ஆனந்த விகடன் / 07 Mar, 2012 / ஸ்டார் இன்றே கடைசி!
ஸ்டார் இன்றே கடைசி!
முக்கால் நூற்றாண்டு பழமை வாய்ந்த சென்னை திருவல்லிக்கேணி ஸ்டார் தியேட்டர், பிப்ரவரி 29-ம் தேதியோடு மூடப்பட உள்ளது என்பது திரைப்பட ரசிகர்களுக்கு வருத்தம் தரும் செய்தி. 52 வருடங்களாக இங்கு பணிபுரியும் ராஜசேகரன், ஸ்டார் தியேட்டர் அனுபவத்தை என்னிடம் பகிர்ந்துகொண்டார்.
http://www.vikatan.com/av/2012/03/zt...ges/ch110b.jpg
''1952-ம் ஆண்டு டிக்கெட் கலெக்டரா வேலைக்குச் சேர்ந்து, புக்கிங் கிளார்க் ஆகி, இப்ப மேனேஜரா இருக்கேன். மௌனப்படங்கள் வந்த காலத்தில் ஆரம்பிச்ச தியேட்டர் இது. அப்ப இந்த தியேட்டர் பேரு 'சினிமா பாப்புலர்’. பேசும் படங்கள் வெளிவந்தப்பதான் 'ஸ்டார் டாக்கீஸ்’னு பேரை மாத்தினாங்க. ஆரம்பத்துல தமிழ்ப் படங்களைவிட இந்திப் படங்கள்தான் இங்க அதிகமா ரிலீஸ் ஆச்சு. ஸ்ரீபிரகாசா, ஜெயசாமராஜ உடையார், பிஷ்ணுராம் மேதி, கே.கே.ஷா, பிரபுதாஸ் பட்வாரி உள்ளிட்ட முன்னாள் தமிழக கவர்னர்கள் மற்றும் அறிஞர் அண்ணா, என்.வி.நடராஜன், ஜெமினிகணேசன்னு இங்க படம் பார்த்த பிரபலங்களோட லிஸ்ட் ரொம்பவே பெருசு. ஜெயலலிதா மேடம் குழந்தையா இருக்கும்போது அவங்க அம்மா சந்தியாகூட இங்க படம் பார்க்க வந்திருக்காங்க. வி.என்.ஜானகி, விஜயகுமாரி, எம்.என்.ராஜம் இந்த மூணு பேரும் அடிக்கடி இங்க படம் பார்ப்பாங்க.
தர்மேந்திரா நடிச்ச 'யாதோன் கி பாரத்’ படம் தொடர்ந்து 400 நாட்கள் ஓடுச்சு. இதைக் கேள்விப் பட்ட தர்மேந்திரா, இங்க வந்து படம் பார்த்துட்டு பாராட்டினார். இந்தப் படத்தைப் பார்த்துட்டுத்தான் எம்.ஜி.ஆரைவெச்சு 'நாளை நமதே’ படம் எடுத்தாங்க. அதுவும் இங்க 100 நாளைக்கு மேல ஓடுச்சு. திலீப், வைஜெயந்தி மாலா பாலி நடிச்ச 'மதுமதி’யும் 400 நாள் ஓடுச்சு. 'சந்திரலேகா’, 'பெற்றால்தான் பிள்ளையா’, 'ரோசாப்பூ ரவிக்கைக்காரி’னு இங்க ரிலீஸ் ஆகி 100 நாட்களைக் கடந்த படங்கள் ஏராளம்.
தியேட்டர் ஆரம்பிச்சப்ப 921 சீட் இருந்துச்சு. அப்புறமா 818 சீட்டா மாத்தி அமைச்சாங்க. அந்தக் காலத்திலேயே ஏ.சி. தியேட்டர்ங்கிற பெருமை ஸ்டாருக்கு உண்டு. கட்டுப்படி ஆகாததால ஏ.சி-யை எடுத்துட்டோம்.அப்ப டிக்கெட் எல்லாம் அணா கணக்குத்தான். எனக்குத் தெரிஞ்சு நாலே முக்கால் அணா, 10 அணா, 15 அணாவுக்கு டிக்கெட் வித்து இருக் கோம். இப்ப டிக்கெட் ஏழு ரூபா, 25 ரூபா, 35 ரூபா.
17 வருஷத்துக்கு முன்ன வரை புதுப்படங்கள்தான் ரிலீஸ் செஞ்சோம். 1995-ல் டி.டி.எஸ். தொழில்நுட்பம் அறிமுகம் ஆனப்ப, பணம் இல்லாததால இங்க அந்த சிஸ்டத்தைக் கொண்டுவர முடியலை. அதுல இருந்து ஏற்கெனவே ரிலீஸ் ஆன படங்களையே எடுத்து ஓட்டுறோம். இங்க படம் பார்க்க வர்றவங்க எல்லாருமே அடித்தட்டு மக்கள்தான். சனி, ஞாயிறுனா கூட்டம் கொஞ்சம் அதிகமா வரும். மத்தபடி கலெக்ஷன் கம்மிதான்'' என்றவரைத் தொடர்கிறார் டாக்கீஸ் நிர்வாகத்தைக் கவனிக்கும் டி.ஏ.ராஜகோபால்.
'எம்.ஜி.ஆர்., ரஜினி, சூர்யா படங்களை எப்பப் போட்டாலும் கூட்டம் வரும். அதனால அவங்க படங்களை அடிக்கடி ஓட்டுவோம். 'பெற்றால்தான் பிள்ளையா’ படம் ஓடிக்கிட்டு இருந்த நேரம், எம்.ஜி.ஆரை எம்.ஆர்.ராதா சுட்ட சம்பவம் நடந்துச்சு. அந்த விஷயம் இங்க படம் பார்த்துட்டு இருந்தவங்களுக்கு எப்படியோ தெரிஞ்சு நாற்காலிகளை உடைச்சு, திரையைக் கிழிச்சு டாக்கீஸையே நாசம் பண்ணினாங்க. இருந்தாலும் ரெண்டு நாள்லயே எல்லாத்தையும் சரிபண்ணி மறுபடியும் படத்தை ஓட்டினோம். இந்த மாதிரி ஏகப்பட்ட சம்பவங்கள் நடந்து இருக்கு. சமீபத்தில்கூட 'மன்னன்’ படத்தில் விஜயசாந்தி ரஜினியை அடிக்கிற ஸீன்ல ரசிகர் ஒருத்தர் விஜயசாந்தியை செருப்பால் அடிக்கிறதா நெனைச்சு திரையையே கிழிச்சுட்டாரு. ஆனால், இதுவரை நாங்க ஒருமுறைகூட போலீஸ்கிட்டப் போனது இல்ல. ஏன்னா, என்னதான் தகராறுகள் நடந்தாலும் ரசிகர்கள்தான் எங்க பலம். ஆனா லும் கலெக்ஷன் கம்மியா இருக்கி றதாலதான் டாக்கீஸை மூடறோம்.
தேவானந்த் நடிச்ச 'டாக்ஸி டிரைவர்’ படம் ஓடினப்ப, என் அப்பா டாக்கீஸ் நிர்வாகத்தைக் கவனிச்சுக்கிட்டு இருந்தார். அப்ப அவர் சென்னை டாக்ஸி டிரைவர்களுக்கு ஒரு காட்சியை இலவசமா ஓட்டினாரு. இப்ப கடைசி படமான பாட்ஷாவையும் சென்னை ஆட்டோ டிரைவர் களுக்கு இலவசமா ஓட்டி னோம்.
நான் உள்பட இங்க வேலைபார்க்கிற பெரும்பாலானவங்க ரெண்டு மூணு தலைமுறையா ஸ்டார் டாக்கீஸ்லதான் வேலை செய்யறோம். ஒரே இடத்துல
இத்தனை வருஷமா இருந்துட்டு இப்ப பிரியப்போறோம்னு நினைச்சாலே வருத்தமாத்தான் இருக்கு'' என, அவர் சொல்லும்போதே அங்கு உள்ள ஊழியர்கள் தங்களை அறியாமல் அழுதனர்
http://www.vikatan.com/av/2012/03/zt...ges/ch110a.jpg
ஆனந்த விகடன் / 22 Feb, 2012 / ”போஸ்டர்ல நாங்க மாஸ்டர்
'இந்த 15 பேரின் உழைப்புதான் எங்க முதலீடு!'' - தன் அருகே பசை வாளிகளுடன் நின்று இருந்த இளைஞர்களைக் கைகொள்ளாமல் கட்டி அணைத்துச் சிரிக்கிறார் நந்தகுமார். சென்னையில் கலை, இலக்கியம், அரசியல், நாளிதழ், வார இதழ் எனப் பல்வேறு நிறுவனங்கள், அமைப்புகள் தங்கள் சுவரொட்டிகளை ஒட்ட நாடும் ஒரே நபர்!
http://www.vikatan.com/av/2012/02/yw...ages/c114c.JPG
'இன்னைக்கு சென்னையில போஸ்டர்னா அது நாங்க ஒட்டினதாத்தான் இருக்கும். நாங்க மட்டுமேதான் ஒட்டுறோம்னே எழுதிக்கங்க. அதுக்குக் காரணம், எங்க அப்பா ஆறுமுகம். அவர் 1951-ல் இந்த போஸ்டர் தொழில்ல இறங்கினார். அப்ப இந்தத் தொழில்ல இங்க நிறையப் பேர் இருந்தாங்க. 'நான் தாம்பரம்... நீ ராயப்பேட்டை’னு ஏரியா வாரியா அவங்களுக்குள்ள பிரிச்சுக்கிட்டுத் தொழில் பண்ணினாங்க. அப்ப எங்க அப்பா வசம் மவுன்ட் ரோடு ஏரியா இருந்தது. காலப்போக்கில் மத்தவங்க இந்தத் தொழில்ல இருந்து வெவ்வேற தொழிலுக்குப் போயிட்டாங்க. இப்ப சென்னையில நாங்க மட்டும்தான் இந்தத் தொழில்ல இருக்கோம். எங்க அப்பாவுக்குப் பிறகு நான் தனியா வந்து ஒட்டின முதல் போஸ்டர் சூப்பர் ஸ்டார் ரஜினியின் 'சிவாஜி’ பட ஆடியோ ரிலீஸ்.
அரசியல் பொதுக்கூட்டம், சினிமா பூஜை, ஆடியோ ரிலீஸ், பட ரிலீஸ், புது டி.வி. நிகழ்ச்சினு விதம்விதமான போஸ்டர்கள் தினமும் சாயங்காலம் 6 மணிக்கு எங்க கைக்கு வரும். நைட் 9 மணிக்கு மேல்தான் எங்க வேலையே தொடங்கும். விடியவிடிய ஓட்டினா பளபளனு பொழுது விடியறப்ப சென்னை முழுக்கவும் போஸ்டர் ஒட்டி முடிச்சிருப்போம். என் சர்வீஸ்ல ஒரு முறைகூட 'இந்தப் போஸ்டரை லேட்டா ஒட்டிட்டீங்க’னு எந்தப் புகாரும் வந்தது இல்லை. சமயங்கள்ல இயக்குநர்கள், தயாரிப்பாளர்கள்னு சம்பந்தப்பட்ட பட டீமும் எங்களோட வரும். தாணு, எஸ்.ஜே.சூர்யானு பலர் தங்களோட பட ரிலீஸ் சமயத்துல கூடவே வந்து உற்சாகப்படுத்துவாங்க. அவங்களும் பசை தடவி எங்களோட சேர்ந்து போஸ்டர் ஒட்டுறதெல்லாம்கூட நடக்கும். விஜய் நடிச்ச 'குருவி’ பட 100-வது நாள் விழாவில் 'பட வெற்றிக்கு இவங்களும் ஒரு காரணம்’னு மேடையில் கூப்பிட்டு ஷீல்டு கொடுத்தார் தயாரிப்பாளர் உதயநிதி. இது எங்க உழைப்புக்குக் கிடைச்ச அங்கீகாரம்.
சமயங்கள்ல, 'என்ன நந்து சார், ராயப்பேட்டை பக்கம் நம்ம பட போஸ்டரை நேத்து பாத்தேன். அதுக்குள்ள நம்ம போஸ்டர் மேல வேறொரு போஸ்டரை ஒட்டிட்டீங்களே?’னு சில சினிமாப் பிரபலங்கள் குறைபட்டுக்கொள்வதும் நடக்கும். போஸ்டர் எக்கச்சக்கமா குவியும்போது இந்த மாதிரி நடப்பதும் உண்டு. அதேபோல், 'எங்க போஸ்டர்மேல உங்க பசங்க போஸ்டர் ஒட்டிட்டாங்க’னு அப்பப்ப அரசியல்வாதிகள் சண்டைக்கு வருவாங்க. பேசி சமாதானம் செய்வோம். போலீஸ் கெடுபிடியும் அதிகமா இருக்கும். இதெல்லாம் இந்தத் தொழில்ல சகஜம் சார்'' என்று சிரிப்பவர், ''இவங்க எங்க மாமா. அப்பாகூட ஆரம்பகாலத்துல இருந்து இந்தத் தொழில்ல இருந்தவங்க'' என்று தன் தாய் மாமன் ராஜசேகரை நமக்கு அறிமுகப்படுத்தினார்.
http://www.vikatan.com/av/2012/02/yw...ages/c114a.jpg
'எனக்கு இப்ப 80 வயசு. 50 வருஷத்துக்கும் மேல் இந்தத் தொழில்ல இருந்தேன். இந்த வயசுலயும் நான் உங்களைப்போல யூத்தா இருக்குறதுக்கு, இந்தப் போஸ்டர் வேலையும் ஒரு காரணம். இப்ப எல்லாம் வண்டியில போஸ்டரை வெச்சுக் கட்டிக்கிட்டுப் போறாங்க. அப்ப எல்லாம் சைக்கிள்தான். ராயப்பேட்டையில் கிளம்பினா பெரியமேடு, தாம்பரம்னு சைக்கிள் சவாரிதான். இப்போ நினைச்சுப் பார்த்தாச் சிரிப்பும், அழுகையும் வர்ற அளவுக்கு ஏகப்பட்ட அனுபவங்கள். ஒருதடவை பிரதமர் நேரு, தி.மு.க-வை விமர்சனம் பண்ணிப் பேசி இருந்தார். அந்தச் சமயத்தில் அவர் தமிழ்நாட்டுக்கு வந்தார். இங்க உள்ள காங்கிரஸ்காரங்க நேருவை வரவேற்று போஸ்டர் அடிச்சுக் கொடுத்து ஒட்டச் சொன்னாங்க. தி.மு.க. ஆட்களோ, நேருவை எதிர்த்துக் கண்டன போஸ்டர் அடிச்சுக் கொண்டுவந்து ஒட்டச் சொன்னாங்க; தர்மசங்கடமாப் போச்சு. வேற வழி இல்லாம ரெண்டு போஸ்டர்களையும் வளைச்சு வளைச்சு ஒட்டினோம். போலீஸ் எங்களைத் துரத்தினதும் சந்துபொந்துனு ஓடி ஒளிஞ்சதையும் நினைச்சா இப்பவும் சிரிப்புதான் வருது. எந்தத் தொழிலையும் ரசிச்சு செஞ்சா கண்டிப்பா ஜெயிக்கலாம்கிறதுக்கு நாங்கதான் தம்பி உதாரணம்!'' என்ற ராஜசேகரின் முகத்தில் உழைப்பின் பெருமிதம்.
http://www.vikatan.com/av/2012/02/yw...ages/c114b.jpg
http://www.vikatan.com/av/2012/02/yw...mages/c114.jpg