தடுமாற்றமாய் இருக்கிறது
புத்தம்புதிய பாதையிது
பழகாத மனிதர்களோடு
புரியாத பழக்கங்களோடு
புது மருமகளின் மறு வீடு
போராடித்தான் வென்றிடு
Printable View
தடுமாற்றமாய் இருக்கிறது
புத்தம்புதிய பாதையிது
பழகாத மனிதர்களோடு
புரியாத பழக்கங்களோடு
புது மருமகளின் மறு வீடு
போராடித்தான் வென்றிடு
வென்றிடுவது போராட்டங்களால் மட்டுமன்று..
விட்டுக்கொடுப்பதிலும்.. ஏன்
வேண்டுமென்றே தோற்பதிலும் கூட உண்டு..
இல்லறம்...
இனிய விநோத ஆடுகளம்...
ஆடுகளம் தான் இது..
புதிது புதிதாக ஆட்டக்காரர்கள்
நீந்தித் தவழ்ந்து எழுந்து
வெற்றி நடை போட்டவர்களும் உண்டு..
இடையிலேயே படக்கென
முடிந்தவர்களும் உண்டு..
ஆட்டம் முடியும் என்று
ஆட்டக்காரர்களுக்குத் தெரியும்
எப்போது என்று தெரியாது..
சூரியனுக்கும் சந்திரனுக்கும்
மட்டும்
சுவாரஸ்யம் தான்
எப்போதும் புதிய ஆட்டங்களைப் பார்ப்பது..
ஏதோ
ஆட்டக்காரகள் மாறிக் கொண்டே இருந்தாலும்
ஆடுகளம்
இருக்கிறது அப்படியே..
அப்படியே இருக்கும் ஆடுகளம்...
அப்படியே இருப்பர்
முப்பத்துமுக்கோடி சந்திர சூரிய நட்சத்திரரும்..
எழுபது ஆண்டுகள் மட்டுமே பார்க்கும் என் விழிகளுக்கு..
எழுநூறு பில்லியன் ஆண்டு ஏட்டைப் புரட்டினால் தெரியும்
சிலர் பிறந்து ஒளிர்ந்து சிவந்து வீங்கி வெடித்து சிதற
சிலர் சுருங்கி கருத்து பெருங்குழியில் புதைய..
அண்டப் பெருவெளியில்
நட்சத்திர நாற்றங்காலில்
மாற்றமே சாசுவதம்..
காலமானி மட்டும் பலவிதம்..
பலவிதமாய் சுகங்கள்
துன்பங்கள்
ஏற்ற இறக்கங்கள்
எல்லாம் பார்த்தாயிற்று..
பொக்கை வாயில் ஆரம்பித்து
பொக்கை வாய்க்கு வந்தாயிற்று..
உணவை விட
இப்போது
எண்ணங்களை அசைபோடுவதே அதிகம்..
கோடு அதன்மேல்கோடு
அதன் மேல்கோடு
என
எண்ணங்கள்
கொஞ்சம் கொஞ்சமாய்ப் பிறழ்கின்றன..
நிரந்தரத் துயில் எப்போது வரும்
என பயம் தான்..
கதை முடிந்துவிட்டால் அவ்வளவு தான்..
வெறும் தூசு தூசாகக்
காற்றில்கலக்க வேண்டியது தான்..
நினைப்பார்களா
இந்தக் காற்றில் நான் இருக்கிறேன் என்று..
எல்லாமே கேள்விக்குறிதான்..
ம்ம்
வாழ்க்கை பற்றிய பயம்
வாழ்ந்து முடியும் போது
இருக்கிறது அதிகமாய்..
அதிகமாய் யோசிப்பது அந்திம காலத்தில்
நிறைய நேரமிருக்கு கையில்
எளிதில் வருவதில்லை துயில்
வெறித்துப் பார்க்கும் வெட்டவெளியில்
எட்டிப்பார்க்கும் பரமாத்மாவின் ஒளியில்
கலக்கத் தவிப்பு ஜீவாத்மாவின் உயிரில்
உயிரில் கலக்கும் உணர்வாம் காதல்
உடல் மறைந்தாலும் பின் தொடருமாம்
சிந்தையில் மலரும் விந்தையாம் காதல்
சிற்றின்பம பேரின்பம் காண விழையுமாம்
தேடலின் முடிவில் தோன்றுமாம் காதல்
ஊடலில் ஒதுங்கி கூடலில் இணையுமாம்
இணையுமாம்
இன்னும் சொல்லிக் கொண்டு தான்
இருக்கிறார்கள் என
தம்மிடம் வருபவர்கள்
சொல்லி ஆதங்கப் படுவதைக்
கேட்டவண்ணம்
சிரித்த படி ஓடிக் கொண்டிருக்கின்றன
கங்கா காவேரி நதிகள்..
நதிகள் கரையில் வளர்ந்த நகரங்கள்
நல்மனித நாகரிகத்தின் ஏணிப்படிகள்
கலையும் கல்வியும் தவழும் மடிகள்
சரித்திரம் சொல்லும் வண்ண பாடங்கள்
நதிகள் கரை புரண்டோடும் மழைக் காலம்
மதகுகள் வாய் திறக்க கண்மாய் நிறையும்
மரஞ்செடிகள் தரை தட்டி சாலை மறிக்கும்
நஞ்சை வயல்களில் நெற்கதிர் மூழ்கும்
குளம் குட்டையில் சாரைகள் நெளியும்
முகங்கள் எல்லாம் குடைக்குள் ஒளியும்
பள்ளிக் கூடம் மூடப்பட்டு சிறார் கூட்டம்
காகிதக் கப்பல் விட மழையில் கால் பதிக்கும்
மின்சாரம் ஒரேயடியாய் நின்று போகும்
ஊரே சீக்கிரம் தூங்கி விடும்