-
வாழ்வில் வேண்டும் கொஞ்சம் துன்பம்
வருத்தம் வானை வளைக்க முயன்று
வெட்கம் சமூக அக்கரை குறைகையில்
வேதனை வெட்டி முறிக்க முடியாமையில்
வீணாய் போன நல்நோக்கு திட்டங்களில்
விழவேண்டும் மீண்டும் எழுந்து நிற்பதற்கு
வியர்வை விரயமாய் போய்விட்டபோதும்
விரும்புவாயோ உப்பில்லா பத்திய சோற்றை
விருந்தென்றால் வேண்டாமோ அறுசுவை
வெடித்து முளைக்கும் விதைக்குள் ஆலமரம்
-
ஆலமரத்தின் பழம் சிறிதே
அதிலே உண்டு ஆயிரம் விதை
அதனுள் ஒன்று வித்தாகி
அகல மரமாய் அதை ஆக்கி
அனேக விழுது அதை தாங்கி
ஆயிரம் பறவைக்கு அடைக்கலமே
அரிக்கும் கரையான் அடிமரத்தை
ஆனால் ஆலோ தழைத்தோங்கும்
ஆயிரம் விழுது ஊன்றியதால்
அதுபோல் மனிதா ஆவாயே !
ஆல் போல் தழைத்து வாழ்வாயே !
-
வாழ்வாயே மனிதா கொஞ்சம் ஆன்மாவிற்காய்
வயிறு பிரதானம்தான் இல்லையெனவில்லை
ஐம்புலன் சுகங்கள் இன்பந்தான் ஐயமில்லை
திரவியம் தேடி தேடியதை கண்டபடி இறைத்து
தடைகள் பல தாண்டி பந்தயத்தில் ஓடி வென்று
களைக்கையில் உள்மன தாகம் தீர் அறம் செய்து
-
அறம் செய்து வாழ வழியென்று அன்றே
அறுத்திட்ட மறை ஒழுக்கம் - அஃதே
விழுப்பம் தருமாம் வள்ளுவன் வாக்கு -அதை
அகம் கொண்டு சொல் செயலினில் நாட்டு
-
செயலினில் நாட்டு கண்கள் சிவக்க கத்தினாள்
ஓடும் தண்ணீரில் எழுதவேண்டுமுன் பேச்சை
பெற்றவளுக்கும் பின் வந்த ஒரு மற்றவளுக்கும்
நடுவில் விழி பிதுங்கும் கணவனொரு கோழை
-
கோழை இல்லை நான் மோழையும் இல்லை
ஏழையென் சொல் அம்பலத்தில் ஏறவில்லை
எதிர்த்து பார்த்தேன் எந்த பயனுமில்லை
எடுபட்டவனே விட்டேனா பார் என்றனர்
எடுத்தேன் ஓட்டம் வெட்ட வரும் போது
வெட்டி வீரம் வேண்டாம் வீண் அது இப்போது
இன்று வெற்றி இல்லையெனில் நாளை உண்டு
எருமை போல் பொறுமை எனக்கென்றுமே உண்டு
வென்று காட்டினார் வீழ்த்தினார் வாலியை அன்று
வெகு எளிதாக இராமன் மறைவினில் நின்று
மறுபடி எதிர்ப்பேன் இம்முறை ஒளிந்து கொண்டு
மறம் உண்டு எனை வெல்ல இனி எவருண்டு ?
-
எவருண்டு எனக்கேட்டால் என்ன செய்வாள்
…ஏந்திழையின் மனதுள்ளே நுழைந்த காதல்
பயிரதுவும் வெட்டிவிட்டு எரித்திடு வாரோ
..பாவையவள் நெஞ்சுள்ளே நடுக்கம் மேலும்
விழிகளிலே ஆச்சர்யம் தன்னைக் கூட்டி
…விறுவிறுப்பாய்க் கேட்டாளே தந்தை முன்னர்
விவரந்தான் கூறுங்கள் இந்தக் கேள்வி
..விவரிக்கும் காரணமும் புரிய வில்லை..
பாலாய்த் தேனாய்ப் பாசங்கள்
..பலவாய்க் கூட்டி வளர்த்தமகள்
யாரோ வயதுப் பையனிடம்
…ஏனோ சிரித்தே நின்றிருந்தாள்
ஊரார் பார்த்தே சொல்லத்தான்
..ஓடி வந்தே தான்கேட்டால்
பாவ முகமாய் நிச்சலனப்
..பாவம் கூட்டிக் கேட்கின்றாள்
அன்பே மகளே அருங்கனியே
..அழகாய்த் தானே நான்வளர்த்தேன்
எண்ணும் எழுத்தும் எண்ணவொண்ணா
..ஏற்றங் கொடுக்கும் நற்சிந்தை
இன்னும் பலவும் நீகேட்க
…எளிதாய்க் கொடுத்தேன் உண்டிலையா
பொன்னே பெண்ணே பூந்தளிரே
..புவிநீ இன்னும் அறியவிலை..
இன்னும் பேச்சு எதற்கப்பா..
..என்ன விஷயம் சொல்லுங்களேன்
உங்கள் மகள்தான் வாரிசுநான்
..உணர்வில் மயங்க மாட்டேனே..
கன்னஞ் சிவக்கும் யாரேனும்
..களிப்பாய் என்னை நெருங்கவுந்தான்
திண்ண புத்தி எனக்குண்டு
..சொல்வீர் உமது கேள்வியினை
அந்தக் கடைப்பக்கம் ஆடவன் ஒருவனுடன்
…அழகுப் பெண்ணிலவு உன்மகள் பேசுகிறாள்
சொந்தம் போல்சிரித்து கண்ணில் கனவுகளும்
..சொர்க்கம் போல்விரிய நின்றபடி தானிருந்தாள்
இன்னும் பலவாகச் சொன்னவர் எத்தனையோ..
…ஏற்றம் தரும்படியும் இனிமையாய் இல்லையம்மா
மென்மைக் காதலென்று பலர்சொலும் விஷமுந்தான்
..மேவி உனைச்சேர்ந்து விட்டதா சொல்லம்மா..
சிரிப்பலை கொஞ்சம் மெல்ல
…சிற்சில வாகக் கூடி
விரிந்ததே இதழு மங்கு
..விவரணை சொல்ல வொண்ணா
புரிதலும் இல்லா நோக்கு
..புனைந்தது கண்கள் மெல்ல
வரிவரி யாக நெற்றி
..வாகாகக் கோடு போட
சின்ன விஷயம் இதுதானா
..சீர்மிகும் உங்கள் சோகந்தான்
எண்ணம் சொல்ல ஏந்தயக்கம்
..எனக்கோ காதல் எதுமில்லை
வண்ண மாக நான்பேசி
..வாகாய்ச் சிரிப்பும் சொல்லியவர்
உள்ள விஷயம் சொலவில்லை
..உங்கள் தயக்கம் புரிகிறது..
பேசிச் சிரித்த நல்மனிதர்
..பெரிய மனிதர் என்னுடைய
நேசிப் புக்கும் உரியவளாம்
.. நேகா வுடைய அண்ணனவர்
பூசி மெழுகும் பழக்கம்தான்
..பூவை எனக்குக் கிடையாது
சேதி தவறு என்தந்தாய்
.. செல்வீர் என்றே தான்சிரித்தாள்..
உளத்தினில் கொண்ட காதல்
..உணர்வையும் மறைத்து வைத்தாள்
வழக்கமாய் அவனும் வந்தால்
..வருத்தமாய் முகத்தை வைத்து
பழக்கமும் வேண்டாம் என்றே
..பக்குவ மாகச் சொல்ல
உரமென நினைத்துக் கொண்டாள்
…உருக்குமா காதல் நாளை..
-
நாளை என்னாகுமோ இந்நாடு
களை மண்டிய காடானதின்று
சொல்லவொணாத் துயரச் சுமைகள்
சொகுசறியா அனந்த கோடி பெண்கள்
உண்மை உணராமல் போக்கிரியாய்
மலிவு விளம்பரத்தில் பகட்டுகிறாள்
பதறிட பலபேர் பாராட்டிடவும் பலபேர்
பெண் சுதந்திரம் இதுவென்று பகர்கிறாள்
பொல்லாத பொருந்தாத பேச்சுக்கள்
பேசுகிறாள் பொறுப்பில்லாத மின்மினி
-
மின்மினி பூச்சி ஒளியினை போல்
மின்னும் விண்மீன்கள் ஏராளம்
அண்டத்தில் ஒவ்வொன்றும் ஆயிரம்
அருணனின் வெப்பம் கொட்டும் – ஆயின்
தரணிக்கு தாரகையால் பயனுமில்லை
தண்மதியின் வெண்ணொளி அதற்கில்லை
தங்கமும் வெள்ளியும் தங்காத செல்வமும்
தரமில்லா கஞ்சரிடம் சேர்ந்தாற்போல் !
-
கஞ்சரிடம் சேர்ந்தாற்போல் ஆனதே
வஞ்சியிவளிடம் வந்த வார்த்தைகள்
வக்கில்லை சொல்லுக்கு வெறும் சாடைகள்
விளங்குவதில்லை அவற்றின் அர்த்தங்கள்
கடுப்பா களிப்பா குழப்புகின்ற கருவிழிகள்
கிண்டலா ரசிப்பா கனி உதட்டின் சுழிப்புகள்
ம் என்றும் ஓ என்றும் உதிரும் முத்துக்கள்
உணர்த்தவில்லை அவள் உள்ளக்கிடக்கைகள்