Quote:
ராஜ் டிவியில் திங்கள் முதல் வெள்ளி வரை தினமும் இரவு 8.30 மணிக்கு ஒளிபரப்பாகி வரும் `கொடிமுல்லை' தொடரில், தாய்-மகள் என இரட்டைவேடத்தில் நடித்து வருகிறார் தேவயானி. உயிரின்முக்கியத்துவத்தையும், ரத்ததானத்தின் அவசியத்தையும் தாய் அன்னக்கொடி கேரக்டர் மூலம் வரும் வாரங்களில் ஆணியடித்த மாதிரி காட்சிப்படுத்தியிருக்கிறார்கள்.
அன்னக்கொடியின் நகையை கொள்ளையடிக்க ஒரு கூட்டம் முயன்ற நேரத்தில் அந்த ஊர் வியாபாரி தடுக்க முயல, அவருக்கு விழுகிறது அரிவாள் வெட்டு. ரத்தம் வழிந்தோடிய நிலையில் அவர் உயிருக்குப்போராடுகிறார்.
பதறிய அன்னக்கொடி, அவர் உயிரைக்காப்பாற்றும் துடிப்பில் அந்த வழியாக வரும் வாகனங்களை நிறுத்த முயற்சிக்கிறாள். ஆனால், அவரவர் தங்கள் அவசரவேலையை காரணம் காட்டி உதவ மறுத்து பறக்கிறார்கள். கடைசியில் ஒரு ஆட்டோ டிரைவர் அன்னக்கொடியின் உருக்கமான வேண்டுகோளுக்கிணங்கி உயிருக்குப் போராடும்
வியாபாரியை ஆட்டோவில் ஏற்றி அரசுஆஸ்பத்திரிக்கு கொண்டு வருகிறார்.
ஆனால், அங்கும் சில நீடித்த விசாரணைகளில் வெட்டுப்பட்டவர் அதிக அளவில் ரத்தம் இழக்கிறார். இனியும் பொறுத்தால் உயிர் போவது நிச்சயம் என்பதை உணர்ந்த அன்னக்கொடி, ஆஸ்பத்திரி டீனை சந்தித்து நிலைமையை விளக்குகிறாள். அவரிடம் இருந்தும் அலட்சியமே பதிலாக வர, ஆத்திரத்தின் உச்சிக்கேபோன அன்னக்கொடி, அவரது கழுத்தில் கத்தரிக்கோலால் கீறுகிறாள். அடுத்தகணமே வியாபாரிக்கு உடனடி சிகிச்சைக்கு ஏற்பாடு செய்யப்படுகிறது.
ஆனால், அவருக்கு உடனடியாக ரத்தம் ஏற்றியாக வேண்டிய நிலை. அவருடையது அபூர்வ வகை ரத்தம் என்பதால் கிடைப்பது கேள்விக்குறியாகிறது. இந்த நிலையில் அன்னக்கொடி தன் மகள் மலர்க்கொடி பணியில் இருக்கும் சமூக நிறுவனத்துக்கு போன் செய்து ரத்த உதவி கேட்கிறாள். மலர்க்கொடியை பெண் பார்த்து நிச்சயம் செய்துபோன வருங்காலக் கணவனுக்கும் அதே ரத்தகுரூப் என்பதால் அவனுக்கு போன் செய்து உதவி கேட்கிறாள் மலர்க்கொடி, அவனும் உடனடியாக ஆஸ்பத்திரிக்கே வந்து ரத்தம் கொடுக்க, வியாபாரி காப்பாற்றப்படுகிறார்.
இதனால் மலர்க்கொடிக்கு அன்னக்கொடி போனில் நன்றி சொல்ல, "இப்படி உதவும் குணம் கொண்ட உங்களை நான் சந்திக்க வேண்டுமே'' என்கிறாள், மலர்க்கொடி. "இதோ இப்போது கூட வியாபாரித்தம்பிக்கு உதவியாக ஆஸ்பத்திரியில் தான் இருக்கிறேன்'' என்கிறாள் அன்னக்கொடி.
தாய்-மகள் என்ற உறவு தெரியாமலே இப்படிஅன்பு வளையத்துக்குள் வந்துவிட்ட அன்னக்கொடியும், மலர்க்கொடியும் இப்போதாவது சந்தித்தார்களா? என்பது அடுத்தகட்ட சஸ்பென்ஸ்.