https://scontent.fybz1-1.fna.fbcdn.n...d6&oe=5A2817C0
Printable View
Jahir Hussain
மனோகரன் என்ற மகோன்னதமான பாத்திரத்திற்கு தன் மிரள வைக்கும் நடிப்பால் புத்துயிர் ஊட்டி அப்பாத்திரத்தை தமிழக மக்களின் நெஞ்சில் ஆழப்புதைத்த நடிகர் திலகத்தின் திறமையை எப்படி எழுத!? எப்படி மெச்ச!? எப்படிப் புகழ!?
அழகு என்றால் அப்படி ஒரு அழகு! இளமை என்றால் அப்படி ஒரு இளமை! 1952-இல் 'பராசக்தி'யில் அறிமுகமாகி தனது பத்தாவது படமான 'மனோகரா'வில் (1954) உடலும், முகமும் வனப்பேறி மன்மதனிடம் சவால் விடும் அழகைப் பெற்றிருந்தார் இந்த அற்புத மனிதர். கூடவே திரையலகில் மிகுந்த அனுபவத்தையும் கண்டிருந்தார் இந்த அதிசய மனிதர்.
"வஞ்சகம் வாழ்ந்தது கிடையாது....கொடுமை நிலைத்ததில்லை... இதோ பார்... உன் பொருட்டு விழா நடைபெறுகிறது விழாவிற்கு நீ வந்துதான் தீர வேண்டும்"
என்று மந்திரி சத்யசீலர் மனோகரனிடம் கூறும் காட்சியில் நடிகர் திலகம் அறிமுகம். வீரமாக நடந்து வரும் கால்கள் மட்டுமே காண்பிக்கப்படும். அரங்கில் அமர்ந்து படம் பார்க்கும் அத்துணை பேரின் கைதட்டல் ஓசை நடிகர் திலகத்தை மனோகரனாய்ப் பார்க்கையில் விண்ணைப் பிளந்து முறிக்கும். கூனனும் நிமிர்ந்து உட்கார்ந்து மனோகரனைப் பார்த்து வியந்து உறைந்து போவான். அப்படி ஒரு கம்பீரம். மனோகரன் என்ற வார்ப்படத்தில் இருந்து வார்த்து எடுக்கப்பட்டது போல அப்படி ஒரு வேடப் பொருத்தம்.
நாடகத்திற்கு மந்திரி அழைக்கும் போது அவரிடம் அங்கே வசந்தசேனை வருவாள் என்ற கோபத்தைக் காட்டி சீறுவாரே ஒரு சீறு. எதிர்பாராமல் தாய் பத்மாவதி அங்கே வந்து 'மனோகரன் கட்டாயம் நாடகத்திற்கு வருவான்' என்று திட்டவட்டமாகக் சொல்ல, செய்வதறியாது ஒருகணம் திகைத்து நின்று தாய் சென்றவுடன் மந்திரி சத்யசீலரை முறைப்பாரே ஒருமுறை! எந்த கல்லூரியில் இப்படியான நடிப்பைப் பயின்றார் நடிகர் திலகம்?
நாடகத்தை மகாராணி பத்மாவதியார் பார்த்து அது தன் கதையைப் பிரதிபலிப்பதாக உணர்ந்து கண் கலங்கி, தன்னையறியாமல் தன் தனயன் தோள்களில் கைவைக்க, தாயின் கை ஸ்பரிசம் பட்டவுடன் நாடகம் பார்த்துக் கொண்டிருக்கும் நடிகர் திலகம் தாய் கலங்குவதை திடீரெனக் கவனித்து தாய் பக்கம் திரும்பி "என்னம்மா?" என்று விவரம் புரியாதவராய் கள்ளம் கபடமில்லாமல் வாஞ்சையுடன் கேட்பாரே! எந்தப் பள்ளிக் கூடத்தில் இப்படிப்பட்ட வியத்தகு நடிப்பைப் பயின்றார் நடிகர் திலகம்?
வசந்தசேனையின் அக்கிரமங்களைப் பொறுக்க மாட்டாமல் தாயிடம் கோபமாக "உத்தரவு கொடுங்கள்! உருத்தெரியாமல் ஆக்குகிறேன் அந்த ஊர் கெடுப்பவளை" என்று கர்ஜிப்பாரே! எந்த சிங்கத்திடம் இப்படிப்பட்ட உறுமலை உறுமக் கற்றுக் கொண்டார் நடிகர் திலகம்?
"பாண்டியன் முத்துவிசயன் மீது போர் தொடுத்து வா" என்று அன்னை ஆணை பிறப்பித்தவுடன், "விடை கொடுங்கள்! வெற்றி மழை பொழிய வைக்கிறேன். வீணன் முத்துவிசயனின் விலா எலும்பை நொறுக்குகிறேன்" என்று முழங்குவாரே! எந்த இடியிடம் இப்படி முழக்கமிடக் கற்றுக் கொண்டார் நடிகர் திலகம்?
போரில் பாண்டியனை வென்று கூடாரத்தில் ஓய்வெடுத்துக் கொண்டிருக்கையில் பாண்டியன் பெற்ற பைங்கிளி விஜயாள் பழிதீர்க்க போர்வீரன் போல ஆண்வேடம் தரித்து மனோகரனைக் கொல்ல வந்து கையும் களவுமாகப் பிடிபட்டு மாட்டிக் கொள்ள, விஜாயாளிடம் "பாதி ராத்திரியிலே பதுங்கிப் பாயும் பட்டாளப் பயிற்சிக்கு முத்துவிசயன் ஆட்சியிலே முதலிடம் போலும். ஓடிப்போ! உயிரைக் காப்பாற்றிக் கொள்" என்று நடிகர் திலகம் நையாண்டி செய்வாரே! எந்த பல்கலைக் கழகத்தில் இந்த நையாண்டி நடிப்பை படித்து முடித்தார் நடிகர் திலகம்?
கொல்ல வந்தது மங்கை என்று அறிந்ததும் அவள் அழகில் மெய்மறந்து "வளையல் ஏந்தும் கைகளிலே வாள்" என்று ஆச்சர்யம் கலந்த புன்னகை பூத்தபடி நடிக வேந்தன் கூற "நீர் வீரரானால் என்னை ஜெயித்தபிறகு பேசும்" என்று விஜயாள் வீரத்துடன் பேச, நடிகர் திலகம் கண்களில் காதல் கொப்பளிக்க கொஞ்சு மொழியாளிடம்,"வேல்விழி மாதரிடம் வீரர்கள் ஜெயித்தார்கள் என்பதற்கு சரித்திரமே கிடையாது இளவரசி" என்று போதையுடன் கூறுவாரே! எந்த இலக்கியத்தில் முனைவர் பட்டம் பெற்று நடிப்பைப் பயின்றார் நடிகர் திலகம்?
பௌத்யாயணன் கையும் களவுமாக பிடிபட்டு மனோகரனைக் கொல்ல தன்னை அனுப்பியது வசந்தசேனைதான் என்று ஒப்புக் கொண்டு வாக்குமூலம் கொடுத்து விட, கோபக்கனல் தலைக்கேற, நடிக மன்னவன் வாளை எடுத்துக் கொண்டு சேனாவைக் கொல்ல புறப்பட, தாய் சாந்தப்படுத்தி 'வாளை உறையில் போடு' என்று அன்புக் கட்டளையிட, விழிகள் வெளியே பிதுங்க கோப இமயத்தைத் தொட்டு விட்டு பின் வாளை உறையில் போடும் வேகம். எந்த புயலிடம் இப்படிப்பட்ட வேகத்தைக் கற்றுக் கொண்டார் இந்த நடிப்புப் புயல்

பாண்டியனைக் கொன்று இரத்தின சிம்மாசனத்தைக் கைப்பற்றிக் கொண்டு வந்தும் தாய் அமர வேண்டிய அதே இரத்தின சிம்மாசனத்தில், அதுவும் கொலு மண்டபத்தில் அனைவர் முன்னிலையிலும் சேனா என்ற பேய் அமர்ந்து, அதுவும் தனக்கு வெற்றிமாலை சூட்ட வரும் போது அவமானத்தால் கொந்தளித்து, வாளை உருவி, அவளைக் கொல்லப் போக, சத்யசீலர் தாயின் கட்டளையை மனோகரனிடம் ஞாபகப்படுத்த, ஒரு வினாடியில் மந்திரி சத்யசீலர் பக்கம் திரும்பி புயல் போல் சீறி, மறு பக்கம் தடுக்கும் நண்பன் ராஜப்பிரியன் பக்கம் திரும்பி கோபம் கண்ணை மறைக்க அவனை வேகமாய் ஒரு அறை அறைந்து, அடுத்த கணம் தானே உயிர் நண்பனை அறைந்து விட்டோமே திகைத்து நின்று, ஒரு வருத்த தொனியை முகத்தில் ஒரு நொடியில் பாதி நேரத்தில் பிரதிபலித்துவிட்டு, பின் மீண்டும் கோபத்துடன் புலிப்பாய்ச்சலில் புவி அதிர நடப்பாரே! எந்த குரு இப்படியெல்லாம் நடிக்க வேண்டும், நடக்க வேண்டும் என்று நடிகர் திலகத்திற்கு சொல்லிக் கொடுத்தது?
பின் ஆத்திரத்துடன் தாயாரிடம் சென்று 'வஞ்சகி சேனா அமர்வதற்கா பல உயிர்களை பலி கொடுத்து இரத்தின சிம்மாசனத்தை மீட்டு வந்தேன்'? என்று நெஞ்சு குமுறப் பொங்குவதும் நடிகர் திலகம் யாரிடம் கற்ற பாடம்?
காதலர்கள் கூடிக் கொஞ்சும் வசந்த விழாவில் கூட அரண்மனையில் நடந்த சம்பவங்களை மறக்க முடியாமல் பொருமுவதும், அங்கே மன்னனுடன் வரும் வசந்தசேனா வேசி மகன் என்று தன்னை இழித்துரைத்ததும் புயல் வேகம் கொண்ட புலியாக சீறி கட்டாரியை எடுக்க, தந்தையான மன்னன் தடுக்க, "நீர் உன் மனைவியின் மானத்தை காப்பாற்றா விட்டாலும், நான் என் தாயாரின் மானத்தை காப்பாற்றியே தீருவேன்" என்று தன்மானச் சிங்கமாய் சிலிர்ப்பதும் இந்த நடிப்பின் பல்கலைக் கழகத்திற்கு அல்வா சாப்பிடுவது போல் அல்லவா?
மறுபடியும் தாயிடம் ஓடோடி வந்து தாயின் கட்டளையை மாற்றும்படி கெஞ்சுவதும், "வீரன் கோழையாவதா.... துடிக்கும் தோள்கள் துவண்டு போவதா?" என்று தாயின் கட்டளையை நினைத்து நினைத்து பொங்குவது எந்தப் பாடத் திட்டத்தில் நடிகர் திலகம் படித்தது?,,,,,, (ஈகரை.காம் ல் வாசித்ததில் திகைத்தது)
http://nadigarthilagam.com/papercuttings/manogara.jpg
Jahir Hussain
க்ளைமேக்ஸ்,,,, அதாவது உட்சக்கட்டக் காட்சி,,, ஒரு படத்தின் வெற்றி தோல்வியைக்கூட பல நேரங்களில் இந்த க்ளைமேக்ஸ் காட்சிகள் நிர்ணயம் செய்கிறது,,, நமது நடிகர் திலகத்தின் படங்களை பொருத்தவரை அவர் படங்களின் க்ளைமேக்ஸ் காட்சிகளுக்கு என்று ஒரு உயிர்ப்பு இருக்கும்,,, பராசத்தி படத்தின் கோர்ட் சீன், மனோகரா படத்தின் தர்பார் சீன், பாசமலர் படத்தின் "கை வீசம்மா கை வீசு" என்று சோகம் கொப்பளிக்க மரணிக்கும் க்ளைமேக்ஸ், தேவர் மகன், படையப்பா போன்ற படங்களில் அவர் மரணிக்கும் காட்சிகளே நமக்கு க்ளைமாக்ஸ் காட்சிகள்தான்,,, இப்படி பலநூறு படங்களில் க்ளைமேக்ஸ் காட்சிகளை அடுக்கி் கொண்டே செல்லலாம்,,, நான் பதிவின் சிக்கனம் கருதி மூன்று படங்களின் க்ளைமேக்ஸ் காட்சிகளை குறிப்பிடுகிறேன்,,, நண்பர்களும் தங்களை வியக்க வைத்த சிவாஜி சினிமாக்களின் க்ளைமேக்ஸ்களை அவரவர் பின்னூட்டங்களில் குறிப்பிட்டு விளக்கம் கொடுத்து நம்மை சிலிர்க்க வைக்கலாம்,,,
"ராஜா"... 1972ல் வெளிவந்து எம் ஜி ஆர் ரசிகர்களையும் சுண்டியிழுத்த சிவாஜி சினிமா,,, அதன் க்ளைமேக்ஸ் காட்சி,,, ஒரு அரண்மணை,,, எப்போதும் குணச்சித்திர வேடம் பூண்டு நம்மையேல்லாம் கதிகலங்க விடும் திரு ரெங்காராவ் தான் மெய்ன் வில்லன்,, ஒருபக்கம் சிவாஜி நிற்கிறார்,,, மறுபக்கம் பாலாஜி,,, இருவரது கைகளும் கட்டப்பட்டு இருக்கிறது,, இருவர்களும் சகோதரர்கள்,,, அவர்களது தாயார் பண்டரிபாய்,,, அவரிடமிருந்து உண்மையை வரவழைக்கும் பொறுப்பு ஆர் எஸ் மனோகர் வசம் ,,, இவர்களை சுற்றிலும் பல நடிகர்கள்,,, இதை வைத்துத்தான் அந்த 20 நிமிட சுவாரஸ்ய க்ளைமேக்ஸ் ஆரம்பம்,,, இந்த ஐந்து நடிகர்களை சுற்றி சுற்றி காட்சிகள் அமைக்கப் பட்டிருக்கும்,,,, கொஞ்சம்கூட குழப்பமே இல்லாமல் ரசிக்கத்தக்க ஒரு ஆக்ஷன் க்ளைமேக்ஸ் அது,,, இன்றும் ரசிக்கத்தக்க ஃபார்முலாவில் எடுக்கப்பட்டு இருக்கும் க்ளைமேக்ஸ் அதில் எழுதப்பட்ட வசனங்கள் (ஏ எல் நாராயணன்) எல்லாமே கச்சிதமாக அமைந்தது,,, நாம் அனைவருமே இந்தப் படத்தை பார்த்து சிவாஜியின் ஸ்டைலில் மெய் மறந்த படம் தான் ஆகவே இதற்கு மேல் இந்த க்ளைமேக்ஸிர்க்கு விளக்கம் தேவையில்லை,,,,
திரிசூலம் படம்,,, க்ளைமேக்ஸ்,,, மூன்று சிவாஜிகளும் மும்மூர்த்திகளாக கோலோச்சிய க்ளைமேக்ஸ்,,, எம் என் நம்பியார் முதற்கொன்று படத்தில் நடித்த மேக்ஸிமம் அத்தனை வில்லன் நடிகர்களும் இந்த சீனில் ஆஜர்,,, இதுவும் கிட்டத்தட்ட 20 நிமிட க்ளைமேக்ஸ்,, கே ஆர் விஜயா மற்றும் ரீனா வுடன் அப்பா சிவாஜி,,,, மற்ற இரண்டு சிவாஜிகளும் இரண்டு பால்கனிகளில் நின்று கொண்டு வசனம் பேசுவார்கள்,,, கீழே நம்பியார் & கோ,,, மண்டைகாய்ந்த குழப்பத்தில் இருப்பார்கள்,,, இப்படி ஒரு ஆச்சர்யம் அதிர்ச்சி கலந்த சஸ்பென்ஸோடு அந்த க்ளைமேக்ஸ்ஐ குழப்பமில்லாது பதிவு செய்திருப்பார்கள்,,, பலகோடி கண்கள் பார்த்து வியந்த இந்த க்ளைமேக்ஸ்ஐ இதற்கு மேல் விவரிக்கத் தேவையில்லை,,
வியட்நாம் வீடு படத்தின் படபடக்கும் சோகமான ஷாக்கிங் க்ளைமேக்ஸ்,, எல்லோரும் தவறை உணர்ந்து திருந்தி அப்பாவின் அருமை புரிந்து பத்மநாபரை சுற்றி நிற்பார்கள்,, இரண்டு ஆனந்தமான செய்திகள் வரும்,,, ஒன்று பேரனோ பேத்தியோ பிறக்கப் போகும் தகவல்,,, டாக்டர் செந்தாமரை பாதிரியார் பக்குவமாக கூறுவார்,,, படிப்படியாக புரிந்து கொண்டு குதூகலம் அடைவார் சிவாஜி,, அடுத்த தகவல் பத்மநாபருடைய அலுவலக அப்பாய்மெண்ட்,, ஆனந்த அதிர்ச்சி,,, அதன் பிறகு சுந்தரம் அவர்களின் கூர் தீட்டிய வசனங்கள் அப்படியே வாயில் ரத்தம் வழிய சரிந்து விழும் பத்மநாப ஐயர்,,, படம் பார்க்கிற ஒவ்வொறு மனிதரும் உறைந்து போவார்கள்,,, படம் முடியும் 10 நிமிடங்களுக்கு முன்பே அவசரமாக வெளியேறும் ஆடியன்ஸை படம் முடிந்தும் ஐந்து நிமிடங்களுக்கு நிலைகுலைந்த நிலையில் இருக்கையில் அமர வைத்த க்ளைமேக்ஸ்ஐ மறக்க முடியுமா?
இந்த உட்சக்கட்ட காட்சிகளை படமாக்கும் மேக்கிங் ஸ்டைலிலேயே அந்தந்த படங்களின் ஃபினிஷிங் டச் களை சராசரி ரசிகன் உணர்ந்து கொள்வான்,,, சில படங்கள் க்ளைமேக்ஸ்ல் இருந்தே படம் துவங்கும் "அந்த நாள்" போன்ற படங்கள் அந்த வகையை சார்ந்தது,,, தமிழ் திரையில் எல்லா சோதனை முயற்சிகளையும் மேற்கொண்டு படங்களில் நடத்தவர் நமது நடிகர் திலகம்,, வர்த்தக சினிமா என்ற எல்லையோடு நின்று விடாமல் தன்னால் எவ்வளவு பறந்து விரிந்து படங்கள் செய்ய முடியுமோ அத்தனை வகையான படங்களையும் செய்தவர்,,, அதனால்தானே நெற்றித் திலகம் போல் இன்றும் "பளிச்" என்று நாம் அவர் படங்களை எடுத்துக் காட்டுகளாக வைக்க முடிகிறது,,,,
https://scontent.fybz1-1.fna.fbcdn.n...c5&oe=5A227318
Murali Srinivas
தவப்புதல்வன் ரிலீஸ் நினைவலைகள்
இன்றைக்கு சரியாக 45 ஆண்டுகளுக்கு முன்னால் (26.08.1972) வெளியான தவப்புதல்வன் ரிலீஸ் நேரம் பற்றிய என் நினைவலைகளை பகிர்ந்துக் கொள்கிறேன்.
தவப்புதல்வன் - முக்தா பிலிம்ஸ் தயாரிப்பு. முக்தா ஸ்ரீனிவாசன் அதிகமாக பள்ளிப்படிப்பு படிக்காதவர். சிறு வயதிலேயே குடும்ப சூழல் காரணமாக வேலைக்கு போக நேர்ந்தவர். ஆரம்பத்தில் கம்யூனிஸ்ட் கொள்கைகளினால் ஈர்க்கப்பட்டு அந்த இயக்கத்திலே இருந்தவர். பின் காங்கிரசின் தேசிய நீரோட்டத்தில் இணைந்தவர். சேலம் மாடர்ன் தியேட்டர்ஸ் நிறுவனதில் வேலை பார்த்து பின் எஸ். பாலச்சந்தர் போன்றவர்களிடம் assistant இயக்குனராக அந்த நாள் போன்ற படங்களில் பணியாற்றி முதன் முதலாக முதலாளி படத்தை இயக்கினார். பின்னர் பனித்திரை, இதயத்தில் நீ, பூஜைக்கு வந்த மலர் போன்ற படங்களை எடுத்தவர் அதன் பின் நகைச்சுவைக்கு முக்கியத்துவம் கொடுத்த படங்களான நினைவில் நின்றவள், தேன் மழை, போன்றவற்றை இயக்கிய பிறகு நடிகர் திலகத்திடம் வந்து சேர்ந்தார். முதலில் நிறை குடம் அதன் பிறகு அருணோதயம். இதற்கு இடையில் ஜெய்சங்கரை வைத்து பொம்மலாட்டம், ஆயிரம் பொய் போன்ற படங்களையும் எடுத்தார். மிக மிக சாதாரண நிலைமையிலிருந்து முன்னேறி வந்தவர் என்பதால் படத்தயாரிப்பில் மிக கண்டிப்பாக இருப்பார் என்ற பெயர் இவருக்குண்டு. அனைத்து விஷயங்களையும் முன்கூட்டியே திட்டமிட்டு அதற்கேற்றார் போல் பட்ஜெட் போட்டு படத்தை சிக்கனமாக முடிக்கக் கூடியவர் என்ற பெயர் இவருக்கு திரையுலகில் உண்டு. இவரும் இவரது மூத்த சகோதரர் முக்தா ராமசாமியும் தங்கள் நிறுவனத்தில் வேலை செய்யும் அனைவருக்கும் எந்த சூழலிலும் சரியாக பிரதி மாதம் 1-ந் தேதி சம்பளம் கொடுப்பதை வழக்கமாக கொண்டிருந்தனர்.
இவர்களின் கட்டுப்பாடான இந்த நடைமுறைதான் விசி சண்முகத்தை கவர்ந்தது என்று சொல்லுவார்கள். ஒரு முறை பிலிமாலயா மாத இதழில் ஜீனியஸ் கேள்வி பதிலில் சிவாஜியை வைத்து படமெடுக்க என்ன தகுதி வேண்டும் என்ற கேள்விக்கு "ஒன்று பாலாஜியை போல் இருக்க வேண்டும். இல்லை முக்தா ஸ்ரீநிவாசன் போல் நடக்க வேண்டும்" என்று பதில் சொல்லியிருந்தார்கள்.
முதலில் சொன்னது போல் முக்தா நடிகர் திலகத்தை வைத்து எடுத்த இரண்டாவது படமான அருணோதயம் 1971 மார்ச் 5-ந் தேதி வெளியானது. மிக சரியாக இந்திய பாராளுமன்றத்திற்கும் தமிழக சட்டமன்றத்திற்கும் பொது தேர்தல் நடைபெற்ற நேரத்தில் வெளியானதால் அது பெற வேண்டிய வெற்றியை பெறவில்லை. அது மட்டுமல்லாமல் அந்த 1971 ஜனவரி 14 முதல் ஏப்ரல் 14 வரை உள்ள இடைப்பட்ட காலத்தில் நடிகர் திலகத்தின் 6 படங்கள் வெளியானது. 90 நாட்களில் இரு துருவம், தங்கைக்காக, அருணோதயம், குலமா குணமா பிராப்தம் சுமதி என் சுந்தரி என்று ஆறு படங்கள் ரிலீஸ் ஆன நிலையிலும் பெருவாரியான ஊர்களில் 8 வாரங்களை கடந்து ஓடிய அருணோதயம் வர்த்தக ரீதியான வெற்றியை பெற்றது. உடனே தனது அடுத்த படத்திற்கு date வாங்கிவிட்டார் முக்தா.
முக்தா எடுத்த ஆரம்ப கால நடிகர் திலகம் படங்களிலெல்லாம் ஒரு நோயை அடிப்படையாக கொண்ட நாயகன் அல்லது நாயகியை முன்னிறுத்தி கதை சொல்லியிருப்பார்கள். எனவே தவப்புதல்வன் படத்திற்கும் அப்படி ஒரு நோயை அடிப்படையாக வைத்து கதையை எழுதியிருந்தார் தூயவன். மாலைக் கண் நோய் என்று தமிழில் சொல்லப்படும் Night Blindness தான் இங்கு மெயின் விஷயம். தன் குடும்பத்தில் பாரம்பரியமாக வரும் இந்த நோய் தன் ஒரே மகனுக்கும் வந்துவிடக் கூடாது என தவிக்கும் தாய், தனக்கு ஏற்கனவே அந்த நோய் வந்துவிட்டது என்று தெரிந்தால் தாய் அதை தாங்க மாட்டாள் என்பதனால் தாயிடம் மறைக்கும் மகன், டாக்டராக பணிபுரியும் நாயகனின் முறைப்பெண், நாயகனின் சொத்திற்கு ஆசைப்பட்டு அவனின் இந்த நோயைப் பற்றியும் தெரிந்துக் கொண்டு அவனை பிளாக்மெயில் செய்யும் மற்றொரு பெண் என்று சுவையாக பின்னப்பட்டிருந்த கதை.
படம் வெளிவருவதற்கு முன் முழு கதையும் தெரியாது என்ற போதிலும் படத்தைப் பற்றிய ஒரு outline பல பத்திரிக்கைகள் மூலமாக ரசிகர்களுக்கு தெரிந்திருந்தது. அன்றைய நாளில் நடிகர் திலகத்தை வைத்து ஆரம்பிக்கப்படும் புதிய படங்கள் அனைத்தும் வண்ணப் படங்களாக அறிவிக்கப்பட்டுக் கொண்டிருந்த நேரத்தில் இந்த படம் கருப்பு வெள்ளையில் தயாரிக்கப்படுவது ரசிகர்களுக்கு ஏமாற்றத்தை அளித்த போதிலும் அன்றைய நாட்களில் பத்திரிக்கைகளில் வெளிவந்த நடிகர் திலகத்தின் ஸ்டில்ஸ் அட்டகாசமாக இருந்தது. பல ஸ்டில்களில் ஜிப்பா அணிந்து காட்சியளித்த நடிகர் திலகம் நிச்சயமாக திராவிட மன்மதனாகவே தோன்றினார். பெரிய எதிர்பார்ப்பு இல்லாவிட்டாலும் கூட ஒரு நம்பிக்கை இருந்தது.
சென்ற பதிவில் பார்த்தது போல் இந்த படம் 1972 ஆகஸ்ட் 26-ந் தேதி ரிலீஸ் என்று அறிவிக்கப்பட்டு வெளிவரும் நேரம்தான் நடிகர் திலகத்தின் அன்னையார் ராஜாமணி அம்மையார் ஆகஸ்ட் 24 அன்று காலமானார்.என்பதையும் பார்த்தோம். இதன் காரணமாக படம் வெளிவருவதில் ஏதேனும் சிக்கல் இருக்குமா என்று ஒரு சில ரசிகர்களுக்கு ஐயம் ஏற்பட்டபோதிலும் தொழில் வேறு தனிப்பட்ட வாழ்க்கை வேறு என்பதில் வெகு தெளிவாக இருந்த நடிகர் திலகமும் விசி சண்முகமும் படத்தை குறிப்பிட்ட தேதியில் வெளியிடுமாறு சொல்லிவிட்டார்கள். அதன்படி 1972 ஆகஸ்ட் 26-ந் தேதி சனிக்கிழமை தவப்புதல்வன் வெளியானது.
மதுரையில் சிந்தாமணியில் ரிலீஸ். ஒரு கால கட்டத்தில் தொடர்ந்து நடிகர் திலகத்தின் வெற்றிப் படங்களான காத்தவராயன், பாகப்பிரிவினை, விடிவெள்ளி, பாசமலர், புதிய பறவை, தில்லானா என்று தொடர்ந்து வெளியான சிந்தாமணியில் நடுவில் ஒரு சின்ன இடைவெளி விழுந்தது. 1968 ஜூலையில் வெளியாகி 132 நாட்கள் ஓடிய தில்லானாவிற்கு பிறகு சிந்தாமணியில் வெளியான நடிகர் திலகத்தின் படம் என்றால் அது தவப்புதல்வன்தான். இடையில் 1971 ஜூலையில் நடிகர் திலகத்தின் தேனும் பாலும் வெளியானது என்ற போதிலும் அது நீண்ட நாள் தயாரிப்பில் இருந்த காரணத்தினால் அதை பற்றிய ஒரு பெரிய எதிர்பார்ப்பு இல்லை. ஆகவே வெகு நாட்களுக்கு பிறகு சிந்தாமணியில் வெளியாகும் நடிகர் திலகம் படம் என்ற பெருமையையும் தவப்புதல்வன் பெற்றது.
ஒரு விஷயம் குறிப்பிட வேண்டும். அந்த 1972-ம் வருடத்தில் தொடர்ந்து நடிகர் திலகத்தின் நான்கு படங்கள் சனிக்கிழமையன்றே வெளியானது. 1972 மார்ச் 11 சனியன்று ஞான ஒளி, மே 6 சனிக்கிழமை பட்டிக்காடா பட்டணமா, ஜூலை 15 சனிக்கிழமை தர்மம் எங்கே, ஆகஸ்ட் 26 சனிக்கிழமை தவப்புதல்வன் என்று வெளியானது. என் நினைவிற்கு எட்டியவரை வேறு எந்த வருடத்திலும் இது போல் தொடர்ந்து சனிக்கிழமைகளில் நடிகர் திலகத்தின் நான்கு படங்கள் வெளியானதாக தெரியவில்லை.
படம் வெளியான அன்று எனக்கு ஸ்கூல் இருந்ததால் எனக்கு ஓபனிங் ஷோ போக முடியவில்லை. வழக்கம் போல் என் கஸின் போய் விட்டான். மதியம் ஸ்கூலிலிருந்து வந்தவுடன் படம் எப்படி என்று அவனிடம் கேட்க அதற்குள் மார்னிங் ஒபனிங் ஷோ பார்த்து விட்டு வந்திருந்த அவன் படம் நன்றாக இருப்பதாக சொன்னான்.நான் அதற்கு முன்பு வந்த படத்தின் ரிசல்ட்டை மீண்டும் அந்த கேள்வியை கேட்க அவன் புரிந்துக் கொண்டு முந்தைய படமான தர்மம் எங்கே படத்தை மனதில் வைத்து இதை கேட்கிறாய். அந்த படம் சரியில்லை என்று சொல்ல முடியுமா? ஏதோ சில காரணங்களினால் படம் சரியாக போகவில்லை. அனால் இது அப்படி ஆகாது என்றான். அன்று மாலையே படம் பார்த்த வேறு சில நபர்களிடம் கேட்க அனைவருமே நல்ல ரிப்போர்ட் சொன்னார்கள். மனதில் நம்பிக்கை வந்துவிட்டது. ஆனால் தர்மம் எங்கே படத்திற்கு வந்த கூட்டம் அன்று டிக்கெட் கிடைக்காமல் அலைந்தது அரசால் புரசலாக வீட்டிற்கு செய்தி போய் விட்டதால் முதல் இரண்டு நாட்களான சனி ஞாயிறு படத்திற்கு போக அனுமதி கிடைக்கவில்லை. மீண்டும் திங்களன்று ஸ்கூல். வருத்தமாகவும் கடுப்பாகவும் இருந்தது. முதல் வாரத்தில் ஆறாவது நாள் ஆகஸ்ட் 31-ந் தேதி வியாழக்கிழமையன்று ஸ்கூல் லீவ். அன்று பிள்ளையார் சதுர்த்தியா அல்லது கோகுலாஷ்டமியா என்பது நினைவில்லை. ஆனால் ஸ்கூல் லீவ். நினைவிருக்கிறது. அன்று போக வேண்டும் என்று வீட்டில் கேட்க ஓகே சொல்லி விட்டார்கள். எப்போதும் கஸினுடன் போகும் நான் இந்த முறை வித்தியாசமாக என் தந்தையுடன் சென்றேன். அன்று விடுமுறை என்பதனால் அவர் கூட்டி சென்றார். முதலில் கூட வருவதாக சொன்ன கஸின் வேறு வேலை வந்துவிட்டதால் எங்களுக்கு டிக்கெட் வாங்கி கொடுத்துவிட்டு போய்விட்டான். நான் கூட படத்திற்கு கூட்டம் எப்படி இருக்குமோ என்று யோசனையாக் போனேன். ஆனால் என் எதிர்பார்ப்பையும் மீறிய கூட்டம் . கீழ வெளி வீதியில் அமைந்திருக்கும் சிந்தாமணி டாக்கீஸின் இரண்டு பக்கவாட்டு சந்துகளில் மிக நீண்ட queue நிற்கிறது. கஸின் டிக்கெட் வாங்கி கொடுத்து விட்டதால் queueவில் நிற்காமல் நேரே உள்ளே போய் விட்டோம்.
அந்த வருடம் அது வரை வெளியான நான்கு படங்களுமே பெரிய அலப்பரையில் பார்த்த எனக்கு தவப்புதல்வன் படம் பார்த்தது ஒரு வித்தியாச அனுபவத்தை தந்தது. அன்றைய மாட்னி ஹவுஸ் புல். அதில் பெருவாரியான நபர்கள் பொது மக்களே. ரசிகர்கள் என்ற வகையில் பார்த்தால் அந்த எண்ணிக்கை குறைவுதான். அமைதியாக ரசிக்க முடிந்தது என்று சொன்னாலும் கைதட்டல்களுக்கும் ஆரவாரத்திற்கும் குறைவில்லை. நடிகர் திலகத்தின் பெயர் போடும்போது, அவரை முதலில் திரையில் காட்டும்போது அது போன்ற இடங்களில் பலமான கைதட்டல்கள் விழுந்தன. அதே போல் பாடல் காட்சிகள் என்று எடுத்துக் கொண்டோமானால் அனைத்து பாடல்களுக்கும் நல்ல response.
முதல் பாடல் Love is fine darling பாடலில் நடிகர் திலகத்தின் ஸ்டைல் மற்றும் சில நடக்கும், ஸ்டெப் வைக்கும், trumpet வாசிக்கும் அந்த போஸ் இவற்றுக்கெல்லாம் நல்ல வரவேற்பு. அடுத்தது இசை கேட்டால் பாடல். ஹிந்துஸ்தானி பாடகர் அக்தர் கானுடன் போட்டி போட்டு ஜெயிக்க வேண்டும் என்று வற்புறுத்தும் விஜயாவிடம் முதலில் வேண்டாம் என்று மறுத்துவிட்டு பிறகு அக்தர் கானை போட்டியில் சந்திக்கிறேன் என்று சொல்லும் நடிகர் திலகத்திடம் அக்தர் கான் என்ன இப்போ உங்களை தான்சேன் கூட ஜெயிக்க முடியாது என்பார் விஜயா. யார் அது தான்சேன் என கேட்கும் நடிகர் திலகத்திடம் தான்சேன் பற்றி கூறுவார் விஜயா. அப்போது கனவு பாடலாக விரியும் அற்புத பாடல் இசை கேட்டால் புவி அசைந்தாடும் பாடல். [தான்சேன் கதைப்படி தீப் எனும் ஹிந்துஸ்தானி ராகத்தை பாடி நோயாளியை குணப்படுத்துவார் என்ற அடிப்படையை கொண்டபோதினும் படத்தில் இடம் பெற்ற இசை கேட்டால் பாடல் கல்யாணி ராகத்தில் அமைந்திருக்கும்]. முதலில் சிதார் வாசித்துக் கொண்டே பாட ஆரம்பிக்கும் நடிகர் திலகம் பல்லவி முடிந்ததும் எழுந்து விஜயா படுத்திருக்கும் படுக்கைக்கு அருகில் வந்து அங்கே நிற்கும் அரண்மனை வைத்தியரை பார்த்து கண்ணாலேயே எப்படி இருக்கிறது என்று கேட்க அவர் முன்னேற்றம் இல்லை என்ற வகையில் தலையசைக்க என் பாடல் சேய் கேட்கும் விருந்தாகலாம் என்று சரணத்தை ஆரம்பிக்கும் நடிகர் திலகம் அப்போது காட்டும் சில கை அசைவுகள், அந்த சரணத்தை முடித்து விட்டு ஏழாம் கடலும் வானும் நிலவும் என்றவாறே ஸ்டைலிஷ் நடை போடும் நடிகர் திலகத்திற்கு விழுந்தது அப்ளாஸ். அது அடங்குவதற்குள்ளாகவே அங்கே சாத்தி வைத்திருக்கும் கம்பிக்களை வளைத்து இசை என்னிடம் உருவாகும் என்ற வரியில் நாணேற்றுவது போல் காண்பித்து இசை என்னிடம் உருவாகும் என்று கையை மேலே உயர்த்துவார். அதற்கும் செம அப்ளாஸ்,
உலகின் முதல் இசை தமிழிசையே பாடலில் வெள்ளை ஜிப்பா அணிந்து வேட்டி கட்டி இருப்பார். உண்மையிலே அந்த தோற்றத்தில் அவரை வெல்லக்கூடிய அழகு யாருக்குமே கிடையாது என்றே தோன்றும். இந்த போட்டி பாடலில் சரணத்தில் பாடும்போது இரண்டு வரி வரும்
மானிட ஜாதியும் மயங்கி வரும்; அந்த
வனவிலங்கும் ஆடி அசைந்து வரும்
அந்த இரண்டாவது வரியை அவர் இரண்டாவது முறை பாடும்போது ட்ராலியில் வரும் காமிராவைப் பார்த்து தலையை சாய்த்து கன்ன கதுப்பும் கண்களும் ஒரு போல அசைந்து ஒரு சின்ன மந்தகாச புன்னகையை உதிர்ப்பார். அதற்கும் பலமான கைதட்டல்கள்.
நான் எப்போதும் சொல்வதுண்டு. வார்த்தைகளுக்கும் வர்ணனைகளுக்கும் அப்பாற்பட்ட வசீகரம் அவரது கை அசைவில் உண்டு என்று. அது பார்வையாளர்களை அப்படியே ஆகர்ஷித்து விடும். அதற்கு பல உதாரணங்களை சொல்ல முடியும் என்றபோதினும் ஒரு விஷயம் எனக்கு நினைவிற்கு வருகிறது.
1980-களின் நடுப் பகுதி. நான் கேரளத்தில் வேலை நிமித்தமாக இருக்கும் காலம். கோட்டயம் நகரத்திற்கு சற்று வெளியே எர்ணாகுளம் போகும் பாதையில் நிர்மலா என்றொரு தியேட்டர் அமைந்திருந்தது. அங்கே முழுக்க முழுக்க தமிழ் படங்கள் மட்டுமே திரையிடுவார்கள். நகரில் மொத்தமே ஐந்து திரையரங்குகள்தான் என்பதனாலும் அந்த ஐந்தில்தான் மலையாளம், தமிழ், ஹிந்தி சில நேரம் ஆங்கில படங்கள் திரையிடப்பட வேண்டும் என்பதனால் நகருக்குள் தியேட்டர் கிடைக்காத தமிழ் படங்கள் இந்த தியேட்டரில் வெளியாகும். அவை இல்லாத போது இந்த நிர்மலா தியேட்டரில் பழைய தமிழ்ப் படங்களும் திரையிடுவார்கள். அப்படி அங்கே தங்க சுரங்கம், ரத்த திலகம், மூன்று தெய்வங்கள் போன்ற பல நடிகர் திலகத்தின் படங்களைப் பார்த்திருக்கிறேன். மூன்று தெய்வங்கள் போட்டிருந்தபோது ஒரு சாதாரண வேலை நாளன்று மாலைக்காட்சிக்கு போயிருந்தேன். ஓரளவிற்கு நல்ல கூட்டம். 99% பொது மக்கள். நடிகர் திலகத்தை முதன் முதலில் காட்டும்போது கூட வெகு சிலரே கைதட்டினார்கள். வசந்தத்தில் ஓர் நாள் பாடல் வந்தது. அதில் விஷ்ணுவாக வரும் நடிகர் திலகம் வலது கையை உயர்த்தி ஆசி கூறுவதாக வரும் அந்த ஷாட் திரையில் வந்தபோது படபடவென்ற பலமான கைதட்டல். அதுவும் spontaneous ஆக விழுந்த கைதட்டல்கள். ஜாதி,மத,இன, மொழி மாநில, நாடு போன்ற அனைத்து வித்தியாசங்களையும் தாண்டியவர் நடிகர் திலகம் என்பதற்கு அன்று நானே நேரிடை சாட்சியாக இருந்தேன்.
மீண்டும் தவப்புதல்வனுக்கு வருவோம். படத்தின் மற்றொரு பாடலான கிண்கிணி கிங்கிணி மாதா கோவில் மணியோசை பாடல் சற்றே உணர்சிகரமாக இருக்கும். சோகத்தை நகைசுவை போல் வெளிகாட்டி மற்றவர்களை சிரிக்க வைத்து தான் அழுவார். பெண்கள் பகுதியில் இந்த பாடலுக்கு நல்ல வரவேற்பு. பாடல்கள் தவிர தன் நோயை விஜயாவிடம் மறைக்கும் போதும், இசைக் கருவிகளை அடித்து நொறுக்கும்போதும், விஜயாவிடம் உண்மையை சொல்கிறோம் என்று நினைத்து பேச அங்கே ஏ. சகுந்தலா நின்று கொண்டு இவரை கிண்டல் செய்து கோவமூட்ட சகுந்தலாவை அடிக்க பாய்ந்து எங்கே இருக்கிறார் என்று தெரியாமல் விழுந்து விடுவது போன்றவை தியேட்டரில் அனுதாபத்தை பெற்று தந்தது. அது போலவே டிஸ்பன்சரியை மூடப் போகிறேன் என்று சொல்லும் விஜயாவிடம் வேண்டாம் என்று நடிகர் திலகம் சொல்ல பழிக்கு பழியாய் கோவத்தோடு அனைத்தையும் விஜயா நொறுக்க ஒன்றுமே பேசாமல் நடிகர் திலகம் திரும்பி நடக்கும் காட்சியும் பெரிதும் ரசிக்கப்பட்டது. கிளைமாக்ஸ் சண்டைக்காட்சியும் ரசிக்கப்பட்டது. [சண்டையின்போது அங்கே வைக்கோல்போரில் தீ பற்றிக் கொள்ள கண் ஆபரேஷன் செய்துக் கொண்டிருக்கும் சிவாஜி அந்த வெளிச்சத்தில் எதிரிகளை இனம் கண்டு சண்டை போடுவதையும் மக்கள் ரசித்தனர்].
படம் முடிந்து வெளியே வரும்போது ஒரு நல்ல படத்தை பார்த்தோம் என்ற திருப்தி அனைவரின் முகத்திலும் பார்க்க முடிந்தது. படம் வெற்றிபெறும், நூறு நாட்களை கடக்கும் என்று ரசிகர்கள் சொன்னது நடக்கும் என்ற நம்பிக்கை ஏற்பட்டது. அது போலவே சென்னை பைலட்டில் 100 நாட்களை கடந்தது. மதுரையில் வெற்றிகரமாக 70 நாட்களை நிறைவு செய்யும்போது வழக்கம் போல் விநியோகஸ்தர் சேது பிலிம்ஸ் வில்லனாக வந்து தேவர் படமான தெய்வம் படத்தை நவம்பர் 4 தீபாவளி முதல் திரையிட்டனர். ஆனால் தவப்புதல்வன் மதுரை விஜயலட்சுமி தியேட்டருக்கு ஷிப்ட் ஆகி 100 நாட்களை நிறைவு செய்தது.
வெகு எளிதாக 100 நாட்களை கடந்தது என்று சொல்கிறோம். ஆனால் யோசித்துப் பார்த்தோமென்றால் தவப்புதல்வனின் சாதனை சாதாரண விஷயமில்லை. ஒரு பக்கம் பட்டிக்காடா பட்டணமா என்ற இமயம் மற்றொரு பக்கம் தவப்புதல்வன் வெளியாகி ஐந்தே வார இடைவெளியில் செப் 29-ந் தேதி வெளியான வசந்த மாளிகை என்ற மற்றொரு பிரம்மாண்ட இமயம், இந்த இரண்டு இமயங்களுக்கும் இடையில் சிக்கி நசுங்கி விடாமல் வெற்றிகரமாக முன்னேறிய தவப்புதல்வன் பெற்ற வெற்றி மகத்தானது. மேலும் 45 நாட்களிலேயே அதாவது 1972 அக்டோபர் 10-ந் தேதிக்கு பின் தமிழகத்தில் ஏற்பட்ட சட்டம் ஒழுங்கு பிரச்சனைகள், எந்த நேரத்தில் எங்கு வன்முறை வெடிக்குமோ என்ற பயங்கர சூழல் இப்படிப்பட்ட காலகட்டத்தையும் கடந்து, தீபாவளிக்கு வெளியான படங்களின் போட்டியையும் சமாளித்து தவப்புதல்வன் பெற்ற வெற்றி நிச்சயமாக பெரிய வெற்றி என்பதில் சந்தேகமில்லை. நடிகர் திலகத்தின் பாக்ஸ் ஆபிஸ் பவர் எந்தளவிற்கு வலிமையானது என்பதிலும் மாற்றுக கருத்தில்லை.
அன்புடன்
https://scontent.fybz1-1.fna.fbcdn.n...12&oe=5A295179