கிருஷ்ணாஜி.. மிக்க நன்றி.. சூப்பர் உங்கள் விளக்கம்..இன்னும் அஞ்சு நாள் ஓடிடுத்து.. ஒரே வேலை எனில் வர இயலவில்லை..வந்து பாசுரம் இட இயலவில்லை.. ஸாஃப்ட் காப்பி இல்லை.. டைப் தான் அடிக்க வேண்டும்..இன்னிக்குத் தொடரப் பார்க்கிறேன்..
Printable View
கிருஷ்ணாஜி.. மிக்க நன்றி.. சூப்பர் உங்கள் விளக்கம்..இன்னும் அஞ்சு நாள் ஓடிடுத்து.. ஒரே வேலை எனில் வர இயலவில்லை..வந்து பாசுரம் இட இயலவில்லை.. ஸாஃப்ட் காப்பி இல்லை.. டைப் தான் அடிக்க வேண்டும்..இன்னிக்குத் தொடரப் பார்க்கிறேன்..
*
பாசுரம் பாடி வா தென்றலே…
பதின்மூன்று
பூ மாலை தொடுத்த பாமாலை (ஆண்டாள் திருப்பாவை)
*
திருப்பாவைப் பாசுரம் – ஐந்து.
*
சந்தேகம் என்பது என்ன? அது ஒரு பெரிய நோய் என்று பெரியவர்கள் சொல்வார்கள். மாணவனுக்கு ஆசிரியர் நடத்தும் பாடத்தின் மீது சந்தேகம் வரலாம். அந்த ஆசிரியர் மீதே சந்தேகம் வரக் கூடாது!
நாரதருக்கும் அப்படித்தான் ஒரு சந்தேகம் வந்தது. என்ன சந்தேகம்? எப்பொழுதும் நான் “ நாராயணா” என்று இறைவனை ஜபிக்கிறேனே, இப்படி அவன் பெயரைச் சொல்வதால் என்ன நன்மை?
மஹா விஷ்ணுவிடமே சென்று கேட்டார். விஷ்ணு சிரித்து ‘ நாரதா பூலோகத்தில் ஒரு மண்புழு ஊர்ந்து கொண்டிருக்கிறது. அதனிடம் சென்று நாராயணா’ எனச் சொல்லிப் பார்” என்றார். நாரதர் சென்று மண்புழுவிடம் ‘நாராயணா’ என ஒருமுறை சொன்னார். சொன்னதும் அது இறந்து விட்டது. நாரதர் சோகமாகச் சென்று விஷ்ணுவிடம் விஷயத்தைச் சொல்ல, மஹாவிஷ்ணு, “ நாரதா. நீ மறுபடி சென்று ஒரு மான் குட்டியிடம் சொல்” என்றார்.
நாரதர் சென்று அந்த மான்குட்டியிடம் சொல்ல அதுவும் இறந்து விட்டது. மறுபடி விஷ்ணு. விஷயம். விஷ்ணு சொன்னார். “ நாரதா கவலைப் படாதே. இப்போது பூமியில் உள்ள கன்றுக்குட்டியிடம் போய்ச் சொல்” எனச் சொல்ல நாரதர் சென்று “ நாராயணா’ என்று கன்றுக்குட்டியிடம் சொல்ல அது தாவிக் குதித்து உயிர் விட்டது.
நாரதருக்கு மிக்க சோகமாகி விட்டது. விஷ்ணுவிடம் போய் “யோவ். என்ன தான்யா உன் மனசில நினச்சிருக்க? நான் கேட்டது ஒரே ஒரு கேள்வி. அதுக்குப் பதில் சொல்லாம இப்படி அலைக்கழிக்கறே?” என மனதில் நினைத்துக் கொண்டு விஷ்ணுவிடம்” ஐயனே. என்னை ஏன் இப்படி சோதிக்கிறீர்கள்?” எனக் கேட்டார். விஷ்ணு புன் முறுவல் புரிந்து “ நாரதா. இப்போது பூலோகத்தில் ஒரு ராஜாவிற்குக் குழந்தை பிறந்திருக்கிறது. அதனிடம் சென்று “ நாராயணா” என்று சொல்லிப் பார். உன் கேள்விக்கு விடை கிடைக்கும்” என்றார். நாரதரும் தன் விதியை நொந்து அந்த ராஜ்யத்துக்குச் சென்று அந்தக் குழந்தையிடம் “ நாராயணா” என்று சொல்லிவிட்டுக் கண்ணை மூடிக் கொண்டார்.
சற்று கழித்துப் பார்த்தால் அந்தக் குழந்தை அவரைப்பார்த்து சிரித்து விட்டுப் பேச ஆரம்பித்தது. “இன்னுமா புரியவில்லை நாரதரே! நீர் ஒரு தடவை பகவான் நாமமான நாராயணா என்று சொன்னதைக் கேட்டதால், புழுவாய்ப் பிறந்த நான், மான் , கன்று ஆகிய ஜன்மங்கள் எடுத்து இப்போது கிடைத்தற்கரிய மனிதப் பிறவி எடுத்திருக்கிறேன். இதுவே இறை நாமத்தின் மகிமை” என்றது.
ஆண்டாள் இந்தப் பாடலில் இதையும், இறைவனை வணங்கி நோன்பிருக்கும் போது அந்த இறை நாமத்தால் இடையூறுகள் விலகும் என்றும் சொல்கிறாள்.
*
மாயனை மன்னு வடமதுரை மைந்தனைத்
தூய பெரு நீர் யமுனைத் துறைவனை
ஆயர் குலத்தில் தோன்றும் அணி விளக்கைத்
தாயைக் குடல்விளக்கம் செய்த தாமோதரனைத்
தூயோமாய் வந்து நாம் தூமலர்த் தூவித் தொழுது
வாயினாற் பாடி மனத்தினாற் சிந்திக்கப்
போய பிழையும் புகுதருவான் நின்றனவும்
தீயீனில் தூசாகும் செப்பேலோ ரெம்பாவாய்..
*
அவன் நம் வாக்குக்கும் மனத்திற்கும் எட்டாத ஆச்சர்யமான சக்தி படைத்தவன். வடமதுரையில் வெகு காலம் எழுந்தருளியிருந்தவன். அவன் பிறந்தபோது, அவனை வசுதேவர் ஆயர்பாடிக்குத் தூக்கிச் சென்ற போது அவருக்கு வழி விட்டதால் தூய்மையடைந்தது யமுனை நதி. அங்கு விளையாடியதால் யமுனைத் துறைவன் என்று பெயர் பெற்றான் அவன்.
அவனது ராமாவதாரத்தில் பிரகாசிக்காத குணங்கள் கூட ஆயர் குலத்தில் பிரகாசித்தன. எல்லாம் செய்யும் ஆற்றல் இருந்தும் கூட, யசோதையிடம் சக்தியில்லாத குழந்தையாய், அவளுக்குக் கட்டுப் பட்டான். அவள் அவனை உரலில் கட்டிய போது அதை இழுத்துச்சென்று அதனால் வயிற்றில் ஏற்பட்ட தழும்புகளால் தாமோதரன் என்று பெயரும் பெற்றான். இப்படிக் கட்டவும், அடிக்கவும் செய்து , தன்னை மாற்றிக் கொண்டு, பெற்ற வயிற்றிற்குப் பட்டம் சூட்டியவன் அவன். அந்தக் கண்ணன். அவனை, நாம் வாயினால் பாடி மனதினால் சிந்திக்க, இதுவரை செய்த பாவங்களும், நம்மையும் அறியாமல் செய்யப் போகும் பாவங்களும், நெருப்பினில் பஞ்சு போல அழிந்து போகும். எனவே அவனை, அவன் நாமத்தை வாயாரச் சொல்லுங்கள்.
** ** **
பயனே கருதாமல் எம்பெருமானின் நாமங்களைச் சொன்னால் எப்படிப் பட்ட பாவங்களும் அழிந்து விடும் என்பது இதன் உட்கருத்து!
**
பாசுரம் பாடி வா தென்றலே…
பதினான்கு
பூ மாலை தொடுத்த பாமாலை (ஆண்டாள் திருப்பாவை)
*
திருப்பாவைப் பாசுரம் – ஆறு.
*
பறவைகளில் காக்கையைச் சண்டாளன் என்பார்கள். ஏனெனில் ஆனானப் பட்ட சீதா தேவியையே ஆசைப்பட்டதல்லவா அந்தப் பொல்லாத பறவை!
முதன் முதலாக அரபு நாடான ஃப்யூஜைரா சென்றிருந்த போது ஒரு பறவையைப் பார்த்தேன். கறுப்பாக மிகக் குண்டாக, கண்களை உருட்டி விழித்த வண்ணம் அமர்ந்திருந்தது. பருந்தோ என்னவோ என்று யோசிக்கும் போது “கா…கா..” எனக் கத்தியவண்ணம் பறந்தது. நண்பரிடம் கேட்டேன். “ஏன் உங்கள் ஊரில் காக்கைகள் இவ்வளவு பெரிதாக இருக்கின்றன?” அவரது பதில், “இங்கு யாரும்காக்கை பிடிக்க மாட்டார்கள்!”
காக்கையின் மிகப்பெரிய நற்குணம் ஒன்று உண்டு. எவ்வளவு சிறிய ஆகாரம் கிடைத்தாலும்,, மற்றவற்றைக் கூவி அழைத்து, எல்லோரிடமும் பகிர்ந்து உண்ணும்.
“புள்ளும் சிலம்பின காண்” என்கிற ஆறாவது பாடல் முதல் “எல்லே இளம் கிளியே” என்கிற பதினைந்தாவது பாடல் வரை கண்ணனை நினைத்து மயங்கிக் கிடக்கின்ற தோழிகளைப் பொழுது விடிந்ததற்குப் பல அடையாளங்கள் கூறி எழுப்பி நோன்புக்கு அழைக்கிறாள் ஆண்டாள். காக்கை பகிர்ந்துண்ணுவதைப் போல், அடியவர்களுடன் சேர்ந்து தான் எம்பெருமானை அனுபவிக்க வேண்டும் என்பதை அறியாமல் கிடக்கின்றவள் ஒருத்தியை இந்தப் பாடலில் எழுப்புகிறாள்.
** **
புள்ளும் சிலம்பின காண் புள்ளரையன் கோயிலில்
வெள்ளை விரிசங்கின் பேரரவம் கேட்டிலையோ
பிள்ளாய் எழுந்திராய் பேய்முலை நஞ்சுண்டு
கள்ளச்சகடம் கலக்கழியக் காலோச்சி
வெள்ளத் தரவில் துயிலமர்ந்த வித்தின்
உள்ளத்துக் கொண்டு முனிவர்களும் யோகிகளும்
மெல்லவெழுந்து அரியன்ற பேரரவம்
உள்ளம் புகுந்து குளிர்ந்தேலோ ரெம்பாவாய்..
*
”அறிவற்ற பறவைகளும் பொழுது விடிந்ததை உணர்ந்து உறக்கம் கலைந்து கூவுகின்றன, அறிவுள்ள நீ இன்னும் உறங்கலாமா?
கருடனை வாகனமாக உடைய பெருமாளின் கோவிலில் விடியற்காலை பூஜைக்காக ஊதப்படுகின்ற வெண்மையான் சங்கின் நாதம் உன் செவிகளில் விழவில்லையா? எம்பெருமானை அனுபவிப்பதில் புதியவளான பிள்ளையே. (பேதையே) , அடியவர்களுடன் சேர்ந்து தான் அவனை அனுபவிக்க வேண்டும் என அறியாமல் நீ மட்டும் அவனை அனுபவிக்க முயல்வதை விட்டு எழுந்திரு!
பூதனையை மாய்த்தவனும் சகடாசுரனை அழித்தவனும், திருப்பாற்கடலில் பள்ளி கொண்டிருப்பவனுமாகிய எம்பெருமானை எப்பொழுதும் சிந்திப்பவர்கள் முனிவர்கள்.
அவனுக்கு எப்பொழுதும் தொண்டு செய்பவர்கள் யோகிகள். அவர்கள் அனைவரும் தங்கள் உள்ளத்தில் உறையும் எம்பெருமானுக்கு வாட்டம் ஏற்படக்கூடாதென விடிகாலையில் எழுந்து “ஹரி ஹரி” என நாம பாராயணம் செய்யும் பேரொலி திருவாய்ப்பாடி எங்கும் நிறைந்து எங்கள் உள்ளங்களையும் குளிர வைத்து எழுப்பியது.
எனில், நாங்களும் எழுந்தோம். நீயும் எழுந்திருப்பாயாக” என்கின்றனர் வீட்டுக்கு வெளியில் இருப்பவர்கள்..
**
உட்கருத்து: எம்பெருமானுடைய அடியவர்களுடன் சேர்ந்தே அவனை அனுபவிக்க வேண்டும் என்பதை உணராதிருத்தல் மிகப்பெரிய அறியாமை ஆகும்…
** **
(டிசம்பர் 2001 இல் எழுதியது)
**.
பாசுரம் பாடி வா தென்றலே…
பதினைந்து
பூ மாலை தொடுத்த பாமாலை (ஆண்டாள் திருப்பாவை)
*
திருப்பாவைப் பாசுரம் – ஏழு
*.
நல்ல உறக்கம் என்பது என்ன?
ஒரு நாளில் எட்டு மணி நேர உறக்கம் ஒரு மனிதனுக்குப் போதும் என மருத்துவர்கள் சொல்கிறார்கள்.
நன்பர் ஒருவரைக் காலையில் பார்த்தேன்.. அவர் விழிகள் சிவந்திருந்தன. “என்ன ஆயிற்று?”
”இரவு முழுவதும் தூக்கம் இல்லை. பையன் வாயில் விரல் போட்டுத் தூங்கிக் கொண்டிருந்தான்”
“சரி, அதற்கும் நீங்கள் தூங்காததற்கும் என்ன சம்பந்தம்?”
“அவன் வாயில் போட்டுக் கொண்டது என்னுடைய விரலை!” என்றார் நண்பர்.
வெகு நேரம் ஒருவன் உறங்கினால் “இவன் என்ன பேய்த்தூக்கம் தூங்குகிறான்?” என்போம். ஆண்டாளும் இந்தப்பாடலில் விடியற்காலை கடந்தும் உறங்குகின்ற ஒருத்தியை எழுப்புகிறாள்.
** **
கீசு கீசென் றெங்கு மானைச் சாத்தான் கலந்து
பேசின பேச்சரவம் கேட்டிலையோ பேய்ப்பெண்ணே
காசும்பிறப்பும் கலகலப்பக் கைபேர்த்து
வாச நறுங்குழல் ஆய்ச்சியர் மத்தினால்
ஓசைப்படுத்த தயிரரவம் கேட்டிலையோ
நாயக பெண்பிள்ளாய் நாராயண மூர்த்தி
கேசவன் பாடவும் நீ கேட்டே கிடத்தியோ
தேசமுடையாய்த் திறவேலோ ரெம்பாவாய்.”
*
“பொழுது விடிந்ததற்கு அடையாளமாக எல்லா இடங்களிலும் ஆனைச்சாத்தான் என்கிற பறவை “கீச் கீச்” என ஒலி எழுப்புவது உன் காதில் விழவில்லையா? அடியார்களுடன் கலந்து பழகும் சுவையை அறிந்திருந்தும் நீ உறங்குகிறாயே, நீ பேய்ப் பெண் தானே?
ஆயர்பாடியில் எல்லாப் பெண்களும் விடியற்காலையிலேயே எழுந்து தயிர் கடைகின்றனர். அவ்வாறு அவர்கள் செய்யும் போது அவர்கள் அணிந்துள்ள அச்சுத்தாலி, ஆமைத் தாலி போன்ற நகைகளும் கலகல என ஒலி எழுப்புகின்றன. அவர்கள் கூந்தல் அவிழ்ந்து நறுமணம் எங்கும் கமழ்கிறது. இப்படி அந்த ஒலியையும் நறுமணத்தையும் அனுபவித்த வண்ணம், எங்களது தலைவியாகிய நீ உறங்குவது நியாயமா?
நாராயணனே கண்ணனாக அவதரித்து “கேசி’ என்ற அசுரனைக் கொன்ற கதையை நாங்கள் பாடிக் கொண்டிருக்கும் போது , நீயும் வந்து எங்களுடன் சேர்ந்து கொள்ளாமல் உறங்குவது நியாயமா? உன்னைக் காணாமல் இருண்டு கிடக்கும் எங்கள் நெஞ்சில் இருளைப்போக்க, கதவைத் திறவாயாக!”
** **
அடியவர்களுடன் சேர்ந்து தான் எம்பெருமானை அனுபவிக்க வேண்டும் என்பதை ஒரு போதும் மறக்கக் கூடாது என்பது இப்பாடலின் உட்கருத்து..
** **
**.
பாசுரம் பாடி வா தென்றலே…
பதினாறு
பூ மாலை தொடுத்த பாமாலை (ஆண்டாள் திருப்பாவை)
*
திருப்பாவைப் பாசுரம் – எட்டு
*.
கிராமப் புறங்களில் இன்னும் புழங்கப்படுமொரு தமிழ்ச் சொல் “வெள்ளென:” “எலேய். வெள்ளென எழுந்திருச்சு இந்த ஆளைப் பார்த்து விட்டு வா” என்பார்கள். அது என்ன “வெள்ளென”
“வெள்ளென” என்றால் விடியற்காலை, அதி அதி காலை எனலாம்.
இரவு முற்றிலும் கலைந்து கொஞ்சம் கொஞ்சமாக வெளிச்சம் வரும் நேரம். அந்தச் சமயத்தில் வானம், உறங்கி எழுந்த இளம்பெண்ணைப் பார்ப்பது போல – ஒரு பயங்கலந்த அழகுடன் காணப்படும். முற்றிலும் இருள் கலைந்தால் என்ன ஆகும்.? கீழ்வானம் வெளுத்து வெளிச்சம் பரவி விடும்.
இந்தப் பாடலில் கண்ணனால் மிகவும் விரும்பப்பட்ட ஒரு பெண்ணை அனைவரும் அழைக்கிறார்கள்
**
கீழ்வானம் வெள்ளென்று எருமைசிறு வீடு
மேய்வான் பிறந்தனகாண் மிக்குன்ன பிள்ளைகாள்
போவான் போகின்றாரைப் போகாமல் காத்துன்னை
கூறுவான் வந்து நின்றோம் கோலாகலமுடைய
பாவாய் எழுந்திராய்ப் பாடிப் பறைகொண்டு
மாவாய் பிளந்தானை மல்லரை மாட்டிய
தேவாதி தேவனைச் சென்று நாம் சேவித்தால்
ஆவா வென்றாராய்ந்தருளேலோ ரெம்பாவாய்”
** **
கிழக்கு வெளுத்து விட்டது. ஆயர்பாடியில் உள்ள எருமைகள் பனித்துளியை நுனியில் கொண்டிருக்கும் குளுமையான புற்களை மேய்வதற்காகச் சென்று கொண்டிருக்கின்றன.
உன்னைத் தவிர ஆயர் பாடியில் உள்ள பெண் பிள்ளைகள் எழுந்து நீராடி நோன்பு நோற்பதற்காகச் சென்று கொண்டிருக்கிறார்கள். நீ வரவில்லை என்றதும் அவர்கள் நின்று விட்டார்கள். அவர்களை அங்கேயே நிறுத்தி விட்டு உன்னை அழைப்பதற்காக உன் இல்லத்தின் வாசலில் வந்து நிற்கின்றோம்.
நீ கண்ணனிடத்தில் மிகவும் அன்பு உடையவள். ஆகையால் அவனால் மிகவும் விரும்பப்படும் பெண்ணல்லவா நீ! அதனால் தான் உன்னை அழைக்க வந்திருக்கிறோம்!
கண்ணன் குதிரை வடிவம் கொண்டு வந்த “கேசி” என்ற அசுரனையும், கம்ஸனால் ஏவப்பட்ட மல்லர்களையும் அழித்து, தன்னை நமக்குக் கொடுத்தவன். தேவர்களுக்கெல்லாம் தேவனான அவனைச் சென்று நாம் சேவிப்போம். அப்போது அவன் “ஆ, ஆ, அடடா, நாம் இருக்கும் இடம் தேடி இவர்களை வரச் செய்து விட்டோம்” என நம்மீது இரக்கம் கொண்டு நமக்கு அருள் செய்வான். எனவே எழுந்திருப்பாயாக!”
** ** **
சூடி கொடுத்த சுடர் கொடியின் புகழ் பா (சுர) மாலையை சூடி கொடுக்கும் கோதுகலமுடைய 'கண்ணா' நீவிர் வாழ்க .
துஷ்யந்த் ஸ்ரீதர் அவர்களின் விளக்கம் ஒன்று நினைவிற்கு வருகிறது
கீழ்வானம் என்பதில் வானம் என்று ஆகாசத்தை குறிக்கிறது… ஆகாசம் என்பது ஒவ்வொரு ஜீவாத்மாவினுள்ளும் தஹாராகாசம் என்னும் மனத்தின் உள்வெளியை குறிக்கிறது. தஹாராகாசம் வெள்ளென்று சுத்தமாக இருந்தால்தான் சுடர்விட்டொளிரும் பரமாத்மாவை கண்டு கொள்ள முடியும் என்று பொருள் சொல்வர் பெரியோர்.
சிறு வீடு மேய்வது என்பது பனித்துளி படர்ந்த புற்களை மேய விடிந்தும் விடியாத காலையில் எருமைகள் புறப்படுமாம். ஆண்டாளுக்கு எப்படி எருமைகள் சிறுவீடு மேய்வது போன்ற மாடு மேய்க்கும் இடையர்களுக்கு தெரிந்த விஷயங்களெல்லாம் தெரிந்தது?
திருநெல்வேலியில் சிறு வீட்டு பொங்கல் என்று ஒரு பண்டிகை கொண்டாடுவார்கள்.சிறு வீடு என்றால் சின்ன வீடு என்று விகல்பமான அர்த்தம் எடுத்து கொள்பவர்களும் (கொல்பவர்களும்) இருக்கிறார்கள் இந்த காலத்தில் :)
தை பொங்கல்,மாட்டு பொங்கல்,காணும் பொங்கல் போன்று தன வீட்டு சிறுவர்கள் மற்றும் பக்கத்துக்கு வீட்டு சிறுவர்கள் எல்லோரையும் அழைத்து சிறு வீட்டு பொங்கல் கொண்டாடுவார்கள் .
வீட்டின் வாசலில் பெருக்கி சுத்தம் செய்து கோலமிட்டு அதன் நடுவே சாணி பிள்ளையார் வைத்து , சாணி பிள்ளையார் தலை மீது பூசணிபூ செம்பருத்தி பூ போன்ற பூக்களை சொருகி வைத்து அதனை மாலையில் வாரட்டியாக தட்டி பத்திரமாக வைத்து இருப்பார்கள் .அவ்வாறு செய்யும் வீடின் அருகில் குருவ மண்னால் சுற்று சுவர் வைத்து அதன் நடுவில் உள்ள பகுதி வீட்டு சிறுமிகளுக்கான சிறு வீடு அந்த வீட்டு வாசல் முன்னும் சாணி பிள்ளையார் வைத்து கோலமிட்டு பூ வைத்து அந்த வராட்டியும் பத்திரமாக பாதுகாக்க படும் .பொதுவான பெரியோர் பொங்கல் முடிந்த ஒரு சில நாட்களில் அந்த சின்ன வீடு முன்னால் சின்ன பாத்திரத்தில் வீட்டு சிறுமிகளை அழைத்து பெரிய பொங்கலுக்கு எந்த அளவிலும் குறைவில்லாமல் கரும்பு மஞ்சள் போன்றவைகளுடன் சிறுமிகளால் பெரியோர் கவனிப்பில் சிறுவீட்டுபொங்கல் வைக்கப்படும் .சிறுமிகளுக்கு அவ்வாறு பொங்கல் எப்படி வைப்பது என்று விளையாட்டாக கற்று தரப்படும்
இதற்கு இன்னொரு விளக்கமும் சொல்பவர்கள் உண்டு .
புதிதாக மாடுகள் வாங்கியவர்கள் பொங்கல் பண்டிகை மாதிரி வீடுகளின் வாசலில் கோலம் போட்டு மாடுகளை மேய்க்க அனுப்புவார்கள். பொதுவாக மாடுகளை மேய்ப்பவர்கள் சிறுவர்களாக தான் இருப்பார்கள் அந்நாட்களில் .மேய்ச்சல் நன்றாக இருக்க வேண்டும் மேலும் மேய்ச்சலுக்கு அனுப்பிய மாடுகள் பத்திரமாக வீடு திரும்ப வேண்டும் மாட்டை ஓட்டி சென்ற சிறுவர்களும் நல்ல முறையில் வீடு திரும்ப வேண்டும் என்று வேண்டி கொண்டு இந்த பண்டிகை கொண்டாடுவார்கள்.
பாசுரம் நல்லதொரு மலரும் நினைவுகளாக அமைந்து விட்டது நன்றி சி கே
//பாசுரம் நல்லதொரு மலரும் நினைவுகளாக அமைந்து விட்டது// வெகு அழகு கிருஷ்ணா ஜி.. சிறுவீட்டுப் பொங்கல் நான் கேள்விப்பட்டதில்லை.. நன்றி (இப்போது தான் பார்த்தேன்.)
பாசுரம் பாடி வா தென்றலே…
பதினேழு
பூ மாலை தொடுத்த பாமாலை (ஆண்டாள் திருப்பாவை)
*
திருப்பாவைப் பாசுரம் – ஒன்பது
*
விக்கிரமாதித்தன் கதைகளில் கிளைக்கதை ஒன்று உண்டு.
ஒருவனை அவன் மிக மெல்லிய உணர்வுகள் உள்ளவனா என்பதைச் சோதிக்க படுக்கை அறையில் ஒரு சின்ன துரும்பைப் போட்டு, அதன் மீது பத்துப் பதினைந்து பஞ்சணைகள் வைத்து தலையணைகளையும் கொடுத்து உறங்கச் சொன்னார்கள். ஆனால் அவனால் உறங்க முடியவில்லை. அவனது உடல் களைத்திருந்தது. மனம் விழித்திருந்து அடியில் உள்ள சிறு துரும்பைக் காட்டிக் கொடுத்தது.அது தந்த உறுத்தலால் அவனால் உறங்க இயலவில்லை.
இந்தப்பாடலிலும் அப்படித் தான். கண்ணனை நினைத்து ஏங்கிய வண்ணம் உடல் இளைத்து, அவன் வந்து அழைத்துச் செல்வான் என நினைத்தவாறு கண்கள் மூடினாலும் உறக்கம் வராமல் பொய்த்துயில் கொண்டிருக்கும் ஒரு பேதையை எழுப்புகிறார்கள்.
*
தூமணி மாடத்துச் சுற்றும் விளக்கெரிய
தூபங்கமழத் தூயவன் மேல் கண் வளரும்
மாமன் மகளே மணிக்கதவம் தாழ் திறவாய்
மாமீர் அவளை எழுப்பீரோ உன் மகள் தான்
ஊமையோ அன்றிச் செவிடோ அனந்தலோ
ஓமப் பெருந்துயில் மந்திரப் பட்டாளோ
மாமாயன் மாதவன் வைகுந்தன் என்றென்று
நாமம் பலவும் நவின்றேலோ ரெம்பாவாய்..
*
உனது மாடம் இயற்கையாகவே தூய்மையான ரத்தினங்களால் அலங்கரிக்கப் பட்டிருக்கிறது. அதைச் சுற்றிலும் விளக்குகள் மங்களகரமாக எரிகின்றன. மேலும் அகிற்புகையின் நறுமணம் எங்கும் கமழ்கிறது. அங்கு இருக்கும் படுக்கையில் படுத்தால் உடனே உறக்கம் வரும், அப்படிப் பட்ட படுக்கையில் படுத்துத் துயிலும் மாமன் மகளே, உன்னுடைய இல்லத்தின் மாணிக்கக் கதவுகளைத் திறப்பாயாக! மாமி, நாங்கள் இப்படி அழைக்கும் போதும் எழுந்திராமல் இருக்கும் மகளை எழுப்புவீராக!
வாசலில் வந்து காத்துக் கிடக்கும் எங்களை நோக்கி பதிலேதும் கூறாத இவள் வாய் பேச முடியாத ஊமையா, அல்லது எங்கள் வார்த்தைகள் காதில் விழாத செவிடா, அல்லது எழுந்திருக்க முடியாத அளவிற்குச் சோம்பேறித் தனம் கொண்டவளா, அல்லது எழுந்திருக்கக் கூடாது என்று யாரும் மந்திரமிட்டு விட்டார்களா.
மயங்கிக் கிடப்பவர்களைத் தண்ணீர் தெளித்து எழுப்புவதைப் போல இவளுக்குப் பிடித்தமான எம்பெருமானின் திரு நாமங்களைப் பாடியவாறு நாங்கள் இருந்தும் இவள் இன்னும் எழுந்திருக்கவில்லை. மிகவும் ஆச்சர்யமான குணங்களையுடைய மாமாயன் என்றும், ஸ்ரீ மஹாலஷ்மிக்கும் நாயகனான மாதவன் என்றும், பரமபதமாகிய வைகுந்தத்தை உடையவன் என்றும் பல திரு நாமங்கள் நாங்கள் பாடிய போதும் எழுந்திராத மகளை எழுப்புவீராக.
*
எம்பெருமானிடத்தில் உள்ளன்பு கொண்ட அடியவர்களுடன் நமக்குள்ள உறவு நெருக்கமான விரும்பத்தக்க உறவாகும் என்பதை இப்பாடலில் உள்ள ‘மாமன் மகளே’ என்ற சொல் உணர்த்துகிறது.
**
**
பாசுரம் பாடி வா தென்றலே…
பதினெட்டு
பூ மாலை தொடுத்த பாமாலை (ஆண்டாள் திருப்பாவை)
*
திருப்பாவைப் பாசுரம் – பத்து
*
தீய செயல்கள் பல செய்த ஒருவன் உயிர் பிரிந்த பிறகு நேரே நரகத்துக்குச் சென்றான். நரகத்தின் வாயிலில் இருந்து உள்ளே பார்த்தால் ஒரே இருள் மற்றும் அழு குரல்கள்.
பயந்து போய் வாசலில் இருந்த வாயிற்காப்போனிடம் ‘ஐயா, நான் தீய செயல்கள் பல புரிந்திருக்கிறேன். வாஸ்தவம் தான். ஆனால் எனக்கு சொர்க்கம் செல்ல வேண்டும், ஏதாகிலும் ஒரு வழி சொல்லுங்களேன்” எனக் கெஞ்சினான்.
வாயிற்காப்போன் “ நீ ஏதாவது ஒரு சின்ன நல்லது செய்திருந்தால் சொல்” என, தீயவன் யோசித்துப் பார்க்கையில் சின்ன வயதில் ஒரு அழுகிய வாழைப்பழத்தை ஒரு பிச்சைக்காரனுக்கு இட்டது ஞாபகத்துக்கு வந்தது.
அதைக்கேட்டு வாயிற்காப்போன் அந்தப்பழத்தையே சிறு கயிறாக மாற்றி “ இந்தா நீ செய்த சிறு புண்ணியமாகிய இந்தக் கயிறு சொர்க்கத்திற்குச் செல்லும். இதைப் பிடித்துக் கொண்டு நீயும் செல்” என்றான்.
தீயவனும் அந்தக் கயிற்றைப் பிடிக்க கயிறு வேகமாக மேலெழும்பியது. சற்று நேரத்தில் கயிற்றின் வேகம் மட்டுப் பட்டது. எதனால் என கீழே பார்த்தால் அவனது கால்களைப் பற்றியவாறு பலர் நரகத்திலிருந்து தொங்கிய வண்ணம் வந்து கொண்டிருந்தனர்.
இவனுக்கோ கோபம் வந்தது. “ நான் செய்த புண்ணியத்தை வைத்து இவர்கள் எப்படி என்னுடன் சொர்க்கம் வரலாம்?” என நினைத்துக் கால்களை உதறினான்.
அவ்வளவு தான்! கயிறு மறைந்தது. மற்றவருடன் அவனும் நரகத்தில் வீழ்ந்தான்.
எனில் சொர்க்கம் என்பது பகவானை, இறையைப் பிரார்த்தித்து நல்ல செயல்கள் புரிந்தாலே கிடைக்கும். இறையருள் கிட்டி விட்டாலும் அதை மற்றவர்களுடன் பகிர்ந்து கொள்ள வேண்டும் என்பது இன்றைய பாடலில் கூறப் படுகிறது. இந்தப் பாடலில் கண்ணனைத் தன் வசத்தில் வைத்திருக்கும் கோபிகை ஒருத்தியை எழுப்புகிறார்கள்.
*
நோற்றுச் சுவர்க்கம் புகுகின்ற அம்மாவாய்
மாற்றமும் தாராரோ வாசல் திறவாதார்
நாற்றத் துழாய் முடி நாராயணன் நம்மால்
போற்றப் பறைதரும் புண்ணியனாம் பண்டொரு நாள்
கூற்றத்தின் வாய் வீழ்ந்த கும்ப கர்ணனும்
தோற்றுமுனக்கே பெருந்துயில் தான் தந்தானோ
ஆற்ற அனந்தலுடையாய் அருங்கலமே
தோற்றமாய் வந்து திறவேலோ ரெம்பாவாய்..
*
சகியே, கண்ணனையே பற்றிவிட்ட படியால் நீ நோற்க வேண்டிய நோன்பு எதுவும் இல்லை. எனவே எல்லா நோன்புகளும் நூற்றுக் கண்ணனை அடைந்த சொர்க்கத்தை அனுபவிக்கும் தலைவியே, நீ கதவைத் தான் திறக்கவில்லை. வாயையாவது திறந்து ஒரு வார்த்தை கூறலாகாதா.
வாசலை மூடினால் வாயையும் மூட வேண்டுமோ?
துளசிமாலையையே அணிந்திருந்ததனால் துளசியின் வாசனையை முடியில் கொண்டவன் நாராயணன். அவன் நம் “மால்”. நம் மனத்தை மந்தஹாசம் கொண்ட மதுர வதனத்துடன் மயக்குபவன்.
அவன் நம்மால் போற்றிப் புகழப்படும் பாடல்களைக் கேட்டால் வேண்டியவைகளைத் தருவான்.
அவனைப்பாடுவதை விடுத்து உறங்குகின்றாயே. பெரிய மாளிகை போன்றும், ராஜகோபுரத்தைப் போன்றும் உருண்டு திரண்ட உடலை உடைய கும்ப கர்ணனிடம் வருடத்திற்கு ஆறு மாதங்கள் குடிகொண்டிருந்த நித்திராதேவி – அவன் அமர பதவி அடைந்ததும் உன்னிடம் வந்து விட்டாளா?
கும்பகர்ணனே தன்னுடைய பெருந்தூக்கத்தை உனக்குக் கொடுத்து விட்டானா? மிகுந்த சோம்பலை உடையவளே, கண்ணன் தன் தலையில் தரிக்கும் அணிகலனைப் போன்றவள் அல்லவா நீ! தூக்கக் கலக்கத்தில் தடுமாறாமல் அப்படியே எழுந்து கதவைத்திறவாயாக.!
• * * *
கும்பகர்ணன் பற்றி ஒரு செய்தி: அவன் சிவபெருமானை நோக்கித் தவம் செய்த போது சிவன் பிரத்யட்சமாகி “ உனக்கு என்ன வேண்டும்” என்று கேட்டார். அவன் மனதுள் நித்தியத்துவம் (சாகா வரம்) வேண்டும் என்று நினைத்தானாம். அவ்வாறு நினைத்தது நாரதருக்குத் தெரிந்து விட்டது. ஆகவே கும்ப கர்ணன் சிவனிடம் கேட்ட போது அவனது நாக்கு விஷமத்தால் குளறி “ நித்திரைத்துவம் வேண்டும்” என்பதாக ஆக, அவ்வண்ணமே சிவன் வரம் கொடுத்ததாகச் சொல்வார்கள்.
*
அருமையாக சொன்னீர்கள் . நாம் அனைவருமே ஒருவருக்கொருவர் பந்துகள்(உறவினர்கள்) தான் .அனைவரும் பரமாத்மாவிடமிருந்து பிரக்ருதி சம்பந்தத்தால் வந்த தேக பந்துக்கள். பரமாத்மா எல்லோருக்கும் ஆத்ம பந்து.
இது போன்ற சூழலை நம்மாழ்வார் திரு தொலைவில்லி மங்கலம் பாசுரத்தில் வெளிப்படுத்தி உள்ளார் . 10 பாசுரங்கள் கொண்டது.அதில் முதல் பாசுரம் ‘துவளில் மாமணி மாடமோங்கு தொலைவில்லிமங்கலம்’ என்றே தொடங்குகிறது.எல்லோருமே நம்மை ஆள்பவர்கள் தான் அதனால் தான் அவர்கள் ஆழ்வார்கள் என்று அழைகபட்டார்கள். இறைவனை ஆழமாக பற்றி கொண்டவர்கள்
"இங்கே மந்திரம் என்பது திருமந்திரம் எனப்படும் ஓம் நமோ நாராயணாய என்ற திருவஷ்டாக்ஷர மந்திரத்தை அனுசந்தித்து அதிலேயே தோய்ந்து போய்விட்டாளோ?" என்று விளக்கம் படித்து உவகை அடைந்தது நினைவிற்கு வருகிறது சி கே
தேவர் பிரான் மற்றும் அரவிந்தலோசனன் - தொலைவில்லிமங்கலம்
http://tamil.thehindu.com/multimedia...7_2070848h.jpg