அவள் ஒரு கோடீஸ்வரனின் ஒரே மகள். ஒரு ஏழை எழுத்தாளனைக் காதலித்து விட்டாள். தந்தையைப் பகைத்துக்கொண்டு அவனையே திருமணம் செய்து அவனுடனேயே போய்விட்டாள். அந்த ஏழை எழுத்தாளனுக்கு தானும் பணக்காரனாக வேண்டுமென்ற நியாயமான ஆசை. ஆனால் அதற்கு நாடுவதோ ஒரு அநியாயக்காரனை. எழுத்தாளன் மனைவியை மனதுக்குள் குறிவைத்து, அவனுக்கு வேண்டிய வசதியெல்லாம் செய்து கொடுப்பதுடன், வேண்டாத வசதியையும் செய்து கொடுக்கிறான். அதுதான் குடிப்பழக்கம். தானும் குடித்து, தன் மனைவியையும் குடிக்க வற்புறுத்த, அவள் மறுக்க, அதனால் காரிலிருந்து வழியிலேயே இறக்கிவிடப்பட்ட அவள், ஒரு இளம்பெண் தனியே இருந்தால் என்னாகும் என்பதை அடுத்த நிமிடமே உணர்ந்து, கணவன் காலடியிலேயே போய் விழுகிறாள். (அப்பன் காலில் போய் விழுந்திருந்தால் அந்த நிமிடமே படம் முடிந்திருக்கும்).
அன்றிலிருந்து அவள் கணவனின் கைபொம்மை. அவனுடைய வற்புறுத்தலில் அவளும் குடிக்கத் துவங்குகிறாள். குடும்பம் குட்டிச்சுவராகிறது. அயோக்கியனோ அவளை சூறையாட தருணம் பார்த்திருக்கிறான். இந்நிலையில்தான் ஒரு ஓட்டலில் அவள் குடித்துவிட்டு கணவனோடும், அவனது அயோக்கிய நண்பனோடும் ஆட்டம் போடும் பாடல்தான் இது. (அட.. படம் பேரைச்சொல்லுய்யா என்கிறீர்களா?. இந்தப்பதிவின் முதல் வார்த்தைதான்).
சங்கர்-கணேஷ் இணை ஹெவியாக மியூசிக் போட்ட பாடல்களில் இதுவும் ஒன்று.
அடிமை நான் ஆணையிடு
ஆடுகிறேன் பாடுகிறேன்
மதுவை நீ ஊற்றிக்கொடு
மயங்குகிறேன் மாறுகிறேன்
பொதுவாக இம்மாதிரிப் பாடல்கள் எங்கள் அருமை ராட்சசிக்குத்தான் போகும். இது ஒரு மாறுதலாக கானக்குயில் சுசீலாவுக்கு கொடுத்திருந்தனர். அவரும் அருமையாகப்பாடி செலக்ஷனை ஜஸ்டிஸ் செய்திருந்தார்.
அட்டகாசமான புல் சூட்டில் எங்கள் தேசியத்திலகம் சசிகுமாரும், முரட்டு ஆணழகன் ஸ்ரீகாந்தும். புடவையில் 'வெண்ணிறக்கொடியிடை' நிர்மலாவும் ஆஹா.. காட்சியே களை காட்டிடுமே. அதற்கேற்ற ரிச்சான செட். (இந்த செட் இதற்கு முன் பல படங்களில் வந்திருக்கிறது. சிவந்த மண்ணில் நடிகர்திலகம் அறிமுகக் காட்சி, ராஜாவில் மேஜிக் ரேடியோவுடன் நடிகர்திலகம் மேஜையின் அருகில் அமர்ந்திருக்க, பிரீப்கேஸுடன் ரந்தாவா மாடிப்படியில் இறங்கிச்செல்லும் காட்சி)
எல்லாம் சரி, வீடியோ எங்கே என்று கேட்காதீர்கள். அதை இங்கே இணைக்கும் வித்தையெல்லாம் எனக்குத்தெரியாது. அருமை நண்பர்கள் வாசுதேவன் அல்லது ராகவேந்தர் அல்லது வினோத் தருவார்கள். (நான் வெறுமனே பார்க்கவும், பார்த்ததை கிறுக்கவும் தெரிந்த ஒரு பாமரன்)