Quote:
கலைஞர் தொலைக்காட்சியில் திங்கள் முதல் வெள்ளி வரை தினமும் மாலை 6 மணிக்கு ஒளிபரப்பாகிறது ``ஆசை நிலவு'' தொடர். விஸ்வநாதன்-சரஸ்வதி தம்பதிக்கு ஆசைக்கு ஒரு பெண்ணும் ஆஸ்திக்கு ஒரு ஆணுமாக பாலாவும் ராதாவும் விளங்குகிறார்கள். தன்னுடைய மகள் ராதா காதலிக்கும் சூரியாவிற்கே மணமுடிக்க விசுவநாதன் முடிவு செய்கிறார். தன் ஆஸ்தான ஜோசியர் தேவநாராயணனிடம் இதைப்பற்றி கூறிய போது அவர் தடுத்து விடுகிறார்.
ஜோசியர் கூறியது போலவே விசுவநாதனின் மனைவி நோய்வாய்ப்படுகிறார். பயந்து போன விசுவநாதன், திருமணத்தை தள்ளிப் போடுகிறார். நோய்வாய்ப்பட்ட மனைவிக்கு துணைவியாக ஒரு பெண்ணை தயார் செய்யுமாறு தனது நெருங்கிய நண்பர் ரவியிடம் கூறுகிறார். உடனே அஞ்சலி என்ற பெண்ணை, வேலைக்கு அமர்த்துகிறார், ரவி.
அஞ்சலி வேறு யாருமல்ல. ரவியின் சகோதரி சித்ராவிற்கு, விசுவநாதன் மூலம் திருமணமாகாமல் பிறந்த பெண்தான் அஞ்சலி. எப்படியாவது, விசுவநாதன் வீட்டில், அஞ்சலியை சேர்க்க வேண்டும் என்று எண்ணி இருந்த ரவி சரியான வாய்ப்பு வந்ததும், அஞ்சலியை விசுவநாதன் வீட்டில் வேலைக்கார பெண்ணாக சேர்த்து விடுகிறார்.
மீண்டும், தன் மகள் ராதா-சூரியா திருமணத்தை நடத்த முடிவு எடுக்கிறார் விசுவநாதன். இப்போதும் ஜோசியர் தடுக்கிறார். சூரியாவின் முதல் திருமணம் நிற்காது. முதல் மனைவி இறந்து விட அவன் இரண்டாவது திருமணம் செய்ய வேண்டி வரும் என்கிறார் ஜோசியர். முதல் மனைவியாக வேலைக் காரப் பெண் அஞ்சலியை மணமுடித்து, அஞ்சலி இறந்து விட்டால் இரண்டாவதாக சூர்யாவை திருமணம் செய்து கொள்ளத் தயார் என்று மகள் ராதா அறிவிக்க, அதிர்ந்து போகிறார், ரவி. அஞ்சலி பற்றிய உண்மையை இப்போதாவது விஸ்வநாதனிடம் ரவி சொன்னாரா? திருமணம் நடந்ததா என்பதே கதையின் உச்சக்கட்டம்.
திலக்ஜி, கே.எஸ். ஜெயலட்சுமி, பரத் கல்யாண், சுவப்னா நடிக்க, தொடரை இயக்குகிறார், உன்னி.