் மக்களை இந்த அளவு ஈர்க்கிறது
தமிழ் சினிமா வரலாற்றில் மட்டுமல்ல, தமிழகத்தின் வரலாற்றிலேயே தவிர்க்க முடியாத பெயர் சிவாஜி கணேசன். ஒரு நடிகராக மட்டுமில்லாமல், தமிழக நலனில், தமிழக மக்களின் நலனில் அக்கறை கொண்டு எண்ணற்ற நற்காரியங்களை சந்தடியில்லாமல் செய்தவர், பெருந்தலைவர் காமராஜரை தலைவராக ஏற்று அவருடைய தொண்டராக அவருடைய அத்தனை கொள்கைகளையும் முழுமையாக கடைப்பிடித்தவராக வாழ்ந்தவர். தன்னைப் பின்பற்றுவர்களைத் தொண்டராகக்கொண்ட தலைவர். இவ்வாறு கலையுலகிலும் பொதுவுலகிலும் அப்பழுக்கற்ற தூயமனிதராக வாழ்ந்ததோடு, தன் திரைப்படங்களையும் இவ்வழியில் நெறிமுறைப்படுத்தியவர். விடுதலைப் போராட்ட வீரர்கள், புராண இதிகாச கதாபாத்திரங்கள், அன்றாட வாழ்வில் சந்திக்கும் கிட்டத்தட்ட அனைத்துப் பாத்திரங்கள் என தன் திரைப்படங்களில் வாழ்ந்து காட்டியவர்.
அவருடைய நடிப்பின் பல்வேறு பரிமாணங்கள் அவர் அறிமுகமான 1952 முதல் 1999 வரை கிட்டத்தட்ட 50 ஆண்டு காலங்களுக்கு திரையில் வடிவெடுத்துள்ளன. கிட்டத்தட்ட 300க்கும் மேற்பட்ட படங்களில் நடித்துள்ள அவருடைய திரையுலக வாழ்க்கையில் வசந்த மாளிகை மிகச்சரியான மையப்புள்ளியில் அமர்ந்து கொண்டு அவருடைய உச்சத்தின் அடையாளமாகத் திகழ்கிறது.
1952ல் பராசக்தி – 20 ஆண்டுகள் கழித்து 1972ல் வசந்த மாளிகை மீண்டும் 20 ஆண்டுகள் கழித்து 1992ல் தேவர் மகன் என வெவ்வேறு பரிமாணங்களில் உச்சத்தில் அமர்ந்திருக்கிறார் நடிகர் திலகம். இந்த 1952 மற்றும் 1992 இரண்டையும் இணைக்கும் மய்யப்புள்ளியாக விளங்குகிறது வசந்த மாளிகை.
அப்படி என்னதான் இருக்கிறது அந்தப்படத்தில் என்று கேள்வி கேட்போர்க்கு .. என்ன இல்லை என்று தான் பதில் சொல்ல முடியும்.
படத்தின் டைட்டில் முதல் வணக்கம் வரை கொடிகட்டிப்பறக்கிறது நடிகர் திலகத்தின் ஆளுமை. அவரது தோற்றம் அதுவரையிலும் அதற்குப்பிறகும் காணாத வித்தியாசமான கவர்ச்சியாக அமைந்து விட்டது. ஒவ்வொரு ஃப்ரேமிலும் அவருடைய உடையலங்காரம், படம் முழுதும் நம்மை சுண்டியிழுக்கும் முடியலங்காரம், அந்த உடைகளுக்கு அணிசேர்க்கும் அணிகலன்கள், இவையெல்லாம் தோற்றத்தின் மூலமாக ஈர்க்கின்றன.
ஒரு Playboyயாக அவர் அடிக்கும் கொட்டம் ரசிகர்களை சொக்க வைத்து கிறங்க வைக்கிறது. குறிப்பாக தன் பிறந்த நாளையொட்டி ஆனந்த் ஹோட்டலில் கொண்டாடும் விழா... அந்த உடையின் வண்ணமே அதுவரை இல்லாத புதுமையாக ரசிகர்களை மயங்க வைத்தது. அந்த நடன மங்கையரோடு அவர் ஆடும் ஆட்டம்... கேட்போர் தம்மை மறந்து எழுந்து நின்று குதூகலமாய் ஆடவைக்கும் இசையமைப்பு, அந்த நடனத்தின் வேகத்துக்கு ஈடு கொடுக்கும் விறுவிறுப்பான ஒளிப்பதிவு, அதை எப்படிக் கொடுக்க வேண்டுமோ அப்படிக் கொடுத்த படத்தொகுப்பு என அத்தனை தொழில்நுட்பக்கலைஞர்களும் ஒத்துழைக்க, தமிழ் சினிமா வரலாற்றில் இதற்கு முன்பும் இதற்கு பின்பும் இல்லாத வகையில் கதாநாயகனுக்கு விண்ணதிரும் ஆர்ப்பரிப்பும் கரகோஷமும் 47 ஆண்டுகளாக பெற்றுத்தரும் Choreography… குறிப்பாக, கடைசி சரணத்தின் போது ஆஆ... என்று ஹம்மிங் தொடங்கும் போதே ரசிகர்கள் இருக்கையை விட்டு எழுந்து விடுவதை இன்றும் திரையரங்குகளில் பார்க்கலாம். அந்த நடன மங்கையை அனாயாசமாக தூக்கி பக்கத்தில் இருப்பவரிடம் Pass பண்ணும் ஸ்டைல் எவராலும் எதிர்பார்க்க முடியாத, செய்து காட்ட முடியாத அதிசயம், அதற்குப் பிறகு வரும் வரி, வெறும் சட்டங்கள் தர்மங்கள் ஏதுமில்லை இன்ப சக்கரம் சுற்றுதடா என்னும் வரியின் போது சுற்றி நின்று, இரு கைகளையும் இடுப்பில் வைத்துக்கொண்டு திரையில் முன்னால் வந்து அதில் நான் சக்கரவர்த்தியடா என்று சொல்லி கம்பீரமாக நிற்கும் போது... அங்கே அவர் மட்டுமா கம்பீரமாக நிற்கிறார்..தமிழ் திரையுலகமே அல்லவா கம்பீரமாக நிற்கிறது.
காதல் காட்சிகள் மிகவும் எதார்த்தமாக அமைந்திருப்பது. தன்னை வெறுப்பவர்கள் மத்தியில் தன்னையும் ஒரு மனிதனாக நேசித்து தனக்குள் இருக்கும் நற்குணங்களை அறிந்து அதை நாயகி பாராட்டும் போது அங்கே ஆனந்திற்குள் அவள் மேல் ஒரு ஈர்ப்பு ஏற்படுகிறது. அவளிடம் தன் குழந்தைப் பிராய வாழ்க்கை, அதனால் ஏற்பட்ட மனக்காயங்கள் போன்றவற்றை சொல்லும் போது அதைக் கேட்டு அவள் வருத்தப்படுவது, இவையெல்லாம் அவனுக்குள் காதலை மலர வைக்கின்றன. கிராமத்தில் மழை நாளில் இருவரும் தனிமையில் இருக்கும் போது கூட அவனுக்கும் ஆழ்ந்த காதல் உணர்வு இல்லை. மாறாக அது ஒரு இனம் புரியா உணர்வாகத் தான் அவனுக்குள் எழுகிறது. அதே போல் அவளும் உணர்கிறாள். இருவருக்குமே அந்த உணர்வு எத்தகையது என்பது தெரியாத நிலை.
அவனுடைய காதலை முதலில் அறியாத அவள், அவன் அவ்வளவு பெரிய மாளிகையைக் கட்டி அதைப்பற்றி விரிவாக சொல்லும் போதும் கூட அது தனக்காக என்பதையும் அவன் கொண்டிருக்கும் காதல் தன் மீது தான் என்பதையும் அறியவில்லை.
ஆனால், இதற்குப் பிறகு தான் காதலின் புனிதத்தை ஆழமாக நுட்பமாக விளக்குகிறது திரைக்கதை. தன் காதலை எவ்வளவு அழகாக, நாசூக்காக, அதே சமயம் ஆணித்தரமாக ஆனந்த வெளிப்படுத்துகிறார் என்பதே இந்தப்படத்தின் மாபெரும் வெற்றியை நிர்ணயிப்பதோடு, இதை ஒரு காதல் காவியமாகவும் உருவெடுக்க வைக்கிறது.
இந்த அளவிற்கு உங்கள் உள்ளத்தைக் கொண்ட அந்த காதலி யார் என நாயகி கேட்கும் போது, அவளை ஒரு கண்ணாடி அறைக்குள் அனுப்பி உள்ளே சென்று பார் அங்கு தான் அவளும் இருக்கிறாள் என் இதயமும் இருக்கிறது என நாயகன் சொல்கிறான்.
அந்த கண்ணாடிகள் அனைத்தும் இவள் உருவைப் பிரதிபலிக்க உடனே புரிந்து கொள்கிறாள் அவள். அவள் உள்ளம் மயங்குகிறது. சந்தோஷத்தில் திக்குமுக்காடிப் போகிறாள். தன்னையுமறியமால் அந்த க்ஷணத்திலேயே அவளுக்கு காதல் மலர்கிறது. பல நாட்களாக அவன் காதலை வளர்த்து தனக்குள் வைத்து சமயம் பார்த்து வெளிப்படுத்துகிறான் என்றால், இவளோ உடனடியாக காதல் வயப்படுகிறாள். தான் அவன் மேல் அதுவரை வைத்திருந்த அன்பும், பரிதாபமும் அவ்வளவு பெரிய மாளிகையைக் கட்டி அதைத் தனக்கு அர்ப்பணிக்கிறான் என்றவுடன் அப்படியே காதலாக மலர்கிறது. எவ்வளவு பெரிய அச்சாரத்தை கதை உருவாக்கியிருக்கிறது என்பதற்கு இதுவே சாட்சி.
இந்த சூழ்நிலையை கவியரசர் மிக அற்புதமாக பல்லவியிலேயே கொண்டு வருகிறார். மயக்கமென்ன இந்த மௌனமென்ன என்று சமாதானப்படுத்தி அவளை இயல்பு நிலைக்கு கொண்டு வருகிறார். இது என்னுடைய அன்புக் காணிக்கை தான் என சொல்கிறார்.
இந்தப் பாடல் காட்சியில் அவருடைய உடையலங்காரம், அழகு, பாடலின் வரிகள், பாடகர்களின் குரல்கள், மெய்மறக்க வைக்கும் திரையிசைத்திலகத்தின் படைப்பு, கண்களைக் கவரும் ஒளிப்பதிவு என அத்தனை தொழில் நுட்பக் கலைஞர்களும் ஒரு சேர வழங்கியுள்ள விருந்து.
வாணிஸ்ரீ என்கிற அற்புதமான நடிகையின் நடிப்பை விவரிக்க மட்டுமே தனி ஆய்வேடு படைக்கவேண்டும். எந்நெந்த காட்சிக்கு எத்தகைய Reaction தரவேண்டுமோ அதை தத்ரூபமாக வெளிப்படுத்தியிருக்கிறார்.
இன்னும் ஏராளமான விஷயங்கள் உள்ளன. அத்தனை நடிகர்களுக்கும் அத்தனை தொழில்நுட்பக் கலைஞர்களுக்கும் குறிப்பாக பிரம்மாண்டமான அரங்க அமைப்பிற்கும் என ஒவ்வொரு துறையும் செதுக்கிய ஒவ்வொரு உழைப்பாளிக்கும் இப்படத்தை காவியமாக்கியதில் பங்கு உண்டு.
கௌசல்யா தேவி அவர்களின் கதைக்கு திரு பாலமுருகன் எழுதியுள்ள வசனங்கள் ஒவ்வொரு வார்த்தையும் நெஞ்சில் ஆழப்பதிபவை. குறிப்பாக காதல் வசனங்கள். மாளிகையில் தன் காதலிக்கு அதைப் பற்றி நாயகன் விவரிக்கும் காட்சியில் இடம் பெற்ற வசனங்கள் நிஜக்காதலர்களின் மனதில் மிகவும் நெருங்கி உறவு கொள்ளும்.
தொய்வின்றிச் செல்லும் திரைக்கதை, நெஞ்சைத் தொடும் பாலமுருகனின் வசனங்கள், மார்த்தாண்டம் அவர்களின் கூர்மையான படத்தொகுப்பு, வின்சென்ட் என்ற மேதையின் ஒளிப்பதிவு, கிருஷ்ணா ராவ் அவர்களின் பிரம்மாண்டமான அரங்க அமைப்பு, அத்தனை நடிகர்களின் இயல்பான நடிப்பு, அத்தனைத் தொழில் நுட்பக் கலைஞர்களின் முழுமையான பங்களிப்பு, செலவைப் பற்றிக் கவலைப்படாத ராமாநாயுடுவின் தயாரிப்பு, கே.எஸ்.பிரகாஷ்ராவின் துல்லியமான இயக்கம்...
அத்தனை அம்சங்களும் ஒரு சேர சிறப்பாய் அமைந்த வசந்தமாளிகை இன்றும் புதிதாய் அனைவரையும் ஈர்ப்பதில் வியப்பேது..
பகுதி 2
நடிப்பு
வசந்த மாளிகை ஏன் மக்களிடம் இந்த அளவிற்கு ஏகோபித்த வரவேற்புப் பெறுகிறது என்பதற்கான விளக்கம் முந்தைய பதிவில் பொதுவாக இடம் பெற்றுள்ளது. சற்றே விரிவாக இந்த இரண்டாம் பதிவில் பார்க்கலாம்.
நடிப்பு என்றாலே அங்கே நடிகர் திலகம் தான். அதிலும் வசந்த மாளிகையில் அவருடைய நடிப்பைப் பற்றி விரிவாக எழுதவேண்டும். அது தனியாக ஒரு பதிவாக வரும். தற்போது மற்ற கலைஞர்களின் பங்களிப்பினைக் குறிப்பிடும் வகையில் இங்கு இடம் பெறுகிறது.
நாயகியாக நடித்த வாணிஸ்ரீ அவர்களின் நடிப்பைப் பற்றி இறுதியாகப் பார்க்கலாம். அனைத்து நடிக நடிகையருமே அவரவர்க்கு அளிக்கப்பட்ட பாத்திரங்களை அற்புதமாக வெளிப்படுத்தியுள்ளனர். பெரிய ஜமீன் விஜயகுமாராக பாலாஜியின் நடிப்பு பாராட்டத்தக்கது. தாயாராக வரும் சாந்தகுமாரி அவர்களின் நடிப்பு தத்ரூபமாக இருக்கிறது. சின்னதுரைக்கு நீ அம்மான்னா நான் யார் என்று சீறும் காட்சியில் அந்தப் பாத்திரத்தை அழுத்தமாக Establish செய்கிறார். சுகுமாரி அவர்களுக்கு அதிக வேலையில்லை என்றாலும் கிடைத்த நேரத்தில் தன் அனுபவத்தை பிரயோகித்து அவருடைய பாத்திரத்தையும் நன்கு நிலைநிறுத்துகிறார். வாணிஸ்ரீயின் குடும்ப உறுப்பினர்களாக வரும் ஸ்ரீகாந்த், அவர் மனைவியாக வரும் குமாரி பத்மினி, தந்தையாக மேஜர், தாயாராக பண்டரிபாய், தங்கையாக லீலா, தம்பியாக கண்ணன், திவானாக செந்தாமரை, சின்னதுரையின் உதவியாளராக வரும் வி.எஸ்.ராகவன், சின்னதுரையை வளர்க்கும் ஆயாவாக நடித்த புஷ்பலதா, பாலாஜியின் குழந்தையாக வரும் பேபி ஸ்ரீதேவி, கிராமத்துத் தலைவனாக வரும் குண்டுமணி, வாணிஸ்ரீக்கு நிச்சயிக்கப்பட்ட வரனின் பெற்றோராக வரும் டி.கே.பகவதி, சி.கே.சரஸ்வதி என ஒவ்வொருவருமே தங்களுடைய நடிப்பில் பாத்திரங்களைக் கச்சிதமாக சித்தரித்திருந்தனர். மேலும் ஹோட்டல் மேலாளராக ராமதாஸ் அவர்களும் தன் பங்கை சரிவர செய்திருந்தார்.
இந்தப் படத்தை டிஜிடல் செய்யும் போது, நகைச்சுவை காட்சிகளில் சிலவற்றை வெட்டினால் நல்லது என ரசிகர்கள் பலர் மனதில் எண்ணம் நிழலாடியது நிஜம், அடியேன் உட்பட. நாகேஷ், வி.கே.ராமசாமி, ரமாபிரபா நகைச்சுவை காட்சிகள் சற்றே படத்தின் ஓட்டத்திற்கு இடையூறாக இருக்குமோ என்ற ஐயப்பாடே இதற்குக் காரணம். ஆனால் திரையரங்குகளில் சென்று பார்க்கும் போது, மக்கள் அதை ரசித்த வண்ணம் இருப்பது கண்கூடாக தெரிந்தது. கிட்டத்தட்ட அனைத்து ஊர்களிலும் இது நிரூபணமானது. பாத்திரப்படைப்பு எப்படியிருந்தாலும் நாகேஷ், வி.கே.ராமசாமி ரமாபிரபா மூவருமே தங்களுடைய பணியை திறம்பட செய்திருந்தனர்.
வீரபாண்டிய கட்டபொம்மனில் குழந்தை நட்சத்திரமாக நடித்த எல்.காஞ்சனா இதில் நடிகர் திலகத்துடன் இணைந்து நடனமாடியுள்ளார். மேலும் ஆலம், சி.ஐ.டி. சகுந்தலா மூவரும் நடனத்தில் ஜொலித்தனர்.
வாணிஸ்ரீ
இரவும் பகலும் படம் மூலம் ஜெய்சங்கரை அறிமுகம் செய்த சிட்டாடல் நிறுவனம் தன்னுடைய காதல் படுத்தும் பாடு படத்தின் மூலம் ரத்னகுமாரி என்கிற வாணிஸ்ரீ, சுருளிராஜன், எஸ்.எஸ். சந்திரன் உள்ளிட்ட புதுமுகங்களை அறிமுகப்படுத்தியது. தன் முதல் படத்திலேயே இசையரசியின் குரலில் நிலவைப் பற்றிய பாடலோடு நெஞ்சில் நிலைத்துவிட்டார் வாணிஸ்ரீ. ரத்னகுமாரி என்கிற பெயரை சினிமாவிற்காக எஸ்.வி.ரங்காராவ் அவர்கள் வாணிஸ்ரீ என நாமகரணம் செய்தார். அப்போது அவர் நினைத்துக்கூட பார்த்திருக்கமாட்டார், இந்தப் பெயர் தமிழ் சினிமா வரலாற்றில் மிகப்பெரிய அளவில் தாக்கத்தை ஏற்படுத்தும் என்று.
உயர்ந்த மனிதன், நிறைகுடம் என நடிகர் திலகத்துடன் இணையாக நடிக்கத் தொடங்கிய போதே ரசிகர்களைத் தன் பக்கம் ஈர்த்து விட்ட வாணிஸ்ரீ அவர்களுக்கு, தான் தெலுங்கில் நாகேஸ்வரராவுடன் நடித்த பிரேம்நகர் தமிழில் தயாராகும் என்றோ அதில் நடிகர் திலகத்துடன் நடிப்பேன் என்றோ நினைத்திருக்க மாட்டார். ஆனால் அது நடந்தேறியது. எத்தனையோ நடிக நடிகையர் நடிகர் திலகத்துடன் நடிக்க மாட்டோமா என ஏங்கிய காலம். வசந்த மாளிகை என்ற இத்திரைக்காவியத்தின் மூலம் ரசிகர்களின் நெஞ்சில் நிலையாக குடியேறி விட்டார் வாணிஸ்ரீ. குறிப்பாக சொல்லவேண்டுமென்றால், அவரைத் தவிர வேறு யாரையும் இந்த லதா பாத்திரத்தில் நம்மால் கற்பனை செய்து கூட பார்க்க முடியவில்லை.
அறிமுகமாகும் விமானக் காட்சியிலிருந்து வணக்கம் வரை அவருடைய நடிப்பு பட்டொளி வீசிப் பறக்கிறது. சுயகௌரவம் மற்றும் சுயமரியாதை இவற்றை சற்றும் காம்ப்ரமைஸ் செய்து கொள்ளாத குணம் கொண்டவராக மிக இயல்பாகவும் உயிரோட்டமாகவும் தன் பாத்திரத்தை செதுக்கியிருக்கிறார். மாளிகையில் கண்ணாடியில் தன் முகத்தைப் பார்க்கும் வரை காதல் வசப்படாத பெண்ணாக அற்புதமாக சித்தரித்திருந்தார். ஒவ்வொரு காட்சியிலும் அந்தப்பாத்திரத்தின் Reaction எப்படியிருக்க வேண்டும் என நன்கு திட்டமிட்டு நடிப்பை வெளிப்படுத்திதில் நிச்சயம் நடிகர் திலகத்தின் ஆலோசனைகள் இடம் பெற்றிருக்க வேண்டும். கிராமத்தில் மழைக்காட்சியாகட்டும், ஜீப்பில் பயணிக்கும் போது பறக்கும் சேலையை சரி செய்து கொள்வதாகட்டும், நீச்சல் குளக்காட்சியில் தன் குணங்களையும் நிபந்தனைகளையும் சொல்லும் விதமாகட்டும், விமானப் பணிப்பெண்ணாக சம்பளத்தை தன் தாயாரிடம் பாசத்தோடு கொண்டு தருவதாகட்டும், குடும்பத்தாரிடம் அன்போடு பழகுவதாகட்டும், எதார்த்தமான லதாவை நாம் திரையில் பார்க்கிறோம். காதல் வயப்பட்டபின் உணர்ச்சி மேலிட ஆனந்துடன் பழகுவதும், அவர் தன்மேல் வீண்பழி போட்டு விட்டதாக தீர்மானித்து கோபத்துடன் வெளியேறுவதாகட்டும், அரண்மனை மகாராணியிடம் பாகப்பிரிவினை பற்றிய தன் கருத்தில் உள்ள நியாயத்தை விளக்கிச் சொல்வதாகட்டும், அத்தனை சூழ்நிலைகளிலும் லதா என்கிற அந்தப் பெண்ணை உயிருடன் உலவ விட்டிருக்கிறார்.
வாணிஸ்ரீ அவர்களின் நடிப்பை ஒவ்வொரு ஃப்ரேமாக எடுத்து விவரிக்க வேண்டும். அந்த அளவிற்கு அவருடைய பாத்திரத்தை அவர் Establish செய்திருக்கிறார்.
படத்தின் மற்ற பங்களிப்பாளர்கள்
முதல் நன்றி, தயாரிப்பாளர் டி.ராமாநாயுடு அவர்களுக்கு. குழந்தைகளின் நிர்வாகத்தில் ஒரு குடும்பம் எப்படி நடத்தப்படுகிறது என்ற புதுமையான கதையை அடிப்படையாக வைத்து நம்ம குழந்தைகள் மூலம் விஜயா சுரேஷ் கம்பைன்ஸ் என்ற பெயரில் தமிழ் சினிமாவில் அடியெடுத்து வைத்தவர் இந்தப் படத்தின் மூலம் நிரந்தரமாக வரலாற்றில் இடம் பெற்று விட்டார்.
இப்படி ஒரு எதார்த்தமான கதாபாத்திரங்களை வடிவமைத்து அற்புதமான காதல் கதையை உருவாக்கிய கௌசல்யா தேவி அவர்கள்.
பக்கம் பக்கமாக நீளமான வசனங்கள் மட்டும் தான் நடிகர் திலகத்தின் புகழுக்குக் காரணம் என்ற நியதியை உடைத்தெறிந்து சின்னச் சின்ன வாக்கியங்களில் பெரிய காவியங்களையே உள்ளடக்கி பாலமுருகன் அவர்கள் எழுதிய வசனங்கள்..
இது இறந்து போன ராணிக்காக கட்டப்பட்ட தாஜ்மஹால் அல்ல, உயிரோடிருக்கும் என் காதலிக்காக கட்டப்பட்ட வசந்த மாளிகை, இது சமாதியல்ல சந்நிதி, என இந்தக் காட்சியில் ஒலிக்கும் ஒவ்வொரு வரியும் ரசிகர்களின் நெஞ்சில் பாடமாய் மனனமாகிவிட்டன.
நடிகர் திலகத்தின் ஒப்பனையாளருக்கு மிகப் பெரிய ராயல் சல்யூட். அதே போல் உடை வடிவமைத்தவருக்கும்.
ஒரே பாடலில் ஓஹோ என நடிகர் திலகத்தை உச்சாணிக்கொம்பில் கொண்டு சென்று நிரந்தரமாக குடியமர்த்திய நடன ஆசிரியர்கள் சின்னி சம்பத்,
ஈடு இணையற்ற ஒளிப்பதிவு மேதை வின்சென்ட், தொய்வின்றி படத்தைக் கொண்டு சென்ற படத்தொகுப்பிற்கு திரு மார்த்தாண்டம், பாடல்களையும் வசனங்களையும் தெளிவாக நமக்கு அளித்த ஒலிப்பதிவாளர்கள், அரங்க நிர்மாணம் செய்த கிருஷ்ணா ராவ், படத்தின் ஒவ்வொரு ஃப்ரேமையும் துல்லியமாக நிழற்படமெடுத்த ஸ்டில்ஸ் சாரதி, கண்கவர் விளம்பரங்களை வடிவமைத்த ஈஸ்வர், விளம்பர நிர்வாக அமைப்பான எலிகண்ட் பப்ளிசிட்டீஸ், ஸ்டைலான சண்டைக்காட்சியமைத்த மாதவன்-ராஜூ, பிரம்மாண்டமான அரங்கை நிறுவிய வாஹினி ஸ்டூடியோ, எவ்வித இடையூறுமின்றி படப்பிடிப்பைக் கொண்டு சென்ற தயாரிப்பு நிர்வாகிகள், துணை இயக்குநர்கள், மற்றும் இவர்கள் அத்தனை பேருடைய பணியையும் ஒருங்கிணைத்து கொண்டு சென்ற இயக்குநர் கே.எஸ்.பிரகாஷ் ராவ் என ஒவ்வொரு துறையிலும் ஒவ்வொருவருமே தம் பங்கை மிகவும் அர்ப்பணிப்புடன் அற்புதமாக அளித்திருந்தார்கள்.
நடிகர் திலகம் என்ற பெயரைக் கேட்ட மாத்திரத்தில் கர்வம் கொள்ளும் தமிழ்த்தாயின் மகுடத்தில் மற்றுமோர் வைரம் வசந்த மாளிகை.
இன்னும் பல ஆண்டுகளானாலும் மாறாத பொலிவுடன் நிரந்தரமாக வெற்றி தேடித்தரும் வசந்த மாளிகை.
சிவாஜி ரசிகர்கள் நெஞ்சில் அவரைப் போலவே கம்பீரமாக அமர்ந்து கோலோச்சும் வெற்றிக் காவியம் வசந்த மாளிகை.
நீண்ட பதிவுகளைப் படித்த அனைவருக்கும் உளமார்ந்த நன்றி.