சூப்பர் சௌத்ரி ... சாரி சௌரி ...
திருவிளையாடல் பெற்ற வெற்றிக்குப் பின்னால் இருந்த சூழ்நிலையை அற்புதமாக விளக்கியுள்ளீர்கள்.
அந்த கால கட்டம் உண்மையிலேயே மிகவும் திராவிட மயமாக இருந்த கால கட்டமாகும். என்றைக்கு தேர்தல் வைத்தாலும் அவர்கள் வெற்றி உறுதி என்று முன் கூட்டியே மக்கள் நிர்ணயிக்கும் அளவிற்கு காங்கிரஸ் மக்கள் வெறுப்பை சம்பாதித்திருந்த நேரம். போதாக் குறைக்கு போர் வேறு. தேச பக்தி என்பதையும் மீறி மக்களின் அன்றாட வாழ்க்கையில் நேர்ந்த கஷ்டங்களே கண்முன் நின்று வாக்களிக்கும் தேர்வை நிர்ணயம் செய்த நேரம். இப்படி பல்முனைத் தாக்குதல்களில் காங்கிரஸ் தட்டுத் தடுமாறி தமிழகத்தில் தன் பெயரை இழந்து வந்தது. இந்த எதிர்ப்பலையில் பெருந்தலைவரும் தப்பவில்லை என்பது அந்த தேர்தலில் நிரூபணமாயிற்று.
இத்தனையும் தாண்டி அந்தத் தேர்தலில் - தமிழகத்தின் தலைவிதியை மாற்றிய 1967 தேர்தலில் - தமிழகத்தைப் பொறுத்த மட்டில் காங்கிரஸ் மானத்தோடு தப்பித்ததற்கு ஒரே காரணம் -
நடிகர் திலகம் சிவாஜி கணேசன்
ஒரே சமயத்தில் இறை பக்தியையும் தேச பக்தியையும் மக்களிடம் கொண்டு சென்று அதற்கு தன் படங்களைத் துணைக் கொண்டு தமிழக மக்களிடம் விழிப்புணர்வூட்டியவர் நடிகர் திலகம். ஒரு பக்கம் திருவிளையாடல் இறை பக்தியை ஊட்டியது என்றால் மறுபக்கம் ரத்த திலகம் மற்றும் தாயே உனக்காக படங்கள் தேச பக்தியை ஊட்டும் பணியை மேற்கொண்டன.
1967ல் தமிழகத்தில் காங்கிரஸ் ஆட்சியை இழந்து திராவிட இயக்கம் வேரூன்ற வழி வகை செய்ததற்குக் காரணம் - எதிர்ப்பு அலையே அன்றி வேறல்ல. அரிசி பற்றாக்குறை, வாரத்திற்கு ஒரு முறை அரிசியை சாப்பிடாமல் கோதுமை சாப்பிடுங்கள் என செய்யப் பட்ட பிரச்சாரம், மற்றொரு பக்கம் இருக்கும் அரிசியை பலமடங்கு விலையை உயர்த்தி விற்றவர்களின் ராஜ்ஜியம் என்பன போன்ற காரணங்களால் அன்று கவிழ்ந்த தேசிய இயக்கம், இன்று வரை தமிழகத்தில் எழவில்லை.
இருந்தாலும் அந்த எதிர்ப்புகளை மிகவும் ஆழமாக ஊடுருவாமல் பார்த்துக் கொண்டு காங்கிரஸின் மானம் காத்தவர் நடிகர் திலகம் சிவாஜி கணேசன். இப்படிப் பட்ட சூழ்நிலையில் தான் திருவிளையாடல் படத்தின் வெற்றி பார்க்க பட வேண்டும்.
சிறந்த முறையில் திருவிளையாடல் படத்தின் வெற்றியைப் பற்றி எழுதிய சௌரி சார் மீண்டும் என் பாராட்டுக்கள்.