Originally Posted by
mr_karthik
அன்புள்ள பம்மலார் அவர்களே,
அண்ணனின் புகழ்க்காவியங்களில் தலையாய ஒன்றான 'வீரபாண்டிய கட்டபொம்மன்' பட விளம்பர வரிசையைப்பார்த்து அசந்து போன அதே நேரத்தில், எனக்கு மிகப்பெரிய சந்தேகமும் உண்டாகிறது. அது வேறொன்றுமில்லை...
'நாம் இருப்பது 2012 மே மாதத்திலா அல்லது 1959 மே மாதத்திலா' என்ற சந்தேகம்தான். படம் வெளிவந்தபோது வாழ்ந்த மக்களே இத்தனை விளம்பரங்களைப் பார்த்திருப்பார்களா என்றிருக்கும்போது முழுமையாக 53 ஆண்டுகள் கடந்து விட்ட நிலையில், ஏதோ பேருக்கு ஒன்றிரண்டு என்றில்லாமல் எந்தெந்த பத்திரிகைகளில் எல்லாம் விளம்பரங்கள் வந்ததோ அவற்றை அப்படியே பொலிவு மங்காமல் த்ருவதென்றால்.... ஊகும், இது சாதாரண மனிதனின் வேலையல்ல, நிச்சயம் 'பட்டணத்துக்கு வந்த பூதத்தின்' சித்து வேலைதான்.
மரியாதைக்குரிய பிலிம்நியூஸ் ஆனந்தன் அவர்கள் தமிழ்த்திரையுலகின் பெரிய ஆவணக்காப்பாளர் என்றால் அதில் ஆச்சரியமில்லை. ஏனென்றால் அவர் ஏற்கெனவே 75 ஆண்டுகளைக்கடந்தவர். ஆனால் 1972-ல் பிறந்த ஒருவர் (வேறு யார்? பம்மல் தந்த செல்வமாகிய நீங்கள்தான்) , தான் பிறப்பதற்கு பல ஆண்டுகளுக்கு முன் வந்த இத்தனை ஆவணத்திரட்டுகளைத் தரமுடிகிறதென்றால் அது என்ன சாதாரண காரியமா?. வியப்பதைத்தவிர வேறெதுவும் செய்ய முடியவில்லை.
அன்று புதிய பறவைக்காக பாரகன் திரையரங்கு மூடப்பட்டு, புதுப்பொலிவு பெற்றதற்கான விளம்பரத்தைத்தந்து ஆச்சரியத்தில் மூழ்கடித்த நீங்கள், இன்று கட்டபொம்மனின் வருகைக்கான அலங்காரத்துக்காக சித்ரா அரங்கில் அதற்கு முன் ஓடிக்கொண்டிருந்த படத்தின் காட்சிகள் ரத்துச்செய்யப்பட்ட விளம்பரத்தையும் தர முடிகிறதென்றால்,
ஆதாரங்களை அள்ளித்தரும் ஆவணச்செம்மல் என்றால் இப்படித்தான் இருக்க வேண்டும் என்று "சிலருக்கு" எடுத்துக்கூறுவது போல் அமைந்துள்ளது.
கட்டபொம்மனின் வீர நடை, வெற்றிநடை தொடரட்டும் என வாழ்த்துகிறேன்.