PDA

View Full Version : Oru Kanavin Isai - Ananda Vikatan



R.Latha
9th April 2009, 09:46 PM
New series on A.R. Rahman written by Krishna DaVinci started in Ananda Vikatan. Somebody post updates.

A.ANAND
12th April 2009, 03:35 PM
tamil-innu sonnale 'alagic' innga,ithala update panna etthanana peru padikka porangga??translate vera pannaum!

a.v magazine vaangi sonthama padichikka vendiyathu than nallathu!1000 thanx to mr.krishna davinci :clap:

Nerd
12th April 2009, 10:31 PM
1978...

அந்த 11 வயதுச் சிறுவன் கோடம்பாக்கத்தில் ஒரு ரிக்கார்டிங் ஸ்டுடியோவின் வாசலில் தயங்கியபடி உள்ளே செல்கிறான். அவனுக்காகப் பல வாத்தியக்காரர்கள் காத்திருக்கிறார்கள். ''வாப்பா திலீப்... உனக்காகத்தான் காத்துட்டிருக்கோம். நீ கொண்டுவந்த சிந்தசைஸர்ல என்னவோ பிரச்னை. என்னன்னு பாரேன்'' என்கிறார் அர்ஜுனன் மாஸ்டர். சிறுவன் திலீப் அந்தக் கருவியின் பாகங்களைத் தொழில்நுட்ப நேர்த்தியுடன் அழகாகப் பிரிக்கிறான். எதையோ சரிசெய்து ஒன்று சேர்க்கிறான். சில நிமிடங்களில் அது மீண்டும் நன்றாக வேலை செய்ய ஆரம்பிக்கிறது. அர்ஜுனன் மாஸ்டர் அவனை அன்புடன் அணைத்துக்கொள்கிறார்... ''கில்லாடிடா நீ!''

திலீப்பின் கண்கள் கலங்கியிருக்க, அவரும் மனம் கலங்குகிறார். ''என்ன திலீப், அப்பா ஞாபகம் வந்திடுச்சா..?'' என்பவர், பெருமூச்சுவிடுகிறார். ''என்ன செய்றது... விதின்னுதான் சொல்லணும். சாகிற வயசா மனுஷனுக்கு? இப்பவும் உன் அப்பா இங்கேயே இருக்கிற மாதிரிதான் தோணுது திலீப்'' என்பவர், சிறுவனின் கைகளில் சில ரூபாய் நோட்டுகளைக் கொடுக்கிறார். யூனிவோக்ஸ், கிளாவியோலின் போன்ற மின் இசைக் கருவிகளை வாடகைக்கு விட்டதற்காகக் கொடுக்கப்படும் சிறிய தொகை அது.

`திலீப் அந்தப் பணத்தில் தன் சகோதரிகளுக்காக சாக்லேட்டுகளும் பிஸ்கட்டுகளும் வாங்கிக்கொண்டு வீட்டுக்கு வருகிறான். அம்மாவிடம் மிச்சப் பணத்தைக் கொடுக்கிறான். அவனைப் பார்க்கப் பார்க்க, அம்மாவின் மனம் நெகிழ்கிறது. 'சின்னப் பையன் மேல குடும்பப் பாரம் விழுந்துவிட்டதே! படிக்க வேண்டிய பையனை இப்படி ரிக்கார்டிங் தியேட்டர்களுக்கு அனுப்புகிறோமே' என்கிற வருத்தம். ஆனால், சிறுவன் திலீப்பின் கண்களில் மின்னிய விவரிக்க இயலாத ஒளியைக் கண்டபோது, அவன் சரியான பாதையில்தான் போகிறான் என்று அந்தத் தாயின் மனதுக்குப் புரிந்தது.

திலீப் பொதுவாக வீட்டில் யாருடனும் கலகலப்பாகப் பேச மாட்டான். வீடெங்கும் இறைந்துகிடக்கும் இசைக் கருவிகளும், இசைப்பதிவு இயந்திரங்களும்தான் அவனுக்குப் பிடித்த உலகம். தன் அறைக்குச் சென்று அவற்றை வாசிப்பதிலும் பிரித்துப் போட்டு மீண்டும் ஒன்று சேர்ப்பதும்தான் அவனுடைய விருப்பமான ஒரே விளையாட்டு. மற்றபடி நண்பர்களுடன் கிரிக் கெட் விளையாடுவது, சினிமா, அரட்டை போன்ற வேறு பொழுதுபோக்குகள்..? ம்ஹூம்... எதுவும் இல்லை.

திலீப் தன் அறைக்குச் சென்று ஹார்மோனியத்தில் ஒரு பாட்டை வாசிக்க ஆரம்பிக்கிறான். அது அவனுடைய அப்பா இசையமைத்த ''பெத்லஹேமில் ராவில்...'' என்கிற பிரபல மலையாளப் படப் பாட்டின் மெட்டு. அவன் வாசிப்பதைக் கேட்கும் அம்மா, தன் கணவரே நேரில் வந்ததைப் போல் மெய்ம்மறந்துபோகிறார். அந்த மெட்டில் அவன் சில மாற்றங்களையும் செய்து மிக இனிமையாக வாசிப்பதைக் கேட்கும்போது அந்தத் தாய்க்குச் சிலிர்க்கிறது. ஓடி வந்து தன் மகனை நெஞ்சார அணைத்துக்கொள்கிறார். அவர் கண்களில் கண்ணீர் வழிகிறது.

''நீ வாசிக்கிறதைக் கேக்கும்போது சந்தோஷமா இருக்குப்பா... ஆனா, கொஞ்சம் பயமாவும் இருக்கு.''

''பயமா... ஏம்மா?''

''உங்கப்பா ரொம்ப திறமைசாலிப்பா. எவ்வளவோ உயரத்துக்குப் போயிருக்க வேண்டியவரு. இந்த உலகம்தான் அவரைக் கடைசி வரை புரிஞ்சுக்கலை. இவ்வளவு சின்ன வயசுல உனக்கு இருக்கிற திறமை எனக்குத் தெரியுது. ஆனா, உலகம் புரிஞ்சுக்குமான்னு பயமா இருக்கு'' என்கிறார் வாழ்க்கையின் பல பிரச்னைகளைப் போராட்டத்துடன் கடந்து வந்த அந்தப் பாசமிகு அம்மா.

உலகம் அந்தச் சிறுவனைப் புரிந்துகொண்டது. இருகரம் நீட்டி அந்த இளம் இசை மேதையை வரவேற்கக் காத்திருந்தது. அவனுக்கான பிரகாசமான எதிர்கால வெற்றிப் பாதை ஏற்கெனவே அமைக்கப்பட்டுவிட்டது. நான்கு வயதிலேயே பெற்றோர்களால் பியானோ வகுப்புகளுக்கு அனுப்பப்பட்ட சிறுவன் திலீப், விரைவில் பள்ளிப் படிப்பைவிடப் போகிறான். தனராஜ் மாஸ்டரிடம் இசை கற்று, லண்டன் டிரினிட்டி இசைக் கல்லூரியில் ஸ்காலர்ஷிப் பெற்று, மேற்கத்திய கிளாசிக்கல் இசையில் பட்டம் பெறப்போகிறான். ரூட்ஸ், நெமிஸிஸ் அவின்யூ, மாஜிக் போன்ற சென்னை ஆங்கில இசைக் குழுக்களில் பங்கேற்கும் வாய்ப்பு அவனுக்குக் கிடைக்கப் போகிறது.

இன்னும் ஒரு சில வருடங்களில் எம்.எஸ்.வி, இளையராஜா போன்ற மாபெரும் இசைஅமைப்பாளர்களுக்கு கீ-போர்டு பிளேயராகவும், சில சமயங்களில் இசை கோப்பாளராகவும் பணியாற்றப்போகிறான். அவனுடைய திறமை விக்கு விநாயக் ராம், குன்னக்குடி வைத்தியநாதன், ஜாகிர் ஹுசேன் போன்றவர்களுடன் சேர்த்துவைக்கப்போகிறது. அவர்களுடன் கச்சேரிகளில் பங்கேற்க உலகப் பயணம் செல்வான். அதன் பிறகு, 300-க்கும் மேற்பட்ட விளம்பரப் படங்களுக்கு இசை அமைப்பான். 'பஞ்சதன்' என்கிற பெயரில் சொந்தமாக ஒரு ஹைடெக் ரிகார்டிங் ஸ்டுடியோவைக் கட்டுவான்.

அங்கேதான் இயக்குநர் மணிரத்னத்தைச் சந்திப்பான். 'ரோஜா' என்கிற படத்துக்கு இசையமைக்கும் வாய்ப்பு அவனுக்குத் தரப்படும். அந்த இசையமைப்பு இந்தியத் திரை இசையின் ஸ்டைலையே மாற்றி அமைக்கும். முதல் படத்திலேயே தேசிய விருது பெறுவான். சொந்த வாழ்க்கையில் நடந்த சில புதிரான நிகழ்வுகளின் தொடர்ச்சியாக, அப்போது அவன் பெயரும் மாற்றம் செய்யப்பட்டிருக்கும். திலீப் என்கிற இளைஞன் ஏ.ஆர்.ரஹ்மான் என்கிற இசைக் கனவானாக மாறுவார். 'ரோஜா'வில் ஆரம்பிக்கப் போகும் அந்த மகத்தான இசைக் கனவு ஆஸ்கர் விருதையும் கடந்து செல்லும்.

இத்தனையும் ஓர் அற்புதம் போல் கண் முன்னால் நடந்தன. ரஹ்மானின் அம்மா கரீமா பேகத்துக்கு அந்த வாழ்க்கை அனுபவங்களைப் பற்றி நினைத்துப் பார்க்கும்போதே, உணர்ச்சிவசப்பட்டு மனம் நெகிழ்கிறது. ''என் மகன் சின்ன வயசுலேர்ந்தே ரொம்ப அடக்கம். எதுக்கும் உணர்ச்சிவசப்படாது. அப்பாவோட ரிக்கார்டிங் தியேட்டருக்குப் போயி வேடிக்கை பார்த்துக்கிட்டு இருக்கும். வீட்டுல ஹார்மோனியத்தை அது (அப்படித்தான் மகனைச் செல்லமாக அழைக்கிறார்) பிரமாதமா வாசிக்கிறதை அப்பா எல்லார்கிட்டேயும் பெருமையா சொல் லிட்டிருப்பாரு. ஒரு தடவை அதோட அப்பா சுதர்ஸனம் மாஸ்டர்கிட்டே கூட்டிப் போயிருந் தாரு. அப்ப அதுக்கு நாலு வயசு. ''என்னடா... என்னவோ ஹார்மோனியத்துல பிரமாதமா வாசிப்பியாமே... வாசிச்சுக் காமி''ன்னு சுதர்ஸனம் மாஸ்டர் கேட்டிருக்காரு. அது கொஞ்சமும் அலட்டிக்காம, ரொம்ப அற்புதமா வாசிச்சிருக்கு. அவரு மிரண்டுபோயிட்டாரு. நம்ப முடியாம ஹார்மோனியக் கட்டைகள் மேல ஒரு வேட்டி யைப் போட்டு மூடி ''எங்கே, இப்ப வாசிச்சுக் காட்டு''ன்னு சொல்லியிருக்காரு. ஹார்மோனி யக் கட்டைகள் ஏதும் தெரியாதபோதே, அப்ப வும் அதே மாதிரி வாசிச்சிருக்குது. எல்லாரும் அசந்துபோயிட்டாங்க. அதோட அப்பா ரொம்ப ஆச்சர்யமா, அடிக்கடி என்கிட்டே 'இவன் பெரிய ஆளா வருவான் பாரு'ன்னு சொல்லிக்கிட்டே இருப்பாரு. அவரு அப்போ சொன்னது இப்பவும் என் மனசுல கேட்டுக் கிட்டே இருக்கு. இந்தப் புள்ளகிட்டே என்னவோ அற்புதமான திறமை இருக்குன்னு புரிஞ்சுக்கிட்டு, உடனே பியானோ கிளாஸ்ல சேர்த்துவிட்டோம். அப்ப ஆரம்பிச்சதுதான் எல்லாம். இப்ப ஆஸ்கர் அவார்டு வரை வந்திருச்சு அது!'' அவர் குரலில் பெருமிதமும் பரவசமும் சேர்ந்து ஒலிக்கிறது.

இந்தியத் திரையுலகம் எத்தனையோ இசை மேதைகளைத் தந்திருக்கிறது. ஒவ்வொருவரும் ஒவ்வொரு வகை. யாரும் யாருக்கும் குறைவில்லை. ஆனால், ரஹ்மானை 'first among equals' என்று பல காரணங்களுக்காகச் சொல்லலாம். ஆஸ்கர் விருது அவருடைய பயணத்தில் தங்க நேர்ந்த ஒரு ஸ்டேஷன். அவ்வளவுதான். அதையும் தாண்டி அவர் பயணித்துக்கொண்டே இருக்கும் இசை மைல் கற்கள் ஏராளம். தன் முதல் படமான 'ரோஜா'வில் 'ரகே' என்னும் மேற்கத்தியத் துள்ளல் இசையைத் தமிழில் அறிமுகப்படுத்தியவர். அடுத்தடுத்து, மேற்கத்திய கிளாஸிக்கல் இசை, ஹிந்துஸ்தானி, அரபி சுஃபி, கவாலி, ஜாஸ், கர்னாடிக், கஸல், ஹிப் ஹாப், ராக், ஓபரா, ப்ளூஸ், ஆப்பிரிக்க பீட்ஸ் என்று புத்தம் புதிதாகப் பல இசை வடிவங்களை அறிமுகப்படுத்தியபடியே இருக்கிறார். இவர் அளவுக்கு உலக இசைக் கலைஞர்களுடன் இணைந்து பணியாற்றிய இந்திய இசை அமைப்பாளர்கள் யாரும் இல்லை. மைக்கேல் ஜாக்சன், வனஸா மே, ஆண்ட்ரூ வெப்பர் லாயிட், புஸ்ஸி கேட் டால்ஸ், நஸ்ரத் ஃபதே அலிகான், ஆட்னன் சாமி, டீப் ஃபாரஸ்ட், டமினிக் மில்லர், அகான் என்று இவர் கைகோத்தவர்கள் ஏராளம். பிரபல ஹாலிவுட் இயக்குநர் ஸ்பைக் லீ, ரஹ்மானின் 'சைய... சைய...' பாடலைத் தன் படமான 'இன்சைட் மேன்'ல் பயன்படுத்திஇருக்கிறார். 'லார்ட் ஆஃப் தி ரிங்க்ஸ்' ஆங்கிலப் படத்துக்கும், சீனப் படமான 'வாரியர்ஸ் ஆஃப் ஹெவன் அண்ட் எர்த்' படத்துக்கும் ரஹ்மான் இசையமைத்திருக்கிறார்.

15 வருடத் திரை இசை வாழ்க்கையில் இவர் பெற்றுள்ள தேசிய விருதுகள் மூன்று, பத்ம விருது, 14 ஃபிலிம்ஃபேர் விருதுகள், 6 தமிழக அரசு விருதுகள், கோல்டன் குளோப், பாஃப்டா, க்ரிட்டிக்ஸ் விருது... எல்லாவற்றுக்கும் மேல் சிகரம் வைத்தாற் போல் ஆஸ்கர்!

கடும் உழைப்பு, புதிய டெக்னாலஜியில், இசைப்பதிவுக் கருவிகளில் ஆர்வம், புதிய புதிய பாடகர்களை அறிமுகப்படுத்தியது போன்றவை ரஹ்மானின் பிரமாண்ட வெற்றிக்கான சில கார ணங்களாகச் சொல்லப்படுகின் றன. இந்தச் சிறப்புகள் எல்லாம் அவருடைய அப்பா ஆர்.கே.சேகரி டமும் அந்தக் காலத்திலேயே இருந்தது என்பது ஆச்சர்யமான ஒற்றுமை! ''என் அப்பாவின் மாபெரும் இசை ஞானத்தின் ஒரு சிறிய பகுதிதான் இறைவனின் அருளால் என்னிடம் வந்திருப் பதாக நான் நினைக்கிறேன். அவரைப் பற்றி நினைத்தாலே என் நெஞ்சம் கண்ணீரில் நனை கிறது'' என்றார் ரஹ்மான் ஒரு முறை. மலையாளப் பட இசை உலகில் சத்தமில்லாமல் மாபெரும் சாதனைகள் செய்தவர் இசை அமைப்பாளர் ஆர்.கே.சேகர். அவருடைய சரித்திரம் குடத்திலிட்ட விளக்காக இருக்கிறது'' என்கிறார் பிரபல மலையாள எழுத்தாளரும், இசை விமர்சகரும், ரஹ்மானின் நண்பருமான ஷாஜி.

நெகிழவைக்கும் அந்தக் கதை... அடுத்த வாரம்!

ரோஜா மலர்ந்த நேரம்!

1992... ரஹ்மான் 'பஞ்சதன்' என்கிற பெயரில் சொந்தமாகத் தன் வீட்டிலேயே ஒரு பிரமாதமான ரிக்கார்டிங் நிலையத்தை அமைத்திருந்தார். ஆசியாவின் மிகச் சிறந்த ஒலிப்பதிவுக்கூடம் அது. லியோ காபி, ஆல்வின், பூஸ்ட், ப்ரீமியம் பிரஷர் குக்கர், எம்.ஆர்.எஃப் டயர்ஸ், தி ஹிண்டு, ஏஷியன் பெயின்ட்ஸ் போன்ற பிரபல கம்பெனிகளுக்கு விளம்பர இசை அமைத்து ஹிட் ஆகியிருந்த காலம். சாரதா திரிலோக் என்கிற விளம்பரப் படத் தயாரிப்பாளர், ரஹ்மானின் இசையில் வெளியான லியோ காபி விளம்பரத்துக்காக விருது வாங்கியிருந்தார். அப்போது மணிரத்னம் தன் அடுத்த படத்துக்காக ஒரு புதிய இசையமைப்பாளரைத் தேடிக்கொண்டு இருந்தார். அவருடைய உறவினரான சாரதா திரிலோக், ரஹ்மானை அவரிடம் அறிமுகப்படுத்திவைத்தார். தன்னுடைய 'பஞ்சதன்' ஸ்டுடியோவுக்கு நேரம் கிடைக்கும்போது வந்து சந்திக்குமாறு வரவேற்றுவிட்டு விடைபெற்றார் ரஹ்மான். பின்பு, அந்தச் சந்திப்பையே அவர் மறந்துவிட்டார். ஆறு மாதங்களுக்குப் பிறகு, திடீரென்று ஒருநாள் பஞ்சதன் ஸ்டுடியோவுக்கு வருகை தந்தார் மணிரத்னம். அப்படி ஒரு ஹைடெக் ஸ்டுடியோவை அவர் எதிர்பார்த்திருக்கவில்லை. அதன் தொழில்நுட்பத் தரத்தைக் கண்டு வியந்தார். ரஹ்மானின் விளம்பர ஜிங்கிள்ஸைக் கேட்டவர், அந்த இசையின் மீது உடனடியாகக் காதல்கொண்டார். ''என் அடுத்த படம் 'ரோஜா'வுக்கு நீங்கள்தான் இசைஅமைப்பாளர்'' என்று அங்கேயே சொல்லி, புக் செய்தார். அதற்குப் பிறகு நிகழ்ந்ததெல்லாம்... சரித்திரம்!

'ரோஜா' படத்துக்காக ரஹ்மான் பெற்ற சம்பளம் வெறும் 25,000 ரூபாய்தான். அதை அப்போது மூன்று மணி நேரங்களில் சம்பாதிப்பார். ''பணம் ஒரு பொருட்டல்ல. எனக்கு மணி சாரிடம் வேலை பார்க்க வேண்டும் என்று தோன்றியது. அவர் என்னிடம் ஒரு நண்பராகவும், சகோதரராகவும் நடந்துகொண்டார். திரை இசையில் பிறருடைய பாணி இல்லாத என் ஸ்டைல் இசையை அவர் மிகத் திறமையாகத் தேர்ந்தெடுத்து ரோஜாவில் பயன்படுத்தினார். அது என்னையே நான் கண்டுகொள்ள உதவியது. திரை இசையின் பாடங்களை மணிரத்னம் யுனிவர்சிட்டியில்தான் படித்தேன்'' என்றார் ரஹ்மான்.

ஹிட் காம்பினேஷன்!

மணிரத்னம்-ரஹ்மான் காம்பினேஷன் எப்போதுமே சூப்பர் ஹிட்தான். அதற்கு ஓர் உதாரணம் சொல்லலாம். 1998-ம் வருடம் பொருளாதாரத் தேக்க நிலை ஹிந்தி சினிமா இசை மார்க்கெட்டையும் பெரிதாகப் பாதித்திருந்தது. கேசட் விற்பனை பலத்த அடி. அப்போதுதான் வெளியானது 'தில்ஸே'. ஒரே வாரத்தில் இரண்டு மில்லியன் கேசட்டுகள் அமோக விற்பனை. அடுத்த ஆறு மாதங்களில் ஆறு மில்லியன் கேசட்டுகள் சூப்பர் சேல்ஸ். இங்கிலாந்து இசை மார்க்கெட்டில் டாப் 10 பாடல்களில் இடம் பிடித்துச் சாதனை புரிந்தது தில்ஸே. ரஹ்மான் இசையின் உலகப் பயணம் அப்போதுதான் ஆரம்பித்தது. இன்று வரை ரஹ்மானின் இசை விற்றிருப்பது, 100 மில்லியன் சிடிக்கள், 200 மில்லியன் கேசட்டுகள். உலக அளவில் மிக அதிகமான இசைப்பதிவுகளை விற்றிருக்கும் இசைக் கலைஞர்களின் டாப் 25 வரிசையில் இடம் பிடித்திருக்கிறார் நம்ம ரஹ்மான்!

- கனவு தொடரும்...

littlemaster1982
13th April 2009, 07:33 AM
Thanks a ton Nerd :ty: :ty: :ty: :ty: :ty: :ty:

Nerd
20th April 2009, 02:05 AM
[tscii:fa422d5aba]ஒரு கனவின் இசை! - ஏ.ஆர்.ரஹ்மான்
- கிருஷ்ணா டாலின்ஸி - Part 2

ஏ.ஆர்.ரஹ்மானின் தந்தை ஆர்.கே.சேகர், மலையாளப் பட இசை உலகில் எத்தனையோ அற்புதமான, காலத்தை வெல்லக்கூடிய பாடல்களைத் தந்திருக்கிறார். இப்போது கம்ப்யூட்டரில் இதை எழுதிக்கொண்டு இருக்கும்போதுகூட, அதில் அவருடைய 1976-ம் வருடத்துப் பாடலான 'சோபான சங்கீத ராத்ரி' இனிமையாக ஒலித்துக்கொண்டுதான் இருக்கிறது. சேகரின் பாடல்களைக் கேட்பவர் களுக்கு, தந்தைக்கும் மகனுக்கும் இடையே தொடர்ந்து வந்திருக்கும் சங்கிலிப் பிணைப்பு போன்ற நுண்ணியமான இசைத் தொடர்பைப் புரிந்துகொள்ள முடியும்.

முந்தைய சோவியத் ரஷ்யாவில் ஓர் இளம் வயலின் மேதை இருந்தான். எட்டு வயதிலேயே மேடைக் கச்சேரிகள் செய்யும் அளவுக்குப் புகழ் பெற்றிருந்தான். அவனுடைய அப்பா ஒரு கால்பந்தாட்டக்காரர். அம்மா, வரலாற்று ஆசிரியர். இப்படிஇருக்கையில், இந்தச் சிறுவனிடம் எப்படி வந்தது இந்த வயலின் இசை மேதைமை என்று ஆராய்ந்தார்கள் விஞ்ஞானிகள். பரம்பரை விவரங்களைத் தேடியதில் அவனுடைய தாத்தாவுக்குத் தாத்தா ஒரு வயலினிஸ்ட் என்பது தெரிய வந்தது. ரஹ்மான் என்னும் இளம் இசை மேதை யின் வேர்களை இது போல் வேறெங்கும் தேட வேண்டியதில்லை. அது, அவருடைய அப்பா விடமே நிறைந்திருந்தது.

ஆர்.கே.சேகரைப் பற்றிப் பார்ப்பதற்கு முன்னால், ஒரு சின்ன ஃப்ளாஷ்பேக்...

அது 1964-ம் வருடம்.

வீட்டின் சுவரில் கதாகாலட்சேபம் செய்யும் ஒரு பெரியவரின் பழைய புகைப்படம் மாட்டப் பட்டு இருக்கிறது. அதில் 'கீழானூர் ராஜகோபால் பாகவதர்' என்று மங்கிய எழுத்துக்கள். அதன் கீழ் பாயில் அமர்ந்து, மெய்ம்மறந்து ஒரு டியூனை ஹார்மோனியத்தில் வாசித்துக்கொண்டு இருக்கிறார் ஆர்.கே.சேகர். ஆர்.கே.சேகர் என்பதன் விரிவாக்கம், ராஜகோபால குலசேகர் என்பதே! புகைப்படத்தில் காணும் கீழானூர் ராஜகோபால் பாகவதர், அவரு டைய தந்தை. அதாவது, ரஹ்மானின் தாத்தா. அந்தக் காலங்களில் மயிலாப்பூர் கோயில்களில் ஹரிகதை பாகவதம் சொல்லியவர்.

சேகர் தன் ஹார்மோனியத்தில், அப்போது மலையாளத்தில் அவருடைய இசையமைப்பில் வெளியாகி ஹிட்டான 'பழசி ராஜா' ( இப்போதும் ரீ-மேக்கில் உள்ள படம் ) படத்தின் சூப்பர் ஹிட் பாடலான 'சொட்ட முதல் சுடல வரே...' என்கிற பாடலை வாசித்துக்கொண்டு இருக் கிறார். அடுத்த சில வருடங்களில் ரஹ்மானைப் பெற்றெடுக்கப்போகும் அவருடைய மனைவி கஸ்தூரி (பிற்பாடு கரீமா) அவர் வாசிப்பதை ஆனந்தத்துடன் கேட்டுக்கொண்டு இருக்கிறார். அவர் கண்கள் சந்தோஷத்தில் கலங்குகின்றன. அதைக் காணும் சேகர், தன் பாட்டை நிறுத்திவிட்டு, ''கஸ்தூரி, ஏன் அழறே? என்னாச்சு?'' என்கிறார்.

கஸ்தூரி கண்களைத் துடைத்துக்கொண்டு ''இதுக்காகத்தானேங்க இத்தனை நாள் கஷ்டப்பட்டோம். இப்ப உங்க பாட்டுதான் கேரளாவுல பட்டிதொட்டியெல்லாம் கேக்குதுன்னு சொல்றாங்க...'' என்கிறார்.

சேகர் ஒரு வறண்ட புன்னகையுடன் பதில் சொல்கிறார்... ''ரொம்ப சந்தோஷப்படாதேம்மா! பாட்டெல்லாம் பெரிய ஹிட்தான். ஆனா, அடுத்த படத்துக்கு ஒப்பந்தம் பண்ணத்தான் ஆள் வரலை.''

அவர் சொல்லிக்கொண்டு இருக்கும்போதே ராமநாதன் என்பவர் வீட்டினுள் பவ்வியமாக நுழைகிறார். சேகரிடம் கை குலுக்கிவிட்டு, ''உங்க பழசிராஜா பாட்டெல்லாம் சூப்பர் ஹிட் சார்! அடுத்து 'ஆயிஷா'ன்னு ஒரு படம் பண்றோம். நீங்கதான் மியூஸிக் போடணும். அட்வான்ஸ் கொடுக்க வந்தேன்...'' என்று ஒரு தொகையை அவரிடம் கொடுக்கிறார். வீடெங்கும் இறைந்து கிடக்கும் இசைப்பதிவு இயந்திரங்களை, இசைக் கருவிகளை அவர் ஆச்சர்யமாகப் பார்க்கிறார்.

''எல்லாமே இறக்குமதி எக்விப்மென்ட்ஸ் போல இருக்கே, சார்! உங்களை மாதிரி யாரு இப்பெல்லாம் புதுமை செய்யறாங்க? எல்லாம் பழைய தேய்ஞ்சு போன ரிக்கார்டுகளையே தேய்க்கறாங்க. பழசிராஜாவுல பாட்டு

மட்டுமில்ல, அந்தப் பாட்டுகளை நீங்க ஒலிப்பதிவு பண்ணியிருக்கிற துல்லியம் பாருங்க... யாரும் கிட்டே நெருங்கமுடியாது. சவுண்டே ரொம்ப வித்தியாசமா இருக்கு...'' என்று பாராட்டிப் பேசும் ராமநாதன் தன் குரலைச் சற்றுக் கீழிறக்கி, ''சேகர் சார், பாலிடிக்ஸ் பேசறேன்னு தப்பா நினைக்கக் கூடாது. என்னடா,

தமிழ் நாட்டுலேர்ந்து ஒருத்தன் வந்து மியூஸிக்ல என்னென்னமோ புதுமை பண்றானேனு இங்கே சில ஜாம்பவான்கள் பொருமிக்கிட்டு இருக்காங்க. தமிழ் ஆளுங்கன்னாலே இவங்களுக்குக் கொஞ்சம் அலர்ஜி! எதுக்கும் ஜாக்கிரதையா இருந்துக்கோங்க'' என் கிறார்.

அதில் சற்றும் கலவரப்படாத சேகர், ''வளர வேண்டியவங்க வளருவாங்க ராமநாதன் சார். யாரும் யாரையும் எதுவும் செய்ய முடியாது. அவங்கவங்களுக் குப் போக வேண்டிய அரிசியில அவங்க பேரு எழுதி இருக்கும்!'' என்று சொல்லிக் கை கூப்பி விடையளிக்கிறார்.

ஆர்.கே.சேகர்... மலையாளப் பட இசை உலகில் முற்றிலும் புதிய சிந்தனைகளுடன், ஆரவாரமில்லாமல் நுழைந்த தமிழர். ஆனால், அங்கே அவரை மனதார வரவேற்க, ரசிகர்களைத் தவிர வேறு யாரும் இல்லை. ஏனென்றால், ஒரு மரபுரீதியான கேரள இசைக்கு மட்டுமே பழக்கப்பட்டு இருந்த மலையாளப் பட இசை உலகம், அந்த இசைப் பாணியை மட்டுமே பிடிவாதமாக விரும்பியது. வேற்றொரு இசையின் 'புதியன புகுதலில்' யாரும் ஆர்வம் இல்¢லாமல் இருந்த சூழல்.

சலீல் சவுத்ரி போன்ற ஒரு சில இசையமைப்பாளர்களே அங்கே தங்கள் தனித்திறமையால் சில மாற்றங்களை ஏற்படுத்தியிருந்தார்கள். இ¬சயில் பல புதுமைகள் செய்திட வேண்டும் என்று விரும்பிய ஆர்.கே.சேகருக்கு, அப்போது அங்கே ரத்தினக் கம்பளம் கிடைக்காததில் ஆச்சர்யம் ஏதும் இல்லை. மாபெரும் கலைஞர்கள் பலரைச் சமூகம் தன் அறியாமையால் கண்டுகொள்ளாமல் கை விட்டிருப்பது சரித்திரம். ஆனால், அதைப் பற்றி சேகர் கவலைப்பட்டதே இல்லை. படத்துக்கு இசையமைக்கும் வாய்ப்பு தனக்கு வருகிறதா இல்லையா என்பதெல்லாம் அவருக்கு ஒரு பொருட்டே அல்ல. இசை வேலைகளில் எப்போதும் ஈடுபட்டுக்கொண்டே இருக்க வேண்டும் என்பது மட்டுமே அவருடைய ஒரே குறிக்கோள். ஓய்வு ஒழிச்சலின்றி உழைத்து, சரியான உணவு உட்கொள்ளும் பழக்கமும் இல்லாமல், ஒரு 'வொர்க்கஹாலிக்'காகப் பணியாற்றியதன் விலையை மிக இளம் வயதிலேயே அவர் கொடுக்க வேண்டி இருந்தது.

இந்தியத் திரை இசையின் முதல் ஒலிப்பதிவான, 1902-ல் வெளியான 'கௌஹார் ஜான்' பாடல் முதற் கொண்டு லேட்டஸ்டாக வெளியான ரஹ்மானின் 'டெல்லி 6' வரை ஏகப்பட்ட இசைத் தொகுப்புகளைத் தனிப்பட்ட ரசனைக்காக ஒரு பொக்கிஷம் போல் பாதுகாத்து வைத்திருக்கும் இசை விமர்சகர், எழுத்தாளர் ஷாஜி.

இவர், ரஹ்மானின் தந்தை ஆர்.கே.சேகர் இசைஅமைத்த பல பாடல்களின் தொகுப்பை சிடிக்களில் பதிவு செய்து, ரஹ்மானிடம் கொடுத்திருக்கிறார். ரஹ்மானிடமே அந்தப் பாடல்கள் இல்லை. தன்னிடம் கைவசம் இல்லாத தன் தந்தையின் அபூர்வமான பாடல்களைக் கேட்கும் ஒரு மகனின் பரவச மனநிலையை நீங்கள் யூகித்துக்கொள்ளலாம்.

''கேரளாவில் மெல்லிசைக் குழுக்கள் அன்று முதல் இன்று வரை மேடைகளில் தவறாமல் பாடி வரும் ஒரு பாடல், 'பழசிராஜா' படத்தில் ஆர்.கே.சேகரின் இசையமைப்பில் உருவான யேசுதாஸ் பாடிய 'சொட்ட முதல் சுடல வரே' என்கிற பாட்டு. கடந்த 40 வருடங்களாக எவர்கிரீன் புகழுடன் இருக்கும் அந்தப் பாடல், யேசுதாஸின் பிரபல ஆரம்ப மலையாளப் பாடல்களில் ஒன்று. ஆர்.கே.சேகர் மொத்தம் 22 மலையாளப் படங்களுக்கு இசையமைத்திருக்கிறார். அதில் நூற் றுக்கும் மேற்பட்ட பாடல்கள் இன்றளவும் கேரள மக்கள் மனதில் பசுமையாகநிலைத்திருக்கின்றன.

தனிப்பட்ட முறையில் மிகச் சிறந்த கம்போஸராக இருந்தாலும், அன்றைய காலகட்டத்தில் இசை கோப்பாளராகவும், இசை நடத்துனராகவும் பணிபுரிய அவரைப் போன்ற மிகத் திறமையானவர்கள் தேவைப்பட்டார்கள். எனவே, இசைப் பணியின் மீது தணியாத பித்துக்கொண்ட சேகர், அந்தப் பொறுப்புகளை எல்லாம் உவகையுடன் ஏற்றுக்கொண்டார்'' என்கிறார் ஷாஜி.

அந்தக் காலகட்டங்களில் சேகர் கொடுக்கும் இசை 'நோட்'டுகளை காம்போ ஆர்கனிலும், கிட்டாரிலும் வாசிப்பவராகப் பணியாற்றியிருக்கிறார் இளையராஜா. பின்னாளில் சேகரின் மகன் ரஹ்மான், இளையராஜாவிடம் கீ போர்டு வாசிப்ப வராகப் பணியாற்றியது ஓர் ஆங்கிலப் பழமொழியை நினைவுபடுத்துகிறது - 'History repeats itself'.

''தமிழக அரசுப் பணியில் மின்சாரத் துறைப் பணியாளராகத் தன் வாழ்வைத் துவக்கிய சேகர், ஒரு கட்டத்தில் இசைத் துறைக்கு மாறினார். ஹார்மோனியக் கருவியில் இயல்பாகவே மிகுந்த திறமையுடன் இருந்த அவர், தட்சிணாமூர்த்தியிடம் கர்னாடக இசை கற்றுத் தேர்ந்தார். கொஞ்சம் கொஞ்சமாக இசையின் பல்வேறு பரிமாணங்களையும் புரிந்துகொண்ட இசை கோப்பாளராகவும் (arranger) இசை நடத்துனராகவும் (conductor) மாறினார்.

மலையாளப் பட இசை உலகில் திறமையான இசையமைப்பாளர்கள் இருந்தனர். அவர்களில் டியூன் போடுவதில் திறமை பெற்றிருந்த பலர், அதை ஒர் அமைப்புரீதியான இசைப்படிவமாக மாற்றக்கூடிய, சரியான இசை 'நோட்'டுகளை எழுதி வாத்தியக்காரர்களுக்குக் கொடுக்கக்கூடிய திறன் இல்லாமல் இருந்தார்கள். அவர்களுக்கெல்லாம் ஒரு வரப்பிரசாதமாக இருந்தார் சேகர்.

'பழசிராஜா' படத்தின் மூலம் சூப்பர் ஹிட் பாடல்களைக் கொடுத்து மலையாளப் பட இசைத் துறையில் புயலெனப் புகுந்த ஆர்.கே.சேகர், தன் அடுத்த பட வாய்ப்புக்காக எட்டு வருடங்கள் காத் திருந்ததையும், நடுவே பொருளாதாரத் தேவைகளுக்காக இப்படிப்பட்ட இசை நடத்துனர் வாய்ப்புகளைத் தட்ட முடியாமலும் இருந்ததைப் பற்றிய நிலையை என்னவென்று சொல்வது?'' என்று பெருமூச்சு விடுகிறார் ஷாஜி.

ஓய்வு ஒழிச்சலில்லாத சேகரின் இசைப் பணி ராப்பகலாக நடந்தது. வீட்டைவிட்டு வெளியே செல்லும் சேகர், வேலை முடிந்து எப்போது வீடு திரும்புவார் என்று அவர் குடும்பத்தினருக்கே தெரியாது. அந்த ஓயாப் பணியும் அலைச்சலும், கடும் உழைப்பும்தான் ரஹ்மானின் தந்தை ஆர்.கே.சேகரை ஒரு கட்டத்தில் படுத்த படுக்கையில் தள்ளியது!

- கனவு தொடரும்...[/tscii:fa422d5aba]

littlemaster1982
24th April 2009, 09:25 AM
ஒரு கனவின் இசை! ஏ.ஆர்.ரஹ்மான்

- கிருஷ்ணா டாலின்ஸி Part 3

ஏ.ஆர்.ரஹ்மானின் தந்தை ஆர்.கே.சேகர் இடைவிடாமல் பணி புரிந்த காலத்தில் உணவைப் பற்றியோ, ஓய்வைப் பற்றியோ கவலைப்பட்டதே இல்லை. டீயும் ஒரு சில பிஸ்கட்டுகளையும் மட்டுமே சாப்பிட்டுவிட்டு, ரிக்கார்டிங் தியேட்டரே கதி எனக் கிடந்தார். சில சமயம், நள்ளிரவு நேரங்களில் அவருக்குக் கடும் வயிற்று வலி ஏற்படும். வலி பொறுக்க முடியாமல், தலையணையை வயிற்றுக்குக் கொடுத்து குறுகிப் படுத்துக் கிடப்பார். உயிரைக் கொல்லும் அந்த வலி கொஞ்சம் கொஞ்சமாக அடங்கியதும், மெள்ளக் கண் அயர்வார். இமை மூடி ஓரிரு மணி நேரமே ஆகியிருக்கும்... அதற்குள் விடிய ஆரம்பித்துவிடும். காலை ஏழு மணிக்கே இசைக் கலைஞர்கள் காத்திருப்பார்களே என்கிற அலாரம் அடித்ததும், தூக்கம் கலைந்து எழுந்து ஒலிப்பதிவுக் கூடத்துக்கு ஓடுவார். வயிற்று வலியைப் பற்றி மருத்துவரிடம் ஆலோசிக்கக்கூட நேரம் இல்லை. அந்த வலியைப் பற்றி அவர் யாரிடமும் சொல்வதும் இல்லை. இதில் மற்றொரு சோகம் என்னவென்றால்... மகத்தான இசையமைப்பாளரான அவர், தனக்கான பட வாய்ப்புகள் இன்றி, பிற இசை அமைப்பாளர்களுக்கே வேலை செய்ததுதான். 'பழசிராஜா' படத்தில் அருமை யான 10 பாடல்களைக் கொடுத்தார் சேகர். அதில் ஏ.எம்.ராஜாவும் எஸ்.ஜானகியும் பாடிய 'சிறகற்று வீணொரு கொச்சுத் தும்பி...', பி.சுசீலா பாடிய பிரபல தாலாட்டுப் பாடலான 'முத்தே வாவாவோ' போன்ற பாடல்கள் இன்றைக்கும் கேட்பதற்கு சுகானுபவம் தரும். 'சாயிபே... சாயிபே... அஸ்லாமு அலைக்கும்' என்கிற பாட்டு அங்கே ஒரு டிரெண்ட்செட் டர். அதற்கடுத்து அவர் இசையமைப்பில் பல வருடங்களுக்குப் பின் வெளிவந்த 'ஆயிஷா' படத்தில் பி.பி.னிவாஸ் பாடிய 'யாத்ரகாரா போவுக... போவுக...' பாட்டு பி.பி.னிவாஸின் மிகச் சிறந்த பாடல்களில் ஒன்று. ஆனாலும், ஒரு மனிதனால் எவ்வளவு நாட்கள்தான் இசை அமைக்கும் வாய்ப்பு கிடைக் காமல் பொருளாதாரரீதியாகச் சமாளிக்க முடியும்? நாட்கள் செல்லச் செல்ல, ஆர்.கே.சேகரின் நோய் தன் கொடூரக் கரங்களால் அவரைச் சுற்றி வளைத்தது. நடமாட முடியாதபடி படுக்கையில் விழுந்தார். சிறுவனாக இருந்த திலீப் அப்போது மருத்துவமனைக்குத் தினமும் சென்று அப்பாவைப் பார்த்த ஞாபகங்கள், அவரது மனதில் நீங்காத சித்திரங்களாகப் பதிந்திருக்கின்றன.

அப்பா மருத்துவமனை கட்டிலில் படுத்திருக்கிறார். சுற்றிலும் நிற்கும் அவருடைய உதவியாளர்கள், அவர் சொல்லும் இசை நோட்டுகளைக் குறிப்பெடுத்துக்கொண்டு இருக்கிறார்கள். சில சினிமா இயக்குநர்கள் வந்து, ''இந்த நிலைமையில் இப்படிச் சொல்லக் கஷ்டமா இருக்கு. ஆனா, நீங்க எழுந்து வந்தால்தான் எங்க பட மியூஸிக் எல்லாம் கம்ப்ளீட் ஆகும்'' என்று சங்கடத்துடன் சொல்கிறார்கள். நோயின் தீவிரத்துக்கு நடுவிலும் டியூன்களைக் கேட்டு அதற்கான அரேஞ்ச்மென்ட் நோட்டுகளை எழுதிக் கொடுக்கிறார் சேகர். பிரபல திரைப்படப் பாடலாசிரியர் குமாரன் தம்பி வந்து சேகரின் கைகளைப் பற்றிக்கொண்டு, ''சீக்கிரமே குணமடைஞ்சு வாங்க. நாம சேர்ந்து மறுபடியும் மியூஸிக் செய்யலாம்'' என்கிறார். இருவரும் இணைந்து பல படங்களில் சிறந்த பாடல்களைக் கொடுத்தவர்கள். ஒரு வறண்ட புன்னகையை அவருக்குப் பதிலாக அளிக்கிறார் சேகர். தன் நோயைப் பற்றிய தீவிரம் அவருக்கு அப்போது தெரிந்தே இருந்தது. சிறுவன் திலீப் இந்தக் காட்சிகளை எல்லாம் ஒரு வித பிரமிப்புடனும் குழப்பத்துடனும் பார்க்கிறான்.

ஒரு தேனீயைப் போல் சுறுசுறுப்பாகச் சுழன்று வேலை பார்த்த அப்பாவுக்குத் திடீரென்று என்ன ஆனது என்று புரியவில்லை. அப்பா ஒரு சிறந்த இசைக் கலைஞர் என்பது மட்டும்தான் தெரியும். வீட்டில் அப்பா சேகரித்து வைத்திருந்த இசைத் தட்டுகளும், இசைக் கருவிகளும் தான் திலீப்பின் விருப்பமான உலகம். விரைவில் அப்பாவுக்கு உடம்பு சரியாகி விடும், முன்பு போல் அவர் உற்சாகமாக இசைப் பணிகளுக்குத் திரும்புவார் என்று திலீப் நம்பினான். ஆனால், அந்த நம்பிக்கை நனவாகவில்லை. அப்பாவின் உடல்நிலை நாளுக்கு நாள் மோச மாகியது.


சேகரின் 31-ம் வயதில்தான் திருப்பதியில் திருமணம் நடந்தது. கஸ்தூரியை மனைவியாக்கிக்கொண்டவருக்கு காஞ்சனா, திலீப், பாலா, ரேகா என்று அடுத்தடுத்துக் குழந்தைகள். அப்போது மலையாளப் பட உலகில் பல புதுமைகளைப் புகுத்தி வந்தார் சேகர். பாலமுரளி கிருஷ்ணா வையும் எஸ்.பி.பாலசுப்ரமணியத்தையும் அங்கே அறிமுகப்படுத்தியவர் அவர்தான். கே.ஜே.யேசுதாஸின் பிரமாண்டமான கோட்டையை ஊடுருவுவது மலையாளத்தில் அப்போது யாராலும் நினைத்துக்கூடப் பார்க்க முடியாத காலகட்டம். 1972-ல் வெளியான 'மிஸ் மேரி' படத்தில் சேகர் இசையமைத்த பி.சுசீலாவின் 'நீயென்றே வெளிச்சம்' பாடல் இன்றைக்கும் கிறிஸ்துவ மேரி மாதா பக்திப் பாடல்களில் ஒன்றாகக் கேரளத்தில் பாடப்படுகிறது.

ரஹ்மானிடம் இப்போது நாம் காணும் புதிய டெக்னாலஜியில் உள்ள ஆர்வம் அப்போதே ஆர்.கே.சேகரிடம் வெளிப்பட்டிருக்கிறது. அவர் அடிக்கடி சிங்கப்பூர் சென்று இசைக் கருவிகள் புதிதாக என்னென்ன வந்திருக்கின்றன, இசைப் பதிவு டெக்னாலஜியில் என் னென்ன மாற்றங்கள் வந்திருக்கின்றன என்றெல்லாம் அவதானித்தபடி இருந்திருக்கிறார். ஒரு சில குரல்களையே மீண்டும் மீண்டும் கேட்டு அலுத்துப்போயிருந்த நமக்குப் பல புதிய புதிய குரல்களை அறிமுகப் படுத்தி இசை கேட்கும் அனுபவத்தையே மாற்றிக் காட்டியவர் ரஹ்மான். அதற்கு முன்னோடியாக இருந்திருக்கிறார் அவருடைய தந்தை ஆர்.கே.சேகர்.

''அன்றைய காலகட்டத்தில் சினிமாவுக்குப் பாடுவது என்பது சாதாரண விஷயம் அல்ல. ரிக்கார்டிங் ஸ்டுடியோக்களெல்லாம் இரும்புக்கோட்டைகள். யாரும் அத்தனை சீக்கிரத்தில் உள்ளே புக முடியாது. ஆர்.கே.சேகர் அந்தக் கோட்டையின் கதவுகளைப் புதிய பாடகர்களுக்காகத் திறந்துவிட்டார். பிரும்மானந்தன், சதானந்தன், சுதா வர்மா, கோபால கிருஷ்ணன், சோமன், பொன்குந்நம் ரவி, ஜெயலக்ஷ்மி, கஸ்தூரி சங்கர், மனோகரன், அம்பிளி, ஜெய போன்று எத்தனையோ பாடகர்களை அறிமுகம் செய்தார் சேகர். அந்த 'லெகஸி', அவர் மகன் ரஹ்மான் வழியே தொடர்கிறது.

ஆர்.கே.சேகர் மலையாளத்தில் 110 பாடல்களுக்கு இசையமைத்திருக்கிறார். யேசுதாஸ், ஜெயச்சந்திரன், பி.சுசீலா, வாணி ஜெயராம் போன்ற பாடகர்கள் அவருடைய இசையில் எண்ணற்ற பிரமாதமான பாடல்களைப் பாடியிருக்கிறார்கள். இன்றைக்கும் சேகரின் இசை கேரளத்தில் வற்றாத ஜீவ ஊற்றாகத் தொடர்ந்து ஒலித்துக்கொண்டே இருக்கிறது.

ஆர்.கே.சேகர் கடைசியாக இசையமைத்த படம் 1976-ல் வெளியான 'சோட்டாணிக்கர அம்ம'. அதில் இடம்பெற்ற 'மனசு மனசின்றே காதில்' என்கிற பாட்டு இன்றைக்கும் கேரளாவின் 'நீங்கள் கேட்டவை'யாக ஒலிக்கும் அற்புதமான பாட்டு. அந்தப் படம் வெளியான அதே நாளில் இந்த உலகைவிட்டு மறைந்தார் ரஹ்மானின் தந்தை சேகர். அப்போது அவருடைய வயது 42.

திலீப்புக்கோ வயது 9.

சேகருக்கு யாரோ சூனியம் வைத்ததால்தான் இறந்தார் என்கிற வதந்தி அப்போது இசையுலகில் எழுந்து அடங்கியது. சரியாகக் கவனிக்கப்படாத அல்சர்தான் அவர் உயிரைப் பறித்தது என்கிறார்கள், அவரை நன்கு அறிந்த சிலர்!

ஏ.ஆர்.ரஹ்மானின் வீட்டில் இன் றைக்கு இந்தியாவின் புகழ்பெற்ற இயக்கு நர்களும் தயாரிப்பாளர்களும் அவரு டைய நேரத்துக்காகக் காத்திருக்கிறார்கள். எத்தனைப் பணம் கேட்டாலும் கொட்டிக் கொடுக்கத் தயாரிப்பாளர்கள் ரெடி! இது இன்றைய நிலைமை. ஆனாலும் சரியான வாய்ப்புகள் கிடைத்து ஒரு நட்சத்திரமாக மின்ன முடியாமல் போன இசைமேதையான தன் அப்பாவைப் பற்றிய பழைய நினை வுகள் ரஹ்மானை அலைக்கழித்தபடியே தான் இருக்கின்றன.

''எனக்கு வாழ்க்கையில் முதன்முதலாக அறிமுகமான இசையே அப்பாவின் இசை தான். அப்பாவின் விரல்களைப் பிடித்துக் கொண்டு நானும் ரிக்கார்டிங் தியேட்டர் களுக்குச் செல்வேன். பெரிய பெரிய இசையமைப்பாளர்களும் இயக்குநர்களும் என் அப்பாவிடம் மரியாதையாக நடந்துகொள்வதைப் பார்ப்பேன். அப்பாவை நினைத்தால் பெருமையாக இருக்கும். பிற்காலத்தில் நானும் ஒரு இசை கோப்பா ளனாகப் பணி புரிந்தபோதுதான் அவருடைய பணியின் உன்னதம் எனக்குப் புரிந்தது.

ஒரே சமயத்தில் அவர் பல படங்களுக்கு வேலை செய்வார். ஒரு படத்தில் அவர் இசையமைப்பாளராக இருப்பார். அதே நேரம், மற்ற படங்களுக்கு கண்டக் டராகவும், அரேஞ்சராகவும் வேலை செய்வார். ஓய்வற்ற கடும் உழைப்பால்தான் அவர் இறந்தார் என்று எண்ணுகிறேன். அவரால் உதவி பெற்ற எத்தனையோ பேர் இன்றைக்கும் என்னிடம் வந்து நன்றி சொல்லும்போது, என்னால் கண்ணீரை அடக்க முடியவில்லை. அவர் எனக்கு ஒரு முன்னுதாரணமாக வாழ்ந்திருக்கிறார்'' என்கிறார் ரஹ்மான் நெகிழ்ச்சியோடு.

தன் ஹீரோவான தந்தை ஆர்.கே.சேகரின் அதிர்ச்சியான மரணமும், அதைத் தொடர்ந்து அவர் வாழ்வில் நிகழ்ந்த எதிர்பாராத சம்பவங்களும்தான் திலீப்பை அல்லா ரக்கா ரஹ்மானாக மாற்றியது!


- கனவு தொடரும்...

jaaze
24th April 2009, 02:48 PM
Nerd :ty:

(but for me, its a strain on eyes to read tamil esp long articles :oops: )

Anyway, I will read it :)

littlemaster1982
1st May 2009, 12:01 PM
ஒரு கனவின் இசை! ஏ.ஆர்.ரஹ்மான்

- கிருஷ்ணா டாலின்ஸி Part 4

அப்பா மூலமாகத்தான் திலீப் என்ற ரஹ்மானுக்கு மிகச் சிறு வயதி லேயே இசையிலும் இசைப்பதிவு நுட் பத்திலும் தணியாத ஆர்வம் ஏற்பட்டது. வீட்டில் எப்போதும் இசையைக் கேட்ட படி வளர்ந்த திலீப்புக்கு, திடீரென்று அப்பாவை நோய் தாக்கியதையும், கிட்டத்தட்ட மூன்று வருடங்கள்

அந்த நோயின் கடுமையான தாக்குதலால் அவர் துடிதுடித்ததையும் நேரில் கண்டபோது, அச்சமாக இருந்தது. சகோதரிகளும் மனம் நொந்தார்கள். அதே போன்ற பிரச்னைகள் மீண்டும் மீண்டும் தங்கள் குடும்பத்தினரைத் தாக்கினால் எப்படிச் சமாளிப்பது என்கிற இனம் புரியாத பயம் அந்த இளம் பிஞ்சுகளை அப்போது ஆட் கொண்டது.

அந்த மறக்க முடியாத நாட்களைப் பற்றி நினைவு கூர்கிறார் ரஹ்மானின் தாய் கரீமா. ''புள்ளைங்கல்லாம் ஸீஸ்கூலுக்குப் போயிக்கிட்டிருக்குதுங்க. திடீர்னு அவங்க அப்பா படுத்த படுக்கை ஆயிட்டாரு. எனக்கு உலகமே இருண்டிருச்சு. அவரைக் கவனிப்பேனா... பிள்ளைங்களைக் கவனிப்பேனா? ஆஸ்பத்திரிக்கும் வீட்டுக்கும் அலைவேன். காரணமே புரியாம ரொம்ப நாள் ஆஸ்பத்திரியில இருந்தவரு ஒருநாள் இறந்தே போயிட்டாரு. நாங்க இடிஞ்சுபோயிட்டோம். எந்த நேரமும் ஹார்மோனியமும் கையுமா இருந்த ரஹ்மானுக்கு அப்பா இறந்ததுல ரொம்பவே பாதிப்பு. ஸ்கூல் படிப்பைக்கூட அதால சரியா படிக்க முடியலை. சின்னப் பிள்ளையை ஸ்டுடியோ வேலைகளுக்கு அனுப்பியே ஆகணும்னு கட்டாயம். ஆனா, அதுக்கெல்லாம் ஒரு விடிவுக் காலம் வரும்னு நான் மனசார நம்பினேன்.''


நோயின் தீவிரம் கடுமையான காலகட்டத்தில் வேலூர் சி.எம்.சி. மருத்துவமனையில் ஆர்.கே.சேகர் அனுமதிக்கப் பட்ட போது, திலீப்பும் சகோதரிகளும் அடிக்கடி போய்ப் பார்ப்பார்கள். உடல்நலம் வாட்டிய போதும் குழந்தைகளிடம் அதை மறைத்துக்கொண்டு அப்பா புன்னகைப்பார். ''நல்லாப் படிக்கணும். ஸ்கூலுக்கு லீவு போடக் கூடாது. அம்மா சொல்றபடி நடந்துக்கணும்'' என்றெல்லாம் அறிவுரைகள் சொல்வார். மகன் திலீப்பிடம் பேசும்போது மட்டும் அவருக்குத் தனியாக ஒரு பாசம் பொங்கி வரும். அவனை அள்ளி அணைத்து உச்சிமுகர்வார். அதற்கு ஒரு தனிப்பட்ட காரணமும் இருந்தது.

ரஹ்மானின் மூத்த சகோதரியான இசையமைப்பாளர் ரைஹானா சொல்கிறார்... ''கல்யாணமான புதுசுல எங்கப்பாகிட்டே யாரோ ஒருத்தர் 'உங்களுக்கு ஒரு மகன் பிறப்பான். அவன் பெரிய புகழை அடைவான்'னு சொல்லியிருக்காரு. அப்பாவும் அதை எதிர்பார்த்து ரொம்ப ஆவலா காத்திருந்தாரு. ஆனா, முதல்ல நான் பிறந்தேன். என்கிட்டே அவர் ரொம்பப் பாசமா இருந்தாலும், அவர் மனசுக்குள்ள அந்தக் குறை இருந்துகிட்டே இருந்தது. அடுத்ததா திலீப் பிறந்ததும், அவரால சந்தோஷத்தைத் தாங்க முடியல...''

வாழ்வில் அற்புதங்கள் நிகழும், அது கடவுள் மூலமாக நடக்கும் என்கிற நம்பிக்கை ரஹ்மானின் குடும்பத்தில் ஒவ்வொருவரிடமும் இருக்கிறது. ஒவ்வொரு கட்டத்திலும் யாரோ ஒருவர் வந்து, சில எதிர்காலச் செய்திகளைச் சொல்லி வாழ்த்திவிட்டுப் போனதாகச் சொல்கிறார்கள். சேகர் இறந்துபோன அறை இருந்த இடத்தில் இசைப்பதிவுக் கூடத்தைக் கட்டச் சொல்லி ஆசீர்வதித்துவிட்டுப் போனாராம் ஓர் இஸ்லாமிய குரு. அங்கேதான் 'பஞ்சதன்' ஸ்டுடியோ கட்டப்பட்டது. 'ரோஜா' அங்கேதான் முதன்முதலில் மலர்ந்தது.

''ரஹ்மான் ஒரு 'ப்ளூ பேபி'யாகத்தான் பிறந்தார். குழந்தை உயிர் பிழைக்குமாங்கிறதே பெரிய கேள்வியா இருந்தது. அப்பா அப்ப ரொம்ப டென்ஷனா இருந்தார். எப்படியோ, குழந்தை உயிர் பிழைச்சது. அப்பா முகத்துல பெரிய நிம்மதி. குழந்தை வளர வளர... அதுகிட்டே பெரிய இசைத் திறமை இருந்ததைப் பார்த்தவர் ரொம்ப உற்சாகமானார். தம்பிகிட்டே எப்பவும் ஒரு ஸ்பெஷல் இன்ட்ரெஸ்ட் காட்டுவார். தன்கூடவே ரெகார்டிங் ஸ்டுடியோக்கள்லாம் கூட்டிட்டுப் போயி இசை உலகத்தை அறிமுகப்படுத்திவெச்சார். ஆனா, எந்தப் பாரபட்சமும் காட்டாமல், என்னையும் ரஹ்மானையும் ஒரே நேரத்தில் பியோனோ, கிடார் வகுப்புகள்ல பைலட் எட்வின், தன்ராஜ் மாஸ்டரிடம் சேர்த்துவிட்டார். நாங்க வாசிக்கிறதையும் பாடுறதையும் ரொம்ப ரசிச்சுக் கேட்பார். அப்பல்லாம் பாட்டும் கூத்துமா எங்க குடும்பமே ரொம்ப ஜாலியா இருப்போம். எங்க எல்லாருக்குமே அப்பான்னா ரொம்பப் பிரியம். அவர் தந்ததுதானே எல்லாமே! எவ்வளவு அற்புதமான வாழ்க்கை. அப்பா திடீர்னு இறந்துபோனதும் ஸ்தம்பிச்சுப் போயிட்டோம்'' என்று அந்த நினைவலைகளில் ஆழ்கிறார் ரைஹானா.

அதற்குப் பிறகு என்ன ஆனது?

ஆர்.கே.சேகரின் சமகால மலையாள இசையமைப்பாளரான அர்ஜுனன் மாஸ்டர் இப்போது கேரளாவின் கோட்டயத்தில் தன் 73-ம் வயதிலும் சுறுசுறுப்பாக திரைப்பட இசை வேலைகளில் ஈடுபட்டுக்கொண்டு இருக்கிறார். குரல் லேசாகத் தடுமாறினாலும் பழைய நினைவுகளை அவர் தன் இதயத்திலேயே வைத்திருக் கிறார்.

''உண்மையிலேயே ரஹ்மானோட அம்மாவை ஒரு தீர்க்க தரிசின்னுதான் சொல்லணும். சேகர் இறந்தபோது திலீப் ரொம்பச் சின்னப் பையன். ஆனா, அப்பவே என்னைப் போன்ற மியூஸிக் டைரக்டர்களை எல்லாம் சந்திச்சு, என் மகனுக்கு இசை வாய்ப்பு கொடுங்க... அவன்கிட்டே பெரிய திறமை இருக்குன்னு சொல்லுவாங்க. 'எங்க சேகர் பையனாச்சேம்மா... நீங்க இவ்வளவு தூரம் சொல்லணுமா? உடனே திலீப்பை வரச் சொல்லுங்கம்மா'ன்னு நாங்களும் சொல்வோம். அற்புதமா கீ போர்டு வாசிப்பான். மியூஸிக் இன்ஸ்ட்ரூமென்ட்ஸ்ல வர்ற ரிப்பேரெல்லாம் திலீப் ரொம்ப ஈஸியாச் சரிபண்ணிடுவான். அவனை கீ போர்டு வாசிக்கவைக்கலாமேனு தோணிச்சு. ஆனா, ரொம்பச் சின்னப் பையனா இருக்கானேன்னு யோசிச்சோம். வாய்ப்பு கொடுத்தபோது பொளந்து கட்டினான். அப்பதான் அவன் ஒரு மியூஸிக்கல் பிராடிஜின்னு எங்களுக்குப் புரிஞ்சது. எங்களுக்கு முன்னாடியே அந்த உண்மை அவன் அம்மாவுக்குப் புரிஞ்சிருந்ததுதான் அற்புதமான விஷயம். அப்ப நாங்க திலீப்புக்குக் கொடுத்தது ரொம்ப சொற்பச் சம்பளம். எதுவுமே சொல்லாம புன்னகையோடு அந்தத் தொகையை வாங்கிக்கிட்டுப் போகும் அந்தப் பையன். அந்த அமைதியும் மெச்சூரிட்டியும்தான் ரஹ்மானை இந்த அளவுக்கு உயர்த்தியிருக்கு!''

ஆருயிர்த் தந்தை திடீரென்று இறந்துபோனது ரஹ்மானின் இசை வாழ்க்கையில் ஒரு முக்கியமான திருப்புமுனைக் கட்டம். பள்ளிப் படிப்பா, இசைத் தொழிலா என்கிற சவாலை அவர் அப்போது சந்திக்க நேர்ந்தது. படிப்பில் சுமாராகவே ஸ்கோர் பண்ணிக்கொண்டு இருந்த திலீப், இசையைத் தேர்ந்தெடுத்தான். படிப்பை விடுகிறோமே, எதிர்காலம் என்ன ஆகும் என்கிற பதற்றம் கொஞ்சமும் இல்லை.

பத்மாசேஷாத்ரி, எம்.சி.சி போன்ற சிறந்த பள்ளிகளில் படித்தாலும், மனம் படிப்புக்கும் இசைக்கும் இடையே அலை பாய்ந்தது. படிப்பு அத்தனை சூட்டிகையாக வரவில்லை. ஆனால், மனம் எங்கும் இசை ஆழ் நதிப் பிரவாகமாக ஓடிக்கொண்டு இருந்தது. அணை திறந்துவிடப்படு வதற்காக அந்த நதி காத்திருந்தது. அப்பா இல்லாமல், வீட்டின் பொருளாதார நிலைமையும் மோசமாகி இருந்த சமயம் அது. ஏதாவது செய்தே ஆக வேண்டிய கட்டாயம்.

'இடிந்து கருகிய வீட்டில் ஒற்றைச் செடி பூத்திருந்தது' என்று ஒரு ஜப்பானிய ஹைக்கூ உண்டு. அது மாதிரிதான் பள்ளிப் படிப்பை நிறுத்தினான் திலீப். பாடப் புத்தகங்களைக் கீழே போட்டுவிட்டு, இசைக் கருவிகளைக் கையில் எடுத்தான். ஒரு புதிய சகாப்தம் தொடங் கியது.

ஆர்.கே.சேகரின் மேல் பெரிய மரியாதை வைத்திருந்த இசைக் கலைஞர்கள் சிறுவன் திலீப்பை அன்புடன் வரவேற்றார்கள். அள்ளி அணைத்துக்கொண்டார்கள். இசைப்பதிவுக் கூடங்களில் ஒரு பிரகாசமான சிறுவன், இசைக் கருவிகளைத் தூக்கிக்கொண்டு வரும் காட்சி எல்லோருக்கும் மிகப் புதுமையாகவும் ஆச்சர்ய மாகவும் இருந்தது. ஆர்.கே.சேகரையே மீண்டும் இன்னொரு வடிவத்தில் பார்ப்பது போல் அவர்களுக்குத் தோன்றியது.

சிறுவன் திலீப்பின் அமைதியான குணமும், எப்போதும் மலரவிட்டபடி இருக்கும் புன்னகை யும், ஒரு வார்த்தைகூட அதிர்ந்து பேசாத தன்மையும் எல்லோருக்கும் பிடித்தது. விரைவிலேயே எல்லா இசையமைப்பாளர்களின் செல்லப் பிள்ளையாக மாறினான் திலீப்.

''இப்ப அந்தக் குழந்தை ஆஸ்கர் அவார்டு எல்லாம் ஜெயிக்கும்போது பார்க்கப் பரவசமா இருக்கு. சேகர் இதையெல்லாம் இன்னொரு உலகத்துல இருந்து பார்த்துக்கிட்டே இருக்கிற மாதிரி தோணுது. அப்பப்ப ரஹ்மான் என்கிட்டே போன்ல மறக்காம பேசும். ரொம்ப ஆனந்தமா இருக்கும். ஆண்டவனோட நல்லாசிகள் அந்த நல்ல மனம் படைச்ச பையனுக்கு பரிபூர்ணமா இருக்குன்னு தோணுது'' என்கிறார் அர்ஜுனன் மாஸ்டர் நெகிழ்வாக.

11 வயதுச் சிறுவனாக ஸ்டுடியோக்களில் காலடி எடுத்துவைத்த திலீப், அடுத்த சில வருடங்களிலேயே மிக வேகமாக வெற்றிப் படிகளில் ஏற ஆரம்பித்தது ரகளையான இளமைக் கதை!



- கனவு தொடரும்...

lancelot
2nd May 2009, 12:05 AM
would it be like very rude of me to ask you guys to translate this for me? :D

hehe
:D

Nerd
8th May 2009, 07:58 AM
ஒரு கனவின் இசை! ஏ.ஆர்.ரஹ்மான்
- கிருஷ்ணா டாலின்ஸி Part 5

ரெக்கார்டிங் ஸ்டுடியோக்களுக்கு இசைக் கருவிகளை வாடகைக்கு எடுத்துச் சென்ற திலீப்பை, அந்தக் கருவிகளில் ஒன்றான கீ-போர்டு மிகவும் வசீகரித்தது. அப்பா சிங்கப்பூரில் இருந்து வாங்கி வந்திருந்தது. அந்த டிஜிட்டல் ஒலி கேட்பதற்கே மிகவும் புதுமையாக இருந்தது. அந்தத் துல்லியமான சத்தத்தை இங்கே இசைப் பதிவில் ஏன் கொண்டுவர முடிவதில்லை என்று நண்பர்களிடம் ஆதங்கத்துடன் விவாதிப்பார் திலீப். மேல்நாட்டு இசையில் புதிய 'சவுண்ட்' புரட்சிகள் வெடித்துக்கொண்டு இருந்த காலம் அது.

அப்போதெல்லாம் சென்னையைவிட பெங்களூரில்தான் இசைக் கடைகள் அதிகம். ரஹ்மானும் நண்பர்களும் நேரம் கிடைக்கும்போதெல்லாம் பெங்களூருக்குச் சென்று, தங்களுக்குப் பிடித்த மேற்கத்தியப் பாடல்களை கேசட்டுகளில் பதிவுசெய்து வருவார்கள்.

12 வயது திலீப்புக்கு அப்போதுதான் டிஜிட்டல் இசையிலும் ஆடியோகிராஃபியிலும் ஆர்வம் வந்தது.சொல்லப் போனால்... இசையமைப்பாளர் ஆக வேண்டும் என்று அவர் எண்ணியதே இல்லை. ஒரு சிறந்த சவுண்ட் இன்ஜினீயராக உருவாகவே விரும்பினார்.

''அந்த நாட்களில் இசை என்பது எனக்கு வெறும் ஒரு தொழிலாக, குடும்பத்துக்கான உணவைச் சம்பாதிக்கும் வழியாக மட்டுமே தெரிந்தது. I was not crazy about the music. எனக்கு டெக்னாலஜியில்தான் ஆர்வம் இருந்தது. என்னால் கீ-போர்டிலிருந்து கண்களை விலக்கவே முடிய வில்லை. அது ஒரு மாய பொம்மை போல் காட்சியளித்தது'' என்கிறார் ரஹ்மான்.

கீ-போர்டை வெறுமனே வாசிப்பதோடு நிறுத்தாமல், அதைப் பிரித்துப் பார்த்து அந்தச் சத்தம் எப்படி, எதன் மூலம் வருகிறது என்பதையும் சொந்த ஆராய்ச்சியின் மூலமே கண்டுகொண்டார் திலீப். கிடார் இசைக் கலைஞரான ஜான் ஆண்டனி ஒருமுறை அவரிடம், ''இந்தியாவோட பிரதமர் யாருன்னு உனக்குத் தெரியுமா? கொஞ்சம் வெளியில போயி அந்த விஷ யங்களையும் தெரிஞ்சுக்கோ'' என்று அன்புடன் சொல்லியிருக்கிறார். அதற்கு திலீப்பின் பதில்... ஒரு மெல்லிய புன்னகை மட்டுமே!

அந்நாட்களில் அவருக்கு 'கீ-போர்டு' என்பது இசையையும் நவீன டெக்னாலஜியையும் இணைக்கும் உருவமாக இருந்தது. அந்தச் சிறிய மாய பொம்மைதான் அவரைப் பிறகு மலைக்கவைக்கும் உயரங்களுக்குக் கொண்டு சென்றது.

கீ-போர்டு இசையில் எழும் எந்தச் சந்தேகங்களையும் தீர்த்து வைக்கக்கூடியவராக அப்போது இருந்திருக்கிறார் ராகவன் என்கிற இசைக் கலைஞர். ஹார்டுவேர் இன்ஜினீயர் என்றும் அவரைச் சொல்லலாம். கீ-போர்டில் தன்னால் தீர்க்க முடியாத ஏதாவது பிரச்னை என்றால்ராகவனிடம்தான் நள்ளிரவுகளில் ஓடுவார். ஏனென்றால், ராகவன் வேலை பார்ப்பது இரவு நேரங்களில்தான். (இரவுகளில் வேலை பார்க்கும் ஸ்டைல் அவரிடமிருந்துகூட திலீப்புக்கு வந்திருக்கலாம்) 'ரிதம் பாக்ஸ்' என்று சொல்லக்கூடிய ஒரு புதிய இசைக் கருவியின் செயல்பாடுகளை அவரிடம் பார்த்துப் பிரமித்தார் திலீப். அதிலிருந்து கிளம்பிய புத்தம் புது இசை ஒலிகள் அவரை மிரட்டின.

கீ-போர்டுடன் கிடாரிலும் தேர்ச்சி பெற்றிருந்தார் திலீப். ''ஸ்கூல் விட்டதும் வீட்டுக்கு ஓடி வர்றப்ப, தெரு முனையிலேயே எங்க வீட்ல இருந்து கீ-போர்டு, எலெக்ட்ரிக் கிடார் இசைச் சத்தம் பெரிசாக் கேட்கும். திலீப் சூப்பரா வாசிச்சுட்டு இருக்கும். நான் யூனிஃபார்ம் கூடக் கழட்டாம நின்னு கேப்பேன். என் தலையில் ஹெட் போன் மாட்டி, 'இப்பக் கேளு... இன்னும் பிரமாதமா இருக்கும்'னு சொல்லும். 'பாப்கார்ன்'னு ஒரு யீuஸீளீஹ் மியூஸிக், லக்ஷ்மிகாந்த் பியாரிலால் மியூஸிக்ல 'ஹீரோ'ன்னு இந்திப் படப் பாட்டெல்லாம் அப்ப சூப்பர் ஹிட். அதையெல்லாம் கீ-போர்டுல பிரமாதமா வாசிக்கும்'' என்கிறார் ரைஹானா.

அப்பா இறந்த சோகத்திலிருந்து மெதுவாக அந்தக் குடும்பம் மறுபடி மீண்டு எழுந்தது. மெள்ள மெள்ள கீ-போர்டில் நிபுணத் துவம் வந்ததும், திலீப்பை 'அரிஸ்டோகிராட்' என்கிற இசைக் குழுவில் வாசிக்கக் கூப்பிட்டார்கள். அந்தக் குழுவே சிறுவர்களால் அமைக்கப்பட்ட ஒன்றுதான். திலீப்பும் ஒரு சிறுவனாக அந்த இசைக் குழு நிகழ்ச்சிகளில் வாசிக்க ஆரம்பித்தார். கூடவே, ரெஹானாவும். திருமணம், பள்ளி ஆண்டு விழா போன்ற நிகழ்ச்சிகளில் ரஹ்மானின் கீ-போர்டு வாசிப்பு நடந்தது. ''அதுல பெருசா காசு எதுவும் கிடைக்காது. 'கூட்டிக் கழிச்சுப் பாருங்க, ஏதும் மிஞ்சாது'ன்னு அம்மா கிண்டல் அடிப்பாங்க. நாங்க சிரிச்சுக்கிட்டே சமாளிப்போம்'' என்கிறார் ரைஹானா.

அடுத்து, திலீப்புக்கு டெலிவிஷனில் கீ-போர்டு வாசிக்க வாய்ப்பு கிடைத்தது. 1980-களில் பிரபலமாக இருந்த தூர்தர்ஷனின் 'வொண்டர்பலூன்' நிகழ்ச்சியில், அடர்ந்து சிலுப்பிய தலைமுடியுடன் சிறுவன் திலீப் கீ-போர்டு வாசித்ததையும் அது ரசிகர்கள் மத்தியில் பிரபலமாக இருந்ததையும் உங்களில் பலர் நினைவுகூரலாம். அதற்குப் பிறகு 'ரூட்ஸ்' என்கிற இசைக் குழுவில் இணைந்தார் திலீப். இசைப் பயணத்தின் அடுத்த கட்டம் அது.

அந்த நாட்களில் ரஹ்மானின் இளம் வயதுத் தோழராக இருந்தவர்தான், இப்போது உலகெங்கும் இசைப் பயணம் செய்து தூள் கிளப்பும் டிரம்மர் சிவமணி. தென் ஆப்பிரிக்காவில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் அதிகாரபூர்வ டிரம்மராக ஸ்டேடியங்களில் முழங்கி வரும் சிவமணிக்கு அந்தப் பழைய நாட்கள் இனிய வசந்தமாக நினைவில் இருக்கின்றன.

''சின்ன வயசுலயே நான், திலீப், ஜான் ஆன்டனி, ஜோஜோ, ராஜான்னு நண்பர்கள் சேர்ந்து ரூட்ஸ்னு இசைக் குழு ஆரம்பிச்சோம். வெஸ்டர்ன் கிளாஸிக்கல் முதல் நம்ம ஊர் மியூஸிக் வரை ரொம்ப உற்சாகமா, புதுசு புதுசா எக்ஸ்பெரிமென்ட் பண்ணுவோம். மெலடியை 'லயா'ன்னும் 'பீட்'டை 'தாளா'ன்னும் சொல்வாங்க. அந்த ரெண்டிலும் அப்பவே மாஸ்டரா இருந்தார் ரஹ்மான். ஸாரி, அப்ப திலீப்! இன்னிக்கு நான் உலகம் முழுக்கத் தெரியக் கூடிய இசைக் கலைஞனா இருக்கேன்னா அதுக்கு அவர் கொடுத்த 'ஓப்பனிங்'தான் காரணம். எம்.எஸ்.வி, இளையராஜான்னு எத்தனையோ பிரபல இசையமைப்பாளர்களுக்கு நான் பல படங்கள் வாசிச்சிருக்கேன். ஆனா, பட டைட்டில்களில், கேசட் கவர்களில் என் பெயர் வந்ததே இல்லை. அந்தப் பெருமையை முதல்ல செஞ்சது ரஹ்மான்தான். சக கலைஞர்களைக் கௌரவிக்கிறதுல அவர் ரொம்ப பெருந்தன்மையானவர்!''

சிவமணி போன்ற கலைஞர்களுடன் ரூட்ஸில் பணி புரிந்தது ரஹ்மானுக்கும் புதிய அனுபவங்களைத் தந்தது. கொஞ்சம் கொஞ்சமாக கம்போஸிங்கிலும் அவருடைய ஆர்வம் பெருக ஆரம்பித்தது. ரூட்ஸில் இருந்த நண்பர்கள் மூலம் அவருக்கு ராக், பாப், ஜாஸ், ராப் போன்ற இசை வடிவங்கள் அறிமுகமாயின. ரூட்ஸின் புகழ் இசைக் கலைஞர்களின் மத்தியில் மெதுவாகப் பரவ ஆரம்பித்தது. உலகப் புகழ்பெற்ற வயலின் மேதை எல்.ஷங்கரிடம் இருந்து ஒரு நாள் திலீப்புக்கு அழைப்பு வந்தது. ''என் இசைக் குழு 'எபிடமிக்ஸ்'குக்காக பின்னணி (back up) வாசிக்க முடியுமா?'' எத்தனை பெரிய இசை மேதை அழைக்கிறார்! திலீப் உளம் மகிழ்ந்து, உடனே ஒப்புக்கொண்டார்.

சென்னையிலும் பெங்களூரிலும் எல்.ஷங்கருக்காக மேடைக் கச்சேரிகளில் கீ-போர்டு வாசித்தார் திலீப். அவருக்கு அந்த அனுபவம் மிகப் புதிதாக இருந்தது. கச்சேரிகள் வெற்றிகரமாக முடிவடைந்த நிலையில் சிறுவன் திலீப்பின் காதுக்குள் முணுமுணுத்தார் ஷங்கர். ''உன்னை எனக்குச் சின்ன வயசுலேயே தெரியும். மயிலாப்பூர்ல என் வீட்டுக்குப் பக்கத்துலதான் உன் வீடும் இருந்தது.'' திலீப் பினால் அப்போது அதை நம்பவே முடியவில்லை. அது ஒரு கனவு போல் தோன்றியது.

வித்தியாசமான முயற்சிகளைச் செய்தாலும், ரூட்ஸ் இசைக் குழுவினால் பொருளாதாரரீதியாகத் தாக்குப்பிடிக்க முடியவில்லை. அதனால் குழு மூடப்பட்டது. இந்த நிலையில் குடும்பத்துக்குத் தேவையான பணத்தை திலீப் சம்பாதித்துதானே ஆக வேண்டும்? ஏற்கெனவே திலீப்பின் கீ-போர்டு திறமை திரைப்பட இசையுலகில் பரவி இருந்ததால், சினிமா இசையில் வாசிக்க அவசர அழைப்புகள் வந்தன. உடனே அவற்றை ஒப்புக்கொண்டார் திலீப். அந்தப் பணி அவரை முழுவதுமாக அள்ளிக்கொண்டது. அடுத்த ஒன்பது வருடங்களுக்கு திலீப் சினிமா மற்றும் இசைக் கச்சேரிகளில் வாசிப்பதில் மூழ்கிப் போனார்.

''இப்ப மாதிரி அட்வான்ஸ்டு டெக்னாலஜி கிடையாது. ஆர்கெஸ்ட்ராவுல எல்லாரும் வாசிப் போம். யாராவது ஒருத்தர் தப்பு பண்ணிட்டாக்கூட, மறுபடி எல்லாரும் முதல்லேர்ந்து வாசிக்கணும். எம்.எஸ்.வி., கே.வி.மகாதேவன் மாதிரியான இசை ஜாம்பவான்களின் பெரிய ரசிகன் நான். அவங்க சொல்லுவாங்க... 'பழைய ஒயின்தான் எப்பவும் சிறந்தது'ன்னு. அதனால புது ஒயின் கூட பழைய ஒயினா மாறுற வரை நாங்க காத்திருப்போம்' என்று சொல்லிச் சிரிக்கிறார் ரஹ்மான்.

மேல்நாடுகளில்இருப்பது போல் தனியாக ஒரு ரெக்கார்டிங் ஸ்டுடியோவை ஹைடெக்காக அமைக்க வேண்டும் என்கிற எண்ணம் ஆழமாக மனதில் வேரூன்றியது. அதற்குத் தேவை நிறையப் பணம். அதைச் சம்பாதிக்க வேண்டுமானால் தேவை ஓயாத உழைப்பு!

அப்போது உலக அளவில் பல இசைக் கலைஞர்களைப் போதை உலகம் ஆட்கொண்டு இருந்தது. பீட்டில்ஸில் ஆரம்பித்து ஜான் கேஷ், ஃபிரெட்டி மெர்குரி என்று எத்தனையோ அற்புதமான இசைக்கலைஞர்கள் போதை மருந்தின் பிடியில் சிக்கிச் சின்னாபின்னமாகி இருந்தார்கள்.

''இசை என்பதே ஒருவித போதை மனநிலையில்தான் உருவாகுமோ? அந்த போதை மனநிலை இல்லாமல் நல்ல இசையை உருவாக்கவே முடியாதோ என்றுகூட எனக்கு அப்போதெல்லாம் தோன்றும். ஆனால், என் கண் எதிரே ஒரு இசையமைப்பாளர் இருந்தார். அற்புதமான இசையை அளித்த அவரிடம் எந்தப் போதைப் பழக்கமும் இல்லை. அதற்கு மாறாக, ஆழமான ஆன்மிகப் பிடிப்பு இருந்தது. அவரைப் போலத்தான் நாமும் இருக்க வேண்டும் என்று அப்போது மனதுக்குள் தீர்மான மாக முடிவு செய்தேன்'' என்கிறார் ரஹ்மான்.

யார் அந்த இசையமைப்பாளர்? வேறு யார்?

மாஸ்ட்ரோ இளையராஜாதான்!

- கனவு தொடரும்...

Roshan
9th May 2009, 09:37 PM
Thanks a ton Nerd and Senthil :notworthy:

littlemaster1982
9th May 2009, 09:58 PM
would it be like very rude of me to ask you guys to translate this for me? :D

hehe
:D

Lance,

I guess you can get the translations in ARR fans Yahoo group.

Sanjeevi
10th May 2009, 12:04 AM
This issue ending is superb :)

littlemaster1982
15th May 2009, 11:53 AM
ஒரு கனவின் இசை! ஏ.ஆர்.ரஹ்மான்
- கிருஷ்ணா டாலின்ஸி Part 6

மிக இளம் வயதில் இளையராஜாவுக்கு கீ-போர்டு வாசிக்கச் சென்ற திலீப், இளையராஜா எந்தவிதத் தீய பழக்கங்களும் இல்லாமல் அற்புதமான இசைப் படைப்புகளை உருவாக்குவது கண்டு ஆச்சர்யம் அடைந்தார்.

''ஒரு துறவி மாதிரியான தோற்றத்தில் அவர் அமைதியாக அமர்ந்து கம்போஸிங் செய்த காட்சி அப்போ எனக்கு ரொம்ப வித்தியாசமாக இருந்தது'' என்கிறார் ரஹ்மான்.


இளம் வயது, கையில் பணம், கட்டற்ற சுதந்திரம் என இத்தனையும் இருந்தும் திலீப் தவறான பாதையில் போகாமல் இருந்ததற்குக் காரணம், இளையராஜாவின் மீதான அந்த இன்ஸ்பிரேஷனும் மிக முக்கியமாக, தாயன்பும்தான்.

''ரஹ்மான் சின்ன வயசிலேயே ரொம்ப பிஸியாயிடுச்சு. அப்பா மாதிரியே எப்ப வீட்டுக்குத் திரும்பும்னு சொல்ல முடியாது. ஆனா, கட்டுக்கோப்பா இருக்கும். பதினேழு, பதினெட்டு வயசுலேயே ஃபாரினுக்கெல்லாம் போக ஆரம்பிச்சிடுச்சு. ஆனாலும் எந்தக் கெட்ட பழக்கங்களும் ஒட்டிக்கலை. எப்பவும் அமைதி, அடக்கம்... அதுக்குக் கோபம் வந்தே எப்பவாவதுதான் பார்த்திருக்கோம். அடிப்படையிலேயே ரொம்ப அமைதியான என் பிள்ளையை இஸ்லாம் ரொம்பவே பதப்படுத்திடுச்சு. என்னதான் அது ரொம்ப சின்ன வயசிலேயே ரிக்கார்டிங்குகளுக்கு எல்லாம் போய் நல்லா சம்பாதிச்சாலும், ''என் புள்ளஇன்னும் எங்கேயோ போக வேண்டியவன். அதுக்கான வழியை ஆண்டவன் சரியான நேரத்துல காட்டணும்னு பிரார்த்தனை பண்ணிக்கிட்டே இருப்பேன்'' என்கிறார் ரஹ்மானின் அம்மா.

காலம் வெகு விரைவிலேயே கனிந்தது.

என்னதான் பிரபல இசையமைப்பாளர்களுக்கு கீ-போர்டு வாசித்து வந்தாலும், திலீப்பின் மனதில் ஏதோ ஒரு குறை அல்லது ஏக்கம். இதையும் தாண்டி ஏதாவது செய்ய வேண்டும் என்கிற துடிப்பு. என்ன செய்ய வேண்டும் என்பதுதான் புலப்படவில்லை.

நடுநடுவே பிரபல இசைக் கலைஞர்களான விக்கு விநாயக்ராம், டி.வி. கோபாலகிருஷ்ணன், கதிரி கோபால்நாத் போன்றவர்களின் 'சக்தி' போன்ற இசைக் குழுக்களில் வாசித்து வெளிநாட்டுப் பயணங்களெல்லாம் போய் வந்தார் திலீப். வருமானமும் கணிசமாக வர ஆரம்பித்து, குடும்பப் பொருளாதாரச் சூழல் மேம்பட்டு வந்தது.

ஜாகீர் ஸூசேன் மற்றும் குன்னக்குடி வைத்தியநாதனுடனும் அப்போது கச்சேரிகளுக்காக அடிக்கடி வெளிநாடுகளுக்குப் பறப்பார் திலீப். ‘கலர்ஸ்’ என்கிற இசை ஆல்பத்துக்காக ஜாகீர் ஸூசேன், குன்னக்குடி வைத்தியநாதன் மற்றும் சிவமணியுடன் இணைந்து கீ-போர்டு வாசித்தார் திலீப்.

அந்த நாட்களை நினைவுகூர்கிறார் பிரபல தபேலா மேதை ஜாகீர் ஸூசேன். ''19 வயசுப் பையனா நான் ரஹ்மானை அப்போ பாத்திருக்கேன். ஜாஸ், ராக், கர்னாட்டிக்னு அப்பவே அந்தப் பையன் பிரமாதப்படுத்துவான். ரிக்கார்டிங் முடிஞ்ச பிறகும் ஸ்டுடியோவை விட்டுப் போக மாட்டான். மத்த இசைக் கலைஞர்கள் வாசிச்சதைத் திரும்பத் திரும்பக் கேட்டுக்கிட்டே இருப்பான். கண்ணு, காது, மனசு எல்லாமே அந்த இசை மேலதான் இருக்கும். அப்பவே அவனுக்கு மக்களோட ரசனை என்னன்னு ஒரு புரிதல் இருந்தது. அதுதான் இப்ப பெரிய வெற்றியைக் கொடுத்திருக்கு. திலீப்பா இருந்து ரஹ்மானா வளர்ந்திருக்கிறதைப் பார்க்கும்போதெல்லாம் எனக்கு இசையமைப்பாளர் ஆர்.டி.பர்மன் ஞாபகம்தான் வரும். ரெண்டு பேருமே பெரிய இசை ஞானத்தோடு, பாமர மக்களின் ரசனையைப் புரிஞ்சுக்கிட்ட மேதைகள்.''

ஜாகீர் ஸூசேன் மாதிரியான பெரிய இசைக் கலைஞர்களுடன் பணிபுரிந்தாலும் திலீப்பின் மனதில் ஏதோ ஓர் ஏக்கம். அடுத்து புதிதாக என்ன செய்யலாம் என்கிற கேள்வி. இசைக் குழுக்களுக்கு வாசித்தாகிவிட்டது. பிரபல இசை அமைப்பாளர்களுக்கு இசை அரேஞ்ச்மென்ட்டுகள் செய்தாகிவிட்டது. வெளிநாட்டுப் பயணங்களும் அடிக்கடி நடக்கின்றன. உலகரீதியான பெரிய கலைஞர்களுடன் பணி செய்கிறோம். பணமும் கையில் நன்றாகப் புழங்குகிறது.

இவை மட்டும் போதுமா? போதாது... போதாது...

அப்போதுதான் விஜி மானுவல் என்கிற மிகத் திறமையான கீ-போர்டு பிளேயருடன் சந்திப்பு நிகழ்ந்தது. இளையராஜாவிடம் தலைமை கீ-போர்டு கலைஞராக வாசித்து வந்தார் விஜி. அவருடைய நட்பு திலீப்புக்குப் புதிய சொர்க்க வாசலைத் திறந்துவிட்டது. அதன் பெயர் விளம்பரத் துறை. அது அத்தனை கிரியேட்டிவ்வான துறையாக இருக்கும் என்று அதுவரை அவருக்குத் தெரியாது.

விஜி மானுவல் தான் இசை அமைக்கும் விளம்பரங்களுக்கு வாசிக்க திலீப்பை அழைத்தார். திலீப்புக்கு விளம்பரத் துறை இசை பற்றி அதிகம் தெரியாது. பணம் கிடைக்க மற்றொரு வழி என்று மட்டும்தான் நினைத்தார்.

''அப்போது என் மனதில் விசித்திரமான சில எண்ணங்கள் தோன்றும். திடீரென்று திரை இசை என்பதே ஒரு முடிவுக்கு வந்துவிட்டால், நான் வாழ்க்கைக்கு என்ன செய்வேன் என்கிற பயம் ஏற்படும். அதனால் கார் டிரைவர் ஆனால்கூடப் பிழைத்துக்கொள்ளலாமே என்று நினைத்து டிரைவிங் கற்றுக்கொண்டேன்'' - சொல்லிச் சிரிக்கிறார் ரஹ்மான்.

விஜி மானுவலிடம் விளம்பர ஜிங்கில்ஸ் பணியாற்றியபோதுதான் அது மிகவும் சுவாரஸ்யமான தொழில் என்பது திலீப்புக்குப் புரிந்தது. புதிய ஜன்னல்கள் திறந்தன. அதன் வழியே வேறு வடிவத்தில் இசை புகுந்து வந்தது.

விளம்பர இசை என்பது ஒரு சவாலான தொழில். அதில் இசையமைப்பாளருக்கும் இயக்குநருக்கும் கிடைக்கும் நேரம் ஒரு சில நிமிடங்கள் மட்டும்தான். அதற்குள் அவர்கள் தங்களின் திறமையை நிரூபிக்க வேண்டும். அந்த விளம்பரம் சுவாரஸ்யமான முறையில் மக் களைச் சென்றடைய வேண்டும். அந்த மிகச் சிறிய டியூன் மக்களின் மனதில் இடம் பிடிக்க வேண்டும்.

திலீப்புக்கு அந்தப் புதிய சவால் மிகவும் பிடித்திருந்தது. நிறைய விளம்பரப் படங்களுக்கு விஜி மானுவலுக்காகப் பணி புரிந்தார். அந்தத் தொழிலின் சூட்சுமம் அவருக்குப் போகப் போகப் புரிபட்டது. விளம்பர இசை உலகில் திலீப்பின் புகழ் மெள்ள மெள்ளப் பரவ ஆரம்பித்தது.

அப்போது மலையாள விளம்பரத் துறையில் கலக்கிக்கொண்டு இருந்தார் விளம்பரத் துறை இயக்குநரும் இசையமைப்பாளருமான ஐசக் தாமஸ். புனே இன்ஸ்டிட்யூட்டில் இயக்குநர் படிப்பை முடித்த இவர், இயக்குநர் அரவிந்தனிடம் பணிபுரிந்தவர். பிறகு, இசையமைப்பாளராக மாறினார்.

அடூர் கோபால கிருஷ்ணனின் நான்கு படங்களுக்கு இசை அமைத்த ஐசக் தாமஸ் தற்போது ‘வர்ணம்’ என்கிற தமிழ்ப் படத்துக்கும் இசை அமைத்திருக்கிறார். திலீப்பின் இசைத் திறமை பற்றி விஜி மானுவலின் மூலம் கேள்விப்பட்டு, தான் இயக்கும் விளம்பரப் படத்துக்கு இசை அமைக்குமாறு திலீப்பை அழைத்தார் ஐஸக் தாமஸ்.

அந்த வாய்ப்பு திலீப்புக்குத் தேனாக இனித்தது. உடனே ஒப்புக்கொண்டார். தனியாக இசையமைக்கக் கிடைத்த முதல் வாய்ப்பு. அது 30 செகண்டுகளுக்கான விளம்பர இசைதான். ஆனால், அது ரசிகர்களிடையே பெரிய ஹிட் ஆனது.

அதற்கு அடுத்து ஹார்வெஸ்ட் அரிசி எண்ணெய் விளம்பரத்துக்காக திலீப் இசையமைத்த விளம்பர இசை மற்றொரு திருப்புமுனை. ராஜீவ் மேனன் தயாரித்த அந்த விளம்பரத்தில், ஒரு பீங்கான் தட்டு உடையும் ஓசை கேட்க வேண்டும். அந்தச் சத்தம் துல்லியமாக நேரில் உடைவது போல் கேட்க வேண்டும். அதற்காகப் பலர் இசை கொடுத்தார்கள். ஆனால், ராஜீவ் மேனனுக்குத் திருப்தி வரவில்லை. அவர் அப்போது திலீப் பற்றிக் கேள்விப்பட்டார். உடனே திலீப்பை வரவழைத்தார் ராஜீவ் மேனன். தூள் கிளப்பினார் திலீப். அந்த பிளேட் உடையும் ஓசையே மிக வித்தியாசமாகத் துல்லியமாக இருந்தது. அந்த விளம்பரம் பெரும் புகழை அடைந்தது. அதன் தொடர்ச்சிதான் மற்றொரு ஹிட்டான ஆல்வின் வாட்சுக்கான விளம்பர இசை.

ஏகப்பட்ட விளம்பர இசை வாய்ப்புகள் அவரைத் தேடி வர ஆரம்பித்தன. கிட்டத் தட்ட அடுத்த ஐந்து வருடங்கள். தன் அத்தனை முனைப்பையும் விளம்பரப் பட இசையின் மேல் காட்டினார் திலீப்.

அதில் குறிப்பிடத் தகுந்த ஒன்று திரிஷ் புரொடக்ஷனுக்காக அவர் இசையமைத்தது. அதைப் பற்றிச் சொல்கிறார் அதன் தயாரிப்பாளரான சாரதா திரிலோக். ''போதை மருந்தின் தீமைகளை எடுத்துச் சொல்ல ஒரு படம் எடுத்தோம். அதுக்காக ஒரு யங் மியூஸீஷியனைத் தேடினோம். திலீப்பைப் பற்றிக் கேள்விப்பட்டு, அவரை புக் பண்ணினோம். அவர் பிரமாதமா இசை அமைச்சுக் கொடுத்தார். அந்தப் படம் நிறைய அவார்டுகளை வென்றது. அதுக்கு அப்புறம் அந்த லியோ காபி விளம்பரம்... இன்னிக்கும் அது டி.வி-யில் வந்துட்டு இருக்கு. சிறந்த விளம்பரத் துறை இசைக்காக திலீப்புக்கும் எங்களுக்கும் அவார்டு கிடைச்சது. எனக்கு அப்ப அந்தப் பையனைப் பார்க்கும்போது ரொம்ப ஆச்சர்யமா இருக்கும். ஏகப்பட்ட மியூஸிக்கல் இன்ஸ்ட்ரூமென்ட்ஸோடு வருவார். பேசுறதெல்லாம் சின்னக் குரல்ல டெக்னாலஜி பத்தியே இருக்கும். என்னவோ அந்தப் பையன் கிட்டே மிகப் பெரிய மியூஸிக்கல் டேலன்ட் இருக்கும்னு தோணும். அதான் மணிரத்னமிடம் சொல்லிவெச்சேன். அது இவ்வளவு பெரிசா ஹிட் ஆகும்னு நான் நினைக்கலை. Rehman was just amazing!'' என்று சொல்லி வியக்கிறார் சாரதா திரிலோக்.

தன் இசைப் பயணத்தின் ஒரு முக்கியமான காலக்கட்டத்தில் இருக்கும்போதுதான் திலீப்பின் சகோதரிகளில் ஒருவரை அந்த விசித்திர நோய் மறுபடி தாக்கியது. வயிற்று வலியால் துடிதுடித்தார்.

சகோதரியின் கதறல் அப்பா ஆர்.கே.சேகரின் கடைசிக் காலம் பற்றிய வலிகளை திலீப்பின் குடும்பத்தில் எல்லோருக்கும் ஞாபகப்படுத்தின.

எல்லா மருத்துவங்களையும் பார்த்தாயிற்று. டாக்டர்கள் கை விரித்தனர். சகோதரியின் நிலைமை நாளுக்கு நாள் சீரியஸ் ஆயிற்று. இதற்கு ஏதாவது தீர்வு உண்டா? குணப்படுத்த முடியுமா? குடும்பத்தில் உள்ள எல்லோரையும் அடுத்தடுத்து அது தாக்குமா? எல்லோருடைய நிம்மதியையும் கலங்கடித்த கேள்விகள்!

சகோதரி பிழைப்பாரா?

அவரைக் காப்பாற்ற எந்தக் கடவுள் வருவார்?

திலீப்பின் மதம் பற்றிய எண்ணங்களில் ஒரு பெரும் மாறுதல் நடந்த காலம் அது!


- கனவு தொடரும்...

Nerd
24th May 2009, 12:12 PM
ஒரு கனவின் இசை! ஏ.ஆர்.ரஹ்மான்
- கிருஷ்ணா டாலின்ஸி Part 7


வி.ஐ.பி. வாழ்க்கைத் தொடர்

1988-ம் வருடம்...

திலீப்புக்கு 21 வயது. விளம்பரத் துறையிலும் திரை இசை வாசிப்பிலும் செம பிஸி. அவ்வப்போது இசைக் குழுக்களுடன் வெளிநாடு பயணம் என்று வாழ்க்கை டாப் கியரில் எகிற ஆரம்பித்தபோதுதான், அவருடைய சகோதரிக்கு அந்தக் கொடுமையான வயிற்று வலி ஏற்பட்டது. ரஹ்மானின் குடும் பத்துக்கு பேரதிர்ச்சி. அப்பா வயிற்று வலியால் துடிதுடித்து இறந்ததை நேரில் பார்த்த திலீப்பும், அம்மாவும், சகோதரிகளும் கலங்கினார்கள். இனம் புரியாத பயம் அவர்களைச் சூழ்ந்தது!

எந்த மருத்துவம் பார்த்தும் சரியாகவில்லை. ('பதற்றத்தில் சரியான மருத்துவர்களிடமோ மருத்துவமனைகளிலோகூட அவர் காட்டப்படாமல் இருந்திருக்கலாம்' என்றும் சில குடும்ப நண்பர்கள் குறிப்பிடுகிறார்கள்.) யார் யாரோ மாந்திரீகர்கள் வந்தும் சரியாகவில்லை. நாளுக்கு நாள் சகோதரியின் நிலைமை மோசமாகியது.

அந்தத் தருணங்களைப் பற்றி ரஹ்மானே சொல்கிறார்... ''என் அப்பா பட்ட வலி என்னை துன்புறுத்திக்கிட்டே இருந் தது. வேலூர் சி.எம்.சி, சென்னை விஜயா ஹாஸ்பிட்டல்னு ஏறக்குறைய ஒன்பது ஹாஸ்பிடல்களுக்கு அவரை மாத்தி மாத்தித் தூக்கிக்கிட்டுப் போயிட்டிருந்தோம். படுத்தபடுக்கையாக் கிடக்கிற அப்பாவைப் பார்க்க நிறையப் பாதிரியார்கள் வரு வாங்க. ஜபம் செய்வாங்க. நிறைய இந்துச் சாமியார்களும் வருவாங்க. மந்திரிச்சு விடுவாங்க. பிரார்த்தனைகள் செய்வாங்க. எதுவுமே சரியாகலை. கடைசியா சில முஸ்லிம் குருமார்களும் வந்தாங்க... ஆனா... ப்ச், அப்பா எங்களை விட்டுட்டுப் போயிட்டாரு.''

அப்பாவின் கொடுமையான கடைசிக் காலங்களை நேரில் பார்த்திருந்த திலீப், அவர் மரணத்துக்குப் பிறகு, ஒரு கட்டத்தில் நாத்திகராகவே மாறியிருந்தார். கடவுள் என்று ஒருவர் இருந்து இருந்தால், அப்பா இத்தனை இளம் வயதில் இறந்திருப்பாரா என்பதே அவர் மனதில் உறுத்தலாக இருந்த கேள்வி. இப்போது மீண்டும் அதே நோய் சகோதரியிடம் முழு வேகத்தில் திரும்பி வந்ததும், அவர் மனதில் வேறு வித குழப்பங்கள். இது யதேச் சையாக நடப்பதா அல்லது கடவுள் அல்லது ஏதோ ஒரு சக்தி எழுதும் திரைக்கதைகளில் ஒன்றா?

ரஹ்மான் தொடர்கிறார்... ''என் டீன் ஏஜ் பருவங்கள்ல சில நாட்கள் கடவுள் இல்லைன்னு நம்பினேன். அந்த அளவுக்கு மனசு வெறுத்துப் போயிருந்தது. கடவுள் இல்லைன்னு நினைச் சாலும் மனசுக்குள்ள ஏதோ ஒரு வெறுமை. அப்புறம் ஒரு கட்டத்துல நம்மைச் செலுத்துற ஒரு சக்தி இல்லாம நம்மால் நிச்சயம் இயங்க முடியாதுன்னு தோணிச்சு. அப்பத்தான் என் சகோதரியை அந்த நோய் தாக்கியது. நான் அதிர்ந்துபோயிட்டேன். ஆனா, என் சகோதரியின் நோய்... ஒரு மிராக்கிள் மாதிரி ஒருத்தர் மூலமா குணமானது!''

என்ன நடந்தது? யார் அவர்?

ஷேக் அப்துல் காதிர் ஜிலானி சாஹிப் ('பிர் காத்ரி' என்று அறியப்பட்டவர்) என்பவர் திலீப்பின் நோயுற்ற சகோதரியைக் காண வந்ததாகவும், அவர் செய்த பிரார்த்தனையில் சகோதரி அதிசயமாக நோய் நீங்கி உயிர் பெற்று எழுந்தார் என்றும் ரஹ்மானின் குடும் பத்தினர் குறிப்பிடுகிறார்கள்.

இந்தத் திடீர் மாறுதல் திலீப்பை ஆச்சர்யத்துக்கு உள்ளாக்கியது. அவரால் நம்ப முடியவில்லை. சகோதரியின் பிணி நீக்கம் பிர் காத்ரி கடவுளிடம் முறையிட்டுக் கொண்டுவந்த ஓர் அதிசயமாகவே அவருக்குப்பட்டது.

சகோதரி குணமானதைத் தொடர்ந்து பிர் காத்ரி, திலீப்பின் குடும்ப நண்பராகவும், வழிகாட்டியாகவும் மாறினார்.

இங்கே மற்ற ஒரு விஷயத்தையும் குறிப்பிட வேண்டும். திலீப் தன் இசை வேலைகளில் மிகக் கடுமையான உழைப்பைக் காட்டிக்கொண்டு இருந்த நேரம் அது. இந்திய கிளாசிக்கல் மற்றும் கர்னாடக இசை, ஹிந்துஸ்தானி இசை, வெஸ்டர்ன் கிளாசிக்கல் இசை என்று ஓயாமல் இசை கற்றுக் கொண்டபடி இருந்தார் திலீப். லண்டன் டிரினிட்டி கல்லூரியிலும் மேற்கத்திய கிளாசிக்கல் இசையில் பட்டத்தையும் முடித்துவிட்டார். அவருடைய இசை கூர் தீட்டப்பட்ட கத்தியாக மினுமினுக்க ஆரம்பித்தது. மதம் பற்றித் தீவிரமாக யோசிக்கக்கூட முடியாதபடி இசைப் பணிகள் அவரை மூழ்கடித்துக்கொண்டு இருந்தன.

நடுநடுவே பிர் காத்ரி தரும் ஆன்மிகச் சொற்பொழிவுகளையும் கேட்டபடி இருந்தார். அதில் முக்கியமான அறிவுரை... ''கடவுள் என்பது ஒருவரே! அவரை நோக்கிச் செய்யும் பிரார்த்தனை உனக்குள் இருக்கும் உன்னைச் சுத்தம் செய்கிறது!''

இப்படிப்பட்ட கருத்துக்கள் திலீப்பின் மனதுக்கு அமைதியைத் தருவதாகத் தோன்றியது. நாட்கள் செல்லச் செல்ல, பிர் காத்ரியின் தாக்கம் திலீப்பின் மனநிலையிலும் மதம் பற்றிய எண்ணங்களிலும் பெரிய மாற்றத்தை ஏற்படுத்தினாலும், மத மாற்றம் என்கிற அடுத்த கட்டத்தைப் பற்றி அவர் உடனே சிந்திக்கவில்லை. அதற்கான நேரமும் இல்லை.

வேறு ஒரு சம்பவம்தான் அவரை அதை நோக்கி அழைத்துச் சென்றது.

ரஹ்மானே அதைப் பற்றிச் சொல்கிறார்... ''அப்ப நான் ஒரு ரெகார்டிங்குக்காக மலேசியாவில் இருந்தேன். திடீர்னு ஒரு நாள் கனவில் பெரியவர் ஒருவர் வந்தார். என்னை 'இஸ்லாம் மதத்துக்கு மாறு!'ன்னு சொன்னார். எனக்கு அது புரியலை. ஏதோ ஒரு கனவுன்னு விட்டுட்டேன். ஆனா, மறுபடியும் மறுபடியும் அதே கனவு தொடர்ந்து வந்துக்கிட்டே இருந்தது. அது ஏதோ ஒரு divine செய்தின்னு நினைச்சேன். அம்மாவிடம் வந்து அந்த கனவைப் பத்திச் சொன்னேன். 'கடவுள்கிட்டே இருந்து வந்த செய்தியை மறுக்கக் கூடாது'ன்னு சொன் னாங்க.

அப்போ இருந்து அம்மாவுடன் தர்காக்களுக்குப் போக ஆரம்பிச்சேன். நிறைய முஸ்லிம் குருமார்களைச் சந்திச்சேன். எனக்கு மதம் பற்றிப் பல வெளிச்சங்கள் கிடைச்சது. கொஞ்ச நாட்கள்லேயே என் குடும்பத்தில் எல்லாருமே இஸ்லாம் மதத்துக்கு மாறிட்டோம்!''

பிர் காத்ரிதான் ரஹ்மானின் முதல் இஸ்லாமிய குரு. தன் இல்லத்தில் ரஹ்மான் கட்டிய 'பஞ்சதன்' ஸ்டுடியோவுக்கான இடத்தைத் தேர்வு செய்து கொடுத்ததும் பிர் காத்ரிதான். ''ஐந்து விரல்களுக்கான தனிப்பட்ட செயல்களைக் குறிக்கும் இஸ்லாமிய வார்த்தைதான் 'பஞ்சதன்''' என்கிறார் ரஹ்மானின் தாயார் கரீமா பேஹம்.

பிர் காத்ரியின் மறைவுக்குப் பிறகு, மெஹ்பூப் ஆலம், முகம்மது யூசுப் பாய் போன்றவர்கள் ரஹ்மானுடைய குருமார்களாக வந்தார்கள். இப்போது கடப்பா மாலிக்.

பொதுவாகத் திரையுலகில் முஸ்லிமாக இருப்பவர்கள்கூட வேறு மதத்துப் பெயர்களை வைத்துக்கொண்டு வேலை பார்த்த காலகட்டத்தில், அதற்கு நேர் மாறாக இந்துப் பெயரில் இருந்து முஸ்லிம் பெயருக்கு மாறியதாகக் குறிப்பிடுகிறார் ரஹ்மான். 'ரோஜா' ஆல்பத்தில்கூட அவருடைய பெயர் முதலில் 'திலீப்' என்றுதான் குறிப்பிடப்பட்டு இருந்தது. திலீப்பின் தாயார்தான் கடைசி நிமிடத்தில் மணிரத்னத்தைச் சென்று பார்த்து அந்தப் பெயரை வேறு ஒரு இஸ்லாமியப் பெயருக்குச் மாற்றச் சொன்னார்.

திலீப் ஏ.ஆர்.ரஹ்மான் ஆனது அப்போதுதான்!

எப்படி அந்தப் பெயர் வந்தது?

மத மாற்றம் நிகழ்ந்தவுடன் 'திலீப்' என்கிற பெயரையும் மாற்ற வேண்டிய சூழ்நிலை. ஜோதிடத்தில் மிகுந்த நம்பிக்கையுடன் இருக்கும் திலீப்பின் அம்மாவிடம் ஒரு ஜோதிடர் சிபாரிசு செய்த பெயர், அப்துல் ரஹ்மான். திலீப்புக்கு அப்துல் ரஹ்மான் என்று பெயர் மாற்றம் செய்யப்பட்டது. அந்தப் பெயருடன்தான் சில நாட்கள் இருந்தார் திலீப். பிரபல இந்தி இசையமைப்பாளர் நௌஷாத், 'அல்லா ரக்கா ரஹ்மான் என்று வைத்துக்கொள்!' என்று சொல்லிப் பெயரைச் சற்று மாற்றினார்.

'அல்லா ரக்கா ரஹ்மான்' என்றால், அல்லாவின் அருளைப் பெற்றவர் என்று அர்த்தம். ரஹ்மானுக்கு முன்னால் இதே பெயரில் உலகப் புகழ்பெற்ற இன்னொரு இசைக் கலைஞர் தபேலா மேதை உஸ்தாத் அல்லா ரக்கா கான். இவர் பிரபல தபேலா மேதை ஜாகீர் ஹுசேனின் தந்தை.

திலீப் குடும்பத்தின் இஸ்லாம் மத மாற்றம் இசை உலகில் புருவங்களை உயர்த்தியது. 'ரோஜா'வின் சூப்பர் ஹிட் எல்லோரையும் மௌனமாக்கியது. ஏ.ஆர்.ரஹ்மான் என்கிற பெயர் இந்தியா முழுக்கப் புயல் வேகத்தில் பரவியது. அல்லா ரக்கா ரஹ்மானாக மாறிய திலீப் விரைவில் மிக ஆழ்ந்த மதப் பற்றுடைய இஸ்லாமியராக மாறினார்.

''ஒவ்வொரு வேளைத் தொழுகையும் ஓர் இறப்பு மாதிரி. அந்த நேரங்களில் நான் இறந்துவிடுகிறேன். தொழுகைப் பிரார்த்தனை முடிந்ததும் புதிதாகப் பிறந்தவன் போல் உணர்கிறேன். என் மனம், உடல் முழுக்க ஃப்ரெஷ் ஆகிறது'' என்கிறார் ரஹ்மான்.

தன் வாழ்க்கையின் வெற்றிக்கு 'ஆண்டவன் அருளும் இஸ்லாம் மதமும் முக்கியமான காரணங்கள்' என்று வெளிப்படையாகச் சொல்லி வந்த ரஹ்மானுக்கு விரைவில் மற்றொரு சிக்கல் வந்தது.

'இஸ்லாமியத் தீவிரவாதிகளுக்கு அவர் பண உதவி செய்தார்' என்கிற அதிரவைக்கும் குற்றச்சாட்டு அது!

littlemaster1982
24th May 2009, 01:05 PM
:ty: Nerd, I forgot to post it :oops:

littlemaster1982
31st May 2009, 09:16 PM
ஒரு கனவின் இசை! ஏ.ஆர்.ரஹ்மான்
- கிருஷ்ணா டாலின்ஸி Part 8

''திலீப்பாக இருந்தபோது, எனக்குத் தாழ்வு மனப்பான்மை அதிகம். ரஹ்மானாக மாறிய பிறகு நான் புதிதாகப் பிறந்தது போல் உணர்ந்தேன்!'' என்று ஒருமுறை சொன்னார் ரஹ்மான். ஆனால், ரஹ்மானாக மாறிய பிறகு, எட்டிய உயரங்கள் காரணமாக தலையில் குட்டிய சங்கதிகளும் ஏராளம். அதில் ஒன்றுதான் 'தீவிரவாதிகளுக்கு அவர் பண உதவி செய்ததாக' எழுந்த குற்றச்சாட்டு. அந்த வதந்திகளுக்கு ரஹ்மான் நீண்ட விளக்கம் கொடுக்க வேண்டியிருந்தது.

மதம் மாறிய ரஹ்மானுக்கு இசைக்கு அடுத்தபடியாக இஸ்லாம் இறைத் தத்துவங்களைப் படிப்பதில்தான் பெரும் ஆர்வம் ஏற்பட்டது. தன் திறமை, அதன் மூலமான பிரமாண்ட வெற்றிகள் அனைத்துக்கும் காரணம் கடவுளே என்று அவர் பரிபூரணமாக நம்பினார். வெளியூர் அல்லது வெளிநாடு செல்லும் போதெல்லாம், தொழுகைக்கான சிறிய 'பிரேயர் மேட்'டைக் கூடவே எடுத்துச் செல்கிறார். ஐந்து வேளைத் தொழுகையைத் தவறவிடுவதே இல்லை. தன் ரெக்கார்டிங் ஸ்டுடியோவிலும் தொழுகைக்காக ஒரு சிறிய அறை வைத்திருக்கிறார். இரண்டு முறை ஹஜ் பயணங்கள் போய் வந்துவிட்டார்.

ரஹ்மானின் மத நம்பிக்கை மிக ஆழமானது என்றாலும், வெளித்தோற்றத்திலும் இசை பற்றிய சிந்தனைகளிலும் அவர் மிக நவீனமானவர். சிறு வயதில் மைக்கேல் ஜாக்சனின் இசை, நடனம் மற்றும் தலைமுடி ஸ்டைலால் ஈர்க்கப்பட்டவர். நெமிஸிஸ், ரூட்ஸ் போன்ற இசைக் குழுக்களில் வாசித்துக் கொண்டு இருந்தபோது ரஹ்மான் அணிந்த உடைகள், கூலிங்கிளாஸ், ஹேர் ஸ்டைல் எல்லாமே ஒரு பாப் பாடகர் போலவே இருந்தன.

1992-ம் வருடம் ஆகஸ்ட் மாதம் 15-ம் தேதி 'ரோஜா' ரிலீஸ். 'சின்னச் சின்ன ஆசை' இசையுலகின் தேசிய கீதமானது. 'புது வெள்ளை மழை', 'தமிழா, தமிழா', 'காதல் ரோஜாவே' போன்ற பாடல்களின் ஒலிப்பதிவுத் தரமும் டிஜிட்டல் ஒலியும் ரசிகர்களுக்குப் புதிய அனுபவத்தைத் தந்தன. கேசட் வெளியான உடனேயே தேசியப் பிரபலமாக மாறினார் ஏ.ஆர்.ரஹ்மான்.

அப்போதெல்லாம் இசையமைப்பாளர்கள் ஹார்மோனியத்தை வாசித்தபடிதான் புகைப்படங்களுக்கு போஸ் கொடுப்பார்கள். இளையராஜா கிடாருடன் பல சமயங்களில் போஸ் கொடுத்திருக்கிறார். 'சின்னச் சின்ன ஆசை' தந்த சின்னப் பையன் கையில் கீ-போர்டுடன் புன்னகைத்து நின்றது புதுசு!

அப்போது அவரை 'ஒன் ஃபிலிம் வொண்டர்' என்று கிண்டல் செய்தவர்கள் பலர். ஆனால், அடுத்தடுத்து வந்த 'யோதா' ('இதுதான் ரஹ்மான் இசையமைத்த முதல் படம் (மலையாளம்), ரோஜா அல்ல!' என்கிறார்கள் அவரது தீவிரமான ரசிகர்கள் சிலர்) 'புதிய முகம்' போன்ற படங்களின் பாடல்கள் வெரைட்டியும் புதுமையும் காட்டி, ஹிட் ஆகின. தொடர்ந்து தமிழில் 'ஜென்டில்மேன்', தெலுங்கில் 'கேங் மாஸ்டர்', 'சூப்பர் போலீஸ்' போன்ற படங்களின் பாடல்களும் ஹிட்... ஹிட். 'நான் ஒரு பட அதிசயம் அல்ல... டிரெண்ட் செட்டர்!' என்பதைத் தன் இசையின் மூலம் உணர்த்தினார் ரஹ்மான். ஒரு தனிப்பட்ட இளமை ரசிகர் பட்டாளமே அவருக்காக உரு வாக ஆரம்பித்தது.

திடீரென்று ஒரு நாள், அவர் நவீன உடைகள் அணிந்து, தலைமுடி காற்றில் பறக்க, பாலைவன மணல் மேடுகளில், கையில் தேசியக் கொடியுடன் புயல் போல ஓடி, 'மா துஜே சலாம்... வந்தே மாதரம்!' என்று மகா ஹை பிட்ச்சில் முழங்கியதைப் பார்த்த ரசிகர்களுக்கு மூச்சடைத்தது. 'வந்தே மாதரம்' பாடலை இப்படி ஒரு ராக் பாப் வீடியோவின் துடிப்புக்கு ஏற்ப பாட முடியுமா என்று அவர்கள் ஆச்சர்யப்பட்டார்கள். சுஃபி இசை மேதை நஸ்ரத் ஃபதே அலிகான் அந்த ஆல்பத்தில் ஒரு பாடல் பாடினார். அவருடைய மிகப் பெரும் ரசிகரான ரஹ்மான் அதற்காக பாகிஸ்தான் சென்று அவருடைய பாடலைப் பதிவு செய்தார். அதைத் தவிர ஏழு பாடல்களை ரஹ்மானே அந்த ஆல்பத்தில் பாடியிருந்தது ரசிகர்களுக்கு சர்ப்ரைஸ் ஷாக்!

ஆனாலும் மற்றொருபுறம், 'புனிதமான வந்தே மாத ரத்தை டெக்னோ இசை மூலம் அவமதித்துவிட்டார் அவர்' என்று வழக்கு போடப்பட்டது. ('அது வந்தேமாதரம் இல்லை; 'வந்து ஏமாத்றோம்' என்று எழுதினார் சுப்புடு!) வழக்கிலிருந்து ரஹ்மான் விடுபட்டாலும், அவர் மனத்தை அந்த விமர்சனங்கள் கடுமையாகப் பாதித்தன.

மிக இளம் வயதிலேயே பல பிரச்னைகளை எதிர் கொண்ட ரஹ்மானுக்கு வெற்றிகள் குவிந்தபோதும், எதிர்பாராத திசைகளில் இருந்து புறப்பட்டு வந்த விமர்சனங்களை எதிர்கொள்ளச் சற்றுத் தடுமாறினார். 'வந்தே மாதரம்' ஆல்பம் மூலம் இந்துப் பாடலை அவமதிக்கிறார் என்று இந்துமத அடிப்படைவாதிகளிடம் இருந்தும், ஒரு முஸ்லிமாக இருந்துகொண்டு இந்துப் பாடலை மேன்மைப்படுத்திப் பிரபலப்படுத்தி விட்டார் என்று முஸ்லிம் அடிப்படைவாதிகளிடம் இருந்தும் ஒரே நேரத்தில் கண்டனங்கள் எழுந்தது விநோதம்தான்.

அப்போது 'தீவிரவாதிகளிடமிருந்து அவருடைய உயிருக்கு ஆபத்து இருக்கிறது' என்று சொல்லி அர சாங்கம் பாதுகாப்பு அளித்தது. இதெல்லாம் சேர்ந்து ரஹ்மானை மிகுந்த மன உளைச்சலுக்கு ஆளாக்கின.



அப்போது அவர் மனம் திறந்து பேசினார்... ''கடவுளும் மதமும் ஒருவரின் தனிப்பட்ட விஷயம். மசூதியோ, கோயிலோ, சர்ச்சோ... அது மனசுக்கு உள்ளேதான் இருக்கு. ஆனா, அது இப்போ பெரிய அரசியல் ஆயிடுச்சு. என் பின்னாலேயே செக்யூரிட்டி போலீஸ்காரர்கள் இருக்கிறது எனக்கு ரொம்பச் சங்கடமா இருக்கு. சக மனிதன் மேலான நம்பிக்கையையே அது கலைச்சுப் போடுது. தீவிரவாதிகள் மூலமா என் உயிருக்கு அச்சுறுத்தல் இருக்குன்னு சொல்லி, எனக்கு அரசாங்கமே பாதுகாப்பு தரும்போது, நான் தீவிரவாத இயக்கங்களுக்குப் பணம் கொடுக்குறேன்னு வர்ற வதந்தி வேடிக்கையா இருக்கு. இந்து, முஸ்லிம், கிறிஸ்டியன்னு பிரிச்சுப் பார்க்காம எல்லா சேவை அமைப்புகளுக்குமே என்னால் முடிஞ்ச அளவுக்கு உதவறேன். அதெல்லாம் ரொம்பச் சின்ன நிதி. அதைவெச்சு எந்தத் தீவிரவாதியாலும் ஆயுதங்கள் வாங்க முடியாது!''

அப்போது ரஹ்மான் தொடர்பாக எழுந்த மற்றொரு வதந்தி, தனக்கு நெருக்கமானவர்களை அவர் இஸ்லாம் மதத்துக்கு மாறும்படி வற்புறுத்துகிறார் என்பது. புன்னகைத்தபடி அந்த விமர்சனத்தையும் ஒதுக்கித் தள்ளினார் ரஹ்மான்.

''நோயல், ஸ்ரீதர், சிவக்குமார், சிவமணின்னு என்னைச் சுத்தி இருக்கிறவங்களைப் பாருங்க. நான் மதம் பத்தி அவங்க கிட்டே பேசினது கூடக் கிடையாது. எனக்கு என் மதம்; அவங்களுக்கு அவங்க மதம்... தட்ஸ் ஆல்!''

ஒரு வழியாக ரஹ்மான் பற்றிய அந்த ஆரம்பக் கால விமர்சனங்கள், பொறாமையால் பரப்பப் பட்ட விபரீத வதந்திகள் எல்லாம் ஒரு முடிவுக்கு வந்தன. வீண் வதந்திகளைப் பரப்பிய வீணர்களின் வாயை மூடச் செய்தன ரஹ்மானின் பிரமாண்டமான தொடர் வெற்றிகள்!



- கனவு தொடரும்...

Nerd
6th June 2009, 11:14 PM
ஒரு கனவின் இசை! ஏ.ஆர்.ரஹ்மான் - வி.ஐ.பி. வாழ்க்கைத் தொடர்

Part 9

1991...

பொதுமக்களுக்கோ, திரை இசை ரசிகர்களுக்கோ, திலீப்பை அப்போது தெரியாது. ஆனால், திரை இசைத் துறை, விளம்பரத் துறைக் கலைஞர்களுக்கு நன்றாகத் தெரியும். அப்பா இறந்த பிறகு, இசைக் கருவிகளை வாடகைக்கு விட்டுச் சம்பாதித்து வந்த திலீப் என்கிற சிறுவன், சில வருடங்களிலேயே தன் சிந்தஸைசர் திறமையால் பெரிய இசையமைப்பாளர் -களுக்கு வாசித்ததையும் உலகத்தரம் வாய்ந்த இசைக் கலைஞர்களுடன் பயணங்கள் மேற்கொண்ட-தை யும், விளம்பரத் துறையில் கலக்கிக்கொண்டு இருந்-ததையும் அவர்கள் நன்றாகவே அறிவார்கள். ஆனால், அந்த அமைதிப் புயல் அடுத்து வேறொரு பிரமாண்டமான அவதாரம் எடுக்கப்போவதை யாரும் எதிர்பார்த்து இருக்கவில்லை.

அவர்கள் என்ன, திலீப்பே கூட அந்த 'பண்டோரா பாக்ஸ்' திருப்புமுனையை எதிர்பார்க்க-வில்லை தான்.

1987-ம் வருடம், தன் வீட்டிலேயே 'பஞ்சதன்' என்-கிற 'ஸ்டேட் ஆஃப் தி ஆர்ட்' ரெக்கார்டிங் ஸ்டு-டியோவை அமைத்திருந்தார் திலீப். அதில், இந்திய இசை உலகமே அறிந்திராத பல நவீன இசைக் கருவி-களும், இசைப் பதிவுக் கருவிகளும் நிறைந்து இருந்தன. இந்-தியாவின் முன்னணி விளம்பரத் தயாரிப்பு நிறுவனங்கள் திலீப்பின் இசைக்காக அவர் ஸ்டுடி-யோ-வில் அணிவகுத்து நின்றன. அவர்களை வரவேற்-றது ஸ்டுடியோவின் முகப்பில் இருந்த பிர் காதிரி-யின் படம்.

சச்சினும் கபில்தேவும் நடித்த பூஸ்ட், டைட்டன், பிரீ-மியர் பிரஷர் குக்கர், எம்.ஆர்.எஃப். டயர்ஸ், தி ஹிந்து, ஏஷியன் பெயின்ட்ஸ் போன்ற பிரபல கம்-பெனி-களின் விளம்பர இசையை வாசித்தார் திலீப். ஜெயா டி.வி-யின் அப்போதைய சேனலான ஜெஜெ டி.வி., சன் டி.வி., ஏஷியாநெட் போன்ற சேனல்களின் சிக்-னேச்-சர் டியூன்களை அமைத்தார். கார்ப்பொரேட் படங்-கள், டாகுமென்டரி படங்கள், தொலைக்காட்சி நிகழ்ச்சிகள், ரேடியோ விளம்பரங்கள், மல்ட்டி மீடியா ஆடியோ வீடியோ படங்கள் என நூற்றுக்-கணக்-கான சிறு படங்களுக்கும் இசையமைத்தார். சென்னை தெலுகு அகாடமி ஏற்பாடு செய்திருந்த 'யூனிட்டி கான்சர்ட்'டுக்கு இசையமைத்ததும் அவர்தான். காசு பணத்துக்குக் குறைவில்லை. திலீப்பின் விருப்பங்-களுள் ஒன்றான அருமையான 'இம்போர்ட்டட்' கார் கூட வாங்கியாகிவிட்டது. What else more man?

ஒருநாள், திலீப் புதிதாக வாங்கிய கார் ஒன்றில் டிரைவ் செய்துகொண்டு இருந்தார். அப்போது வெளியாகி இருந்த ஒரு மேலைநாட்டு பாப் இசை ஆல்பத்தைத் தன் கார் ஸ்டீரியோவில் போட்டார். அதன் இசைத் துடிப்பு பிரமாதமாக இருந்தது. தன்னை மறந்து அந்த இசையை ரசித்தார். அந்த இசை முடிந்ததும், தன்னுடைய விளம்பர இசைப் பதிவுகொண்ட மற்றொரு கேஸட்டைப் போட்-டார். அதில் ஒலித்த இசைப்பதிவு ஒலியின் தரம் அவரை டென்ஷனாக்கியது. கேஸட்டை உருவி கோபத்துடன் கார் ஜன்னலுக்கு வெளியே தூக்கி எறிந்தார். வேறு இசை கேட்கவே அப்போது மனம் ஒப்பவில்லை. ஓர் இசைப் பதிவாளராகவும், ஆடி-யோ-கிராஃபி டெக்னீ-ஷியனாகவும் பரிமளித்து வந்த திலீப்புக்கு நம்மூர் இசையின் ஒலிப்பதிவுத் தரத்தை உலகத் தரத்துக்குக் கொண்டு செல்லவேண்டும் என்கிற ஆசை உள்ளுக்குள் நெருப்பாக எரிந்துகொண்டு இருந்தது.

அவர்தான் அப்படி நினைத்தாரே தவிர, அவரு டைய விளம்பர இசையின் ஒலிப்பதிவுத் தரம் அந்தத் துறையில் உள்ளவர்களுக்கு ஆச்சர்-ய-மாகவே இருந் தது. குறிப்பாக, பிரீமியர் விளம்பர இசையின் பிடி யைத் தங்கள் வசம் வைத்திருந்த மும்பை இசை அமைப்பாளர்களுக்கு திலீப்பின் இசை பொறா மையை ஊட்டியது. காரணம், ரொம்ப சிம்பிள். உலக இசையின் லேட்டஸ்ட் தரத்தை இந்தியா விலேயே அப்போது தெரிந்தும் புரிந்தும்வைத்திருந்த ஒரே ஒரு இசையமைப்பாளர் திலீப் மட்டும்தான்.

தன் அடுத்த படத்துக்காக (ரோஜா அல்ல; வேறு ஒரு பட ஐடியா) ஒரு புதிய இசையமைப்பாளரைத் தேடிக்கொண்டு இருந்த மணிரத்னத்துக்கு ரஹ் மானின் அழைப்பு, ஆறு மாதத்துக்குப் பிறகே திடீ ரென்று ஞாபகம் வந்தது. 'போய்த்தான் பார்ப்-போமே' என்று நினைத்து, 'பஞ்சதன்' ஸ்டுடி-யோ

-வு-க்கு வருகை தந்தார். திலீப் அப்போதும் செம பிஸி. மணிரத்னத்தை வரவேற்று அமர-வைத்தவர், தன் இசை சாம்பிள்கள் சிலவற்றைப் போட்டுக் காண்பித் தார். ஏற்கெனவே அந்த ஸ்டுடியோ-வின் ஹைடெக் அமைப்பைப் பார்த்து வியப்பில் இருந்த 'டெக்னோ கிரேஸி' மணிரத்னத்தை அந்த இசை மேலும் வசீகரித்தது.

அப்போது, தான் இசையமைத்த ஒரு புதிய இசைப் படிவத்தைப் போட்டுக் காட்-டினார் திலீப். காவிரித் தண்ணீர் பிரச்னை தமிழ்நாட்டுக்கும் கர்நாட-கா-வுக்கும் இடையே கொழுந்து-விட்டு -எரிந்த நேரம். (எப்-போதுதான் எரியவில்லை!) அது தொடர்-பாக, தன் பள்ளிக்கால நண்-பன் பரத்பாலா கொடுத்திருந்த ஒரு குறும்-பட ஐடியாவுக்காக திலீப் போட்-டிருந்த டியூன்தான் அது. அந்த இசை மணிரத்னத்தைத் தாக்கியது. மனதை என்னவோ செய்தது. 'இந்த இசை வேறு. இது வேறு கட்டத்துக்குப் போகத் துடித்துக்கொண்டு இருக்கும் நெருப்பு' என்பது அவருக்குப் புலப்-பட்டது. உடனே, 'நீதான் என் அடுத்த படத்துக்-கான இசையமைப்பாளர்' என்று உறுதி கூறி-விட்டு வந்துவிட்டார். ரஹ்மான் அதனால் பெரிய புளகாங்கிதம் ஏதும் அடையவில்லை. ஏனென் றால் திரை இசையின் மீது அப்போது அவருக்குப் பெரிய ஆர்வம் ஏதும் இருக்கவில்லை.

ஓர் இசை விழாவுக்காக மும்பை சென்றார் திலீப். அவ-ரு-டைய இசைத் திறமையை முன்பே அறிந்திருந்த நௌஷாத் (ரஹ்மானின் தந்தை சேகர், நௌஷாத்துடனும் பணிபுரிந்தவர்) திலீப் பிடம் ''நீ திரை இசைக்கு வரவேண்-டும்; அதற் கான முழுத் திறமை உன்னிடம் உண்டு'' என் றார். திலீப் வெறும் புன்னகையையே அவருக்குப் பதிலாகத் தந்தார். ''யோசிக்காதே... சினிமாவுக்கு நீ நிச்சயம் வரணும்'' என்று சொல்லி ஆசீர்வதித் தார் அந்த முதிய இசை மேதை.

ஆனாலும், ரஹ்மான் அவராக சினிமா இசை நோக்கிப் போகவே இல்லை. மணி-ரத்னத்தின் மேல் உள்ள அபிமானத்-துக்காக அவரைத் தன் ஸ்டுடியோவுக்கு அழைத்தார். அவரும் வந்து பார்த்துவிட்டு மனம் கவரப்பட்டு, 'நீதான் என் இசையமைப்பாளர்' என்று சொல்லிவிட்டுப் போய்-விட்டார். தட்ஸ் ஆல்..! 'இனி எல்லாம் அல்லா-வின் விருப்பம்' என்று தீர்மானித்துவிட்டு தன் விளம்பர ஜிங்கிள்ஸ் வேலைகளைக் கவனிக்க ஆரம்பித்துவிட்டார் ரஹ்மான்.

திடீரென்று ஒருநாள் வந்தார் மணி-ரத்னம். ''புதிதாக ஒரு படம் பண்ணப் போறேன். பெயர் 'ரோஜா'. கவிதாலயா பேனரில் கே.பாலசந்தர் தயாரிக்கும் படம். நீதான் இசையமைப்பாளர். உடனே வேலையை ஆரம்பிக்க வேண்டும்'' என்றார். திலீப்புக்கு அதை அப்போது ஒப்புக்-கொள்வதா, வேண்டாமா என்கிற குழப்பம். 'மணி சாரின் படம்' என்கிற ஒரே காரணத்-துக்காக ஒப்புக்கொள்ளலாம் என்று முடி-வெடுத்தார்.

அதைப் பற்றி ரஹ்மான் சொல்கிறார்... ''அந்தப் படத்துக்காக எனக்குப் பேசப்பட்ட சம் பளம் ரூபாய் 25 ஆயிரம். அதைச் சில மணி நேரங்களில் அப்போது என்னால் விளம்பர ஜிங்கிள்ஸில் சம்பாதித்துவிட முடியும். ஆனால் பணத்தைவிட, மணி சாரிடம் சேர்ந்து வேலை பார்க்கும் வாய்ப்பு-தான் என்னை வசீகரப்படுத் தியது. பாட்டுக்களை வெறும் இடம் நிரப்பி-களா கப் பார்க்கும் டைரக்டர் அல்ல அவர். தன் பட இசைக்காகப் பெரிய உழைப்பை அவர் காட்டுவார் என்-பது எனக்குத் தெரியும். நூறு சத-விகிதம் நன்றாக வந்திருக்கக்கூடிய ஒரு பாடலைத் தன் விசுவல்ஸ் மூலம் நானூறு சதவிகிதம் அவர் மேம்படுத்திக் காட்டுவார் என்பதைப் படங்களில் பார்த்திருக்கிறேன். அதனால் 'ரோஜா' பட வாய்ப்பை நான் ஒப்புக்கொண்-டேன்.

மணி சார் மாதிரி ஒருத்தர் ஒரு புது இசையமைப்பாளரை அறி-முகப்-படுத்தறாருன்னா, அந்த எதிர்பார்ப்பு எப்படி இருக்கும்கிற பிரஷர் இருந்-தது. ஆனா, மணி சார் ஒரு இனிய நண்பர் மாதிரி என்-கிட்டே இருந்து என் ஸ்டைல் மியூஸிக்கை ரொம்பத் திறமையா வெளியே கொண்டு வந்தார். பல நூறு டியூன்கள் போட்டிருப்பேன். அதில் தி பெஸ்ட்டை செலெக்ட் பண்ணி, அதை இம்ப்ரூவைஸ் பண்ணி... ஹி இஸ் ஜஸ்ட் கிரேட்!'' என்று நெகிழ்கிறார் ரஹ்மான்.

'ரோஜா' பட இசைத் தகட்டில், தன் ஆசான் நௌ-ஷாத் சொன்னது போலவே, 'அல்லா ரக்கா ரஹ்மான்' என்று தன் பெயரைப் பொறித்தார், ஏற்கெனவே மத மாற்றம் செய்திருந்த திலீப். (ஆயிரம் பெயர்களை உடைய அல்லாவின் முதல் பெயர் 'அல்லா ரக்கா ரஹ்மான்' என்றும் ஒரு பொருள் உண்டு.). அத்தோடு மட்டுமில்லாமல், தன்-னோடு பணிபுரிந்த முக்கிய இசைக் கலைஞர்களின் பெயர்களையும் அதில் இடம்பிடிக்கச் செய்தார். தமிழ் சினிமாவில் அது ஓர் இனிய ஆரம்பம்.

'ரோஜா' பட ஆல்பம் ரிலீஸாகி இந்தியா முழுக்க சூப்பர் ஹிட் ஆனது. ஜிங்கிள்ஸ் இசைத் துறையில் ஓசை- இல்லாமல், பெயர் தெரியாமல் கலக்கிக்கொண்டு இருந்த திலீப்புக்கு இனிய அதிர்ச்சி! ரசிகர்கள் மட்டு-மின்றி, சக இசைக் கலைஞர்களும், இசையமைப்-பாளர்-களும் அலை அலையாகத் திரண்டுவந்து ரஹ்--மானைப் பாராட்டியது அவரைத் திக்குமுக்காடச் செய்தது. விளம்பர ஜிங்கிள்ஸில் அவர் பெயர் வந்தது கிடையாது. பொதுமக்களிடையே அந்த இசை பிரபலமானாலும் அந்த இசையமைப்பாளர் யார் என்று தெரியாது. அதுவரை குடத்தில் இட்ட விளக்காகவே இருந்த ரஹ்மான், ஒரே ஒரு படத் தின் மூலம் இந்தியா முழுக்கப் பிரபலமானார். 'இருபத்தையாயிரம்தான் சம்பளமா? அதற்--காக ஏன் உழைக்க வேண்டும்?'' என்று அப்-போது நினைத்து இருந்தால், இப்படி ஒரு மெகா ஓப்ப-னிங் ரஹ்மானுக் குக் கிடைத்திருக்காது. 'சேர்ந்திடம் அறிந்து சேர்' என்பார்கள். அது போல் மணி-ரத்னத்-தோடு சேர்ந்த ரஹ்மானை அரவணைத்-திட உலகமே காத்திருந் தது.

'ரோஜா' படத்தில் இடம்பெற்று சூப்பர் ஹிட் ஆன 'சின்னச் சின்ன ஆசை'யைத் தமிழ்ப் பட இசையின் முதல் 'ரகே' வடிவப் பாடல் என்று சொல்லலாம். அந்தப் பாடல் கம்போஸ் ஆகி, அதன் முதல் இசைப்-பதிவை ஒரு கேஸட்டில் பதிவு செய்து தன் அம்மாவிடம் போட்டுக் காட்டி-யிருக்-கிறார் ரஹ்மான். அப்போது அவர் அம்-மாவுக்குத் தோன்றிய உணர்வு என்ன?

''எனக்கு அதோட மியூஸிக் பத்தி எல்-லாம் ரொம்பத் தெரியாது. அல்லாவோட அருளால அது இசைத் துறையில நல்லா மேல வந்துக்கிட்டிருக்குன்னு மட்டும் தெரியும். ஒருநாள் திடீர்னு வந்து, 'அம்மா, நான் ஒரு தமிழ் படத்துக்கு மியூஸிக்

போடப் போறேன். மணிரத்னம் படம். இந்தப் பாட்டைக் கேட்டுப் பாரேன்'னு சொல்லி 'சின்னச் சின்ன ஆசை' பாட்டைப் போட்டுக் காண்பிச்சது. என்-னவோ தெரி-யலை... அது ரொம்ப சந்தோஷமான பாட்டு-தான். ஆனா, என் கண்ணுலேர்ந்து கரகரன்னு கண்ணீர் கொட்டுது. ரஹ்மான் பதறிப் போயி, 'என்-னம்மா, என்னாச்சு?'ன்னு கேட்டுது. 'இல்லப்பா... இந்தப் பாட்டு ரொம்ப நல்லா இருக்கு. மனசை என்-னவோ செய்யுது'ன்னு சொன் னேன். எனக்குப் பிடிச்ச பாட்டு இந்த உலகத்துக்கே அப்புறம் பிடி-ச்சது. என் கணவரோட ஆசைகள் அந்தப் பாட்டுலேர்ந்து நிறைவேற ஆரம்பிச்சிடுச்சுன்னு எனக்கு அப்ப தோணுச்சு'' என்கிறார் கரீமா பேகம் நெகிழ்-வுடன்.

'சின்னச் சின்ன ஆசை' எல்லாத் தமிழ் வீடுகளின் குடும்பப் பாடலாக மாறியது. தன் முதல் படத்திலேயே 'சிறந்த இசையமைப்பாளர்' தேசிய விருதான ரஜத் கமல் விருதைப் பெற்றார் ரஹ்மான்.

அது இந்தியத் திரை இசையின் புது யுகத்தின் ஆரம்பம்!

------------------------
Chinna Chinna aasai is reggae??

PS: LM, I beat you to it this week :)

littlemaster1982
7th June 2009, 07:36 AM
Chinna Chinna aasai is reggae??

I've read this somewhere else too. Vishayam therinjavanga yaaravadhu vandhudhan sollanum :)


PS: LM, I beat you to it this week

:thumbsup: Nesstu meet pandren :twisted:

crajkumar_be
8th June 2009, 05:29 PM
Nerd/LM,
Chinna Chinna Aasai - Follow the bass line (and adhu koodave vara keyboard light punch - eppadi solradhu nu therla) , typical of reggae

littlemaster1982
8th June 2009, 05:34 PM
:ty: CR

thineshan54321
9th June 2009, 03:22 AM
Chinna Chinna aasai is reggae??

I've read this somewhere else too. Vishayam therinjavanga yaaravadhu vandhudhan sollanum :)


PS: LM, I beat you to it this week

:thumbsup: Nesstu meet pandren :twisted:

hey ya chinna chinna aasai's orchestration is a full out reggae one with some indian touches. its basically the guitar that plays in the offbeat that makes it reggae. and also the drums and bassline. but a string entry in it is very very experimental. only rahman.

littlemaster1982
12th June 2009, 08:44 PM
ஒரு கனவின் இசை! ஏ.ஆர்.ரஹ்மான்

- கிருஷ்ணா டாவின்ஸி Part 10

வி.ஐ.பி. வாழ்க்கைத் தொடர்


தமிழ் சினிமாவின் இசையில் காலம்தோறும் ஒவ்வொரு டிரெண்ட் மாறிமாறி வரும். முழுக்கமுழுக்க கர்னாடக இசையின் அடிப்படையிலேயே ஒருகட்டத் தில் உருவானது தமிழ்த் திரை இசை. தியாகராஜ பாகவதர், பி.யூ.சின்னப்பா, கிட்டப்பா, டி.ஆர்.மகா லிங்கம் போன்ற மிகச் சிறந்த பாடகர்களே நடிகர் களாகவும் இருந்த அந்த நாடக பாணி கறுப்பு-வெள்ளை ஹைபிட்ச் திரை இசை, விஸ்வநாதன் - ராமமூர்த்தியின் வருகைக்குப் பிறகு, தென்றல் போன்ற மெல்லிசைக்கு மாறியது.


இருவரின் இசை ஆட்சியில், காலத்தால் அழியாத பாடல்கள் பல உருவாகின. டி.எம்.எஸ்., பி.சுசீலா, பி.பி.ஸ்ரீநிவாஸ் போன்றவர்களின் குரல்களில் இசை மழை தாலாட்டியது. 'என்ன இருந்தாலும் பழைய பாட்டு மாதிரி வருமா?' என்று இன்றைக்கும் சொல்லப்படும் வார்த்தைகளுக்குக் காரணமாக இருக்கும் மெல்லிசை மன்னர்கள் அவர்கள்.

அடுத்து, பண்ணைப்புரம் கிராமத்திலிருந்து புறப் பட்டு வந்தார் ராசய்யா என்னும் இசை மேதை. திரை இசையில் நிஜமான கிராமத்து இசையை ரகளையாக அறிமுகப்படுத்தினார். வெஸ்டர்ன் கிளாசிக்கல் இசையை, கர்னாடக இசையுடன் கலந்து அவர் தந்த ஆயிரக்கணக்கான பாடல்கள் தமிழ் ரசிகர்களை இன்பக் கடலில் மிதக்கவைத்தன. பிரவாகமான, பிரமிப்பூட்டும் இசையைக் கொடுத்தார். இளையராஜாவின் பெயரைப் போட்டால்தான் படமே வியாபாரம் ஆகும் என்கிற அளவுக்குப் புகழ். இன்றைக்கும் என்றைக்கும் அழியாப் புகழுடைய பாடல்கள் தந்து வருபவர் ராஜா.

அடுத்த தலைமுறை இசைக்காக தமிழ் சினிமா காத்திருந்தபோது, ஏ.ஆர்.ரஹ்மான் வந்தார். புதிய டிஜிட்டல் இசைப் புரட்சியைக் கொண்டுவந்தார். தமிழ், தெலுங்கு, மலையாளம் என்று பல மொழிகளில் பயணம் செய்து, உலக உயரங்களுக்கெல்லாம் சென்றார். அதற்கெல்லாம் ஓர் ஆரம்பமாக இருந்தது 'ரோஜா'.

திலீப்பாகப் பல விளம்பரப் படங்களுக்குப் பணி புரிந்தபோது, எழுத்தாளர் மற்றும் திரைப்பட இயக் குநர் அம்ஷன் குமாரின் பல விளம்பரப் படங்களுக்கும் பணியாற்றியிருக்கிறார் ரஹ்மான்.

"விளம்பர இசை என்பது தமிழ் சினிமா இசைஅமைப்பாளர்களைப் பொறுத்தவரை, ஒரு தகுதிக் குறைவான விஷயமாகவே இருந்து வந்திருக்கிறது. சும்மாவாவது வீட்டில் இருப்பேனே தவிர, விளம்பரப் படங்களுக்கு எல்லாம் இசைஅமைக்க மாட்டேன் என்கிற எண்ணம் பலரிடம் இருந்தது. "அப்போதுதான் சென்னை அசோக் நகர் சாமியார் மடத்தில், திலீப் என்கிற ஒரு துடிப்பான இளம் இசையமைப்பாளர் இருப்பதைப் பற்றிக் கேள்விப்பட்டு அவரைச் சந்தித்தேன்... எலெக்ட்ரானிக் இசை என்பது அப்போது ரொம்பப் புதுசு. தார்கோவ்ஸ்கியின் படங்களில்தான் அப்படிப்பட்ட இசையை நான் கேட்டிருந்தேன். அதைப் போன்றதொரு இசையை திலீப்பிடம் கேட்டபோது, என் ஆனந்தத்துக்கு அளவில்லை. எங்கள் வேலை நேரம் ராத்திரி 10 மணிக்கு மேல்தான் ஆரம்பிக்கும். மதுரை சோமு கச்சேரி போல் விடிய விடிய நடக்கும். ஒரு நாள் இரவு 10 மணிக்கு ஆரம்பித்த கம்போஸிங், இருவருக்கும் பிடித்த டியூனைப் போட்டு முடிப்பதற்குள் காலை 6 மணி ஆகிவிட்டது. நான் மனத் திருப்தியுடன் ரெக்கார்டிங் ஸ்டுடியோ அறையை விட்டு வெளியே வந்தேன். அங்கே இயக்குநர் மணிரத்னமும் பாடகி மின்மினியும் காத்திருந்தார்கள். 'சின்னச் சின்ன ஆசை' என்கிற உலகப் புகழ்பெற்ற பாடலைப் பதிவு செய்ய அவர்கள் வந்திருந்தது அப்போது எனக்குத் தெரியவில்லை.

அவர்களை ரஹ்மான் காத் திருக்க வைத்ததாக நான் நினைக்கவில்லை. தான் ஒப்புக்கொண்ட வேலையை முழுவதுமாக, திருப்திகரமாக முடித்துக் கொடுக்கும் அர்ப்பணிப்பு உணர்வைத் தான் அது காட்டியது. தன் ஒவ்வொரு வேலை யையும் மிக சின்ஸியராகச் செய்யும் ரஹ்மானின் டெடிகேஷன் அது. அதுதான் அவரைப் பெரிய உயரங்களுக்கு அழைத்துச் சென்றிருக்கிறது என்று நான் நினைக்கிறேன்" என்கிறார் அம்ஷன் குமார்.

'ரோஜா' ஆல்பம் வெளிவந்தபோது, தமிழ் இசை ரசிகர்களை அது புயல் போல் தாக்கியது. இளையராஜாவின் 'மச்சானைப் பார்த்தீங்களா?' ஏற்படுத்தியது போன்ற பிரமாண்டமான இசை அலையை 'சின்னச் சின்ன ஆசை' பல வருடங்களுக்குப் பிறகு மீண்டும் தமிழகத்தில் ஏற்படுத்தியது.

ரஹ்மான் இசையமைப்பிலும், இசைப் பதிவிலும் புதிய நுட்பங்களைக் கொண்டுவந்தார். அவர் தனியாக 'மியூஸிக் அரேஞ்சர், கண்டக்டர்' என யாரையும் வைத்துக்கொள்வது இல்லை. நோட்ஸ்கள் எழுதிக்கொடுப்பது இல்லை. யார் யாருடைய திறமை என்னென்ன என்பது அவருக்குத் தெரியும். சுதந்திரமாகப் பாட, வாசிக்கவிட்டு, அதில் மிகச் சிறந்ததைத் தேர்ந்தெடுத்துப் பதிவு செய்துகொள்கிறார். பாடக ருக்கோ, வாசிப்பவருக்கோ அவர் எதைத் தேர்ந் தெடுப்பார் என்பது ரகசியமாகவே இருக்கும். ஒரு தேர்ந்த நெசவாளன் தறி நெய்வதைப் போலத்தான் அவர் இசை நெய்கிறார். பலப் பல லேயர்களாக, பலப் பல வர்ணங்களாக!

ஆரம்ப காலங்களில் இருந்தே ரஹ்மானின் வலது கரமாகச் செயல்பட்டவர் சவுண்ட் இன்ஜினீயர் ஹெச்.ஸ்ரீதர். மிகத் திறமை வாய்ந்த டெக்னீஷியனான அவர் சமீபத்தில் இறந்துபோனது, ரஹ்மானைப் பெரிதும் பாதித்தது. சவுண்ட் ரிக்கார்டிங்கில் ரஹ்மானுடன் சேர்ந்து பல தொழில்நுட்பச் சாதனை களை நிகழ்த்தியவர் ஸ்ரீதர். அவர் ஒருமுறை ரஹ்மானின் இசை பற்றிச் சொன்னார்... "ரோஜாவுக்கு முன்பே எனக்கு ரஹ்மானைத் தெரியும். இருவரும் அடிக்கடி சந்தித்து இசைப் பதிவிலும், இசை டிரெண்டிலும் உள்ள முன்னேற்றங்களைப்பற்றி நிறைய விவாதிப்போம். அவருடைய மிகப் பெரிய சொத்தாக நான் நினைப்பது, அவர் ஒவ்வொரு பாடலையும் தன் முதல் பாடலாக நினைப்பதுதான். பாடல் ஒலிப்பதிவுக்கு முன்னால் தன் பிரார்த்தனை அறைக்குப் போய் வருவார். அப்போது அவரைப் பார்க்கும்போது ஆச்சர்யமாக இருக்கும். ஏதோ 'பாட்டரி ரீ-சார்ஜ்' செய்துவிட்டு வந்ததைப் போல புதுசாகத் தெரிவார். ஓர் இசையமைப்பாள சர்வாதி காரியாக அவரை நான் பார்த்ததே இல்லை. பாடகர்கள், இசையமைப்பவர்கள் எல்லோரிடமும் ஒரு 'கிரியேட்டிவ்' இதயம் இருப்பதை அவர் மதிப்பார்.

ரிக்கார்டிங்குகளின்போது இசைக் கலைஞர்களிடம் அதிகம் பேச மாட்டார். ஐடியாவைப் புரியவைத்துவிட்டு ஒதுங்கிவிடுவார். அவர்கள் சுதந்திரமாக வாசிப்பார்கள். எல்லாவற்றையும் பதிவுசெய்துகொள்வார். அதில் தி பெஸ்ட்டைப் பயன்படுத்துவார். அதே நேரத்தில் 'டெக்னிக்கை மட்டுமே இசை நம்பக் கூடாது. அதில் ஓர் உயிர் இருக்கணும்' என்று சொல்வார்!"

ரஹ்மான் ஒரு 'டெக்னோ ஜன்க்கி'. ஒரு நவீன ஹெட்ஃபோனை அவரிடம் கொடுத்தால், அடுத்த நிமிடத்தில் அதை அக்குவேறு ஆணிவேறாகப் பிரித்து, அது எப்படி வேலை செய்கிறது என்பதைக் கண்டுகொள்வார். அதே போன்ற ஆர்வம்தான் அவருக்கு இசையை எப்படிப் பதிவு செய்து கொடுக்கலாம் என்கிற எண்ணத்திலும் அலைபாய்ந்தது.

ரோஜாவுக்கு அடுத்து அவருக்கு ஒரு பிரமாண்ட இசைத் தோட்டம் பூத்துக் குலுங்கியது!


-கனவு தொடரும்...

genesis
13th June 2009, 03:41 AM
இன்றைக்கும் என்றைக்கும் அழியாப் புகழுடைய பாடல்கள் தந்து வருபவர் ராஜா.

Keep HC IR fans happy!! Good job Vikatan editors.

jaiganes
17th June 2009, 10:56 PM
இன்றைக்கும் என்றைக்கும் அழியாப் புகழுடைய பாடல்கள் தந்து வருபவர் ராஜா.

Keep HC IR fans happy!! Good job Vikatan editors.
yeah real good job!!:-)

littlemaster1982
19th June 2009, 01:37 PM
ஒரு கனவின் இசை! - ஏ.ஆர்.ரஹ்மான்

கிருஷ்ணா டாவின்ஸி -வி.ஐ.பி. வாழ்க்கைத் தொடர் Part 11


இசை எவ்வளவு முக்கியமோ, அதைப் போன்றதே இசை ஒலிக்கும் தொழில்நுட்ப வடிவமும். மேற்கத்திய இசையின் துல்லிய அனுபவத்தை நம் ஊர் இசையில் ஏன் பெற முடியவில்லை என்பது இந்திய இசை ரசிகர்களின் மனதில் ஓர் ஏக்கமாகவே பதிந்திருந்தது. மோனோ டோனிலும் சம்பிரதாய ஸ்டீரியோவிலும் ஒலித்த டம்டம், இந்தியத் திரை இசையைக் கேட்பதற்கு ஒருவித அலுப்பை அப்போது ஏற்படுத்தியிருந்தது.

அப்போது புதிய ஒலியுடன் வெளியான ரஹ்மானின் 'ரோஜா' ஆல்பம் அவர்களைத் திக்குமுக்காடச் செய்தது. இப்படி ஓர் ஒலிப்பதிவுத் தரமும் மேன்மையான இசையும் சாத்தியமா என்று வியந்தார்கள். 'ரோஜா' படம் பல்வேறு மொழிகளில் டப் செய்யப்பட்டு, எல்லா இடங்களிலும் வெற்றி பெற்றதும், இன்று கிட்டத்தட்ட 18 வருடங்களுக்குப் பிறகும் ஆங்கிலத்தில் டப் செய்யப்படுவதற்கும் முக்கியமான ஒரு காரணம், ரஹ்மானின் இசை.

"ரஹ்மானிடம் பாடுவது ரொம்பப் புது அனுபவமா இருக்கும். பாடப் போகும்போது எதுவுமே ரெடியா இருக்காது. சில அடிப்படை 'கார்டுகளை' கம்போஸ் பண்ணியபடி 'ஃபீட்' பண்ணிக்கிட்டே இருப்பார். எதுவும் புரியாது. ஆனா, ஒரு சில நிமிஷங்கள்ல அந்த மேஜிக்கை நீங்க உணரலாம். ஹெட்போன்ல அதைக் கேட்கும்போது ஏதோ ஒரு புதிய உலகத்துக்குள் போகிற மாதிரி பரவசமா இருக்கும். புதுசு புதுசா நிறையப் பாடணும்கிற மனநிலையை அந்த மியூஸிக் உருவாக்கும். பாடகர்கள், இசைக் கலைஞர்கள் எல்லாருக்கும் முழுச் சுதந்திரம் கொடுப்பார். அதில் இருந்து தி பெஸ்ட் எதுவோ அதை மட்டும் செலெக்ட் பண்ணுவார். இந்த டெக்னிக்கை நான் வேற யார்கிட்டேயும் பார்த்தது இல்லை" என்கிறார் பாடகர் ஸ்ரீநிவாஸ்.

ரோஜாவுக்கு அடுத்து, பல தயாரிப்பாளர்கள் ரஹ்மானை புக் செய்ய அவர் வீட்டில் கியூவில் நின்றார்கள். இந்த அனுபவம் ரஹ்மானுக்கே புதிதாக இருந்தது. சினிமாவின் கவர்ச்சியும் வீச் சும் அவரை ஆச்சர்யப்படுத் தின. சினிமா இசை, ஜிங் கிள்ஸ் இசையைக் காட்டிலும் கோடிக்கணக்கான மக்களைச் சென்றடையும் என்கிற உண்மை அவருக்குப் புரிந்தது. 'நீ சினிமா இசைக்கு வா... அங்கே நிறைய சாதிப்பாய்'என்று ஆசான் நௌஷாத் சொன்னதும் காதில் ஒலித்தது.

"முதல் படத்திலேயே எனக்கான ஒரு 'சவுண்ட் பேட்டர்ன்' உருவாக்க முடிஞ்சது ரொம்பச் சந்தோஷமா இருந்தது. கடவுளின் கருணை, அப்புறம் மணி சாரின் வழிகாட்டுதல்தான் இதோ இந்த மியூஸிக் ரஹ்மானோடதுன்னு ரசிகர்கள் நினைக்கிற அளவுக்கு என் இசையை அறிமுகப் படுத்தியதுன்னு நினைக்கிறேன்” என்கிறார் ரஹ்மான்.

'ரோஜா' பட இசையின் மிகப் பெரிய வெற்றி மணிரத்னத்தையும் ரொம்பவே மகிழ்ச்சிக்கு உள்ளாக்கியது. "ரஹ்மானை என் படத்துக்காக புக் செஞ்சப்போ, தனிப்பட்ட முறையில் ரஹ்மானைத் தூக்கிவிடணும்னு எல்லாம் தோணலை. அப்போ என் படத்துக்கான இசை பத்தி மட்டுமே என் யோசனையெல்லாம் இருந்தது. அவர் கொடுத்திருந்த சாம்பிள் மியூஸிக் பிரமாதமா இருந்தது. அவர் பிற்காலத்துல எப்படி வளர்ச்சி அடைவார்னு எல்லாம் அப்ப நான் யோசிக்கலை. 'ரோஜா' படத்துக்கு அவர்தான் பெஸ்ட் மியூஸிக் டைரக்டர்னு மட்டும் தோணுச்சு. நான் அவர்கிட்டே கவனிச்ச ஒரு விஷயம், சினிமா இசையோட சம்பிரதாயங்களை அவர் உடைக்க நினைச்ச புதுமை மனப்பான்மை. அப்படிப்பட்ட ஒருத்தரைத்தான் நானும் தேடிட்டு இருந்தேன். இந்திய இசைக்கும் உலகத் தொழில்நுட்பத் தரத்துக்கும் ஒரு பாலமா அவர் இருந்தார்" என்கிறார் மணிரத்னம்.

'ரோஜா'-வுக்கு அடுத்து பல படங்கள் ரஹ்மானைத் தேடி வந்தன. ஆனாலும், அவற்றை அவர் ஒப்புக்கொள்ளவில்லை. காலை எட்டரை மணிக்கு ரெகார்டிங் ஸ்டுடியோவுக்குப் போய், மதியத்துக்குள் ஒரு பல்லவியையாவது பதிவு செய்துவிட வேண்டும் என்கிற சம்பிரதாயமெல்லாம் அவருக்குச் சரிவரவில்லை. ஒரு புதுவிதமான இசை ஒலிப்பதிவு முறையை அவர் கொண்டுவர விரும்பினார்.

மேற்கத்திய இசை உலகில் அப்போது பிரபலமடைந்து வந்த இசையமைப்பாளர்கள், தங்கள் ஸ்டைலுக்குத் தகுந்த தனித்தனி ரெகார்டிங் ஸ்டுடி யோக்கள் வைத்திருந்தது போல, தனக்குப் பிடித்தமான ஒரு பிரத்யேக ஒலிப்பதிவுக் கூடத்தைத் தன் வீட்டிலேயே தனக்காக அமைத்திருந்த ரஹ்மான் அங்கேயே தன் திரை இசையை ஒலிப்பதிவு செய்ய ஆரம்பித்தார்.

அங்கே இசைக்க வந்த இசைக் கலைஞர்களுக்கும், பாட வந்த பாடகர்களுக்கும் ரஹ்மானின் புதிய பாணி அணுகுமுறை இனிய அதிர்ச்சியாக இருந்தது. ரஹ்மானின் எளிய ஆளுமை ஆச்சர்யமாக இருந்தது. அவர் எல்லோருக் கும் தந்த சுதந்திரமும், கம்போஸிங்கிலும், ரிக்கார்டிங்கிலும் செய்த புதுமைகளும் அப்போது இசைப் புரட்சிதான். அதிலும் ராத்திரி 3 மணிக்கெல்லாம் பாட நேர்ந்த அனுபவங்கள் பாடகர்களை மிரளவே வைத்தன. அதில் ஒருவர் புதிய பாடகியான ஹரிணி. "நான் முதல் பாடலை அவர் இசையில பாடியபோது நான் ஸ்கூல்; பொண்ணு. ஆனாலும், அவர் என்னை ரொம்ப மரியாதையா ட்ரீட் பண்ணினார். 'உன் இஷ்டத்துக்குப் பாடு'ன்னு சொன்னார். நடுராத்திரியில் அவர் இசையில் நான் பாடினது மறக்க முடியாத அனுபவம். வேற எந்த மியூஸிக் டைரக்டர்களிடம் பாடினாலும் ஒரு படபடப்பு இருக்கும். ஆனா, ரஹ்மான் சார் முன்னால் அந்தத் தயக்கம் இல்லவே இல்லை. I really enjoyed my music then" என்கிறார் ஹரிணி.

'ரோஜா'-வின் மூலம் இளைஞர்களின் இசை ரசனையைத் தாக்கி வெற்றிக் கொடி நாட்டிய ரஹ்மான் அடுத்து வைத்த கூட்டணி, அதே இளமைக் கூட்டத்தைத் தன் வசப்படுத்தி வைத்திருந்த இயக்குநர் ஷங்கரிடம்.

அது அடுத்த சரவெடி!

-கனவு தொடரும்...

Nerd
27th June 2009, 11:19 PM
ஒரு கனவின் இசை! ஏ.ஆர்.ரஹ்மான் -- Part 12

கிருஷ்ணா டாவின்ஸி
வி.ஐ.பி. வாழ்க்கைத் தொடர்

இயக்குநர் எஸ்.ஏ.சந்திரசேகரனிடம் உதவியாளராகப் பணியாற்றிவிட்டு, 'ஜென்டில்மேன்' என்கிற ஸ்கிரிப்ட்டுடன் அப்போதுதான் திரைப்படக் களம் புகுந்திருந்தார் இளைஞர் ஷங்கர். திரைக்கதையில் ஏகப்பட்ட ஃபேன்டஸி அயிட்டங்களை வைத்திருந்தார். பாக்தாத் திருடன் போல் ஒரு ஹீரோ, அவன் செய்யும் சாகசங்கள், இளமை கொப்பளிக்கும் நாயகிகள், அட்டகாசமான நடனக் காட்சிகள் என்று ஒவ்வொரு ஃப்ரேமும் அவர் மனதில் ஓடிக்கொண்டு இருந்தது. ஃபோக், வெஸ்டர்ன், கர்னாட்டிக், என்று ஒவ்வொரு பாட்டுக்கும் ஒவ்வொரு பாணி இசை என்று தீர்மானித்திருந்தார்.

கேமராவுக்கு ஜீவா, வசனத்துக்கு பாலகுமாரன், நடனத்துக்கு பிரபுதேவா என்று முக்கியமானவர்களை ஒப்பந்தம் செய்த அவருக்குத் தகுந்த இசைஅமைப்பாளர் மட்டும் கிடைக்கவில்லை. எத்தனையோ புதிய இசையமைப்பாளர்களின் சாம்பிள் இசை கேட்டும் திருப்தி வரவில்லை. புதிய இயக்குநர் என்பதால் பிரபல இசையமைப்பாளர்களிடமும் தன் மனதில் உள்ளவற்றை வெளிப்படையாகச் சொல்லிப் பாடல்களைச் சுதந்திரமாக வாங்க முடியாது. அவர் அப்போது எதிர்பார்த்தது எல்லாம் ஓர் இளம் இசையமைப்பாளர்; புதுமை நெஞ்சம்கொண்டவர்; இளைஞர்களின் மனதைக் கொள்ளையடிக்கும் இசைத் திறன் வாய்ந்தவர்.

ஒருநாள் காலையில், டிபன் சாப்பிட்டுக்கொண்டே டி.வி. பார்த்துக்கொண்டு இருந்தார் ஷங்கர். அப்போது டி.வி-யில் 'சின்னச் சின்ன ஆசை' பாடல் ஒளிபரப்பாகியது. இப்படி ஒரு மாடர்ன் இசையைத்தான் அவர் தேடிக்கொண்டு இருந்தார். உடனே, அந்த இசையமைப்பாளர் யார் என்று தேடிக் கண்டுபிடித்து, அவரை ஒப்பந்தம் செய்தார். 'ஜென்டில்மேன்' என்கிற அடுத்த புயல் மையம்கொண்டது. ஒரு பிரமாண்டமான 'பார்ட்னர்ஷிப்'புக்கான ஆரம்பமாக அது இருந்தது.

ரஹ்மான் பற்றி ஷங்கர் நெகிழ்வுடன் சொல்கிறார்... "ஏ.ஆர்.ரஹ்மான்... இந்த ஒரு வார்த்தை போதும். அதுவே எல்லாவற்றையும் சொல்லிவிடும். சிச்சுவேஷனின் 'மூடு'க்குத் தகுந்தாற்போல் இசையமைப்பதில் அவரைப் போன்ற திறமைசாலியை நான் பார்த்ததில்லை. எது 'கிளிக்' ஆகும், எது ஆகாது என்று அவர் தீர்மானம் செய்வது எப்போதுமே சரியாகவே இருக்கும். ஒரு பாட்டை அணுஅணுவாக அவர் அலங்கரிப்பதில் பெரும் உழைப்பு இருக்கிறது. 'உன் பாடல் இசை சரியில்லை' என்று யாராவது சொல்லக்கூடிய சந்தர்ப்பத்தையே அவர் உரு வாக்குவதில்லை. எனக்கு ரஹ்மானிடம் பிடித் ததே அந்தப் போராட்டக் குணம்தான். 'ழிமீஸ்மீக்ஷீ sணீஹ் பீவீமீ' என்கிற ஸ்பிரிட் அது!"

பல இசையமைப்பாளர்கள், 'ரஹ்மான் என்கிற அந்தப் பையனிடம் இருந்து கம்ப்யூட்டரைப் பிடுங்கிவிட்டால், இசை நின்றுவிடும்' என்றெல்லாம் அப்போது கமென்ட் அடித்துக்கொண்டு இருந்தார்கள். ஆனால், அடுத்து வந்த 'புதிய முகம்' படத்திலும் தன் திறமையை நிரூபித்தார் ரஹ்மான். 'ஜூலை மாதம் வந்தால்...', 'நேற்று இல்லாத மாற்றம்' போன்ற பாடல்களும் மென்மையான டெக்னோ இசையில் சூப்பர் ஹிட் ஆகின. மலையாளப் படமான 'யோதா' வில் அதன் திரைக்கதைக்கு ஏற்ப, திபெத்திய, நேபாளிய மற்றும் புத்த மத கலாசார இசையைக் கொடுத்திருந்தார் ரஹ்மான். தெலுங்கில் அவர் இசையில் வெளியான 'சூப்பர் போலீஸ்', 'கேங் மாஸ்டர்' படங்களில் இசை நன்றாக இருந்தும் படங்கள் ஓடாததால் பாடல்களும் பிரபலமாக வில்லை. ரஹ்மானால் ஒரே 'பேட்டர்ன்' இசை யைத்தான் தர முடியும், அவர் மென்மையான இசை தரும் இசையமைப்பாளர் என்கிற பேச்சு விமர்சகர்களிடையே இருந்தது.

ஆனாலும், ஷங்கர் மனதில் ரஹ்மானிடம் மிகப் பெரும் திறமை இருப்பதாகப் பட்சி சொல்லியது. அவர் தன் படத்துக்காக விரும்பியதோ அதிரடி இசை. அதுவும் குறிப்பிட்ட ஒரு பாடலுக்கு ரயிலின் வேகத்தோடு கூடிய இசை பட்டையைக் கிளப்ப வேண்டும். தமிழ்நாடே அந்தப் பாட்டுக்கு எழுந்து ஆட வேண்டும். ரஹ்மானால் அதைத் தர முடியுமா?

கோடம்பாக்கம் 'பஞ்சதன்' ஸ்டுடியோவில் ரஹ்மானை முதலில் சந்தித்தபோது, இந்தச் சிறுவனா இசையுலகில் கலக்கி வருவது என்று அவருக்கு ஆச்சர்யமாக இருந்தது. அதிகம் பேசாமல், டெக்னிக்கல் விஷயங்களை மட்டும் பேசிய அந்த இளைஞரை ஷங்கருக்குப் பிடித்திருந்தது. அறை முழுக்கத் திண்டு போட்டு அமர்ந்து ஹார்மோனியத்தில் டியூன்களைப் பிடிக்கும் வழக்கமான சினிமா பாணி 'கம்போஸிங்' இல்லாமல், முழுக்க முழுக்க ஸ்டுடியோ அட்மாஸ்பியரில் வேலை பார்த்த ரஹ்மானுக்கும் ஷங்கருக்கும் சரியான அலைவரிசை அமைந்தது. ஜென்டில்மேன் கதையை ஷங்கர் விவரித்த விதம் ரஹ்மானுக்கும் பிடித்துப்போனது. 'ஓ.கே. விரைவில் சந்திப்போம்' என்று கை கொடுத்து விடை பெற்றார்கள் இருவரும்.

"எங்களுக்கு அந்த அமைப்பே ரொம்ப வித்தி யாசமா இருந்தது. ரஹ்மான், 'சிச்சுவேஷன்ஸ் மட்டும் சொல்லுங்க போதும். நான் கொஞ்சம் டைம் எடுத்துக்கிட்டு டியூன்களை அனுப்பறேன்'னு சொன்னார். சொல்லிட்டு, திரும்பி வந்துட்டோம். ஒரு வாரத்துல சில டியூன்கள் கேசட்டில் ரிகார்ட் ஆகி வந்தது. எல்லாமே ரொம்ப சூப்பரா இருந்தது. ஷங்கர் சார் மற்றும் அசிஸ்டென்ட்டுகள் எல்லாருக்கும் ரொம்ப சந்தோஷமாயிடுச்சு. மறுபடி ரஹ்மானைச் சந்திச்சு சில ஐடியாக்களை, சிச்சுவேஷன்களைச் சொல்லிட்டு வந்தார் ஷங்கர். கொஞ்சம் கொஞ்சமா பாட்டுக்கள் மெருகேற ஆரம்பிச்சிடுச்சு. முக்கியமா அந்த 'சிக்குபுக்கு ரயிலே' பாட்டு... ஒரு டைரக்டருக்கே சவால் கொடுக்கக்கூடிய டியூன். சரசரன்னு ஒரு வேகம் எங்க யூனிட்டுக்கே பத்திக்கிச்சு! ஷங்கர் சார் புத்துணர்ச்சியோடு பாடல் காட்சிகளைப் படமாக்குவதில் இறங்கி னார்" என்கிறார் அப்போது ஷங்கருடன் இணைந்து பணியாற்றிய இயக்குநர் மாதேஷ்.

ஜி.வி.பிரகாஷ் என்கிற சின்னப் பையனின் குரலில் 'சிக்குபுக்கு சிக்குபுக்கு ரயிலே' என்கிற மழலைச் சத்தத்துடன் தொடங்கும் அந்தப் பாடல், எடுத்த எடுப்பிலேயே சுரேஷ் பீட்டர்ஸின் கரகர குரலில் டாப் கியருக்கு எகிறியது. 'ஜென்டில்மேன்' படமும் சூப்பர் ஹிட்! அத்துடன் அதில் இருந்த 'உன் வீட்டுத் தோட்டத்தில்', 'ஒட்டகத்தக் கட்டிக்கோ', 'பார்க்காதே... பார்க்காதே...' போன்ற பாடல்களும் ஹிட்டோ ஹிட். ஷங்கர் எதிர்பார்த் தபடியே 'சிக்குபுக்கு ரயிலே' பாடல் தியேட்டர்களில் திருவிழாவையே எற்படுத்தியது. மெல்லிசை மட்டும் அல்ல நாட்டையே கலக்கக்கூடிய அதி ரடிப் பாடல்களையும் தரக்கூடியவர் ரஹ்மான் என்பது நிரூபணமாயிற்று.

"பெரிய ஹைடெக் ஸ்டீரியோக்களில் மட்டும் அல்லாமல், சாதாரண பரோட்டாக் கடை டேப் ரிக்கார்டர்களிலும், ரேடியோக்களிலும் பாடல்கள் பிரபல மாக வேண்டும். அப்போதுதான் மக்களைச் சென்ற டைய முடியும்" என்றார் ரஹ்மான் அப்போது.

இந்திய இசைக் கருவிகளில் மேற்கத்தியச் சத்தங்களை இசையமைப்பாளர்கள் கொடுத்துக்கொண்டு இருந்த காலகட்டத்தில் அப்படியே அதற்கு நேர்மாறாக, மேற்கத்திய இசைக் கருவிகளில் இந்திய இசையைக் கொண்டுவந்தார் ரஹ்மான். அது ஓர் இசைப் புரட்சி என்பதில் சந்தேகம் இல்லை. இன்னொரு விஷயம், அதிரடி இசையைக் கொடுப்பதில் ஆர்வம் உள்ள ரஹ்மான் அன்று முதல் இன்று வரை, தரம் குறைந்த குத்துப் பாடல் ஒன்றைக்கூட கம்போஸ் செய்ததில்லை என்பதும் உண்மை.

ஷங்கரின் இரண்டாவது படமான 'காதலன்'... ரஹ்மான் அடுத்தகட்ட இசைக்குப் பாய்ந்திருந்தார். பாடகர் உன்னிகிருஷ்ணனின் முதல் பாடலான 'என்னவளே... அடி என்னவளே' தேசிய விருதைத் தட்டிச் சென்றது. அந்தப் பாடலின் தாலாட்டும் கர்னாடக இசை ராகத்துக்கு ரசிகர்கள் மயங்கினார்கள். 'இந்திய இசைக் கலாசாரப் பாரம்பரியத்தில் இரண்டாயிரம் வருடங்களாக அந்த டியூன் இருப்பதாக' அப்போது குறிப்பிட்டார் ரஹ்மான். ஒரு பாரம்பரிய கர்னாடக இசைப் பாடல் அவருடைய 'ஸ்டேட் ஆஃப் தி ஆர்ட்' இசைப்பதிவில் (குறிப்பாக, அந்தப் புல்லாங்குழல் ஒலி) எல்லோரையும் கிறங்கடித்தது.

அந்தப் படத்தில் இடம்பெற்ற இன்னொரு பாடலான 'முக்காபுலா'தான் ரஹ்மான் அப்போது தேசிய அளவில் அடித்த 'டிஎல்எஃப்' மேக்ஸிமம் சிக்ஸர். ரஹ்மானின் எத்தனையோ அற்புதமான இசைகொண்ட பாடல்கள் எல்லாம் பல குப்பைப் படங்களில் இடம் பெற்று, மட்டமான விஷூவல்களில் சிக்கிச் சின்னாபின்னமாகி இருக்கின்றன. ஆனால் மணிரத்னம், ஷங்கர் போன்ற வெகு சில இயக்குநர்களே ரஹ்மானின் முரட்டு இசைக் குதிரையில் சரியாகச் சவாரி செய்பவர்கள். அதற்குச் சரியான உதாரணம் 'முக்கா புலா'.

கௌபாய் ஸ்டைலில், கிராஃபிக்ஸ் கலக்கல்களுடன், வாலியின் பாடல் வரிகளில், பிரபுதேவா பிய்த்து உதறிய அந்தப் பாட்டு இந்தியா முழுக்க கோலாகலமான சூப்பர் ஹிட் ஆனது. மைக்கேல் ஜாக்சனின் 'பீட் இட்', 'திரில்லர்' போன்ற பாடல்களின் வீடியோக்கள்தான் அதற்கு முன்பு பல இசையமைப்பாளர்களையும் டைரக்டர்களையும் பாதித்திருந்தது. அதற்குப் பிறகு அவர்களைக் கடுமையாகப் பாதித்து பல முறை காப்பி அடிக்கவைத்த பாட்டு அது.

'இது என்னடா புது இசையாக ஒலிக்கிறதே' என்று மிரண்ட சில ஹிந்தி இசையமைப்பாளர்கள் ரஹ்மானின் பாடல்களை அவசர அவசரமாகத் தேடிப் பிடித்து உடனே காப்பி அடிக்கத் தொடங்கினார்கள். 'டியூன்ஸ்மித்ஸ்' என்று கிண்டலாக அழைக்கப்படும் அவர்கள் சற்றும் கூச்சமில்லாமல் ரஹ்மானின் பல பாடல்களைக் கொஞ்சம் கொஞ்சம் மாற்றி, நெஞ்சில் கொஞ்சம் ஊற்றிப் பிரதி எடுத்தார்கள்.

இந்திய கின்னஸ் புத்தகமான 'லிம்கா புக் ஆஃப் ரிக்கார்ட்ஸ்'ல் 'இந்தியாவின் அதிகப் பிரபலமானபாடல்' என 'முக்காபுலா' பதிவு செய்யப்பட்டது. அடுத்தடுத்து வெளியான 'இந்தியன்', 'ஜீன்ஸ்', 'முதல்வன்', 'திருடா திருடா', 'டூயட்' போன்ற படங்களின் சூப்பர் ஹிட் பாடல்களும் கொஞ்சமும் கவலையின்றி ஹிந்தியில் திருடப்படுவதைக்கண்டு மிரண்டுபோனார் ரஹ்மான்.

இதற்கு ஒரே வழி, நேரடியாக ஹிந்திப் பட இசைஅமைப்பில் இறங்குவதுதான் என்பது அவருக்குப் புரிந்தது. ராம்கோபால் வர்மா அப்போது தன் புதிய படமான 'ரங்கீலா'வுக்காக ஓர் இசையமைப்பாளரைத் தேடிக்கொண்டு இருந்தார். அவருடைய நண்பர் மணிரத்னம் அப்போது சிபாரிசு செய்த பெயர் ரஹ்மான்.

ரஹ்மான் என்னும் வெற்றிக் குதிரை ஹிந்திப் பக்கம் தன் பாய்ச்சலைத் திருப்பியது!

littlemaster1982
3rd July 2009, 10:28 AM
ஒரு கனவின் இசை! ஏ.ஆர்.ரஹ்மான் -- Part 13

கிருஷ்ணா டாவின்ஸி
வி.ஐ.பி. வாழ்க்கைத் தொடர்

சிறு வயதில் ரஹ்மானுக்குப் பிடித்தமாக இருந்த விஷயங்கள், இரவு தாமதமாகப் படுக்கைக்குச் செல்வது, கேரம்போர்டு விளையாடுவது, காலையில் மிக லேட்டாக எழுந்திருப்பது இவைதான். அம்மா எத்தனையோ முறை பியானோ வகுப்புக்குச் செல்ல அதிகாலை எழுப்பும்போதும் 'இன்னும் தூங்க வேண்டும்' என்று அடம் பிடித்த குழந்தைதான் அவர். இசையமைப்பாளராக ஆன பின், அவருடைய 'வொர்க்கிங் ஸ்டைல்' அவருக்குப் பிடித்த மாதிரியே ஆகிப்போனது.

இரவு 10 மணிக்கு மேல்தான் தன் ரெக்கார்டிங் ஸ்டுடியோவுக்குள் நுழைவார் ரஹ்மான். இசைக் கலைஞர்கள் ஏதோ நைட் டியூட்டி பார்ப்பது போல் வந்திருப்பார்கள். ரஹ்மான் மெதுவாகத் தன் பணியை ஆரம்பிப்பார். அது முடிவுக்கு வரும்போது அதிகாலை மூன்று அல்லது நான்கு மணி ஆகியிருக்கும். அப்போதுதான் உறங் குவதற்காகச் செல்வார் ரஹ்மான். இசைக் கலைஞர்களும் தங்கள் டியூட்டி முடிந்து களைப்புடன், ஆனால் மிகுந்த மனத் திருப்தியுடன் வீட்டுக்குத் திரும்புவார்கள். அவர்களுக்கு இது மிகப் புதிய அனுபவம்.


நள்ளிரவுகளில் வேலை பார்ப்பது அந்த இசைக் கலைஞர்களுக்கு ஆரம்பத்தில் கொஞ்சம் சங்கடமாக இருந்தாலும், ரஹ்மான் கொடுத்த சுதந்திரமும், நல்ல சம்பளமும், அவர்களின் தனிப்பட்ட கற்பனைத் திறமைக்குக் கொடுத்த அங்கீகாரமும் ரொம்பவே உற்சாகப்படுத்தின. அவர்களும் ரஹ்மானின் நைட் டியூட்டி கல்ச்சருக்குப் பழக்கப்பட ஆரம்பித்தார்கள். சிவப்பு மற்றும் வெள்ளை நிற கர்ட்டன்களால் சூழப்பட்ட அந்த அமைதியான பஞ்சதன் ஸ்டுடியோ அவர்களுக்கு மிகப் பிடித்தமான ஒன்றாக மாறியது. இன்றைக்கும் மாலை ஏழு மணிக்கு மேல் ஒவ்வொரு இசைக் கலைஞராக ரஹ்மானின் இல்லத்தில் இசைக் கருவிகளுடன் நுழைவதைக் காண முடிகிறது. (பஞ்சதன் ஸ்டுடியோ இன்றைக்கு வேறு ஓர் வடிவத்தில் எங்கேயோ போய்விட்டது.)

தன் முதல் படத்துக்கு இசை அமைத்தபோது ரஹ்மானிடம் பெரிய 'எக்ஸைட்மென்ட்' ஏதும் இருக்கவில்லை. இதுவே சினிமாவின் கடைசிப் பணியாக இருக்கக் கூடும் என்றுகூட அவர் நினைத்தார். ஆனால், புகழ் அவரைத் தன் வழியே அழைத்துச் சென்றது. அடுத்தடுத்து அவர் பல ஹிட்களைக் கொடுத்தாலும், விமர்சகர்கள் சும்மா இருப்பார்களா?

அடுத்த ஏவுகணையை வீசினார்கள். 'ரஹ்மான் ஒரு நவீன நகரத்து இசைக் கலைஞர். கிராமத்து இசை அவருக்குப் பரிச்சயம் இல்லாத ஒன்று. அங்கே அவர் கிளீன்போல்டு ஆகிவிடுவார்' என்பது அவர்களின் யார்க்கர் குற்றச்சாட்டு. ஆனால், கங்கை அமரன் அப்போது, "ரஹ்மானின் இசை கம்ப்யூட்டர் யுகத்துக்கான இசைதான். ஆனால், அது வெறும் எலெக்ட்ரானிக் சத்தம் இல்லை. அதில் ஆன்மா உண்டு. மிகவும் புத்திசாலித்தனமான இசை ரஹ்மானுடையது. டிஜிட்டல் இசையாக இருந்தாலும், அவர் அடிப்படையான கர்னாடக மரபை மீறுவதில்லை" என்று புகழா ரம் சூட்டினார்.

தன் அத்தனை படங்களுக்கும் இளையராஜா என்கிற இசை மேதையின் கைகளைப் பற்றிக்கொண்டு பவனி வந்த பாரதிராஜாவும் ஒரு கட்டத்தில் 'மாஸ்ட்ரோ'வைப் பிரிய நேர்ந்தது. அப்போது அவர் கரம் கோத்தது ரஹ்மானுடன்தான். 'கிழக்குச் சீமையிலே' படத்தில் ஆரம்பித்த அந்தக் கூட்டணி, ரஹ்மான் 'folk' எனப்படும் நாட்டார் இசையிலும் திறன் படைத்தவர்தான் என்பதை நிரூபித்தது.

'கத்தாழங்காட்டு வழி', 'போறாளே பொன்னுத்தாயி' 'மானூத்து மந்தையிலே' போன்ற பாடல்கள் தமிழர்களின் இதயத்தைக் கொள்ளை அடித்து சூப்பர் ஹிட் ஆகின. அதைத் தொடர்ந்து, 'கருத்தம்மா', 'அந்திமந்தாரை', 'தாஜ்மஹால்', 'கண்களால் கைது செய்' போன்ற படங்களில் இசையமைத்த ரஹ்மான் பல மறக்க முடியாத பாடல்களைக் கொடுத்தார். 'தென்மேற்குப் பருவக்காற்று' பாடலை இப்போது கேட்டாலும் தேனிப் பக்கம் வீசும் சாரலை நாம் அனுபவிக்க முடியும். 'சொட்டச் சொட்ட நனையுது தாஜ்மஹால்' பாடலில் மழையின் குளிரை இப்போதும் லேசான நடுக்கத்துடன் நினைவுகூர முடியும். ரஹ்மானால் கிராமியப் பாடல்களைக் கொடுக்க முடியாது என்கிற விமர்சனத்தை உடைத்துப் போட்டன இந்தப் பாடல்கள்.

ரஹ்மானுடன் பணிபுரிந்த அனுபவம் பற்றிச் சொல்கிறார் பாரதிராஜா. "இளையராஜா ஒரு பிறவி இசை மேதை. ஒரு கட்டத்தில் அவருடன் இணைந்து பணியாற்ற முடியாத கட்டத்தில்தான் நான் ரஹ்மானுடன் இணைந்தேன். என் படங்களுக்கான இசையிலும் சில மாற்றங்கள் வேண்டும் என்று நான் நினைத்ததும் ஒரு காரணம். ரஹ்மா னுடைய இசை ஒரு போதையைத் தருவதென்பது உண்மை. ஒருமுறை அவருடன் வேலை செய்துபாருங்கள். அப்புறம் வேறு யாருடனும் வேலை பார்க்க உங்களுக்குத் தோன்றாது."

'போஸ்ட்மாடர்னிஸம்' அதாவது 'பின் நவீனத்துவம்' என்கிற வார்த்தையைச் சொல்லிப் பல இலக்கியவாதிகள் பயமுறுத்துகிறார்களே, அது வேறொன்றும் இல்லை. சிம்பிள் மேட்டர். 'எந்த விஷயமாக இருந்தாலும் சரி, இத்தனை நாள் இதுதான் உண்மை, இதுதான் வழக்கம் என்று நீ நம்பிக்கொண்டு இருக்கிறாய் அல்லவா? அதைக் கேள்வி கேள்; விமர்சனங்களால் அதை உடைத்துப் போடு... புதிய சிந்தனை வரட்டும்... அந்தக் கட்டுடைப்பின் மூலம் புதிய கற்பனைகள் பிறக்கட்டும்' என்பதுதான் அது. இலக்கியம், அரசியல், சினிமா, விளையாட்டு, பெண் விடுதலை, பொருளாதாரம், ஓவியம் என்று சமூகத்தின் எல்லா கூறுகளிலும் ஒரு புரட்சி அலையை உருவாக்கிய அந்த பின்நவீனத்துவச் சிந்தனை,

இசையை மட்டும் விட்டுவைக்குமா என்ன?

பாப் மார்லே, எல்விஸ் ப்ரெஸ்லி, பீட்டில்ஸ், ஃபிராங்க் சினாட்ரா, ஸ்டீவி வொண்டர், சாந்தனா, ப்ரூஸ் ஸ்பிரிங்ஸ்டீன், குயீன், டிரேஸி சாப்மேன் போன்ற எத்தனையோ இசைக் கலைஞர்கள் அந்த சிந்தனையில் தாக்குண்டு, சம்பிரதாய இசையை உடைத்துப்போட்டு புதிய புதிய இசை வடிவங்களை உண்டாக்கியவர்கள். அந்த வகையில் பார்க்கப் போனால் தாரை, தப்பட்டை போன்ற விளிம்பு நிலை மக்களின் இசையைத் தமிழ்த் திரையில் அட்டகாசமாக அறிமுகப்படுத்திய பெருமைக்கு உரியவர் இளையராஜா.

ரஹ்மான் இந்திய இசையில் புகுந்து புறப்பட்ட அதே நேரத்தில் ஓசைப்படாமல் ஐரோப்பாவிலும், மத்திய அமெரிக்காவிலும், தென் அமெரிக்காவிலும் நாடோடி மற்றும் பழங்குடி மக்களின் இசை பொது மக்களின் மத்தியில் பெரிய வரவேற்பைப் பெற்று வந்தன. 'World music' எனப்படும் உலக இசைக்கான மேடைகளில் சாதி, மத, இன வேறுபாடுகளைக் களைந்த இசைக் கலைஞர்கள் ஒன்று கூடினார்கள். உலக அமைதி, வறுமையை ஒழிக்க நிதி திரட்டுதல், எய்ட்ஸ் நோய் ஒழிப்புப் பிரசாரம், அணு ஆயுத ஒழிப்புப் போராட்டம் போன்ற பதாகைகளைத் தாங்கி வெம்ப்ளி போன்ற மைதானங்களில் மாபெரும் இசை நிகழ்ச்சிகள் நடைபெற்றன. எத்தியோப்பியா வறுமைச் சாவுகள் உலகையே அதிரவைத்தபோது, அமெரிக்க மற்றும் பிரிட்டிஷ் இசைக் கலைஞர்கள் ஒன்று கூடி, 'USA for Africa' என்கிற இசை ஆல்பத்தைக் கொண்டுவந் தார்கள். சாட்டிலைட் டெலிவிஷன் உபயத்தில் இந்த இசை நிகழ்ச்சிகளை உலகம் பூராவும் உள்ள இசை ரசிகர்களும் கண்டுகளித்தார்கள்.

இசை உலகில் ஏற்பட்டு வந்த இந்த மாற்றங்களை எல்லாம் ஆர்வத்துடன் கவனித்தபடி இருந்தார் ரஹ்மான். இசையில் புதிய மாற்றங்களைக் கொண்டு வர வேண்டும் என்று அவர் மனம் துடித்தது. அதன் அதிரடிப் பாய்ச் சலாக மணிரத்னத்தின் 'திருடா... திருடா' படத்தில் ஒவ்வொரு பாடலையும் ஒவ்வொரு ரகத்தில் இசையமைத்தார் ரஹ்மான். 'வீரபாண்டிக் கோட்டையிலே', 'கொஞ்சம் நிலவு, கொஞ்சம் நெருப்பு', 'தீ தீ தித்திக்கும் தீ' போன்ற பாடல்களின் இசைக் கோவைகள் ரசிகர்களுக்கு மிகப் புதிதாக இருந்தன. முதல் முறையாக அந்தத் தமிழ்ப் பாடல்கள் ஹிந்தி இசையின் டாப் 10 சார்ட்டுகளில் இடம் பெற்றன. அடுத்து வந்த 'டூயட்' படத்தில் ரஹ்மான் கதிரி கோபால்நாத்துடன் இணைந்து கொடுத்திருந்த சாக்ஸபோன் இசை வேறொரு தளத்தில் ரசிகர்களை மயக்கியது.

எல்பி ரெக்கார்டுகள் என்கிற இசைத்தட்டுகள் போய், அடுத்ததாக கேசட் வந்தது. அதற்கும் அடுத்தபடியாக சி.டி. என்கிற குறுந்தகடுகள் வந்ததுதான் இசைப்பதிவு டெக்னாலஜியில் ஏற்பட்ட மாபெரும் புரட்சி. சி.டி-க்களின் மூலம் இசைச் சந்தையில் வந்து குவிந்தன உலக இசைக் கலைஞர்களின் பாடல்கள். 'அடடா, இப்படிப்பட்ட உன்னதமான இசை உலகில் உள்ளதா?' என்று ரசிகர்கள் பரவசப்பட் டார்கள். அதே நேரம், பல இசையமைப்பாளர்களுக் குச் சுலபமாகக் காப்பி அடிக்கவும் இந்த சி.டி-க்கள் உதவின.

பிரபல ஹிந்தி இசையமைப்பாளர் ஆர்.டி.பர்மனைப் பற்றி ஒரு விஷயத்தைச் சொல்வார்கள். சி.டி, இன்டர்நெட், மியூஸிக் டவுன்லோட், இசை டி.வி. சேனல்கள் என்று எதுவும் இல்லாத அந்தக் காலகட்டத்தில் பர்மன் சற்று ஓய்வு கிடைத்தால், உடனே வெளிநாடுகளுக்குப் பறந்துவிடுவார். அங்கே வெளியாகி இருக்கும் புதிய இசைத் தட்டுகளை அப்படியே அள்ளுவார். இந்தி யாவுக்குத் திரும்பி அவற்றைப் போட்டுக் கேட்டு, அப்படியே சூடான சப்பாத்திகளாகப் பிரதி எடுத்துவிடுவார். 'ஷோலே' படத்தில் இந்தியா முழுக்கப் பிரபலமான 'மெஹ்பூபா'கூட அப்படிச் சுட்ட அரபிப் பழங்களில் ஒன்று என்கிறார்கள் இசை ரசிகர்கள்.

ஆரம்ப காலத்தில் டாக்டர் ஆல்பனின் இசைத் தொகுதிகளிலும், 'ஏஸ் ஆஃப் பேஸ்' போன்ற குழுக்களின் இசையிலும் கவரப்பட்ட ரஹ்மான் ('இந்தியன்' படத்தின் 'டெலிபோன் மணி போல்' பாடல் அதே சாயலைக்கொண்டது) பிற்பாடு அந்தப் பாதிப்புகளில் இருந்து தன்னை முழுவதுமாக விடுவித்துக்கொண்டார்.

இந்தியத் திரை இசையில் ஒரு மரபு உண்டு. 'பல்லவி, சரணம், பல்லவி' என்கிற இந்தச் சம்பிரதாயத்தை உடைத்து முதல் 'பின்நவீனத்துவ' இசை வடிவத்தைக் கொண்டுவந்தார் ரஹ்மான். அதற்குத் தமிழைவிட ஹிந்திப் பட உலகம் புதிய களத்தை உருவாக்கிக் கொடுத்தது. 1994-ம் வருடம் பிரபல இயக்குநர்களான சுபாஷ் கை, கோவிந்த் நிஹ்லானி இருவரும் ரஹ்மானைத் தங்கள் படங்களுக்காக 'புக்' செய்தார்கள். அவர்கள் மிகவும் நவீன சிந்தனை உள்ள இயக்குநர்கள் என்பதால், ரஹ்மான் புதிய இசையை அந்தப் படங்களில் கொண்டு வர ஆசைப்பட்டார். அதற்கான இசையை கம்போஸ் செய்யவும் ஆரம்பித்தார். ஆனால், அந்தப் படங்கள் விரைவிலேயே கைவிடப் பட்டன. மனம் தளர்ந்தார் ரஹ்மான். அப்போதுதான் ராம்கோபால் வர்மா 'ரங்கீலா'வுக்குப் பணியாற்றுமாறு அவரை அழைத்தார்.

'ரங்கீலா'... ரஹ்மானின் பிரமாண்ட வளர்ச்சியின் ஆரம்பம் அது!

-கனவு தொடரும்...

littlemaster1982
10th July 2009, 08:23 AM
ஒரு கனவின் இசை! ஏ.ஆர்.ரஹ்மான் -- Part 14

கிருஷ்ணா டாவின்ஸி
வி.ஐ.பி. வாழ்க்கைத் தொடர்

''அந்தச் செய்தி உண்மைதான் என்பதை ஜீரணிக் கவே எனக்குப் பல மணி நேரங்கள் ஆயின. அவரைப் போன்ற எனர்ஜி உள்ள இசைக் கலைஞரை நான் பார்த் தது இல்லை!'' - மைக்கேல் ஜாக்சனின் மரணச் செய்தி வெளியானதும், ரஹ்மானிடம் அத்தனை அதிர்ச்சி!
ரஹ்மான் ஆஸ்கர் வென்றதும் மைக்கேல் ஜாக்சனைச் சந்தித்துச் சில நிமிடங்கள் பேசி இருக்கிறார். சில விநாடிகள் ரஹ்மான் முன் நடனமாடிக் காட்டிஇருக்கிறார் ஜாக்சன். மனம்விட்டுப் பேசி இருக்கிறார். '' 'வி ஆர் தி வேர்ல்டு' பாடலைப் போல் நாம் இருவரும் சேர்ந்து உலக அமைதிக்காக இன்னொரு பாடலை கம்போஸ் செய்வோம்!' என்றும் சொல்லி இருக்கிறார். அது மட்டும் நிகழ்ந்து இருந்தால், உலகத் தரத்தில் ஒரு மிகச் சிறந்த பாடல் ரசிகர்களுக்குக் கிடைத்து இருக்கும். ஒருமுறை, ஜெர்மனியில் நடந்த 'மைக்கேல் ஜாக்சன் அண்ட் ஃப்ரெண்ட்ஸ்' என்ற மாபெரும் இசை நிகழ்ச்சியில், ஜாக்சனுடன் சேர்ந்து இசையமைத்துப் பாடினார் ரஹ்மான்.
இளம் வயதில் ரஹ்மானைப் பாதித்த மிகப் பெரும் இசைக் கலைஞர் மைக்கேல் ஜாக்சன். 'த்ரில்லர்' ஆல்பத்தைத் தொடர்ந்து ஜாக்சனின் அத்தனை பாடல்களையும் தேடித் தேடிக் கேட்டு ஆச்சர்யத்தில் மூழ்கியவர் ரஹ்மான். அந்தக் குரலில் இருந்த ஸ்பிரிச்சுவாலிட்டி அவரை மிகவும் மயக்கியது. 'முக்காபுலா', 'மாயா மச் சீந்திரா' போன்று ரஹ்மான் இசையமைத்த பல பாடல் களின் திரை வடிவம் மைக்கேல் ஜாக்சனின் வீடியோக் களின் பாதிப்புகளில் எடுக்கப்பட்டன (ரிமம்பர் தி டைம்).

ஜாக்சனுக்கும் ரஹ்மானுக்கும் பல ஒற்றுமைகள் உண்டு. இருவருமே மிகச் சிறிய வயதில் இசைத் தொழிலுக்கு வந்துவிட்டவர்கள். இளமையிலேயே பெரிய வெற்றிகளைப் பார்த்தவர்கள். உலக இசைக் கலைஞர்களுடன் கை கோத்தவர்கள். இருவரின் பாடல்களுமே கேட்கக் கேட்கத்தான் பிடிக்கும். காரணம், பாடல்களின் பின்னணி இசையில் இருவருமே பல நுண்ணிய நகாசு வேலைகளைச் செய்து இருப்பார்கள். இருவரின் பாடல்களுமே பொதுவாக ஹைபிட்ச் வகையைச் சார்ந்தவை. மென்மையான பாட்டில்கூட அவர்கள் உச்சஸ்தாயிக்குச் செல்லக் கூடியவர்கள். இருவருமே இஸ்லாம் மதத்துக்கு மாறியவர்கள். திலீப், ரஹ்மானாக மாறினார். மைக்கேல், மிகயீலாக மாறினார். இனி ஜாக்சனின் இசை மட்டுமே நமக்கான ஆறுதல்!

1995-ம் வருடம்... ரஹ்மானின் இசை அடுத்த கட்டத்தை அடைந்த முக்கியமான வருடம். ஷங்கரின் 'காதலன்' படம் ஹிந்தியில் 'ஹம்சே ஹே முகாபுலா' என்ற பெயரில் டப் செய்யப்பட்டது. ஏற்கெனவே தமிழ்ப் பாடல்களாகவே அங்கே ஹிட் ஆன பாடல்கள் ஹிந்தியில் வெளியானதும், வட இந்தியாவின் பட்டிதொட்டிகள் எல்லாம் அதிர்ந்தன. அதே ஆண்டில்தான் ரஹ்மானின் மற்றொரு மாஸ்டர் பீஸ் ஆன 'பம்பாய்' படம் தமிழில் வெளியானது. 'ஹம்மா... ஹம்மா', 'கண்ணாளனே', 'உயிரே', 'குச்சி குச்சி ராக்கம்மா' போன்ற பாடல்கள் சூப்பர் டூப்பர் ஹிட்! ஏற்கெனவே 'சின்னச் சின்ன ஆசை', 'ஊர்வசி... ஊர்வசி' போன்ற பாடல்களில் ஆங்காங்கே பின்னணிக் குரல் மட்டும் கொடுத்து இருந்தாலும், 'அந்த அரபிக் கட லோரம்' பாட்டுதான் ரஹ்மான் சோலோ பாடகராக முழுப் பாடலையும் பாடிய முதல் பாட்டு. மிகவும் ஷார்ப் ஆன அந்தக் குரல் ஹைபிட்ச்சில் பிய்த்து உதறியது. அப்போது மும்பை சினிமா நிகழ்ச்சிகளில் எல்லாம் அந்தப் பாடலைப் பாடுமாறு ரஹ்மானுக்கு கோரிக்கைகள் குவியும். அவர் கூச்சத்தோடு அதை மறுப்பார். (இங்கே ஒரு விஷயம். ரஹ்மானின் பெரும்பாலான அதிரடிப் பாடல்களை மேடை மெல்லிசைக் குழுக்கள் பாடுவது இல்லை. காரணம், ரஹ்மான் தன் ஸ்டுடியோ வில் இருக்கும் ஹைடெக் கருவிகளின் மூலம் கொண்டுவரக் கூடிய எஃபெக்டுகளை மேடையில் கொண்டுவர முடியாததே காரணம். பாடகரின் குரலைக் கூட சிந்தஸைஸ் செய்பவர் ரஹ்மான்!)

'பம்பாய்' பட இசையில் ரஹ்மான் மிக முக்கிய மான இசைக்கோவை ஒன்றைச் செய்து இருந்தார். உலக இசைக் கலைஞர்களின் புருவங்களை உயர்த்தி, 'யார் இவர்?' என்று கேட்கவைத்தது அந்த இசை. முழுக்க முழுக்கப் புல்லாங்குழல் சங்கீதமான அது (வாசித்தவர் ஃப்ளூட் கலைஞர் நவீன்) 'பம்பாய்' படத்தின் தீம் மியூஸிக். 'ஹாண்டிங்' என்று சொல்லப்படும் ஒருவித அமானுஷ்ய ஓசையில், அந்தப் படத்தின் ஆன்மாவாக ஒலித்தது அது. மும்பையின் கலவரக் காட்சிகளில் அதன் பின்ன ணியாக ஒலித்து மிரட்டிய அந்தப் புல்லாங்குழல் இசை பாலிவுட் கலைஞர்களை மயக்கியது. இந்திய பிரிட்டிஷ் கலைஞரான தல்வீன் சிங், தன்னுடைய இசை ஆல்பமான 'சவுண்ட்ஸ் ஃப்ரம் தி ஏஷியன் அண்டர்கிரவுண்ட்'டில் இந்தப் புல்லாங்குழல் இசையையும் சேர்த்து இருந்தார். ரஹ்மானைப் பற்றிய குறிப்புகள் மேற்கத்திய இசை உலகில் முதன்முதலாக அப்போதுதான் இடம் பெற்றன. கிங்ஸ்லி மார்ஷல் என்பவர் அங்கே பிரபல இசை விமர்சகர். அவர் அப்போது இப்படிக் குறிப்பிட்டார், 'அந்தப் புல்லாங்குழல் இசை ஒரு தொட்டிலைப் போல் இங்கும் அங்கும் ஆடுகிறது. கிளாசிக்கல் இசையை இப்படியும் பயன்படுத்த முடியும் என்பது ஆச்சர்யம்தான்! கடந்த சில மாதங்களில் நான் கேட்ட இசைத் தொகுதியில் மிகச் சிறப்பானது இது. இசை அரேஞ்ச்மென்ட்டிலும் தயாரிப்பிலும் இந்த இசை என்னை அசரவைக்கிறது!'

இந்தியத் திரை இசை விற்பனை வரலாற்றில் நம்பர்-1 சாதனை 'ஹம் ஆப்கே ஹைன் கோன்' படப் பாடல்களுக்குச் சொந்தம். சென்னை கோடம்பாக்கத்தில் இசை உருவாக்கும் இளைஞர் ரஹ்மான் அதை உடைத்தார். 'பம்பாய்' பட இசை விற்பனையில் 'ஆல் டைம் பெஸ்ட்'டாக முதல் இடத்தைப் பிடித்தது. அப்போதைய விற்பனை 15 மில்லியன் கேசட்டுகள். (எல்லா மொழிகளையும் சேர்த்து) இந்திய இசை மார்க்கெட்டின் பகாசுர கம்பெனிகள் ரஹ்மானைக் குறிவைத்தன. ஆனால், இத்தனை சாதனைகளுக்குப் பிறகும் ரஹ்மானின் ஹிந்திப் பட நேரடி நுழைவு பல்வேறு காரணங்களால் தள்ளிக்கொண்டே போனது.

ஹிந்தி சினிமாவில் தன் படங்கள் மூலம் புதிய அலையை உருவாக்கியவர் ராம் கோபால் வர்மா. அவருடைய ஒவ்வொரு படத்துக்குமே எப்போதும் ஏக எதிர்பார்ப்பு இருக்கும். அவர் தன் அடுத்த படமான 'ரங்கீலா'வுக்கு ரஹ்மானை ஒப்பந்தம் செய்தார். 'பம்பாய்' படத்தின் இசை ராம் கோபால் வர்மாவை மிகவும் கவர்ந்து இருந்தது. ரஹ்மானின் ஹிந்தி வருகையை அங்கே உள்ள பழம் தின்று கொட்டை போட்ட இசையமைப் பாளர்கள் பொறாமையோடு பார்த்தார்கள். பொதுவாக 'மதராஸி' எனப்படும் தென் இந்தியர்களை அவர்கள் அங்கீகரிப்பது இல்லை. அதற்கு முன் அங்கு சாதித்த பல மகத்தான கலைஞர்கள், தமிழர் களாக இருந்ததால் நீண்ட நாட்கள் தாக்குப்பிடிக்க முடியவில்லை. அதைத் தகத்து எறிந்தவர்கள் இரண்டே பேர்தான். மணிரத்னம், ரஹ்மான்!

'ரங்கீலா' பாடல்கள் வெளியான முதல் சில மணி நேரங்கள் மூச்சைப் பிடித்துக்கொண்டு காத்து இருந்தார்கள் பாலிவுட் இசை மேதைகள். ஒற்றை விசிலாக களேபர ஆரவாரமாக அறிவிப்பு வெளியானது... ஹிட்! மிக நீண்ட இடைவேளைக்குப் பிறகு மும்பையில் 'ரங்கீலா' ஓடிய தியேட்டர்களில் திருவிழாக் களை. 'ரங்கீலா ரே', 'தன்ஹா... தன்ஹா', 'கியா கரே கா' போன்ற பாடல்களுக்கு தியேட்டர்கள் அதிர்ந்து ஆனந்தத் தாண்டவம் ஆடின. ராம் கோபால் வர்மாவின் ஃபிலிம் மேக்கிங்கும் ஊர்மிளாவின் பாடி ஷோவும் அமீர்கானின் நடிப்பும் ரஹ்மானின் ராஜபாட்டை என்ட்ரிக்கு மலர் தூவின. 'ரங்கீலா'வின் கேசட் விற்பனை 'பம்பாயை'த் தாண்டி பிய்த்துக் கொண்டு ஓடியது.
ரஹ்மானின் பெயர் டைட்டிலில் காண்பிக்கப்படும் போது எல்லாம் ரசிகர்கள் இடையே எழுந்த ஆரவாரத்துக்கு ஹிந்தி இசையமைப்பாளர்கள் மிரண்டு தான் போனார்கள்.

லதா மங்கேஷ்கரின் சகோதரியும் மிகச் சிறந்த பாடகியுமான ஆஷா போன்ஸ்லே நீண்ட நாட்களாக வாய்ப்புகள் இன்றி இருந்தார். 'ரங்கீலா' மூலம் அவர் மீது மீண்டும் வெளிச்சம் பாய்ச்சினார் ரஹ்மான். ஒரு குழந்தையின் மழலை தொனிக்கும் அதே வேளையில் கவர்ச்சித் தேனின் இனிமையும் இணைந்த பாவத்தில் அவர் பாடிய 'தன்ஹா... தன்ஹா' பாடல் மகா மெகா ஹிட்! 'ரங்கீலா'வின் பாக்ஸ் ஆபீஸ் ஹிட்டைத் தொடர்ந்த விழாக்களில் ரஹ்மான் மேடைகளிலும், மீடியாவிலும் முன்னிறுத்தப்பட்டது ஹிந்தி சினிமாவுக்கே புதுசு!
'ரங்கீலா'வின் அபார வெற்றி, விநியோகஸ்தர்களை அதைத் தமிழிலும் ரிலீஸ் செய்யத் தூண்டியது. ஆனால், தமிழ் ரசிகர்களை ராம் கோபால் வர்மா, அமீர்கான் ஆகியோர் ஈர்க்க மாட்டார்கள். சரி, எப்படி விளம்பரம் செய்யலாம் என்று யோசித்தவர்கள், பட போஸ்டர்களில் அச்சடித்த வாசகம், 'ஏ.ஆர்.ரஹ்மானின் முதல் சூப்பர் ஹிட் ஹிந்தி இசை!' 'ரங்கீலா' இங்கும் சக்கைப் போடு போட்டது. ஒரே காரணம், ரஹ்மானின் இசை மற்றும் பாடல்கள்!
ரஹ்மானுக்கு தேசிய அளவில் மிகப் பெரிய வாசலைத் திறந்துவிட்டது 'ரங்கீலா'. அதற்கு முன் அவருடைய இசையை எந்தக் கவலையும் இல்லாமல் காப்பி அடித்துக் கொண்டு இருந்த பல இசையமைப்பாளர்கள், ரஹ்மானே நேரடியாக என்ட்ரி கொடுத்துவிட்டதால் திக்கித் திணறித் திண்டாடிவிட்டார்கள். அவர்களிடம் இருந்த ஒரே சாய்ஸ், ரஹ்மானை ஒப்புக்கொண்டு அவரோடு போட்டி போடுவதுதான். அவரை ஒப்புக்கொள்ளலாம்; ஆனால், போட்டி போட முடியுமா என்பதே அவர்களின் கலக்கம்!

தேசிய அளவில் தன் இசைக்கு மேடை கிடைத்துவிட்டதை உணர்ந்த ரஹ்மான், தன் அடுத்த படத்துக்கான ஊதியம் 'ஒரு கோடி ரூபாய்' என்றார். தமிழ் இசையமைப் பாளர்கள் யாருமே நினைத்துக்கூடப் பார்க்க முடியாத ஊதியம் அது. ஆனால், ஹிந்தி வாலாக்கள் 'ஓ.கே. டன்!' என்று சூட்கேஸ்களை அடுக்கிக்கொண்டு சென்னைக்கு ஃப்ளைட் பிடித்தார்கள். அந்த அளவுக்குப் பணம் கொடுக்க முடியாத தயாரிப்பாளர்கள் மற்ற இசையமைப்பாளர்களிடம் சொன்ன ஒரே ஒரு வார்த்தை, 'ரஹ்மான் ஜெய்ஸா கானா!' அதாவது, 'ரஹ்மான் மாதிரியே மியூஸிக் போட்டுக் கொடு!' வேடிக்கையாக அதற்கும் பல இசையமைப்பாளர்கள் தயாராகத்தான் இருந்தார்கள்.

இசை உலகில் தனக்கு மறுவாழ்வு கொடுத்த ரஹ்மானைப் பற்றி ஆஷா போன்ஸ்லே நெகிழ்வுடன் கூறுகிறார்... ''அவருடைய இசை ஒரு மறுமலர்ச்சியைக் கொண்டுவந்தது. எப்போதும் இசையில் அவர் பரிசோதனை செய்துகொண்டே இருக்கிறார். இன்றைய இளைய சமுதாயத்தின் பிம்பமாக அவர் இருக்கிறார். ஹிந்தி சினிமா இசையில் அவர் ஒரு புதிய எழுச்சியை ஏற்படுத்தி இருக்கிறார். எந்த ஒரு பாடகருக்கும் அவருடைய இசை உற்சாகத்தையே கொடுக்கும்... எனக்கும் அதுதான் கிடைத்தது!''
'ரங்கீலா'வின் மூலம் திறந்த சொர்க்க வாசலுக்கு உள்ளே உலகின் மிகப் பெரும் கலையுலகப் பிதாமகன்கள் காத்து இருந்தார்கள். ரஹ்மான் அவர்களை நோக்கிச் சென்றார்!


-கனவு தொடரும்...

SoftSword
10th July 2009, 09:52 PM
wow thread... great writing...
thanks lm & nerd for your great work...

i only read the first episode from the book... after that i somehow missed reading the remainings... but today i did my duty...
looking forward for the next one...

littlemaster1982
17th July 2009, 02:36 PM
ஒரு கனவின் இசை! ஏ.ஆர்.ரஹ்மான் -- Part 15

கிருஷ்ணா டாவின்ஸி
வி.ஐ.பி. வாழ்க்கைத் தொடர்

ஹிந்தி சினிமாவில் 'ரங்கீலா'வின் சூப்பர் ஹிட் என்ட்ரி ரஹ்மானே எதிர்பார்த்திராத பல சாத்தியங்களை உருவாக்கியது. தொடர்ந்து ஏகப்பட்ட ஹிந்திப் பட வாய்ப்புகள் அவரைத் தேடி வந்தன. சேகர் கபூர், மீரா நாயர், சுபாஷ் கய், ராஜ்குமார் சந்தோஷி, கோவிந்த் நிஹ்லானி, அசுதோஷ் காவரிகர், தீபா மேத்தா போன்ற படா படா இயக்குநர்கள் தேடி வந்தனர். எதை விடுவது... எதை ஒப்புக்கொள்வது என்று புரியாமல் தவித்தார் ரஹ்மான். ஹிந்தி மீடியா 'ஆர்.டி. பர்மனின் அடுத்த வாரிசு' என்றெல்லாம் ரஹ்மானைப் பற்றிப் புகழ்ந்து எழுத ஆரம்பித்திருந்த காலகட்டம் அது. தமிழ்நாட்டிலோ 'இசை அரசன்', 'இசைப் புயல்' போன்ற பட்டங்கள் அவரைத் தேடி வர ஆரம்பித்தன.

உலக அளவில் கலக்கிக்கொண்டு இருந்த பல இயக்குநர்கள், தன் இல்லம் தேடி வருவது அவரை மகிழ்வித்தது. அவர்களின் திரைக்கதைகள் காட்டிய பல புதுமையான சிச்சுவேஷன்கள் புதுப் புது இசையை அறிமுகப்படுத்தலாமே என்கிற ஆசையை ஏற்படுத்தின. அவருடைய தேடல்களுக்கு ஆரம்பம் அதுதான்.

ஹிந்திப் படங்களிலேயே செட்டில் ஆகக்கூடிய வாய்ப்புகள் ஏகப்பட்டது வந்தாலும் தமிழிலும் பல படங்களுக்கு விடாமல் இசைஅமைத்தார் ரஹ்மான். 'இந்திரா', 'மிஸ்டர் ரோமியோ', 'லவ் பேர்ட்ஸ்', 'சங்கமம்' போன்ற படங்கள் அப்போது வெளிவந்தன. இந்தப் படங்கள் ஓடாவிட்டாலும் பாடல்கள் ஹிட். 'இந்திரா' படத்தில் 'தொடத் தொட', 'நிலா காய்கிறது' போன்ற பாடல்களின் மெல்லிசை கிறங்கடித்தது. 'சங்கமம்' படத்தில் சங்கர் மகாதேவனின் குரலில் 'வராக நதிக்கரைஓரம்' பாட்டில் வங்காளத்தின் நாட்டார் இசையைப் பயன்படுத்தியிருந்தார் ரஹ்மான். அதே படத்தில் அவர் இசையமைத்த 'முதல் முதல்' என்கிற பாட்டு தேசிய விருதை வென்றது. 'லவ் பேர்ட்ஸ்' படத்தில் ராப் பாடகர் அப்பாச்சி இந்தியனைப் பாடவைத்திருந்தார் ரஹ்மான்.

ரஹ்மான் தன் இசையில் புதுப் புதுப் படிவங்களை அறிமுகப்படுத்துவதை ரசிகர்கள் ஆனந்தப் பரவசத்துடன் கவனித்தார்கள்.

அப்போது உலக இசைத் துறையில் பின்நவீனத்துவத்தின் தாக்கத்தில் ஏற்பட்ட மாற்றங்களில் ஒன்று, 'அழகான, இனிமையான குரல்தான் பாட வேண்டும் என்பது இல்லை. எப்படிப்பட்ட குரலும் அதன் தன்மைக்கேற்ப அழகானதே' என்பதுதான். மேற்கத்திய இசையில் ப்ரூஸ் ஸ்பிரிங்ஸ்டீன், டீனா டர்னர், ரிச்சர்ட் மார்க்ஸ், பிரயன் ஆடம்ஸ், பான் ஜோவி போன்றவர்கள் தங்களுடைய வித்தியாசமான கரகர குரலில் ஏகப்பட்ட ஹிட்களைக் கொடுத்துக்கொண்டு இருந்தார்கள். 'பாய் ஜார்ஜ்' என்கிற பாடகர் தன்னுடைய 'திருநங்கை'க் குரல் மற்றும் தோற்றத்தால் இசை மேடைகளில் கலக்கிக்கொண்டு இருந்தார். இதற்குஎல்லாம் சிகரம் வைத்தாற் போல் இருந்தது மைக்கேல் ஜாக்சனின் மிக வித்தியாசமான குரல்.

'சொப்ரானோ ஃபால்செட்டோ' என்கிற மேற்கத்திய இசைப் பிரிவின் கீழ் வரக்கூடிய ஜாக்சனின் குரல் பெண்மையும் ஆண்மையும் கலந்து ஒலிக்கக் கூடிய வித்தியாசமான ஒலி. ஒரு திருநங்கையின் குரல் என்றுகூடப் பல விமர்சகர்கள் அதைப் பாராட்டி இருக்கிறார்கள். அந்தக் குரலுக்கு இணையான வேறு ஒரு குரல் இந்த உலகத்தில் இல்லை என்பதே உண்மை. அவருடைய குரலுக்கும் இசைக்கும் பெரிய ரசிகராக இருக்கும் ரஹ்மானின் மனதில் பாடகர்களின் குரல் தன்மையைப் பற்றிய மதிப்பீடுகளும் புரட்சிகரமாக மாறியிருந்தன.

இசைக்கு அழகான குரல்தான் வேண்டும் என்பது இல்லை. வித்தியாசமான எந்தக் குரலுமே இசைக்கு ஏற்றதுதான். அதுவே ஒரு பாட்டுக்கு வேறுவிதமான ஏற்றத்தைத் தந்துவிடும் என்று நம்பும் ரஹ்மான், தன் இசையில் பலப் பல புதிய குரல்களை அறிமுகம் செய்ய வேண்டும் என்று தீர்மானித்திருந்தார். சினிமா இசை என்கிற இரும்புக் கோட்டையின் கதவுகள் இளம் பாடகர்களுக்காகத் திறக்கப்பட்டன.

உன்னிகிருஷ்ணன், சுஜாதா, சுரேஷ் பீட்டர்ஸ், சங்கர் மகாதேவன், சொர்ணலதா, ஹரிஹரன், மகாலக்ஷ்மி, சின்மயி என்று பல வித்தியாசமான குரல்களை ரஹ்மான் பயன்படுத்தத் தொடங்கினார். அவர்கள் பாடிய பாடல்களை வேறு 'பழக்கப்பட்ட' பிரபல பாடகர்கள் பாடியிருந்தால் அந்த ஓசை வித்தியாசமாக இருந்திருக்காது.

சந்தீப் சௌதா என்பவர் ஆரம்பக் காலங்களில் ரஹ்மானுடன் சேர்ந்து பணிபுரிந்தவர். பிறகு, தனியாக இசையமைக்கச் சென்றுவிட்டார். அவரை ஹிந்தியின் 'புவர் மேன்ஸ் ரஹ்மான்' என்பார்கள். ரஹ்மானின் ஸ்டைலிலேயே இசையமைக்கக்கூடியவர். ரஹ்மானின் தேதிகள் கிடைக்காத நிலையில் அவருடைய கடைக்கு முன்னால் கும்பல் கூடியது. ரஹ்மானைப் போலவே இசை போட்டுத் தரச் சொல்லிக் கேட்டார்கள், பல தயாரிப்பாளர்கள். அவரும் சில படங்களுக்கு அதே மாதிரி இசை போட்டுக் கொடுத்தார். ஆனால், ஒரு சில நாட்களுக்கு மேல் தாக்குப் பிடிக்க முடியவில்லை. பெரிய கும்பிடு போட்டுவிட்டார்.


''ரஹ்மான், ரஹ்மான்தான். அவருடனேயே பணிபுரிந்ததால் என் இசைக்கும் அவருடைய ஸ்டைல் வந்துவிட்டதே தவிர, ரஹ்மானின் இசையில் ஒலிக்கும் ஆன்மா என் இசையில் இல்லை என்பதை நான் ஒப்புக்கொண்டே ஆக வேண்டும். இசையில் அவர் ஒரு புரட்சிக்காரர். அவருடைய 'கார்டு ப்ரோக்ரஷன்' அசரவைக்கக்கூடியது. சம்பிரதாயமான ராக ஆலாபனைகளை மட்டும் அவர் நம்புவது இல்லை. அதற்கு மேலே பல சங்கதிகளை வைத்திருக்கிறார். அவரையும் என்னையும் ஒப்பிடுவதுகூட மிகவும் தவறானது" என்று பெருந்தன்மையுடன் சொன்னார் அவர்.

ரஹ்மான் இசை நெய்யும் முறை பாலிவுட் இசையமைப்பாளர்களுக்குப் புதிதாகவும் புதிராகவும் இருந்தது. இசையமைப்பாளர் டியூனை கம்போஸ் செய்வார், பாடலை எழுதி கவிஞர் எடுத்து வருவார், ரிக்கார்டிங் தியேட்டர்களில் பாடகர் பாட, இசைக் கலைஞர்கள் வாசிக்க... பல டேக்குகளில் பாட்டு ஒலிப்பதிவு ஆகும். இதுதான் அங்கே காலம் காலமாக இருந்து வந்த நடைமுறை. (அங்கே மட்டுமல்ல... இந்தியா முழுக்கவும்தான்) ரஹ்மான் நிதானமாக வேறு வழிகளில் பாடல்களை ஒலிப்பதிவு செய்தார்.

டியூனை முடிவு செய்ததும் அதற்கு ஒரு அடிப்படையான 'ரிதம் டிராக்' அமைத்து, அதன் மேல் பாடகரைப் பாடச் சொல்வார் ரஹ்மான். பாடகர் பாடிவிட்டுப் போய்விடலாம். அப்போது பாடகருக்கு இசை மிக்ஸிங்கின் எந்தப் பரவசமும் இருக்காது. பாடகரின் குரலையும் பல டேக்குகளில் பதிவு செய்துகொள்வார் ரஹ்மான். அதற்குப் பிறகுதான் கச்சேரியே ஆரம்பமாகும்.

ரஹ்மான் அந்த இசையைத் தன் மடியில் போட்டுக்கொண்டு, ஒரு குழந்தையைப் போல் தாலாட்ட ஆரம்பிப்பார். தொகுப்பில் இருக்கும் பாடகரின் குரல்களில் இருந்து மிகச் சிறந்ததை முதலில் தேர்ந்தெடுத்துக்கொள்வார். பிறகு, ஒவ்வொரு லேயராக அந்தப் பாட்டின் மேல் இசை இழைகள் விழ ஆரம்பிக்கும். இசைக் கலைஞர்களின் வேலையும் அப்போதுதான் ஆரம்பிக்கும். அவர்களையும் வாசிக்கவைத்து எல்லாவற்றையும் பொறுமையாகப் பதிவு செய்துகொள்வார். பிறகு, அதிலிருந்தும் 'தி பெஸ்ட்'டைத் தேர்ந்தெடுதுக்கொள்வார். இப்போது எல்லாவற்றையும் வைத்துக்கொண்டு எஃபெக்ட்டுகள் சேர்த்து ஒரு பூமாலை போல் தொடுக்க ஆரம்பிப்பார். ஓர் அழகான பொம்மையைக் கையில் வைத்துக்கொண்டு அதை எப்படி எல்லாம் அலங்காரம் செய்து மேலும் மேலும் அழகாக்கலாம் என்பதுதான் ரஹ்மானின் இசைத் தத்துவம்.

ஃபைனல் மிக்ஸிங் என்கிற நிலைக்கு முன்னால் வரை அந்தப் பாட்டுடன் போராடுவார் ரஹ்மான். அந்த மலைக்கவைக்கும் உழைப்பை அளவிட்டுப் பாருங்கள். கையில் இருப்பதோ இரு அடிப்படை ரிதம் டிராக்கில் உள்ள ஒரு பாடகரின் பாடல். அதைக் கொஞ்சம் கொஞ்சமாக இசைக் கலைஞர்களின் இசைப் பின்னணியைவைத்து மெருகேற்ற வேண்டும். கூடவே, எலெக்ட்ரானிக் சிந்தசைஸர் கருவிகளை வைத்து அதை இன்னும் சிறப்பாக மாற்ற வேண்டும். அதற்குப் பிறகு அதன் ஒலிப்பதிவு வைபவம்.

எல்லாம் முடிந்து கடைசியில் அந்தப் பாட்டைக் கேட்கும்போது பிரமிப்பாக இருக்கும். அந்தப் பாடகருக்கே நம்ப முடியாது, இது நாம் பாடிய பாட்டுதானா என்று. ரஹ்மானின் இசையில் பாடும் ஒவ்வொரு பாடகர்களுக்கும் அந்த அனுபவம் நிச்சயம் ஏற்படும். ஸ்டுடியோவில் பாடும்போது அத்தனை பரவசம் இருக்காது. ஆனால், சி.டி-யில் கடைசியாகக் கேட்கும்போது நாமா இந்தப் பாட்டைப் பாடினோம் என்கிற பிரமிப்பு ஏற்படும். இதுதான் ரஹ்மானின் மியூஸிக் ஸ்டைல்!


-கனவு தொடரும்...

viraajan
17th July 2009, 03:45 PM
Each and every line in this article is a gem! Reading it regularly :yes: (Missed two weeks posts :( )

Mei silirkka vaikkum anubavam :bow:

Nerd
25th July 2009, 11:48 PM
ஒரு கனவின் இசை! - Part 16
ஏ.ஆர்.ரஹ்மான்
வி.ஐ.பி. வாழ்க்கைத் தொடர்

ரஜினி ஒரு சூப்பர் ஸ்டார்!

தனக்கான நட்சத்திர இமேஜைக் காப்பாற்றுவதில் எப்போதுமே கவனமாக இருப்பார். ரஹ்மானோ வேறுவிதமான சிந்தனைகளைக்கொண்டவர். புதிய தலைமுறையைச் சேர்ந்தவர். இவரால் எப்படி ரஜினி படத்துக்கு இசை அமைக்க முடியும் என்று பலர் சந்தேகப்பட்டார்கள். 'இது விநோதமான காம்பினேஷன்' என்று சிரித்தவர்களும் உண்டு.

அதனால் 'முத்து' படத்துக்குப் பெரிய எதிர் பார்ப்பு இருந்தது. நீண்ட நாட்களுக்குப் பிறகு தமிழ்த் திரை இசை மார்க்கெட்டில் கேசட் வாங்க ரசிகர்களுடைய கூட்டம் கூடியது என்றால், அது 'முத்து' படத்துக்குத்தான். இசை வெளியானவுடன் முதலில் கேட்டவர்கள் வழக்கம் போல் உதட்டைப் பிதுக்கினார்கள். "என்னங்க இது... ரஜினிக்குப்போய் உதித் நாராயண் பாடறாரு. தாங்க முடியலைங்க" என்றெல்லாம் கமென்ட்டுகள் வந்தன. எல்லாம் ஒரு சிலநாட்கள் தான். 'தில்லானா தில்லானா', 'கொக்கு சைவ கொக்கு', 'ஒருவன் ஒருவன் முதலாளி', 'குலுவாலிலே', 'விடுகதையா?' போன்ற பாடல்கள் சூப்பர் ஹிட் ஆகின. குறிப்பாக, 'தில்லானா தில்லானா' எல்லா டாப் டென் சார்ட்டுகளிலும் முதலிடத்தைப் பெற்றது.

ரஜினிக்கு ஜப்பானிலும் ஏகப்பட்ட ரசிகர்களைப் பெற்றுத் தந்த படம் அது. படத்தின் இசையும் பாடல்களும் அந்த ரசிகர்களையும் கவரவே, தென் கிழக்கு ஆசிய நாடுகளில் ரஹ்மான் புகழ் பெற ஆரம்பித்தார். ஜப்பானிய ரேடியோக்கள் 'முத்து' படப் பாடல் களைத் தொடர்ந்து ஒலிபரப்பின. 'குலுவாலிலே' ஒலித்த கிளப்புகளில் ஜப்பானிய இளைஞர்களும் யுவதிகளும் நடனமாடினார்கள்.

நவீன திரை இசைப் பாடல் வரிகளில் 'காட்ச் லைன்' என்கிற புதிய டிரெண்டைக் கொண்டுவந்தவர் ரஹ்மான். பாடலின் முதல் வரிகள் சுருக்கமாகவும், அதே நேரத்தில் மனதில் சட்டென்று பதியக்கூடிய வித்தியாசமான இரட்டை வரிகளாகவும் இருக்க வேண்டும். அதைத்தான் இன்றைய இயக்குநர்கள் கேட்ச்லைன் என்கிறார்கள். 'ருக்குமணி... ருக்குமணி'யில் ஆரம்பித்து 'ஊர்வசி... ஊர்வசி...', 'முக்காலா முக்காபுலா', 'மாயா மச்சீந்த்ரா', 'முஸ்தஃபா... முஸ்தஃபா', 'ஷக்கலக்க பேபி', 'சய்யா... சய்யா' என்று தொடர்ந்த அந்த கேட்ச்லைன் ஜுரம் இன்று இந்தியத் திரை இசை பூராவிலும் தொற்றிக்கொண்டது ரஹ்மானின் இசையில் இன்றும் அது 'மசாக்கலி... மசாக்கலி' என்றும் 'மோலா மோலா' என்றும் 'டாக்ஸி டாக்ஸி'யாகவும் ரகளை செய்து வருகிறது.

'பம்பாய்', 'ரங்கீலா', 'முத்து', 'தில்சே' போன்ற படப் பாடல்கள் பல நாடுகளில் ஹிட் ஆனதைத் தொடர்ந்து, ரஹ்மான் இன்டர்நேஷனல் இசையமைப்பாளராக உயர்ந்தார். அவருடைய இசையும் நாளுக்கு நாள் மெருகேற ஆரம்பித்தது. அந்த மாற்றத்துக்கு மிகப் பெரிய காரணம், அதற்கான களங்களை அமைத்துக் கொடுத்த ஹிந்தி மற்றும் ஆங்கிலப் பட இயக்குநர்கள் தான். இன்னொரு விஷயம், அவர் அடிக்கடி மேற் கொண்ட இசை தொடர்பான உலகப் பயணங்கள்.

பிரபல இயக்குநர் ராக்கேஷ் மெஹ்ரா, ரஹ்மானை 2000 வருடங்களுக்கு முன்பு வாழ்ந்த சீன யாத்ரீகர்களுடன் ஒப்பிட்டார். "அவர்கள் பல்வேறு வாழ்க்கை அனுபவங்களைத் தேடி உலகம் முழுக்கச் சுற்றினார்கள். பல புதிய விஷயங்களைக் கண்டறிந்தார்கள். ரஹ்மானும் அப்படித்தான் தன் இசையை ஒரு பயணம் போல் உலகெங்கும் எடுத்துச் செல்கிறார். தான் கேட்டு ரசித்த உலகின் பல இசை வடிவங்களை அழகாக இந்திய இசையில் எந்தத் தன்மையும் கெடாமல் பிணைக்கிறார்" என்கிறார். ரஹ்மானின் இசை அங்கே பல புதிய 'நியூ வேவ்' பாடகர்களையும், இசையமைப் பாளர்களையும் உருவாக்கியது.

ஷாந்தனு மொய்த்ரா என்கிற இசையமைப்பாளர் விளம்பரத் துறையில் பிஸியாகப் பணியாற்றிக்கொண்டு இருந்தவர். 'ரங்கீலா'வையும் 'தில்சே'வையும் கேட்ட பிறகு, விளம்பரப் பட இசை வேலைகளை அப்படியே தூக்கிப் போட்டுவிட்டு, சினிமாவுக்குள் நுழைந்துவிட்டார். "உலக இசையின் தரமும், மெல்லிசைக்கான இடமும் ஹிந்தி சினிமா வில் இல்லை என்றே நினைத்துக்கொண்டு இருந்தேன். ரஹ்மான் அதை அட்டகாசமாகக் கொண்டுவந்தார். அவர் கொடுத்த நம்பிக்கைதான் நான் திரை இசைக்கு வந்ததற்கே இன்ஸ்பிரேஷன்" என்கிறார் அவர்.

"நான் ஆர்.டி.பர்மனின் இசையைக் கேட்டுத்தான் வளர்ந்தேன். ஒரு கட்டத்தில் ஹிந்தி சினிமா இசையே வெறும் வெற்றுக் கூச்சலாக எனக்குக் கேட்டது. அதன் மீது வெறுப்புற்று இருந்தேன். ரஹ்மானின் வருகைக்குப் பிறகு எல்லாமே மாறியது. நானும் ஹிந்தி சினிமா இசையமைப்பாளராக வேண்டும் என்கிற ஆசை அவருடைய இசையைக் கேட்ட பிறகுதான் அழுத் தமாகத் தோன்றியது" என்கிறார் இசையமைப்பா ளராக மாறிய விஷால். ரஹ்மானின் 'தில்சே' பட மியூஸிக் ஆல்பம் நவீன ஹிந்தி இசையின் என்சைக்ளோபீடியா என்றார் அவர்.

மணிரத்னம், ராம் கோபால் வர்மா, சேகர் கபூர், தீபா மேத்தா, ஓம் பிரகாஷ் மெஹ்ரா, சுபாஷ் கை, அசுதோஷ் போன்றவர்களுடன் பணிபுரிய நேர்ந்தது ரஹ்மானுக்குக் கிடைத்த மிகப் பெரும் அனுபவம். நஸ்ரத் ஃபதே அலிகான், அட்னன் சாமி, அம்ஜத் அலிகான், பூபன் ஹசாரிகா, பண்டிட் விஷ்வமோகன் பட் போன்ற உன்னதக் கலைஞர்களுடன் அவர் கைகோத்தார். அதே போல் ஜாவேத் அக்தர், குல்ஸார், பிரஸூன் ஜோஷி போன்ற உலகப் புகழ்பெற்ற படைப்பாளிகளுடனும் பணிபுரிந்தது (சில சமயம் பாடல் களைச் சேர்ந்தும் எழுதியது) அவர் இசை மேலும் மேலும் கூர்மையடைய உதவியது. குல்ஸார் ஒரு கட்டத்தில் ரஹ்மானை இப்படிப் புகழ்ந்தார், "அவர்தான் ஒரு கூட்டுக்குள் பாட்டு எழுதிக் கொண்டு இருந்த எங்களுக்கு விடுதலை பெற்றுக் கொடுத் தார். காலங்காலமாக எந்த மாற்றமும் இல்லாமல் போரடித்துப்போய் இருந்த பாடலின்கட்டமைப்பை உடைத்து, எங்களின் கற்பனையை எல்லை அற்ற சுதந்திர வானத்துக்குக் கொண்டுசென்றதுரஹ்மான் தான்!"

தன் ஹிந்தி சினிமா வாழ்க்கையில் எத்தனையோ ஹிட்களைக் கொடுத்திருந்தாலும் 'தில்சே'தான் ரஹ்மானின் முதல் இன்டர்நேஷனல் சூப்பர் ஹிட். அமெரிக்கா, இங்கிலாந்து மற்றும் ஐரோப்பிய நாடுகளிலும் மிகப் பெரிய ஹிட் அது. 'சய்யா... சய்யா' பாட்டு சுக்வீந்தர் சிங் என்கிற சாக்லேட் பையனை அறிமுகப்படுத்தியது. இங்கிலாந்தின் எஃப்.எம். ரேடியோக்களில் எல்லாம் தொடர்ந்து ஒலித்தது அந்தப் பாடல். விரைவில் காட்டுத் தீயாக ஐரோப்பாவிலும் பரவியது.

மிஹைல் சிரிலோவ் என்பவர் ருமேனிய நாட்டின் பிரபலமான சினிமா விமர்சகர், டிரான்ஸில்வேனியா உலக சினிமா விழாவின் கலை இயக்குநரும்கூட. "சய்யா... சய்யா பாட்டை முதலில் கேட்டபோது எனக்குப் புதிய உணர்வு ஏற்பட்டது. காதுக்கு இனிமை யாகவோ, (Ear candy) கேட்ட உடன் பிடித்துப்போன ஒன்றாகவோ முதலில் தெரியவில்லை. ஆனால், கேட்கக் கேட்க அது மிக ஃப்ரெஷ்ஷான மனநிலையை ஏற்படுத்தியது... மிக நவீனமான இசை. பாரம்பரிய இந்திய இசையைத் தற்போதைய உலக இசைக்குக் கொண்டுவந்த பாட்டு அது" என்று புகழ்ந்தார். பிற்பாடு இதே சிரிலோவ், ரஹ்மானின் 'லகான்' பாடல்களைக் கேட்க நேர்ந்தது. பரவசமான அவர் ரஹ்மானின் பெரும் ரசிகராகவே மாறினார். "பாலிவுட் இசை பற்றி எனக்கு ரொம்ப நன்றாகவே தெரியும். ஆனால், அந்த இசையைத் தனி ஒரு ஆளாக வேறு இடத்துக்குக்கொண்டு போய்விட்டார் ரஹ்மான்" என்றார் அவர்.

ரஹ்மான் கம்ப்யூட்டரில் தன் இசையைக் கொஞ்சம் கொஞ்சமாக மெருகேற்றிய வித்தை பாலிவுட்காரர்களையும் ஆரம்பத்தில் ஆச்சர்யப்படவைத்தது. இசை உலகில் இருந்த சில பியூரிஸ்ட்டுகள் அதை விமர்சன மும் செய்தார்கள். அப்போது ரஹ்மான் சொன்னார். "நாம் 21-ம் நூற்றாண்டுக்கு அருகில் இருக்கிறோம். ஆனால், நான் இன்னும் 19-ம் நூற் றாண்டிலேயே வாழ வேண்டும் என்று சிலர் விரும்புகிறார்கள். டெக்னாலஜியை இசையில் புகுத்துவது என்ன தவறு என்று எனக்குத் தெரியவில்லை. ஆறு மாதங்களுக்கு முன்னால் நான் வாங்கிய கம்ப்யூட்டர் தயார் ஆவதற்கு மூன்று நிமிடங்கள் எடுத்துக்கொண்டது. இப்போது வாங்கியிருக்கும் கம்ப்யூட்டர் மூன்று நொடியிலேயே தயாராகிவிடுகிறது. உலகம் இத்தனை வேகமாகப்போய்க் கொண்டு இருக்கும்போது நாமும் அதனுடன் ஓட வேண்டாமா? ஒரு சின்ன ஹார்டுடிஸ்க்கில் நான் கம்போஸ் செய்த இசையைஎடுத்துக் கொண்டு என்னால் உலகம் முழுக்கப் போக முடிகிறது. அங்கே நான் கேட்கும் பல அபூர்வமான எத்னிக் இசையின் பல படிவங்களை என் இசையுடன் இணைக்க முடிகிறது. டெக்னாலஜி என்பது மிகப் பெரிய மிருகம் போன்றது. அதை எப்படிநம் கைக்குள் அடக்க வேண்டும் என்பதை நாம்தான் புரிந்துகொள்ள வேண்டும். என் இசைக்குத் தேவையான, என் பிடிக்குள் இருக்கக்கூடிய மியூஸிக் சாஃப்ட்வேரைக் கொண்டுவர எனக்கு மூன்று வருடங்கள் பிடித்தன"

உண்மைதான்... ரஹ்மான் உலகில் எங்கே சென்றாலும் கூடவே தன் ஸ்டுடியோவைக் கூட்டிக்கொண்டு போவது இல்லை. அற்புதமான சாஃப்ட்வேர்களை உள்ளடக்கிய சிறிய ஹார்டுடிஸ்க்தான் அத்தனை ரகசியங் களையும் உள்ளடக்கிக்கொண்டு அவருடன் பயணிக்கிறது. லண்டனோ, நியூயார்க்கோ, பாரிஸோ எங்கு சென்றா லும் அவர் அந்த ஹார்டுடிஸ்க்கை ஒரு கம்ப்யூட்டரில் இணைத்து, உடனே இசையமைக்க முடியும். அதை ஆடியோ ஃபைல்களாக கோடம்பாக்கத்துக்கு இணையதளத்தின் மூலம் உடனுக்குடன் அனுப்ப முடியும்.

'நவீன இசையின் டெக்னாலஜி பற்றி இந்தியாவிலேயே அதிகம் தெரிந்த இசையமைப்பாளர் ரஹ்மான்தான்' என்கிறது இன்ஃபர்மேஷன் டெக்னாலஜி துறைக்கான பத்திரிகையான எக்ஸ்பிரஸ் கம்ப்யூட்டர். இந்திய இசை சரித்திரத்தில் 'டேப்'புக்கு டாட்டா காண்பித்த முதல் இசையமைப்பாளர் அவர்தான். விமானத்தில் செல்லும்போது லேப்டாப்பில் இசை அமைத்த முதல் இந்திய இசையமைப்பாளரும் அவர்தான். ரெக்கார்டிங் ஸ்டுடியோவை தொழில்நுட்பப் பூங்காவாக மாற்றிய முதல்வனும் அவரே.

அவருடைய விருப்பமான கம்ப்யூட்டர் சிஸ்டம் மாக்கிண்டோஷ் நிறுவனத்தின் (மைக்ரோசாஃப்ட்டின் எதிரி) ஆப்பிள் கம்ப்யூட்டர். ஸ்டுடியோவில் உள்ள 12 பவர் மேக் கம்ப்யூட்டர்கள், இரண்டு பவர்புக் லேப்டாப்புகள், ஐ-புக் என்று எல்லாமே ஆப்பிள் தயாரிப்புதான். (அடிக்கடி தன் கம்ப்யூட்டர் மற்றும் இசைக் கருவிகளை அப்டேட் செய்வார் ரஹ்மான். அதனால், இது இன்னும் மாறி இருக்கலாம்) இந்த கம்ப்யூட்டர்களில் ஓர் இசைக் கோப்பை ஒரு லட்சம் தடவைகள் எடிட் செய்யலாம். உலகம் எங்கும் உள்ள பெரும்பான்மையான இசைக் கலைஞர்களின் விருப்பத்துக்குரிய கம்ப்யூட்டர், ஆப்பிள். "இது வெறும் மெஷின் அல்ல. இதற்கென்று ஒரு தனியான ஒரு ஆட்டிட்யூட் உண்டு" என்பார் ரஹ்மான் செல்லமாக.

தற்போது ஆப்பிள் ஜி 3 பிராசஸர்களை உபயோகித்து வரும் ரஹ்மான், விரைவில் அடுத்த ஜெனரேஷனுக்கு மாறப்போகிறார். ரஹ்மான் ஸ்டுடியோவில் உள்ள கம்ப்யூட்டர்கள் எல்லாம் நெட்வொர்க்கிங் என்கிற முறையில் ஒருங்கிணைக்கப்படவில்லை. ஒவ்வொன்றும் ஒரு தனி ராஜ்

ஜியம். அதில் சலவை செய்யப்படும் இசை, கடைசியில் ஓர் இடத்தில் ஒருமுகப்படுத்தப்படும். ஒரு தேர்ந்த கம்ப்யூட்டர் நிபுணர் போல இந்த சிஸ்டத்தை வடிவமைத்திருக்கிறார் ரஹ்மான்.

சரி, இதெல்லாம் டெக்னாலஜி. தன் இசையின் வெற்றிக்கான காரணங்களில் ஒன்றாக ரஹ்மான் சொல்வது... இன்னொரு சைக்காலஜி!

Nerd
25th July 2009, 11:50 PM
None of the Rajini fans (incl me) were impressed with Muthu when it released. But within a week or two, the songs really caught on with us and thillAna thillAnA became a rage. Oruvan oruvan became an anthem (and it still is) once the film released. Semma opening to that song :bow:

littlemaster1982
26th July 2009, 12:13 AM
Thillana Thillana is still my favorite song in Muthu 8-)

ajaybaskar
26th July 2009, 07:51 AM
I think Oruvan Oruvan is the best opening song for RK till date..

music man
27th July 2009, 10:27 AM
A great write up...I have not missed even a single week...Yes Muthu was surprisingly not received well in the beginning..BUt later became a monstrous hit...

Oruvan Oruvan is one of Rajini Kanth's best opening tracks till date..

I think ARR finished the background score for MUTHU in 15 days...Someone can confirm this...It was a record then for ARR..

viraajan
27th July 2009, 10:29 AM
I think Oruvan Oruvan is the best opening song for RK till date..

Yes it is. :smokesmirk:

SoftSword
27th July 2009, 09:00 PM
தனக்கான நட்சத்திர இமேஜைக் காப்பாற்றுவதில் எப்போதுமே கவனமாக இருப்பார்.

-- idhennappa??? edha solraanga...


anyway....
great writeup otherwise... my pick from mutthu are
1. prelude from oruvan oruvan
2. unique dance moves from thillana thillaana...
3. the rhythm of kuluvalilae.. when played in good music system, it ll be amazing those days...
4. strange sounds in kokku saiva kokku...
5. "vaazhvai nee thaedi.. vadakkae nee ponaal... naangal povadhengae..." from vidukadhayaa.... vairamutthu :notworthy:

littlemaster1982
31st July 2009, 09:05 AM
ஒரு கனவின் இசை! - Part 17
ஏ.ஆர்.ரஹ்மான்
வி.ஐ.பி. வாழ்க்கைத் தொடர்

தமிழகத்தில் இருந்து இந்திய உயரத்தை எட் டிப் பிடித்த ரஹ்மானை 'பாம்பே டிரீம்ஸ்' மூலம் உலக அரங்குக்கு கைப் பிடித்து அழைத் துச் சென்றவர் இந்திப் பட இயக்குநர் சேகர்கபூர். அவர் ரஹ்மானைப் பற்றிச் சொல்லும்போது, ''இசை என்பது இசைக் கலைஞர்களுக்கு உள்ளேயே இருக்கும் திறமை என்று சொல்பவர் அல்ல ரஹ்மான். அது உடலுக்கு வெளியே, இந்த உலகம் எங்கும் பரவிக்கிடக்கிறது. அதைக் கண்டுஎடுக்கும் திறனை ஒரு சிலரே பெறுகிறார்கள். ரஹ்மான் அப்படித்தான். வெளியே பரவிக்கிடக்கும் இசையை அற்புதமாகக் கண்டுஎடுக்கிறார்!" என்கிறார்.

தன் இசையின் வெற்றிக்குக் காரணமான சைக்காலஜி பற்றி ரஹ்மான், ''கீ-போர்டை வாசிக்கும்போது கீ-போர்டு வாசிப்பதில் மிகத் திறன் வாய்ந்த ஒரு இசைக் கலைஞரும் அவர் வாசித்த இசையும் என் ஞாபகத்துக்கு வரும். கிடார் வாசிக்கும்போது மிகச் சிறந்த கிடார் இசைக் கலைஞரின் இசையும், பெர்குஷனின்போது மிகச் சிறந்த டிரம்மரின் இசையும் என் ஞாபகத்துக்கு வரும். அதுதான் எனக்கு இன்ஸ்பிரேஷன். 'இதோ, இந்த வாத்தியக் கருவியை அவர்கள் எத்தனை திறம்பட வாசித்திருக்கிறார்கள். அந்த அற்புதமான கருவி அல்லவா என் கையில் இருக்கிறது' என்று ஆனந்தப்படுவேன். அதைப் போன்றதொரு உன்னத இசையை இதன் மூலம் நானும் கொண்டு வர வேண்டும் என்று நினைத்துக்கொள்வேன். அந்தஉந்து சக்தியினால் உடனே என்னிடம்இருந்து இசை பிறக்க ஆரம்பிக்கும். என்னைச் செலுத்தும் சக்தி அதுதான்!" என்கிறார்.

ரஹ்மானின் இந்த மனோதத்துவ டெக்னிக் எல்லா துறையினரும் பின்பற்றக்கூடியதே. ஒரு எழுத்தாளர் எழுதும்போது தனக்குப் பிடித்தமான எழுத்தாளரையும் அவருடைய எழுத்துக்களையும் நினைத்துக்கொண்டால், தன்னுடைய எழுத்தை அதனுடன் ஒப்பிட்டுப் பார்த்துக்கொள்ளக்கூடிய சுய விமர்சனம் எழும். அதுவே, திருத்தித் திருத்தி எழுதக்கூடிய மேன்மையான எழுத்தைக் கொண்டு வரலாம். மனோதத்துவ இயலாளர்கள் இதனை 'ஆட்டோசஜஷன்' என்பார்கள்.

ரஹ்மானை மிகவும் பாதித்த இந்தியத் திரை இசை முகல்-இ-ஆஸாம். அதன் உணர்ச்சிகரமான இசை எப்போதுமே அவருடைய ஃபேவரைட்டாக இருந்து வந்திருக்கிறது. அந்தப் படத்தின் இசைப் பொறுப்பை முடிக்க நௌஷாத் இரண்டு வருடங்கள் எடுத்துக் கொண்டார். அந்த வருடங்களில் அவர் வேறு எந்த இசைப் பணியையும் செய்யவில்லை. முழுக்க முழுக்க அதுவே மனதை ஆக்கிரமித்து இருந்தது.

ஆரம்ப காலங்களில் ரஹ்மான் மிகவும் மெதுவாக இசையமைக்கிறார் என்கிற குற்றச்சாட்டு எழுந்தது என்னவோ உண்மை. ஏகப்பட்ட வாய்ப்புகள், எல்லாமே பெரிய பெரிய நிறுவனங்கள், இயக்குநர்கள் தங்களுக்கு இசைஅமைக்கும்படி கேட்டார்கள். சிலவற்றை ரஹ்மான் அவசரமாக ஒப்புக்கொண்டாலும், குறித்த நேரத்தில் அவரால் இசையமைத்துத் தர முடியவில்லை. ஆனால், எண்ணிக்கையைவிட தரத்தில் முக்கியத்துவம் காட்டும் ரஹ்மான், அப்படி அவரசப்பட்டு பல படங்களை ஒப்புக்கொண்டது தவறு என்று பிறகு வருந்தினார். பிற்பாடு, வருடத்துக்கு ஒரு சில படங்களை மட்டுமே ஒப்புக்கொள்வது என்கிற முடிவுக்கு வந்தார்.

இந்த காலக்கட்டத்தில் அவர் அறிமுகப்படுத்திய விஷயம்தான் இப்போது தமிழ்ப் படங்களில் சக்கைப் போடு போடும் 'ரீ-மிக்ஸ்'. ஒரே ஒரு வித்தியாசம், ரஹ்மான் தன்னுடைய பழைய பாடல்களையே ரீ-மிக்ஸ் செய்தார் என்பதுதான். குறித்த நேரத்தில் படங்களை முடித்துக்கொடுக்க முடியாததால் தன் வேறு படத்துப் பாடல்களை ரீ-மிக்ஸ் செய்ய ஆரம்பித்தார் ரஹ்மான். 'உழவன்' படத்தில் வந்த 'ராக்கோழி ரெண்டு' தெலுங்கில் 'ஆ சிக்குகுலெண்டா வரகு'வானது. 'கேங் மாஸ்டரில்' வந்த ஒரு பாடல் ரங்கீலாவில் 'யாரோன் சுன்லோ'வாக மாறியது. டூயட் படத்தில் ஹிட்டான 'அஞ்சலி... அஞ்சலி' 'கபினா கபி'யில் 'மில்கையே ஹோ மன்சிலன்' ஆக ரீ-மிக்ஸ் ஆனது. அவ்வளவு ஏன், கருத்தம்மாவின் 'போறாளேபொன் னுத்தாயி...' வந்தே மாதரத்தில் 'குருஸ் ஆஃப் பீஸா'க நஸ்ரத் ஃபதே அலிகான் குரலில் அட்டகாசமாக மாற்றம் கண்டது. அதே வந்தே மாதரத்தில் இடம் பெற்ற 'முஸாஃபிர்' 'ஒட்டகத்தைக் கட்டிக்கோ'வின் மாற்று உருவம்தான். ஆனால், கொஞ்ச நாட்களிலேயே இந்த ரீ-மிக்ஸ் வேலையை விட்டுவிட்டார் ரஹ்மான். குறைந்த அளவுப் படங்களையே ஒப்புக்கொள்வது என்று தீர்மானித்தார். அதற்குப் பிறகு இன்னும் வேகம் பிடித்தது அவரது கிராஃப்!

ரஹ்மான் என்கிற தமிழ் இசைஅமைப்பாளரை கோல்டன் குளோப், ஆஸ்கர் வரை கூட்டிச் சென்ற பின்னணி என்ன என்பதுதான் யோசிக்க வேண்டிய ஒன்று. குண்டுச்சட்டியில் குதிரை ஓட்டாமல் பெரிய பெரிய வாய்ப்புகள் வரும்போது, அடுத்து அடுத்து என்று அத்தனைக்கும் ஆசைப்பட்டது ஒரு முக்கிய காரணம்.

அந்த ஆசையும் ஓயாத தேடலும்தான் இந்தியத் திரை இசையில் அவர் இந்திய மற்றும் வெஸ்டர்ன் கிளாஸிக்கல், பல வட்டார ஃபோல்க்குகள், ஜாஸ், ராப், ரகே, பாப், ப்ளூஸ், ஆப்ரிக்கன், அராபிக், ஹிப் ஹாப், பாங்ரா, கஜல், பஜன், கவாலி என்று வெவ்வேறு இசை வடிவங்களை அறிமுகப்படுத்தத் தூண்டியது. அந்தத் தேடலில் அவர் தோழமைகொண்ட அகில உலக இசைப் படைப்பாளிகளின் லிஸ்ட் மிகப் பெரியது.

மைக்கேல் ஜாக்சன், செலீன் டியான் போன்ற மிகப் பெரும் இசைக் கலைஞர்களுடன் ஒப்பந்தம் செய்து வந்த சோனி நிறுவனம், இந்தியாவில் முதன்முறையாக பெருந்தொகை கொடுத்து ரஹ்மானை 'வந்தே மாதரம்' ஆல்பத்துக்காக ஒப்பந்தம் செய்தது. அந்த வித்தியாசமான வாய்ப்பு ரஹ்மானின் பள்ளித் தோழர் பரத்பாலா மூலமாகக் கிட்டியது.தேசிய அளவில் ஒரு பிரைவேட் ஆல்பத்துக்கு இசை அமைத்தது ரஹ்மானுக்குப் புதிய அனுபவம். சோனி நிறுவனத்தினர் 'இந்த ஆல்பத்துக்காக செலீன் டியானுடன் வேலை பார்க்க விருப்பமா?' என்று கேட்டார்கள் . 'வேண்டாம்' என்ற ரஹ்மான் டிக் செய்த பெயர்கள் நஸ்ரத் ஃபதே அலிகான் மற்றும் டொமினிக் மில்லர். அந்த ஆல்பத்துக்காகப் பல நாட்கள் ராப்பகலாக உழைத்தார் ரஹ்மான். நௌஷாத்தின் கண்களில் முகல்-இ-ஆஸாம் மட்டும் தெரிந்ததைப் போல் ரஹ்மானின் கண்களுக்கு அப்போது தெரிந்த ஒரே விஷயம் வந்தே மாதரம்தான்.

இசை விநியோகத்துக்காக சோனி நிறுவனத்தின் உயர் அதிகாரிகள் அகில உலக ரெக்கார்டிங் கம்பெனிகளின் கூட்டத்தைக் கூட்டினார்கள். "ஓர் இந்திய ஆல்பத்தை இப்போது போடுகிறோம்... கேளுங்கள்!" என்று சொல்லிவிட்டு, 'வந்தே மாதரம்' ஆல்பத்தைப் போட்டுக் காட்டினார்கள். 'மா துஜே சலாம்' என்று ரஹ்மானின் குரல் அவர்களை உலுக்கியெடுத்தது. கரகோஷம் அந்த ஆடிட்டோரியத்தையே அதிரவைத்தது. கொலம்பியா, எபிக் போன்ற பிரபல நிறுவனங்கள் போட்டி போட்டுக்கொண்டு அந்த ஆல்பத்தின் விநியோக உரிமையை வாங்கின. 28 நாடுகளில் வந்தே மாதரம் கொடி கட்டிப் பறந்தது.

சினிமா இசை அல்லாத ஓர் இசை ஆல்பம் இந்தியாவில் விற்பனையில் சாதனை படைத்தது அதுதான் முதல் முறை. 1.5 மில்லியன் கேசட்டுகள் இந்தியாவில் மட்டும் விற்பனை. ரஹ்மான் உலகு எங்கும் உச்சரிக்கப்படும் பிரபல இந்திய இசையமைப்பாளராக உயர்ந்தார். சினிமா இசை மட்டும் போதும் என்று அவர் நினைத்திருந்தால் இந்த உயர்வு கிடைத்திருக்காது. அதே நேரம், 'வந்தே மாதரம் 2' செய்யலாம் என்கிற வாய்ப்பு மறுபடி வந்தபோது அதை நிராகரித்தார் ரஹ்மான். 'முதல் முறை செய்யும்போது அதில் மோட்டிவேஷனும் துடிப்பும் இருந்தது... இரண்டாவதில் அது இருக்காது!' என்பது அவர் காரணம்.

1999-ம் வருடம் ரஹ்மானின் வாழ்க்கையில் மிக முக்கியமான ஒன்று. அந்த வருடத்தில் அவர் மொத்தம் 11 படங்களுக்கு இசையமைத்திருந்தார். (என் சுவாசக்காற்றே, முதல்வன், காதலர் தினம், படையப்பா, சங்கமம், ஜோடி, தாஜ்மகால், தால், 1947, தக்ஷக் மற்றும் புகார்) இதில் எல்லா படங்களிலுமே பாடல்கள் பெரிய ஹிட். (படையப்பா கேசட் ரிலீஸான இரண்டு நாட்களுக்குள் 1.5 மில்லியன் விற்றது)

சினிமாவைத் தவிர, வேறு இசை நிகழ்ச்சிகளிலும் ஆர்வம் கொண்டுஇருந்தார் ரஹ்மான். கொசாவா யுத்தத்தினால் பாதிக்கப்பட்ட குழந்தைகளுக்கான இசை நிகழ்ச்சி யைக் கோலாலம்பூரில் நடத்தினார். சிங்கப்பூரில் மெல்லிசை மன்னர்கள் விஸ்வநாதன்-ராமமூர்த்தியைக் கௌரவிக்கும் வகையில் இசை நிகழ்ச்சி நடத்தினார். இருவரின் கைகளையும் பற்றிக்கொண்டு, ''உங்களுடைய பாடல்களை எல்லாம் கேட்டுத்தான் நான் வளர்ந்தேன்..!" என்று நா தழுதழுத்தார். டெல்லியில் கார்கில் போர் நிதிக் காக வந்தே மாதரம் நிகழ்ச்சி நடத் தினார். உலக ஏழைக் குழந்தைகளின் நலனுக்காக நிதி திரட்டும் 'லிஸன்' என்கிற சர்வதேச இசை நிகழ்ச் சிக்காக இந்தியாவின் சார்பில் கலந்துகொண்டார். அந்த நிகழ்ச்சியில் 99மில்லியன் டாலர்கள் நிதி திரட்டப்பட்டன. பீத்தோவனின் ஓர் இசைக் கோவையை நவீனமாக இசைக்கும் பணி இந்த நிகழ்ச்சியில் ரஹ்மானுக்குத் தரப்பட்டது. பீட்டர் காப்ரியல், ஸ்டிங் போன்ற பிரபல இசைக் கலைஞர்களுடன் இதில் பணியாற்றினார் ரஹ்மான்.

1999-ம் வருடம் மே மாதம் லண்டன் சென்ற ரஹ்மான் அங்கே 'ஏகம் சத்யம்' என்ற பாடலைஒலிப் பதிவு செய்தார். அந்தப் பாட்டைக் கேட்ட உலகப் புகழ்பெற்ற பாடகர் ஒருவர் அசந்துபோனார். அந்தப் பாடலை ரஹ்மானுடன் சேர்ந்து ஒரு மாபெரும் இசை நிகழ்ச்சியில் பாட ஆசைகொண்ட அவர், ரஹ்மானிடம் அதற்கான அழைப்பை விடுத்தார். ரஹ்மானே அந்த அழைப்பைக் கேட்டு அசந்துதான் போனார்.

அந்தப் பாடகர் கிங் ஆஃப் பாப் மைக்கேல் ஜாக்சன்!

-கனவு தொடரும்...

littlemaster1982
9th August 2009, 08:48 PM
ஒரு கனவின் இசை! - Part 18
ஏ.ஆர்.ரஹ்மான்
வி.ஐ.பி. வாழ்க்கைத் தொடர்

உலகெங்கும் வறுமை, பசி போன்ற வற்றினால் துயரப்படும் குழந்தைகளுக்காக ஒரு மாபெரும் இசை நிகழ்ச்சித் தொடரை நடத்த 1999-ம் வருடம் மைக்கேல் ஜாக்சன் திட்டமிட்டு இருந்தார். அதற்காக உலகம் முழுவதும் உள்ள சிறந்த இசைக் கலைஞர் களைத் தேர்ந்தெடுத்து, தன்னுடன் சேர்ந்து அந்த நிகழ்ச்சியில் பாடுவதற்காக அழைப்பு விடுத்துக்கொண்டு இருந்தார். 'மைக்கேல்ஜாக் சன் அண்ட் ஃபிரெண்ட்ஸ்' என்று அதற்குப் பெயரிடப்பட்டு இருந்தது. ஆசிய பிரிவுக்கான இசைக் கலைஞர்களின் இசையைஅதற் காகக் கேட்டுக்கொண்டு இருந்தபோதுதான் ரஹ்மானின் 'ஏகம் சத்யம்' பாட்டைக்கேட்டு அசந்து போனார் மைக்கேல். உடனே அந்த நிகழ்ச்சியில் கலந்துகொள்ள அழைப்புவிடுத் தார்.

ஜெர்மனி மியூனிச் நகரத்தில் உள்ளஒலிம் பிக் ஸ்டேடியத்தில் மைக்கேல் ஜாக்சனும் ரஹ்மானும் இணைந்து 1999-ம் வருடம்'ஏகம் சத்யம்' பாடலைப் பாடினார்கள். 60 ஆயிரம் பார்வையாளர்கள் அரங்கில் நிறைந்துஇருந் தார்கள். ஷோபனா, பிரபுதேவா உள்பட நடனக் கலைஞர்கள் அதற்கு நடனம் ஆடி னார்கள். 'ஏகம் சத்யம்' பாட்டு ஆங்கிலத்தி லும்சம்ஸ்கிருதத்திலும் எழுதப்பட்டு இருந் தது. ஆங்கிலப் பகுதியை மைக்கேல் ஜாக்சன் பாட, மற்றவற்றை ரஹ் மான்பாடினார். அந்த மேடையில் உலகப் புகழ்பெற்ற இசைக் கலை ஞர்களான பவரோட்டி, ஸ்டீவி வொண்டர், வனஸா மே, பாய் ஸோன், ஆலன் பார்ஸன்ஸ் போன் றவர்கள் இடம்பெற்று இருந்தார் கள்.

ரஹ்மானின் 'கேரியரை'ப் பொறுத்தவரை பாலிவுட்டில் இருந்து மிகப் பெரிய ஜம்ப் அது. பாடலுக்குக் கரகோஷம் ஜெர்மன் வானத்தையே அதிரவைத்தது.அப் போதே மைக்கேல் ஜாக்சனின்பிரி யத்துக்கு உரிய ஒருவராக மாறினார் ரஹ்மான். ஆஸ்கர் விருதுபெற்றதும் அந்த நட்பு உணர்வின் காரண மாக மைக்கேலை அவரது வீட் டில் சந்தித்து மனம்விட்டுப் பேசி னார் அவர்.

'ஏகம் சத்யத்'-தின் பிரமாண்டமான வெற்றிக்குப் பிறகு ரஹ்மான் லண்டனுக்கும், மும்பைக்கும், கோடம்பாக்கத்துக்கும் இடையே ஓயாமல் பறக்க ஆரம்பித்தார். பல சர்வதேச வாய்ப்புகள் அவரைத் தேடி வர ஆரம்பித்தன. லண்டன் ரெக்கார்டிங் ஸ்டுடியோக்கள் ரஹ்மானுக்கு மிகவும் பிடித்துப் போயின. அங்கே இருந்துகொண்டே தமிழ் மற்றும் ஹிந்திப் படங்களுக்கான பாடல்களை கம்போஸ் செய்து இன்டர்நெட்டில் அனுப்ப ஆரம்பித் தார்.


ரஹ்மானை நாடி வந்த அடுத்த மாபெரும் வாய்ப்பு 'பாம்பே டிரீம்ஸ்'. இப்போது இன்னொருவரைப் பற்றிப் பேசலாம். அவர் பெயர் சர் ஆண்ட்ரூ லாயிட்வெப்பர். 1942-ம் வருடம் இங்கிலாந்தில் பிறந்த வெப்பர்... மேற்கத்திய இசை உலகின் மிகப் பெரும் பிதாமகன்களில் ஒருவர். 'மியூஸிக்கல் தியேட்டர்' எனப்படும் பிரமாண்டமான இசை நாடகங்களுக்கு இசையமைத்து உலகப் புகழ் பெற்றவர். 6 வயதிலேயே இசையமைக்க ஆரம்பித்த இளம் மேதை. தன் ஒன்பதாவது வயதில் முதல் இசைக் கோவையை அரங்கேற்றியவர். வெஸ்ட் எண்ட், பிராட்வே போன்ற பிரபல இசை நாடக மேடைகளில் 13 இசை நாடகங்களுக்கும், 2 திரைப்படங்களுக்கும் இசையமைத்தவர். இங்கிலாந்தின் பெருமைக்குரிய விருதான 'நைட்' பட்டம் பெற்றவர். 7 டோனி விருதுகள், 3 கிராமி விருதுகள், 1 கோல்டன் குளோப் மற்றும் ஆஸ்கர், 7 ஆலிவர்அவார்டுகள் என்று வீடு பூராவும் விருதுகளைக் குவித்து வைத்திருப்பவர். இங்கிலாந்தின் மிகப் பெரிய நாடகக் கம்பெனிகளில் ஒன்றான 'ரியலி யூஸ்ஃபுல் குரூப்' இவருக்குச் சொந்தமானது.

இந்தியாவின் மும்பை நகரத்தில் நடப்பது போன்ற இசை நாடக ஸ்க்ரிப்ட்டான 'பாம்பே டிரீம்ஸ்' வெப்பரை மிகவும் கவர்ந்தது. அதை தன் கம்பெனி சார்பாக அடுத்த இசை நாடகமாகத் தயாரிக்க அவர் முடிவு செய்து இருந்தார். ஆனால், மேற்கத்திய கிளாசிக்கல் இசையில் சிங்கமான அவருக்கு இந்திய இசை என்பது ஒரு புதிராகவே இருந்தது. அந்த நாடகத்துக்கு ஆசிய, மேற்கத்திய கலவையான கலாசாரத்தில் ஊறிய டெக்னோ இசை வேண்டும் என்று அவருக்குத் தோன்றியது. அதற்கான இசையை அவரால் உருவாக்க முடியுமா என்று அவருக்கே சந்தேகமாக இருந்தது.


ஒருநாள் அவர் இங்கிலாந்து சேனல் ஒன்றில் 'தில்சே' படத் தின் 'சய்யா... சய்யா...' பாடலைப் பார்த்தார். அந்த இசை, குரல், பாடல்படமாக்கப்பட்ட விதம்எல்லாமும் அவரைக் கவர்ந்தது. உடனே 'தில்சே' ஆல்பத்தைவரவழைத்து அதன் அத்தனைப் பாடல்களையும் திரும்பத் திரும்பக் கேட்டார். ஒவ்வொரு பாடலும் ஒவ்வொரு விதத்தில் பிரமிப்பூட்டியது. ரஹ்மானின் பாடல்களை 'ரோஜாவி'-லிருந்து ஆரம்பித்து எல்லாவற்றையும் கேட்டார் வெப்பர். அவரால் ஆச்சர்யத்தைத் தாங்க முடியவில்லை. 'இவர்தான் 'பாம்பே டிரீம்சு'க்கு இசையமைப்பாளர்' என்று அவருடைய மனதுக்குள் ஒரு குரல். உடனே தன் நண்பரான சேகர்கபூரிடம் ரஹ்மானைச் சந்திக்க விரும்புவதாகச்சொன்னார். 'வெப்பர் அழைக்கிறார்' என்றதும் சேகர் கபூருடன் லண்டன் பறந்தார் ரஹ்மான்.

அவரைப் பெரும் விருந்து கொடுத்து வர வேற்றார் வெப்பர். 'சய்யா... சய்யா' பாட லுக்கு இசையமைத்தவரை இத்தனை இளமையாக எதிர்பார்க்கவில்லைவெப்பர். ரஹ்மானின் இசையை வெகுவாகப் புகழ்ந்தார். வெப்பரின் பெரும் ரசிகரான ரஹ்மான் அதைக் கேட்டுத் திக்குமுக்காடிப் போனார்.

'உலக இசை அரங்கத்தில் ஆசிய இசை குறிப்பிட்ட இடத்தை அடைந்தே ஆக வேண்டிய வேளைவந்துவிட் டது, அதைச் செய்யக் கூடியவர் நீங்கள்தான்' என்று சொன்ன வெப்பர், சட்டென்று 'என்னுடைய அடுத்த இசை நாடகத்துக்கு இசையமைக்க முடியுமா?' என்று கேட்டார். இன்ப அதிர்ச்சியில் திகைத்த ரஹ்மானால் உடனே பதில் சொல்ல முடியவில்லை. வெப்பரின் இசை நாடகங்கள் எத்தனை பிரமாண்டமானவை என்று அவருக்குத் தெரியும். 'அவரா நம்மை இசைஅமைக்கச் சொல்கிறார்' என்பதை உடனே அவரால் ஜீரணிக்க முடியவில்லை. ரஹ்மான் தயக்கத்துடன் அப்போது சொன்ன பதில்...

'' மே பி!''

'ஒப்புக்கொள்ளுங்கள்' என்பது போல் கண் சிமிட் டினார் சேகர் கபூர். சர் ஆண்ட்ரு லாயிட் வெப்பர் இதுவரையில் தன்னுடைய நாடகங்களுக்கு வேறு யாரையும் இசையமைக்க அனுமதித்தது இல்லை. அவர் அழைக்கிறார் என்றால் அது சாதாரண விஷயமா? 'தனக்கு இருக்கின்ற வேலைப்பளுவில் இந்த பிரமாண்டமான இசை வேலையை நம்மால் செய்து முடிக்க முடியுமா?' என்று யோசித்தபடி இருந்தார் ரஹ்மான்.

அப்போது ரஹ்மானிடம் வெப்பர் ஒரு வார்த்தை சொன்னார். 'இந்திய இசை என்றால் என்ன என்று ஐரோப்பி யர்களுக்குத் தெரியவேண் டும்... வாருங்கள்!' அந்த வார்த்தைகள் ரஹ்மானைக் கட்டிப் போட்டன. உடனே சம்மதம் சொன்னார். 'பாம்பே டிரீம்ஸ்' நனவாக ஆரம்பித்தது.

லண்டனில் இருந்தபடியே தன் பட வேலைகளுக்காக வும், 'பாம்பே டிரீம்ஸ்' இசைக்காகவும் இரவு பகலாக உழைக்க ஆரம்பித்தார் ரஹ்மான். தன் ஸ்டுடியோ மற்றும் தான் தங்கி இருந்த வீடு... இதைத் தவிர அவர் வேறு எங்கும் போக மாட்டார். அவ்வப்போது உணவு, வேளை தவறாத தொழுகைகள் இவற்றைத் தவிர வேறு எந்த வேலைகளும் அவருக்குக் கிடையாது. இசை... இசை... இசை..! அப்போது ரஹ்மான் காட்டிய உழைப்பு ராட்சஸத்தனமானது.

'பாம்பே டிரீம்ஸ்' 2002-ம் வருடம் லண்டனில் அரங்கே றியது. அரங்கத்தின் வாசலில் டிக்கெட் கிடைக்காத ஆயிரக்கணக்கான ரசிகர்கள் காத்துக்கிடந்தார்கள். முதல் ஷோ முடிந்தது. நாடகம் ஹிட்! அதில் மொத்தம் 19 பாடல்களை உருவாக்கி இசையமைத்திருந்தார் ரஹ்மான். 'ஷக்கலக்க பேபி', 'சய்யா... சய்யா', 'ஊ...

லல்லா' போன்றவற்றின் ரீ-மிக்சுகளும் அதில் அடக்கம். லண்டனில் மட்டும் 'பாம்பே டிரீம்ஸ்' 2 வருடங்கள் வெற்றிகரமாக ஓடியது. அதன் பின் அமெரிக்காவில் 'பிராட்வே'க்கு சென்று அங்கேயும் சூப்பர் ஹிட் ஆகியது. பிராட்வே தியேட்டரில் மட்டும் அது 284 முறை அரங் கேறியது. மேற்கத்திய இசை விமர்சகர்களின் பாராட்டுதல்களையும் பெற்றது.

சென்னை கோடம்பாக்கத்தில் இருந்து 'ரோஜா'-வில் ஆரம்பித்து, பாலிவுட் சென்று'ரங்கீலா'வின் மூலம் புதிய சரித்திரங்களைப் படைத்த ரஹ்மான், 'வந்தேமாத ரம்', 'பாம்பே டிரீம்ஸ்' என்று சர்வதேச அளவில் சுற்றிச் சுழல ஆரம்பித்த பிறகு, பிரமாண்ட வாய்ப்புகள் கியூ கட்டி நின்றன. ஹாலிவுட், சீன தேசத்துப் படங்கள், உலக பன்னாட்டுக் கம்பெனிகளின் விளம்பர வாய்ப்பு கள், உலக அரங்கங்களில் 'ஷோ'நடத்தக் கூடிய வாய்ப்பு கள் என்று திணற வைக்கும் அழைப்புகள். '10 படங்களில் சம்பாதிக்கக் கூடிய பணத்தை ஒரே ஒரு ஷோவில் தருகி றோம்' என்றன மெகா மகா ஈவன்ட் மேனேஜ்மென்ட் நிறுவனங்கள். ஆனால், அவற்றை எல்லாம் மறுத்தார் ரஹ்மான். தமிழ்ப் படங்களுக்கும் ஹிந்திப் படங்களுக்கும் தொடர்ந்து இசையமைத்தார். 'லகான்', 'கிஸ்னா',

'மங்கள் பாண்டே', 'வாட்டர்', 'ரங் தே பஸந்தி',

'ஸ்வதேஷ்', கன்னத்தில் முத்தமிட்டால்', 'பாய்ஸ்' , 'நியூ', 'ஆய்த எழுத்து' என்று திரை இசைப் பணி தொடர்ந்தது. ஏகப்பட்ட விருதுகளையும் இந்த காலகட்டத்தில் குவித்துவிட்டார் ரஹ்மான்.

கோல்டன்குளோப்,ஆஸ்கர் போன்றவை ரஹ்மானுக்கு கூப்பிடு தூரத்தில் இருந்தன. அதை எட்டுவதற்கு அவர் வேறு வழிகளில் பயணிக்க வேண்டும். அந்தப் பாதையும் அவரைத் தேடியே வந்தது. அப்போது அவர் வீட்டுக்கதவைத் தட்டிய வாய்ப்பு...

'தி லார்டு ஆஃப் தி ரிங்க்ஸ்!'


- கனவு தொடரும்...

Nerd
14th August 2009, 06:57 AM
[tscii:26f6970226]ஒரு கனவின் இசை! ஏ.ஆர்.ரஹ்மான் - Part 19

ஸ்லம்டாக் ரகசியங்கள்!
வி.ஐ.பி. வாழ்க்கைத் தொடர்

''இந்த விஷயங்கள் எல்லாமே எனக்கு விநோதமாக இருக்கின்றன. இவை நடக்கும் வழிகளும் நான் எதிர்பாராத விதங்களில் இருக்கிறது" என்று பாம்பே டிரீம்ஸ் வெற்றிகரமாக லண்டனில் அரங்கேறியபோது ஆச்சர்யப்பட்டுச் சொன்னார் ரஹ்மான். வாழ்க்கையின் உன்னதமான தருணங்கள் அபூர்வமான மனிதர்களின் சந்திப்புகளால்தான் ஏற்படுகின்றன.

பாம்பே டிரீம்ஸின் வெற்றியை உன்னிப்பாகக் கவனித்தார் மற்றொரு இயக்குநரான மாத்யூ வார்ச்சஸ். ஒரு பிரமாண்டமான இசை நாடகத்தை இயக்கும் வாய்ப்பு அப்போது அவருக்கு வந்திருந்தது. உலகப் புகழ் பெற்ற எழுத்தாளர் ஜே.ஆர்.ஆர்.டோல்கின்ஸின் எபிக் நாவல் 'தி லார்டு ஆஃப் தி ரிங்க்ஸ்'. அது பல வடிவங்களில் நாடகமாக அரங்கேறி, திரைப் படமாகவும் வந்து சக்கைப் போடு போட்டது. அதை வேறு ஒரு வடிவத்தில் இசை நாடகமாக்கும் முயற்சியில் இருந்த மாத்யூ ஒரு விஷயத்தில் தீர்மானமாக இருந்தார். ஏ.ஆர்.ரஹ்மான்தான் அதற்கு இசையமைக்க வேண்டும்.

உலகின் மிகப் பிரமாண்டமான இசை நாடகம் 'தி லார்டு ஆஃப் தி ரிங்க்ஸ்' 2006-ம் வருடம் கனடாவில் அரங்கேறியது. அந்த நாடகத்தின் அப்போதைய செலவு 27 மில்லியன் டாலர்கள். (மேடை ஏறிய ஒரு சில நாட்களிலேயே கலெக்ஷன் அதைத் தாண்டிவிட்டது வேறு விஷயம்!) ரஹ்மான் தான் அதற்குப் பிரதான இசை. டோல்கின்ஸின் கதை இதிகாசக் காலத்தில், புதிரான சூழ்நிலைகளில் நடக்கும் மாயச் சம்பவங்களை அடிப்படையாகக்கொண்டது. ரஹ்மான் அதற்காகக் கொண்டுவந்த இசை முற்றிலும் வேறு வடிவத்தில், வேறு ஓசைகளில் இருந்தது. மொத்தம் 15 பாடல்கள். அடுத்து அவர் சீனப் படமான 'தி வாரியர்ஸ் ஆஃப் ஹெவன் அண்ட் எர்த்'தின் இந்திய வடிவத்துக்கு இசையமைத்தார். இந்திய, துருக்கிய மற்றும் சீன தேசத்து இசைக் கருவிகளை அதற்குப் பயன்படுத்தினார் ரஹ்மான். செக்கோஸ்லோவேகியாவின் பிராக் நகரத்தில் இசைப்பதிவு நடந்தது. எர்ஹ¨, டுடுக், டிஸி, டைக்கோ போன்ற புதிய இசைக் கருவிகளை அதில் பயன்படுத்தினார் ரஹ்மான். இப்படி உலக அரங்கில் பல சாதனைகளை அவர் செய்து வந்த விஷயங்கள் தமிழ்நாட்டுக்கு அதிகம் தெரியாது.

உலக சினிமாக்களுக்கும் இசை நாடகங்களுக்கும் இசையமைத்த அனுபவம் அவருடைய சிந்தனைகளை மாற்றி அமைத்துக்கொண்டே இருந்தன. அப்போது தான் அவரைச் சந்தித்தார் இயக்குநர் டானி பாயில். ரகளையான குறும்பு மனிதர். விகாஸ் ஸ்வரூப் என்கிற இந்தியர் எழுதிய 'கியூ அண்ட் ஏ' என்கிற நாவலைத் திரை வடிவமாக்கி, அதற்கு 'ஸ்லம்டாக் மில்லியனர்' என்று பெயர் சூட்டி இருந்தார் பாயில்.

ஆங்கிலப் படங்களில் பொதுவாகப் பின்னணி இசை என்பது மறைந்தே இருக்கும். அதை அங்கே 'ஹைடிங் மியூஸிக்' என்பார்கள். படத்தின் உணர்வு கெடாத வகையில் அதனுடன் சேர்ந்து ஒரு மௌனப் பாம்பு போல் கூடவே ஊர்ந்து செல்லும் அந்த இசை. ஆனால் 'ஸ்லம்டாக் மில்லியனர்' படத்துக்கு அப்படிப்பட்ட இசை உதவாது என்று நினைத்தார் பாயில். "இந்தப் படத்தில் நான் காட்டப்போவது உற்சாகமான மனிதர்களின் விளிம்பு நிலை வாழ்க்கையை. அதனால், எங்கேயும் சோக இசை தேவை இல்லை. ஒரு துடிப்பேற்றும் 'பல்ஸி' இசையைக் கொடுங்கள். இந்தப் படத்தில் இசை வெளிப்படையாக இருக்கும். படத்துடன் அதுவும் போட்டி போட்டுக்கொண்டு ஓடும். அசத்தலான, சூடான இசையைக் கொடுங்கள்" என்று கேட்ட டானி பாயில், 'ஸ்லம்டாக் மில்லியனரின்' திரைக்கதையைப் படுசுவாரஸ்யமாகச் சொன்னார்.

"மும்பையில் மட்டுமல்ல, உலகின் எந்தப் பாகத்திலும் நடக்கக்கூடிய கதை அது. பொருளாதாரப் பின்னடைவு உள்பட உலகத்தில் பல மோசமான நிகழ்வுகள் நடக்கும் காலகட்டத்தில் இந்தக் கதை எழுப்பும் பாசிட்டிவ் ஆன எனர்ஜி என்னை வசீகரித்தது. அந்த 'ஹோப்'தான் இதற்கு இசையமைக்கும் ஆர்வத்தை எனக்குள் ஏற்படுத்தியது. நவீன மற்றும் பழைய இந்திய இசையை மிக்ஸ் செய்து இதற்கு இசையமைக்கலாம் என்று நான் முடிவு செய்தேன். ஆனாலும், கேட்பதற்கு அது இந்திய இசை போலவும் இருக்கக் கூடாது என்றும் தோன்றியது" என்கிறார் ரஹ்மான். அது பெரிய சவால்.

'ஸ்லம்டாக் மில்லியனர்' படத்துக்கான இசை வேலைகள் ரொம்ப ரகசியமாகவே நடந்தன. ரஹ்மானே தன் நண்பர்களிடம்கூட இந்தப் படத்துக்கு இசையமைப்பதைப் பற்றிச் சொல்லவில்லை. அதற்கு இசையமைத்த இசைக் கலைஞர்களுக்குக்கூட 'ஸ்லம்டாக்'குக்காக இசையமைக்கிறோம் என்பது தெரியாது. (மறைந்த சவுண்ட் இன்ஜினீயர் ஸ்ரீதரிடம் மட்டும் சொல்லி இருந்தார்.) ரஹ்மானின் உள்மனதுக்கு இந்தப் படம் மிகப் பெரிய ரேஞ்சில் போகப் போகிறது என்பது மட்டும் தெரிந்தது.

அவ்வப்போது ஸ்டுடியோ பக்கம் எட்டிப் பார்க்கும் டானி, இசைப் படிவங்களைக் கேட்டுப் பாராட்டிவிட்டுச் செல்வார். சில அபிப்ராயங்களைச் சொல்வார். அப்படித்தான், பிரிட்டிஷ் பாப் இசை உலகில் கலக்கி வரும் பாடகி மாயா மாதங்கி அருள்பிரகாசத்தை இந்தப் படத்துக்கு வேண்டுமானால் பயன்படுத்திக்கொள்ளுங்கள் என்றார். 'எம்.ஐ.ஏ.' என்று பிரபலமாக அழைக்கப்படும் மாயா, ஈழத்துத் தமிழ்ப் பெண். அவருடைய 'பேப்பர் பிளேன்ஸ்' என்கிற ஹிட் பாடலையும், 'ஓ சாயா' பாடலில் பாடவைத்து 'ஸ்லம்டாக்கில்' பயன்படுத்தினார் ரஹ்மான்.

பொதுவாக, இந்தியத் திரைப் படங்களில் இசையமைப்பாளர்கள் ஸ்கோர் செய்யக்கூடிய கட்டங்களை 'கியூ' என்று சொல்வார்கள். நம் ஊர் பிரமாண்டப் படங்களில் சராசரியாகக் குறைந்தது 130 கியூக்களாவது இருக்கும். (வில்லன் வரும்போது எல்லாம் 'வ்வூவ்' என்று சத்தம் பின்னணியில் வருமே, அதுகூட 'கியூ'தான்) ஆனால், ரஹ்மானின் பார்வையில் ஸ்லம்டாக்கில் இருந்த கியூக்கள் 17தான். மற்றவை எல்லாமே படத்துடன் சேர்ந்து இரட்டைக் குதிரைகளாக ஓடும் இசை.

'ஸ்லம்டாக் மில்லியனர்' படத்துக்கும், இயக்குநர் டானி பாயிலுக்கும் என்ன மாதிரியான இசை தேவைப்படுகிறது என்கிற ரகசியம் புரிந்து விட்ட பிறகு, படத்துக்கான இசையை இரண்டே வாரங்களில் போட்டுக் கொடுத்து விட்டார் ரஹ்மான். டானி பாயில் இந்த வேகத்தைக் கண்டு மிரண்டுபோனார். அவருக்கு எல்லாப் பாடல்களும் பிடித்து இருந்தன. படத்தின் முடிவில் டைட்டிலில் வரும் ஒரு பாட்டு மிகவும் பிடித்திருந்தது அவருக்கு. 'ஆஹா! வேலை முடிந்தது' என்று நினைத்தார்.

ஆனால், "எக்ஸ்கியூஸ் மீ மிஸ்டர் பாயில், அந்தப் பாட்டைத் தூக்கிவிட்டு வேறு ஒரு பாடலைப் போடலாம் என்றிருக்கிறேன்" என்றார் ரஹ்மான். பாயிலுக்குத் தூக்கி வாரிப் போட்டது. "ஏன்? இதற்கு என்ன?" என்றார் பதற்றமாக. "இதைவிட பெட்டராக ஒரு டியூன் வைத்திருக்கிறேன். நானும் குல்ஸாரும் சேர்ந்து அந்தப் பாட்டை எழுதப் போகிறோம். ஜஸ்ட் வெயிட்" என்றார். ரஹ்மான் புதிதாகப் போட்டுக் கொடுத்த இன்னொரு பாடலைக் கேட்டு உற்சாகத்தில் எழுந்து ஆட ஆரம்பித்தார் டானி பாயில். மாற்றுப் பாடலாக ரஹ்மான் கம்போஸ் செய்த அந்தப் பாடல்தான் 'ஜெய் ஹோ.' கோல்டன் குளோப், ஆஸ்கர் உள்பட உலகெங்கும் ஏகப்பட்ட பரிசுகளைக் கொட்டிக் குவித்த பாட்டு!

விமர்சகர்களைப் பொறுத்தவரை ஆஸ்கர் பரிசைவிட மிகவும் உயர்ந்தது கோல்டன் குளோப் விருது. உலகின் தலைசிறந்த 90 பத்திரிகையாளர்களால் தேர்வு செய்யப்படும் இந்த விருது, கமர்ஷியல் கருத்துக்களைத் தாண்டி வரக்கூடிய மிகச் சிறப்பான ஒன்று. ஆஸ்கருக்குக் கிடைத்த மாபெரும் பாராட்டுக்கள் உள்ளூரில் கோல்டன் குளோப்புக்குக் கிடைக்கவில்லை என்றாலும், அதை வென்ற முதல் இந்தியர் என்கிற பெருமையை ரஹ்மான் அடக்கமாகவே பெற்றுக்கொண்டார்.

'ஸ்லம்டாக் மில்லியனர்' பட இசையில் பல வித்தைகளைப் புரிந்திருந்தார் ரஹ்மான். 'ஓ சாயா' பாட்டில் ஆப்பிரிக்க மற்றும் அரபி இசைக் கோவைகளின் நடுவே அவருடைய குரல் உச்சஸ்தாயியில் அங்கும் இங்கும் அலைபாயும். 'ரயட்ஸ்' பாட்டில் ஒரு நகரத்தின் கூக்குரல் வெளிப்படும். 'மாஸோம்' பாட்டில் இந்திய கிளாஸிக்கல் இசை கிதாரிலும், சரோட்டிலும், சிதாரிலும் புகுந்து விளையாடும். 'ரிங்கா ரிங்கா' பாட்டில் 90-களில் மும்பையில் நிலவிய கலாசார மணம் பரவும். 'லிக்விட் டான்ஸ்' பாட்டில் கர்னாடக ஜதி இசையோடு அரபி இசை புகுந்து விளையாடும். 'ம்...ம்...ம்...' என்கிற ஒலியோடு மிஸ்டிக்காகப் பரவும் 'லதிகா தீம்' பாட்டு அருமையான மெலடி. 'மில்லியனர்' பாடல் நவீன டெக்னோ இசையை ஒலித்தது என்றால், 'காங்ஸ்டர் ப்ளூஸ்' பாட்டு பிளாஸ்ஸி மற்றும் தன்வீ சிங் குரல்களில் ரகசியமாக ஒரு மாய உலகத்துக்கு நம்மை அழைத்துச் செல்லும். 'டிரீம்ஸ் ஆன் ஃபயரோ' அட்டகாசமான வெஸ்டர்ன் மெலடி. ஒவ்வொரு பாட்டிலும் பின்னணி இசையிலும் அதகளம் செய்திருந்தார் ரஹ்மான்.

"அளவிட முடியாத திறமையும், கற்பனைக்கும் எட்டாத புகழையும்கொண்ட ரஹ்மான் இவ்வளவு அடக்கத்துடனும், அதிகம் பேசாத மனிதராகவும் இருப்பது எனக்கு ஆச்சர்யத்தை அளிக்கிறது" என்று வியந்தார் இயக்குநர் டானி பாயில்.

சிகரம் தொட்ட ரஹ்மானின் வாழ்க்கைத் தத்துவம் என்ன?

"சூஃபி இஸம்."

அப்படி என்றால்?

-(அடுத்த இதழுடன் 'கனவுக்கு' இடைவேளை)[/tscii:26f6970226]

littlemaster1982
16th August 2009, 08:39 AM
:ty: Nerd :D

littlemaster1982
23rd August 2009, 09:39 PM
ஒரு கனவின் இசை! - Part 20
ஏ.ஆர்.ரஹ்மான்
வி.ஐ.பி. வாழ்க்கைத் தொடர்

சென்னை நகரத்தின் ஒரு நடுத்தரக் குடும் பத்தில் பிறந்து, நான்கு வயதில் பியானோ வாசித்த சிறுவன் திலீப், 25 வயதில் அல்லா ரக்கா ரஹ்மானாகமாறி, 17 வருட நீண்ட பயணத்துக்குப் பிறகு, அமெரிக்காவின் கோடாக் தியேட்டரில் ஆஸ்கர் பரிசு வழங்கும் விழாவில், ஒரு ஞாயிற்றுக்கிழமை மாலையில் காத்திருந்தார்.

ஆஸ்கர் பரிசு அறிவிக்கப்பட்டது. ரஹ்மான் இரண்டு பரிசுகளை வென்றார். எப்போதும் போல் அடக்கமாகப் புன்னகை செய்தபடி அந்தப் பரிசுகளைப் பெற்றுக்கொண்டார். ஆனால், டெலிவிஷன் பெட்டிகளின் முன்னால் நகத்தைக் கடித்தபடி இருந்த கோடிக்கணக்கான இந்தியர்களில் பலர் அந்தக் காட்சியைக் கண்டு ஆனந்தத்தில் கண்ணீர்விட்டு அழுதார்கள். ஆஸ்கர் கமிட்டியின் 80 வருடத்துச் சரித்திரத்தில் இரண்டு ஆஸ்கர் வென்ற ஒரே இந்தியர்.

ரஹ்மான் ஆஸ்கர் பரிசு பெற்றபோது மேடையில் சொன்ன வார்த்தைகள். "எல்லாப் புகழும் இறைவனுக்கே. என் வாழ்க்கையில் அன்பா... வெறுப்பா? இந்த இரண்டில் ஒன்றைத் தேர்ந்தெடுக்க வேண்டிய கட்டம் ஒன்று இருந்தது. நான் அன்பைத் தேர்ந்தெடுத்தேன். அதனால்தான் இந்த இடத்தில் நிற்கிறேன்."

ரஹ்மானின் அந்தப் பேச்சுக்கான அடிப்படை, அவர் கடைப்பிடிக்கும் 'சூஃபியிஸம்' என்கிற ஸ்பிரிச்சுவல் தத்துவம். ''நான் நம்புவது ஒன்றே ஒன்றைத்தான். இந்த உலகத்தில் இசை என்பது எல்லோருக்கும் பொதுவானது. அதைத் தவிர வேறு எதன் மீதும் எனக்கு நாட்டமில்லை'' என்கிறார் ரஹ்மான். அதன் அர்த்தம் மிகவும் விசாலமானது. சூஃபியிஸம் என்பது இஸ்லாத்தின் உள்ளீடான, கொஞ்சம் புதிரான இறையியல் மனோதத்துவம். நபிகள் நாயகத்தின் பிரதான சீடர்களால் பரப்பப் பட்ட சூஃபியிஸம் ஒரு மனிதனின் தனிப்பட்ட இதயச் சுத்திகரிப்புக்கும், அந்த நிலையின் மூலம் இறைவனின் கருணையைச் சென்றடையும் வழி என்றும் சொல்லப்படுகிறது. ஒரு சூஃபி குருவை மனதார ஏற்றுக்கொண்ட பின், அவர் காட்டும் மார்க்க வழிகளில் பயணித்தால், அமைதியுடன் வாழலாம் என்று இதைப் பின்பற்றுபவர்கள் நம்புகிறார்கள். ரஹ்மானும் அவர்களில் ஒருவர்.


இது ஓர் ஆசிரியர் - மாணவன் உறவு முறை போலத்தான். ஆனால், எந்த வழிகாட்டிப் புத்தகங்களும் கோட்பாடுகளும் கிடையாது. ஒரு குருவின் மூலம், 'தான்' என்கிற எண்ணம் நீக்கப்பட்டு, கடவுளிடம் பரிபூரணமாகச் சரணடைவதுதான் இதன் ஆதாரத் தத்துவம். ரஹ்மானும் அப்படித்தான் சூஃபியிஸத்தில் சரணடைந்தார். முதலில் அவருக்குக் கிடைத்த குரு, அரிஃபுல்லா முகம்மது காத்ரி (பிர் காத்ரி). அதற்குப் பிறகு அந்த இடத்துக்கு வந்தவர் ஆந்திராவில் இருக்கும் அவருடைய மகன் கரிமுல்லா ஷா. இன்று வரை அவர்தான் ரஹ்மானின் சூஃபி குரு. மாலிக் பாபா என்று அவரை அழைக்கிறார் ரஹ்மான். தான் தொடங்கிய இசைக் கல்லூரிக்கு 'கே.எம். மியூஸிக் கான்சர்வேட்டரி' என்று பெயரிட் டார் ரஹ்மான். கே.எம். என்பது கரி முல்லாவின் சுருக்கம். அதே போல் 'பஞ்சதன்' ஸ்டுடியோவும் இப்போது 'ஏ.எம்.' ஸ்டுடியோ ஆகிவிட்டது. ஏ.எம். என்பது அரிஃபுல்லா முகம்மதுவின் சுருக்கம்.

'லகான்', 'கஜினி' போன்ற படங்களில் ரஹ்மானுடன் பணியாற்றிய அமீர்கான், ரஹ்மானின் சூஃபியிஸ ஈடுபாட்டைப் பற்றி ஆச்சர்யமாகப் பேசுகிறார். "அவரிடம் அது பிரமாதமாக வொர்க்-அவுட் ஆகி இருக்கிறது. தான் நம்பும் தத்துவத்தில் முழுவதுமாகச் சரணடைந்திருப்பதால்தான் அவரிடமிருந்துஇப்படி ஓர் அபூர்வமான இசை பிறப்பதாக நான் நினைக்கிறேன். எதற்கும் அலட்டிக்கொள்ளாத அமைதியான மனிதராகவும் அவரை அந்தத் தத்துவம் மாற்றியிருக்கிறது!'' என்கிறார் அமீர்கான்.

ஒரு முறை பெங்களூரு பாலஸ் மைதானத்தில் ரஹ்மானின் மாபெரும் இசை நிகழ்ச்சி ஏற்பாடாகி இருந்தது. திடீரென்று பெரும்மழை பொழிந்தது. சூறாவளிக் காற்று அடித்தது.மைதானத் துக்குள் வெள்ளம் புகுந்து, மேடையின் பின்புலத்தில் இருந்த செட் சரிந்து விழுந்தது. ரசிகர்கள் என்ன செய்வதென்று புரியாமல் தவித்தார்கள். கிரீன் அறைக்குள் சென்ற ரஹ்மான் கதவைச் சாத்திக்கொண்டார். அமைதியாகப் பிரார்த்தனையில் ஈடுபட்டவர், அரை மணி நேரத் துக்குப் பிறகு வெளியே வந்தார். மேடைக்குச் சென்றார். ரசிகர் களிடம் "இந்த நிகழ்ச்சி நடக்க வேண்டுமா அல்லது ரத்துசெய்து விடலாமா?" என்று கேட்டார். ரசிகர்கள் "நிகழ்ச்சி வேண்டும்" என்றார்கள். புன்னகைத்த ரஹ்மான் கச்சேரியை ஆரம் பித்தார். மழையும் காற்றும் அதிசயம் போல் நின்றது. ஏறக்குறைய இரண்டு மணி நேரம் கச்சேரி நடந்தது. கடைசிப் பாடலான 'வந்தே மாதரத்தின்' இறுதி 'பாரை' ரஹ்மான் வாசித்த போது மழை மீண்டும் கொட்ட ஆரம்பித்தது. ரஹ்மான் எந்த நிலையிலும் உணர்ச்சிவசப்படவே இல்லை. இதுதான் அவருடைய ஆளுமை.

ரஹ்மான் இரண்டு முறை ஹஜ் யாத்திரை சென்று வந்துவிட்டார். ஒரு முறை ஹஜ் பயணம் செய்தபோது தெருவில் ஒருவர் 'மய்யா... மய்யா' என்று குடிநீரை வித்தியாசமான ஓசையில் விற்றுக்கொண்டு சென்றாராம். அரபி மொழியில் மய்யா என்றால் தண்ணீர். அதுதான் ஹிந்தி 'குரு' படத்தில் 'மய்யா... மய்யா' பாடலாயிற்று. (பாடியவர் மரியம் டாலர் என்கிற கனடா நாட்டுப் பாடகி)
'ஸ்லம்டாக் மில்லியனர்' படத்துக்கு அடுத்து ரஹ்மானின் பெரும் சாதனையாக 'டில்லி 6' படப் பாடல்களைச் சொல்லலாம். ஸ்லம்டாக்கைவிடச் சிறப்பான இசை என்று இதைப்பற்றி விமர் சகர்கள் எழுதினார்கள். லண்ட னின் 'ஆர் அண்ட் பி' பாடகர் ஆஷ் கிங், ஜாஸ் பாடகி விவியன் போச்சா, மொஹித் சௌஹான் (மஸாக்கலி புகழ்), ரேகா பரத் வாஜ், ஷ்ரேத்தா பண்டிட், சுஜாதா மஜூம்தார், கைலாஷ் கெர் மற்றும் ஜாவேத் அலி (ரஹ்மானின் மிகச் சிறந்த பாடல்களில் ஒன்றாகக் கருதப்படும் ஒன்பது நிமிட அரிஸியான் என்கிற சூஃபி வகை கவாலி பாடலைப் பாடியவர்கள்) என்று தேடித் தேடி இந்தப் படத்தில் சூப்பர் சிங்கர்களை அறிமுகப்படுத்தினார் ரஹ்மான். ஆஸ்கர் பரிசுக்காக லாஸ் ஏஞ்சலீஸ் சென்றபோது இந்தப் படத்தின் வேலைகளில் மூழ்கி இருந்தார் அவர்.

ரஹ்மானின் சமூகப் பணிக்கான வேலைகளும் ஓசைப்படாமல் தொடர்கின்றன. உலக சுகாதாரக் கழகத்தின் (கீபிளி) டி.பி. நோய் எதிர்ப்புப் பிரசாரத்தின் உலகத் தூதுவர் பதவி அவருக்கு அளிக்கப்பட்டது. 'சேவ் தி சில்ட்ரன்' அமைப்புக்காக அவர் இணைந்து பணியாற்றுகிறார். உலகப் புகழ்பெற்ற இசைக் கலைஞர்களான ஃப்ரூஹோல்மேன், நீல் பிரிம்ரோஸ் போன்றவர்களுடன் இணைந்து ரஹ்மான் இசையமைத்த 'இந்தியன் ஓஷன்' என்கிற பாட்டின் மூலம் கிடைத்த பணம் இந்தோனேஷியாவில் சுனாமியால் பாதிக்கப்பட்டவர்களின் நிவாரண நிதிக்குப் போய்ச் சேர்ந்தது. தி பானியன், ஃபிரீ ஹக்ஸ் காம்பேய்ன் போன்றவற்றுக்காகவும் அவர் இசையமைத்து நிதி திரட்டித் தருகிறார்.

கே.எம். மியூஸிக் கல்லூரியில் பல ஏழைக் குழந்தைகள் இசை கற்கிறார்கள். ஏழைக் குழந் தைகளின் இலவசக் கல்விக்கான ஏ.ஆர்.ரஹ்மான் ஃபவுண்டேஷன் வேலைகள் நடக்கின்றன.

கனவின் இசை தொடர்ந்து பயணிக்கிறது... வெவ்வேறு சிகரங்களை நோக்கி!

Appu s
25th August 2009, 10:47 AM
:ty: :ty: :ty: :ty: LM and Nerd

littlemaster1982
12th October 2009, 09:11 AM
Scans of all episodes (http://www.megaupload.com/?d=AIID32SK).

Thanks: ARRYG

littlemaster1982
30th November 2009, 09:41 PM
PDF Version (http://www.4shared.com/file/162691442/7cf04600/ARRahman_-_Oru_Kanavin_Isai_Mu.html)

Thanks: Orkut ARR Fans community.