Quote:
சம அந்தஸ்தில் மக்களின் வரவேற்பைப் பெற்று புகழ் வெளிச்சத்தில் மின்னி ஒளிர்ந்த இரு நடிப்புச் செம்மல்கள் நடிகர்திலகமும் காதல் மன்னரும்!
அகில உலக அளவிலும் ஒரு நல்ல புரிதலுடன் கதைக் களத்தின் வெற்றிகரமான நடிப்பு உருவகத்தை மட்டுமே மனதில் இருத்தி எந்த வித ஈகோவுக்கும் இடம் தராது பதினைந்து படங்கள் இணைந்து இரு கதாநாயகர்கள் கலக்கியது பெருமையுடன் நினைவுகூரத் தக்க சாதனையே !!
வீரபாண்டிய கட்டபொம்மன்,கப்பலோட்டியதமிழன், பாசமலர், பாவமன்னிப்பு,பதிபக்தி, பந்தபாசம், நாம் பிறந்த மண், சரசுவதி சபதம், திருவருட் செல்வர், கந்தன் கருணை போன்ற படங்களில் நடிகர்திலகத்துடன் கதை முக்கியத்துவம் கருத்தில் கொண்டு அளவாக அடக்கி வாசித்திருப்பார் காதல் மன்னர் !
சாவித்திரியை தனது பாசமலர் தங்கையாகவும் ஜெமினியை மாப்பிள்ளை என்றுமே நிஜ வாழ்விலும் மதித்தவர் நடிகர்திலகம்! குலமகள் ராதை படத்தில்உலகம் இதிலே அடங்குது என்னும் பாடல் காட்சியில் சினிமாக்காரங்க படத்தைப் போட்டா பத்திரிகைகள் கடைகளில் விரைவில் தீர்ந்துவிடும் என்ற கருத்துப்பட வரும் காட்சியில் நடிகர்திலகம் தன்னை முன்னிலைப் படுத்தாது ஜெமினி சாவித்திரி படங்களைக் காட்டி தனது கர்ணன் காலத்துத் தொடர்ச்சியான நன்றியறிதலையும் (கட்டபொம்மனில் எஸ் எஸ் ராஜேந்திரன் அவர்கள் நடிக்க இயலாத இக்கட்டான சூழலில் நடிகர்திலகத்தின் பாசமலர் வழி வேண்டுதலை ஏற்று எந்த ஈகோவுமின்றி உடனே வந்து நடித்துக் கொடுத்து படத்திற்கே இனிமையும் பெருமையும் சேர்த்தவர் ஜென்டில்மேன் ஜெமினி) மரியாதையையும் வெளிப்படுத்தி அவர்களைப் பெருமைப்படுத்தியிருப்பார் !!
பெண்ணின் பெருமை, பார்த்தால் பசி தீரும், உனக்காக நான் திரைப்படங்களில் இன்னும் ஒருபடி மேலே போய் ஜெமினிகணேசனின் பாத்திரப்படைப்பை கதையின் நாயகனாக முன்னிலைப் படுத்தும் வண்ணம் தனது விட்டுகொடுக்கும் மனப்பாங்கை வெளிப்படுத்தியிருக்கிறார் நடிகர்திலகம் !!